Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் கொரோனா தாக்கம் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி வழங்கிய நேர்காணல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் கொரோனா தாக்கம் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி வழங்கிய நேர்காணல்!

(நேர்காணல்:- ஆர்.ராம்)

வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதற்குரிய பிரத்தியோக பிரிவுகள் தற்போது வரையில் ஆரம்பிக்கப்படவில்லை.

 இருப்பினும் எதிர்வரும் காலத்தில் நிலைமைகள் மோசமடைந்தால் சிகிச்சை வழங்கும் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு தயாராகவே உள்ளோம் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி.த.சத்தியமூர்த்தி வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

covi19_JAffna.jpg

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,                   

கேள்வி:- வடக்கில் கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் உச்சமாக இருக்கையில் அங்குள்ள நிலைமைகளின் யதார்த்தம் என்னவாகவுள்ளது?

பதில்:- யாழிற்கு வருகை தந்திருந்த சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மதபோதகர் ஒருவர் மீண்டும் திரும்பியிருக்கும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதயைடுத்து யாழில் கொரோனா தொற்று தொடர்பான அச்சம் அதிகமானது. அத்துடன் குறித்த போதகருடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் இருமல், காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்டுபத்தினோம்.

அதன்போது அவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கின்றமை உறுதியாகியதையடுத்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக மேற்படி மதபோதகருடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்த 20பேர் வரையிலானவர்கள் பலாலி படைமுகாமிற்கு அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவர்களில் பத்துப்பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது மூவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து ஏனைய பத்துப்பேருக்கும் மருத்துவப்பரிசோதனைகளை மேற்கொள்ளப்பட்டபோது ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவருக்கு தொற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் இதுவரை 50இற்கும் அதிகமானவர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதேநேரம் நாளொன்றுக்கு சராசரியாக ஐந்து முதல் ஏழுபேர் வரையில் கொரோனா தொற்றுக்குறித்த பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள்.

கேள்வி:- புதிதாக அறுவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஊடாக ஏனையவர்களுக்கு கொரோனா தொற்றுப் பரவியிருப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றதல்லவா?

பதில்:-ஆம், மதபோதகருடன் நேரடியான தொடர்புகளைக் கொண்ட 20பேருக்குச் செய்த மருத்துவப் பரிசோதனைகளில் தான் அறுவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் யார்யாருடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்தார்கள் என்பது பற்றிய ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஏனையவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகளும் கிடைக்கவுள்ளன. இவற்றை மையப்படுத்தி அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கைகளை அடுத்த கட்டமாக முன்னெடுக்கவுள்ளோம்.

மேலும் அவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கும் தீர்மானித்துள்ளோம். அதன்மூலம் கிடைக்கும் முடிவுகளே அடுத்துவரும் நாட்களில் வடபகுதியில் கொரோனா தொற்றின் தாக்கத்தினை வெளிப்படுத்துவதாக அமையப்போகின்றது.

கேள்வி:- சுவிட்சர்லாந்திலிருந்து வருகைதந்திருந்த போதகருடன் தொடர்புடைய அனைவரும் அடையாளம் காணப்பட்டுவிட்டார்களா? அவர்களில் எத்தனைபேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்?

பதில்:- மதபோதகருடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிருந்த 200பேர் வரையிலானவர்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர். அவர்களில் அரியாலையிலிருந்து 15பேர் வரையில் மருத்துவ பரிசோதனைகளைச் செய்திருந்தார்கள். எனினும் அவர்களின் எவருக்கும் தொற்றிருப்பது அடையாளப்படுத்தப்படவில்லை.

இதனைவிட நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று 20 பேர் பலாலியில் தனிமைப்படுத்தபட்டிருந்தார்கள். அவர்கள் தற்போது மருத்துவப்பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடவும் மதபோதகருடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் யாரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால் நேரடித்தொடர்புகளைக் கொண்டவர்களின் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள்,

குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித்தொடர்புகளைக் கொண்டவர்களை அவதானித்து அவர்களையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது. அத்துடன் மதபோதகருடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் அல்லது தொடர்புடையவர்களுடன் தொடர்புகளைக் கொண்ட இரண்டாவது தரப்பினர் உள்ளிட்டவர்களுக்கு வித்தியாசமான நோய் அடையாளங்கள் காணப்படும் பட்சத்திலேயே அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். உடனடியாக முடிவுகளை பெறமுடியாத சிக்கலான நிலைமையாக இருக்கின்றது.

