Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்ச்சூழலில் எழுதுதல்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சூழலில் எழுதுதல்..

 இளங்கோ-டிசே

ன்று புதிதாக எழுத வரும் பலருக்கு,  தமது படைப்புக்கள் பரவலாக வாசிக்கப்படவில்லை என்கின்ற கவலையும் சலிப்பும் இருக்கின்றது. ஒருவகையில் சமூக ஊடகங்கள் வந்ததன் பிறகு, எழுதப்படும் எல்லாமே உடனே கவனிக்கப்படவேண்டும் என்கின்ற பதற்றம் வருவதும் இயல்பானது. ஆனால் எழுத்துக்கு நேரடியான கருத்தைச் சொல்லும் வாசகர்களை விட, வாசித்துவிட்டு அதைப் பகிராமல் இருக்கும் மெளனமான வாசகர்களே அதிகம்.
 

marriageSTory.jpg

சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் கவலையுடன் எவரும் தனது படைப்பைக் கவனிக்கவில்லை எனக் கூறினார். எந்தப் படைப்பிற்கும், அது எழுதப்படுவதற்கு எடுக்கும் காலத்தைப்போல், வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு கால அவகாசம் தேவைப்படும். இணையத்தில் தமிழைப் படித்து அதன் தொடர்ச்சியை வைத்திருப்பதைப் போல, எனது எழுத்துக்களும் இணையத்திலே அதிகம் எழுதப்பட்டவை. ஆகவே, படைப்புக்கள் வாசிப்பதன்/வாசிக்காமல் இருப்பதன் 'தாற்பர்யம்' கொஞ்சம் விளங்கும். எனக்கு முன் தலைமுறை எழுதுவதெல்லாம் பிரசுரமாவதற்கும், அதைவிட அதற்கான எதிர்வினைகளைப் பார்ப்பதற்கும் மாதங்கள்/வருடங்கள் காத்திருந்திருக்கின்றனர்.  அவர்களின் முதல் தொகுப்புக்கள் வரவே தசாப்தங்கள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது.இன்னும் பலர் தமது படைப்புக்களுக்கான வரவேற்பையே அறியாமலே காலமாகியும் இருக்கின்றனர்.
எனவே இந்தத் தலைமுறை படைப்பாளிகள் தமக்கிருக்கும் privilegesஐ விளங்கிக்கொண்டாலே, படைப்புக்கள் கவனிக்கப்படவில்லை என்ற சலிப்பை எளிதாய்க் கடந்துவரமுடியும். மேலும் வாழ்க்கையில் நமக்குப் பல விடயங்களில் எழுச்சிகளும், வீழ்ச்சிகளும் இருப்பதைப் போல, எழுத்துக்கும் இருக்கும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளலாம்.

படைப்பை அனுப்பிய நண்பருக்கு, அதை வாசித்துவிட்டு, மொழியின் தர்க்கம், நேர்த்தி என்பவை முக்கியம், அது உங்களுக்கு இயல்பாய் வருகிறது என்றாலும் அதற்கும் ஓர் எல்லை இருக்கின்றது என்று அவரின் படைப்பை வாசித்துவிட்டுச் சொன்னேன். மேலும் ஒரு தொகுப்பை அச்சில் வெளியிட்டபின், நாம் அதிலிருந்து விலகிவந்து இன்னொரு புதிய நடையின் மொழியின் ஆழங்களுக்குச் செல்ல முயற்சிக்கலாம் என்றும் கூறினேன்.

மொழியின் தர்க்கமே மட்டுமே படைப்பைத் தீர்மானிக்கும் என்றால், இப்போது அவரது வாசகர்களால் பல்வேறு வாசிப்புக்களைச் செய்யப்படும் ஜெயமோகனின் 'யா தேவி' என்ற கதையை தொடக்கத்திலேயே நிராகரித்துவிடலாம். அதாவது கேரளாவில் சிகிச்சை பெற வரும் மேற்கத்தைய பெண், தனக்குரிய வைத்தியர் யாரென்று முதலில் தெரியாது சிகிச்சைக்குள்ளே போகமாட்டார் எனச் சொல்லி கதையைத் தொடக்கத்திலேயே வாசிப்பதை நிறுத்திவிடலாம். அது நோயாளிக்கான உரிமை மட்டுமில்லை, அப்படி அனுமதி கேட்காதுவிடின்  மருத்துவருக்கே அவரின் பணி சிக்கலாகிவிடும்.

