Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாக் காலத்தில் வன்முறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாக் காலத்தில் வன்முறை

கொரோனாத் தொற்றினை அடுத்து நாட்டிலே பல்வேறு விதமான வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கி வருகின்றன. ஊரடங்கின் போது உணவுப் பொருட்களை வாங்கவும், குடி தண்ணீர் அள்ளவும் சென்ற, தமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முற்பட்டவர்களும், பொலிஸாரின் வன்முறைக்கு இலக்காகியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமர்சனக் கருத்துக்களை முன்வைப்போர் அச்சுறுத்தப்படுகிறார்கள். அல்லது அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் திட்டமிட்ட முறையிலே பரப்பப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களிலே ஒரு சிலர் தாம் எதிர்கொண்ட வன்முறை குறித்து மனித உரிமை அமைப்புக்களுக்கு முறையிட்டுள்ளதாகவும் சில செய்தி அறிக்கைகளிலே சொல்லப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் பெண்கள், சிறுவர் மீதான வீட்டு வன்முறையும், சிறுபான்மையினருக்கு விரோதமான செயல்களும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான வன்முறைகளை விளங்கிக்கொள்ளுவது எப்படி? இவற்றுக்கான அரசியல், சமூகப், பொருளாதாரப் பின்னணி எத்தகையது? நோய்க் காலத்தில் இடம்பெறும் வன்முறைகள் உடனடியாகவும், நீண்டகாலத்திலும் எத்தகைய தாக்கத்தினை உருவாக்கும்? போன்ற கேள்விகள் பற்றி நாம் ஆராய வேண்டும். வன்முறையானது சாதாரணமான விடயம் என்ற மனநிலை வேரூன்றி விடாது தடுக்க நாம் முயல வேண்டும்.

இராணுவமயமாக்கத்தின் வன்முறையினை விளங்கிக்கொள்ளுதல்

கொரொணாத் தொற்றினை அரசு கையாளும் மார்க்கங்களில் ஒன்றாக இராணுவ மயமாக்கம் செய்யப்பட்ட, வன்முறையினை ஊக்குவிக்கும், கண்காணிப்பு மற்றும் ஒழுக்கப்படுத்தற் செயன்முறைகள் அமைகின்றன. தனிமைப்படுத்தல் முகாம்களை நிருவகித்தல் போன்ற மருத்துவத்துறை நிபுணர்களின் பங்களிப்புக் கூடுதலாகத் தேவைப்படும் விடயங்களிலே கூட, மருத்துவத்துறையினரைக் காட்டிலும், இராணுவமயமாக்கத்தின் தாக்கம் கூடுதலாக இருப்பதாக, மருத்துவத் துறையினரால் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவ நெருக்கடி மிக்க ஒரு சூழலிலே, மக்கள் பீதி அடைந்திருக்கும் ஒரு காலத்திலே, இராணுவமயமாக்கப்பட்ட கட்டமைப்புகளினாலே தான் இந்த நெருக்கடியினைக் வினைத்திறனாகக் கையாள முடியும் என முன்வைக்கப்படும் வாதம், இலகுவில் மக்கள் அங்கீகாரத்தினைப் பெற்றுவிடும் அபாயம் நிலவுகிறது. இவ்வாறான இராணுவமயமாக்கலுக்குச் சாதகமான சூழலிலேயே, நாட்டின் பல பாகங்களிலே மக்கள் பொலிஸாரின் வன்முறைக்கு ஆளாகுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவமயமாக்கம் என்பது இராணுவ உறுப்பினர்களின் அல்லது பொலிஸ் உத்தியோகம் புரிவோரின் தனிப்பட்ட குணாதிசயங்களுடனும், நடத்தைகளுடனும் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் அல்ல. சில வேளைகளில் நாங்கள் சந்திக்கும் இராணுவ வீரர்களும், பொலிஸாரும், அரச அலுவலகம் ஒன்றிலே நாம் தொடர்புகொள்ளும் நிருவாக ஊழியர் ஒருவரினை விடக் கூடிய சமூக அக்கறை உடையவர்களாகவும், கூடிய அளவிலே உதவி செய்யும் மனப்பாங்கு உடையவர்களாகவும் இருக்கக் கூடும். இன்றைய காலத்திலே இராணுவத்தினரும், பொலிஸாரும் நோய்த் தொற்று அபாயத்துக்கு மத்தியிலும், முன்னணியில் இருந்து தமக்குப் பணிக்கப்பட்ட கருமங்களைச் செய்து வருகிறார்கள் என்பதுவும் இங்கு பதியப்படல் வேண்டும்.