கேள்வி:- வடக்கில் கொரோனா வைரஸின் பரவல் கட்டுக்குள் உள்ளது என்று கொள்ளமுடியுமா?

பதில்:- இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், கனடா போன்ற மேற்குலகநாடுகளுடன் ஒப்பிடுகையில் முழு இலங்கையிலுமே மோசமான நிலைமைகள் ஏற்படவில்லை என்பது வெளிப்படுகின்றது. மோசமான நிலைமைகள் ஏற்பட்டிருக்கமாயின் அதற்கு முகங்கொடுப்பதற்குரிய போதிய வசதிகள் இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் இல்லை. இவ்வாறிருக்க, வடபகுதியில் இதுவரையில் நான்கு பேர் வரையிலேயே கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த அடிப்படையில் வடக்கின் நிலைமைகள் எவ்வளவோ மேம்பட்டதாகவே இருக்கின்றன என்பதை எண்ணி நிம்மதியடைய வேண்டியுள்ளது.

அதனைவிடவும், வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் அதிலிருந்து இயல்பாகவே குணமடைந்த நிலைமைகளும் இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு இயல்பாகவே குணமடைந்தவர்கள் காணப்படுவார்களாயின் வடபகுதியில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்களாகவே கருதப்படுவார்கள். அவ்வாறு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவது நன்மையான விடயமாகின்றது.

கேள்வி:- யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்குரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதில் உள்ள தடைகள் என்ன?

பதில்:- தடைகள் எதுமில்லை. ஆய்வுகளைச் செய்யும் இயந்திரங்களை இயக்குவதற்கு மேலும் சில உபகரணங்கள் தேவையாக இருந்தன. குறிப்பாக, கொரோனா தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள பொலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR)பரிசோதனைகளை மேற்கொள்ளும் இயந்திரங்களை இயக்குவதற்குரிய நடவடிக்கைகள் பூரணமாகியுள்ளன.

அதற்கு தேவையான மேலதிக உபகரணங்களும் வருவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் செயற்கை சுவாசக் கருவிகளை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதோடு அதற்கு மேலதிகமாக அரச சார்பற்ற நிறுவனங்கள், புலம்பெயர் தரப்பினரின் உதவியுடனும் செயற்கை சுவாசக் கருவிகளை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனைவிடவும், நுண்ணுயிரியலாளர்கள் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பயிற்சிகளை பெறுவதற்காக செல்லவுள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் வாரத்திலிருந்து போதனா வைத்தியசாலையிலேயே மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நிலைமைகள் ஏற்படும். இதனால் அதிகளவானவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த முடிவதோடு தொற்றிருப்பவர்களை உடன் அடையாளம் கண்டு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வழி சமைப்பதாய் உள்ளது.

கேள்வி:-வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கொண்டால் அவர்களை பராமரிப்பதற்குரிய எத்தகைய முன்னேற்பாடுகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

பதில்:- யாழ்.போதனா வைத்தியசாலையில் விசேட வைத்தியர்கள் அடங்கிய வழிகாட்டல் குழுவொன்றை நியமித்துள்ளோம். அக்குழுவானது கொரோனா நோய் நிலைமைகள் தொடர்பில் இரு நாட்களுக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக கூடி ஆராய்ந்து வருகின்றது.

இதனைவிட கொரோனா தொற்றுடையவர்கள் என்ற சந்தேகத்தில் வருபவர்களை தங்கவைத்து மருத்துவ பரிசோதனைகளைச் செய்வதற்கு 20படுக்கைகளைக் கொண்ட விசேட விடுதியொன்றை தயார்ப்படுத்தியுள்ளோம். இதனைவிட தேவையேற்படுகின்றபோது விபத்துக்கள் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவின் மேற்பகுதியில் 50படுக்கைகளைக் கொண்ட விடுதியை பயன்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம்.