இரண்டு வருடங்களின் முன் ஓர் ஆயுர்வேத நிலையத்தில் இரண்டு வாரங்கள் கேரளாவில் நின்றபோது, அப்படி அனுமதி கேட்டு கையெழுத்தும் வாங்கிய ஆண் வைத்தியர் பிறகு, அங்கே நிற்கும் பெண்களுக்கு சிகிச்சை கொடுத்தபோது இன்னொரு பெண் தாதியையும் ஒவ்வொரு அறைக்குள்ளும் கூட்டியே செல்வதைக் கண்டிருக்கின்றேன். ஆகவே தர்க்கம் பார்த்தால் ஜெயமோகனின் இந்தக் கதை, நிகழ்ந்தே இருப்பதற்கான சந்தர்ப்பமே இல்லை. ஆனால் நாம் புனைவுக்குரிய சுதந்திரமாக அந்தத் தர்க்கத்தைக் கடந்துதான் கதைக்குள் போகமுடியும். இல்லாவிட்டால் வெளித்தள்ளிவிடும். அப்படித்தான் நண்பருக்கும் தனியே மொழியின் தர்க்கத்திற்குள்ளும், எழுதும் நடையை  திருத்தமாக எழுதிவிடுவதாலும் மட்டும் ஒரு படைப்பு சிறந்ததாகிவிடாது. அதைக் கவனியுங்கள் என்றேன்.

ழுதும் நம் எல்லோருக்கும், நாம் எழுதுபவை நம்மையறியாமலே நம்மை எழுத்தில் முன்னகர்த்திக் கொண்டிருக்கும் சில புள்ளிகள் தெரியும். அதை எழுத்தின் 'ஆன்மா' என்று ஒரு பெயரிடலுக்காய்ச் சொல்லிக் கொள்ளலாம். அந்த 'ஆன்மா'வை வாசகர்கள் எளிதில் வாசிக்கும்போது கண்டுபிடித்துவிடுவார்கள். அது இல்லாதபோது வாசிப்பவர்க்கு அலுப்பைக் கொண்டுவந்துவிடும். இப்படி எழுத்தில் தர்க்கங்களையும், நேர்த்தியையும் கொண்டுவர சிரத்தையாக முயற்சித்தவர் சுந்தர ராமசாமி. ஆனால் அதையே தொடர்ச்சியாக அவர் முன்வைத்தபோது அவரின் பிற்கால ஆக்கங்கள் பலரை ஈர்க்கமுடியாது போய்விட்டது. அதற்கு இன்னொருமுனையில் வைத்துப் பார்ப்பதற்கு ஜெயமோகனின் 'மாடன் மோட்சத்தை' முன் வைக்கலாம். அது ஒரு கதையாக தர்க்கமேயில்லாதது, எல்லாவிதமான வட்டாரமொழிகளையும் இதில் புகுத்தி குழப்பிக்கொண்டது என்று விமலாதித்த மாமல்லன் போன்றவர்கள் நீண்ட கட்டுரையாக எழுதி அதைக் குலைக்கமுயன்றாலும், அது ஒரு சிறந்த படைப்பாக தன்னை இப்போதும் முன்னிறுத்திக் கொண்டே இருக்கின்றது.  இந்த வித்தியாசங்கள் ஒரு நுட்பமான வாசகருக்கு இன்னும் நன்கு விளங்கும். ஆகவேதான் ஒவ்வொரு படைப்பாளியும் நல்லதொரு வாசகராக தான் எழுதும்போது இருக்கவேண்டும்.

புதிதாக எழுத வருபவர்கள் கவனிக்கவேண்டிய முக்கிய ஒரு விடயம், தம்மை இயன்றளவு குழு அமைப்புக்களில் இருந்து வெளியே தக்கவைத்துக்கொள்வது. ஒருவர் செயற்பாட்டாளராக இருந்தால் குழுக்களில் இருப்பதும், குழுக்களுள் செயற்படுவதிலும் சிக்கல் இல்லை. ஆனால் எழுதுவதற்கு, ஒரு குழுவிற்குள் இருப்பது பெரிதாக நன்மை பயக்கப்போவதில்லை. அண்மையில் இவ்வாறு குழுக்களில் இருந்தவர்கள் சலிப்புடனும், வெறுப்புடனும் வந்ததை அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கின்றேன். அது ஒருவகையில் அவர்கள் தொடர்ந்து எழுதுவதைப் பாதித்ததையும் கண்டிருக்கின்றேன்.