எனினும் இதுவரையில் கொரோனா தொற்றாளர் ஒருவருக்குரிய சிகிச்சைகளை வழங்குவதற்குரிய அலகொன்றை நாம் ஏற்படுத்தவில்லை. அதற்கான அவசியமேற்படுகின்றபோது யாழ்.போதனா வைத்தியசாலையிலோ அல்லது வேறொரு வைத்தியசலையிலோ சிகிச்சைகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை சுகாதார அமைச்சின் அனுமதியுடன் மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளோம்.

மேலும் கொரோனா தொற்றாளர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளை வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகங்கொடுக்கும் முகமாக வைத்தியளர்கள், தாதியர்கள், சுகாதார தொண்டு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தற்காப்பு அங்கிகளைப் பயன்படுத்துதல் முதல் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதான கொவிட்-19 தற்காப்பு பயிற்சி நிகழ்ச்சி திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். இதன்மூலம் அனைவருக்கும் பயற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கேள்வி:- யாழ்.போதானா வைத்தியசாலைக்கு வடக்கின் பலபாகங்களிலிருந்தும் ஆயிரக்கனக்கானவர்கள் மருத்துவ சேவையைப் பெறுவதற்காக வருகை தரும் நிலையில் தற்போதைய சூழலில் அந்நிலைமைகளை எவ்வாறு கையாளுகின்றீர்கள்?

பதில்:- யாழ்.போதனாவைத்தியசாலையில் நாளொன்றுக்கு 1200பேர் வரையில் தங்கியிருந்து சிகிச்சைபெறும் நிலைமைகளே கடந்தகாலத்தில் இருந்தன. இருப்பினும் கொரோனா பரவல் தொடர்பான அறிவிப்பினை அடுத்து சமுக இடைவெளியைப் பேண வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. அந்த அறிவுறுத்தலுக்கு அமைவாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறும் நோயளர்களின் எண்ணிக்கையை 600ஆக குறைத்துள்ளோம்.

மேலும் பலரை வீடுகளுக்கு அனுப்பி தொலைபேசி ஊடாக அவர்களுக்குரிய மருத்துவ அறிவுரைகளை, ஆலோசனைகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு விசேட வைத்திய நிபுணரையும் தொலைபேசிஊடாக தொடர்பு கொள்வதற்குரிய நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் எதிர்வரும் நாட்களில் காணொளி மூலமாக வைத்தியர்களையும், நோயாளர்களையும் தொடர்புபடுத்தவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். தேவை ஏற்படுகின்றபோது மட்டுமே நோயாளிகளை மருத்துவவிடுதிகளுக்கு அழைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

மருத்துவ விஞ்ஞான மாணவர்களை உள்ளடக்கிய 15பேர்கொண்ட அணியினர் மருத்துகளை விநியோகிப்பதற்கு பங்களிப்பினைச் செய்கின்றார்கள். குறிப்பாக தொலைபேசி ஊடாக நோயாளர்களின் கோரிக்கைகளை பெற்று அவர்கள் உரிய மருந்துகளை அந்தந்தப்பகுதிகளில் உள்ள ஆதாரவைத்தியசாலைகளுக்கு அனுப்பி அங்கு பெற்றுக்கொள்ளுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அத்துடன் தபால் துறையினரும் மருந்து விநியோகச் செயற்பாட்டில் பங்களிப்புக்களை வழங்க ஆரம்பித்துள்ளனர்.

எதிர்காலத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வது உட்பட யாழ்.போதனாவைத்தியசாலையில் வெளிநோயாளர் உள்ளிட்ட வைத்தியர்களை பார்வையிடுவதற்காக முற்பதிவு முறைமையொன்றை அறிமுகப்படுத்துவது பற்றியும் ஆராய்ந்து வருகின்றோம்.

கேள்வி:- கொரோனா வைரஸ் தொடர்பாக வடக்கு மக்களின் விழிப்புணர்வு மற்றும் ஒத்துழைப்பு எவ்வாறுள்ளது?

பதில்:- கணிசமானவர்கள் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார்கள். மேலும் கொரோனா தொற்றை தவிர்ப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றுகின்றார்கள். சமுக இடைவெளிகளை பின்பற்றுதல் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் அவதானமாக இருக்கின்றார்கள். இருப்பினும் ஒருசில தரப்பினர் அசட்டைசெய்யும் நிலைமைகள் காணப்படுகின்றன. எனினும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கொரோனா வைரஸின் மோசமான விளைவுகளை உணர்ந்து அவர்களின் பிரதிபலிப்புக்கள் காணப்படுகின்றமையை தெளிவாக உணர முடிகின்றது. இதனைவிடவும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் சுகாதார பரிசோதகர்களுக்கு ஒத்துழைப்புக்களை நல்கி வருகின்றமையும் வரவேற்கத்தக்க விடயமாகின்றது.

கேள்வி:- கொரோனா பரவல் தொடர்பில் தீவிர கண்காணிப்பு எல்லைக்குள் யாழ். மாவட்டமும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அடுத்துவரும் நாட்களில் நிலைமைகள் மோசமடையுமா?

பதில்:- கொரோனா வைரஸ் மெதுவான பரவிலிருந்து தீவிரமடைகின்றபோது பல்வேறு நெருக்கடியான நிலைமைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்னன. கொரோனா வைரஸ் ஏனைய வைரஸுகளுடன் ஒப்பிடுகையில் வீரியமுள்ளதாகவே கருதப்படுகின்றது.

மேலும் இந்த வைரஸ் தொடர்பில் உறுதியான தகவல்கள் எவையும் இதுவரையில் கூறப்படவில்லை. உலகளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாள்தோறும் இந்த வைரஸின் குணாம்சங்கள் குறித்த தகவல்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆகவே இதன் அடுத்த கட்டம் தொடர்பில் குறிப்பிட்டு எதிர்வு கூறமுடியாது.

எனினும், யாழில் முதல் கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டு பத்து நாட்களின் பின்னரே மூவர் தொற்றாளர்களாக அடையாளம் கணப்பட்டுள்ளனர். அவ்வாறான நிலைமையை வைத்துப்பார்கின்றபோது அடுத்து வரும் நாட்களில் சடுதியான அதிகரிப்பொன்று ஏற்படும் என்று கூறிவிடமுடியாது. இதனால் பாரதூரமான நிலைமைகளுக்கு உடன் சாத்தியமில்லை.

ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான ஏனைய நாடுகளின் அனுபவங்களை பார்கின்றபோது, தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் பலருடன் தெடர்புகளைக் கொண்டிருப்பாராயின் சடுதியான அதிகரிப்பு ஏற்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் இல்லாமில்லை.

கேள்வி:- கொரோனா தொற்றுக்கு இலக்கான ஒருவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா?

பதில்:- இந்த விடயத்தில் எவ்விதமான அனுபவங்களையும் எமது நாடு கொண்டிருக்கவில்லை. ஆனாலும் உலக நாடுகளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை மூன்று நாட்களின் பின்னர் மீண்டும் வேலைத்தளங்களிற்கு செல்வதற்கோ அல்லது சமுகத்துடன் இணைந்து செயற்படுவதற்கோ அனுமதியளிக்கப்படுகின்றது.

மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டு பூரண குணமடையும் ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியானது கணிசமாக அதிகரிப்பதனால் மீண்டும் அந்த வைரஸின் தொற்று ஏற்படுவதற்கான சத்தியக்கூறுகளும் குறைவாகவே உள்ளது.

 

https://www.virakesari.lk/article/79302

யாழில் இந்த தொற்றை கட்டுபடுத்த உழைக்கும் ஒத்துழைப்பு தரும் மக்களும் நன்றிகள். 

எவ்வாறு ஒரு சர்வதேச விமான நிலையம் வட மாகாணத்திற்கு வந்ததோ அவ்வாறே யாழ் போதனா வைத்தியசாலை ஒரு சர்வதேச தரத்திற்ரு  கட்டி எழுப்பப்படல் வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.