உண்மையில் குழு மனப்பான்மையானது, நமக்குள் இருப்பவர்களைப் பாராட்டிக்கொண்டிருக்குமே தவிர, உருப்படியாக நாம் முன்னகர்வதற்குரிய விமர்சனங்களைச் செய்யாது. இன்னொன்று இவ்வாறான குழுக்கள் தங்களைத் தாண்டி வேறு எவரும் எழுதுவதில்லை என்ற மனப்பான்மையுடன் எள்ளல் செய்தபடி இருக்கும். அது ஒருவகையில் சுயமோகமாக, அவர்களை எழுதச்செய்யாமலே செய்துவிடவும் கூடும். குழுக்களில் இயங்கும் சிலர் வெளியே வந்தோ, அதற்குள் இருக்கும்போது அங்கு நடந்ததை/நடப்பதைப் பகிரும்போதோ கொஞ்சம் பரிதாபம் வரும். ஆனால் என்ன செய்வது, இதையும் கடந்துவரத்தான் வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.
 

downlaod.jpg

எழுதுபவர்கள் பலர் எழுதவரும்போது தம்மை நிறைய வாசிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு வந்து அலுத்து சலித்து விலகிச் செல்வதையும் நாம் பார்க்கலாம். தமிழ்ச்சூழலில் உண்மை நிலவரம் அறிந்தால் இப்படியெல்லாம் மனோரதியமாக இருக்கத் தேவையேயில்லை என்பதை எளிதில் உணர்ந்துகொள்ளமுடியும். தமிழில் நிறைய வாசிக்கப்படும் ஒரு எழுத்தாளரான ஷோபாசக்தியே சென்னையில் நாம் இருந்து பேசிக்கொண்டிருக்கும்போது, 'நான் எனக்காக இருக்கும் நூறு வாசகர்களுக்காய்த்தான் எழுதுகின்றேன்' என்று ஏதோ ஒரு பேச்சின் நடுவில் சொன்னார். இதை நாம் literalயாய் எல்லாம் எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. ஷோபாவை பல நூற்றுக்கணக்கானவர்கள் வாசிப்பார்கள், ஆனால்  ஒரு நூறு பேருக்காய் மட்டுமே நான் எழுதுகின்றேன் என்ற தெளிவு இருந்தால், பலவித சலிப்புக்களைத்தாண்டி நாம் எழுத்தில் அதிக கவனம் கொள்ளமுடியும் என்பதைக் குறிப்பிட விழைகிறேன்.

மேலும், நாம் எழுதும் ஒரு படைப்பு எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என எதிர்பார்த்து மூர்க்கமாய் எல்லா இடங்களிலும் போராடிக்கொண்டிருக்கக் கூடாது. உதாரணத்துக்கு மனுஷ்யபுத்திரன் 'பாய் பெஸ்டி' கவிதையை எழுதியவுடன் அதில் நடந்த விவாதம் அனைத்திலிருந்தும் அவர் விலகி இருந்திருக்கலாம். ஜெயமோகன் தன் கருத்தை இந்தக் கவிதைப் பற்றிச் சொன்னவுடன், உணர்ச்சிவசப்பட்டு மறுமொழி எழுதி மனுஷ்யபுத்திரன் இருக்கத் தேவையில்லை. ஜெயமோகன்தான் தமிழ் இலக்கியத்தின் அளவுகோலை வைத்திருக்கின்றார் என்று நினைத்திருந்தால்தான் இப்படி கோபப்படவேண்டி வந்திருக்கும். ஜெமோவின் கருத்தைத்தாண்டி இந்தக் கவிதை தன்னை நிலைநிறுத்தும் என்ற தெளிவு இருந்திருந்தால், கவனமாக இதிலிருந்து நகர்ந்திருக்கலாம்.

படைப்பை எழுதியவுடன் அது நமக்குரியதல்ல வாசகரின் வாசிப்புக்குரியது என நகர்ந்திருந்தால் இவ்வளவு சிக்கல் மனுஷ்யபுத்திரனுக்கு வந்திருக்காது. அதற்காய் உரிய விமர்சனங்களைச் செவிமடுக்கக் கூடாது என்று அர்த்தம் இல்லை. ஒரு படைப்பாளிக்கு தான் எடுத்துக்கொள்வதற்கு ஒரு விமர்சனத்தில் ஏதாவது இருக்கின்றதா அல்லது காழ்ப்புணர்வில் எழுதப்பட்டிருக்கின்றதா என்று பார்க்கின்ற தெளிவு எளிதிலேயே வந்துவிடும்.

ஆகவே, எழுதும் படைப்பு கவனிக்கப்படவில்லை என்று சலிக்கத் தேவையில்லை. ஒரு நல்ல படைப்பு கவனிக்கப்படுவதை விட மோசமான படைப்பை விமர்சிக்கவே நமது தமிழ்ச்சமூகம் அதிகம் பழக்கப்பட்டும் இருக்கிறது. அண்மையில் இலங்கையில் நின்றபோது நண்பரொருவர் நான் எழுதிய ஒரு நல்ல கதைக்கு  பத்துப்பேர்தான் விருப்பக்குறி இட்டிருக்கின்றனர் என்று சொல்லி சிலரிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். அதேவேளை இயக்கம் சார்ந்து  விமர்சித்து எழுதப்பட்ட கதையை, அனுப்பச் சொல்லி கேட்டு வாசித்து, ஓரிரு வாரங்கள் முகநூலில் பலர் திட்டியும் கொண்டிருந்தார்கள்.

15 வருடங்களுக்கு மேலாக இணையத்தில் இயங்கும் எனக்கு இந்த தமிழ்வாசக 'அல்கோரிதம்' விளங்கும். ஆகவே நான் அதிகம் அலட்டிக்கொள்ளாது, அந்தப் பத்துப் பேரே போதும் என்றேன். ஆனால் என்னை ஆச்சரியப்படுத்தும் விடயம் என்னவென்றால், சிலவேளைகளில் நான் பயணிக்கும்போது, நான் அறியாது சிலர் என்னை வாசித்திருப்பதாய்ச் சொல்வது. கடந்தமுறை ஐரோப்பாவில் திரிந்தபோது அப்படி ஓரிருவர் சொன்னபோது, இதுதான் எனக்கு எழுத்தால் வரும் சலிப்புக்களை உதறித்தள்ளுவதற்கு தரும் உந்துசக்தியென நினைத்துக் கொண்டேன். நமக்குத் தெரியாத சிலரை நம் எழுத்துக்கள் போய்ச் சேருகின்றது என்பதை உணரும் தருணம் அருமையானது. அவ்வாறே யாராவது சிலர் அவ்வப்போது என்னைக் கண்டுபிடித்து மின்னஞ்சல்களில் என் படைப்புக்களை வாசித்ததாய் அனுப்பும் சிறு கடிதங்களும்.

இறுதியாய் நாம் இன்னொருவருடன் பேசுவதை விட, நிறைய எழுதிப் பகிர்வதன் மூலம் எமது எழுத்தை இன்னும் செழுமைப்படுத்தலாம். நான் இலக்கியம் சார்ந்து தனிப்பட்டு நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும், பொதுவெளியில் பகிர்ந்த கருத்துக்களுந்தான் எனக்கு மேலும் மேலும் எழுதிச் செல்ல உந்தித் தள்ளியிருக்கின்றது. இப்படியான நண்பர்களோடு அதிகம் தொலைபேசியிலோ, இல்லை குழுக்களிலோ இருந்தோ பேசியது இல்லை. ஆனால் இந்த நண்பர்களே எனக்கு இலக்கியம் சார்ந்து உள்ளேயும்(தனிப்பட்டும்), வெளியேயும் நிறையக் கற்றுத் தந்திருக்கின்றார்கள். நாம் ஒரு விடயத்தை விரும்பிச் செய்கின்றோம் என்றால் அதற்கான வெகுமதிகள் நமக்கு காலம் கடந்தாயினும் கிடைத்தே தீரும். ஆகவே எழுதுவது முக்கியமே தவிர, நம்மைக் கவனிக்கவில்லை/பாராட்டவில்லை என்பது அவ்வளவு அவசியமற்றதே என்றே சொல்வேன்.

சில நாட்களுக்கு முன் ஓர் அருமையான ஓவியரைக் கண்டடைந்து, அவரை ஓவியங்கள் வரையும் இன்னொரு நண்பருக்கு அறிமுகப்படுத்தி இருந்தேன். அறிமுகப்படுத்தும்போது என்னால் ஓவியம் வரைய முடியாத கவலையைப் பகிர்ந்தபோது, அந்த ஓவிய நண்பர், இப்போதுதானே எல்லோரும் வரைகின்றார்கள்  நீங்களும் வரையத் தொடங்குங்கள் என்றார். அவர் உற்சாகப்படுத்தினாலும், எனக்கு அது சுட்டுப்போட்டாலும் வராது என்பது நன்கு தெரியும். ஆகவே எமக்கு எது வருதோ, எது பிடித்தமாகிறதோ அதைச் செய்யலாம். எல்லோரும் வரைகின்றார்கள் என நாம் கும்பலோடு கும்பலாக ஓடத்தேவையில்லை. எமக்கு எழுத்து ஒரளவு வருகின்றதென்றால், எழுதிப் பார்க்கவேண்டியது. அது முடியாதென்றால் விலகிவிடுவது நமது உளத்திற்கும், வாசிக்கும் மனதிற்கும் செய்யும் நன்மையாக இருக்கும்.

நமக்கே பிடிக்காத ஒன்றை, நாம் வெறுக்கும் ஒன்றை ஏன் மற்றவர்களின் மீது திணிக்கவேண்டும்?

..................................

~ஒவியங்கள்: சல்வடோர் டாலி
(Feb 23, 2020)

 

http://djthamilan.blogspot.com/2020/04/blog-post_14.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.