இராணுவமயமாக்கம் என்பது மிகவும் இறுக்கமான, சுதந்திரத்தினை மறுக்கும், இராணுவ மற்றும் பொலிஸ் கட்டமைப்புக்களின் ஊடாக, நாடு முழுவதிலும், அல்லது குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக, வன்முறையினையும், அச்சத்தினையும் பிரயோகித்து மக்களினைக் கண்காணித்தலினையும், கட்டுப்படுத்தலினையும், ஒழுக்கப்படுத்தலினையும் குறிக்கும். இந்தச் செயன்முறைகளுக்கான தீர்மானங்கள் அரசின் உயர் அடுக்களினைச் சேர்ந்தோரினால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இராணுவமயமாக்கப்பட்ட சூழலில் இடம்பெறும் வன்முறைகளுக்கு அரசின் உயர் அடுக்குகளினைச் சேர்ந்தோரினை கூடுதலான அளவுக்குப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவது அவசியம்.

“கொரொணாவுக்கு எதிரான போர்”: வன்முறைக் கருத்தியல்

கொரொணாவினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில், கருத்தியல் ரீதியான முறைகளிலும், வன்முறை மறைமுகமான வழிகளிலே ஊக்குவிக்கப்படுகிறது. தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகள், அரசாங்கத்தினாலும், ஊடகங்களின் ஒரு பிரிவினராலும் ‘போர்’ என விபரிக்கப்படுகின்றன. நெருக்கடியான காலப் பகுதியில், ஜனநாயகத்தினை விட வன்முறை கலந்த முறைகள் கூடிய வினைத்திறன் மிக்கன என்ற அபிப்பிராயத்தினை இவ்வாறான போர்க் கருத்தியல் மக்களிடையே பிரபலம் பெற வைக்கிறது.

மறுபுறத்திலே, போர்க் கருத்தியல் ஏற்கனவே நாட்டிலே இடம்பெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களினையும், அரச வன்முறையினைக் கடந்த காலங்களில் எதிர்கொண்டோரினையும், அரசின் நோய்க் கட்டுப்படுத்தற் செயன்முறைகளில் இருந்து புறமொத்துக்குகின்ற ஒரு கருத்தியலாகவும் அமைகிறது. போரின் போது தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமான வகையிலே தமது எதிரிகள் என்ற நிலைப்பாட்டினைச் சில சிங்களத் தேசியவாதத் தரப்புக்கள் முன்வைத்தன. போர் வெற்றியானது தமிழர்கள் மீதான சிங்களத் தேசியவாதத்தின் வெற்றியாகவும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளைப் போர் என வர்ணிக்கும் செயன்முறைகள் சிறுபான்மை மக்களிடையே அரசாங்கம் மீதிருக்கும் நம்பிக்கையினை குறைப்பதாக அமைகின்றன.

போரினை வென்றது போல வைரஸினையும் வெல்வோம் என்று அரசாங்கத் தரப்பினர் சொல்லுவது, தமிழ் மக்கள் மீதும் ஏனைய சிறுபான்மைத் தரப்பினர் மத்தியிலும் போர் தொடர்பாகத் தாம் அனுபவித்த அரச வன்முறைகளை மீளவும் நினைவூட்டுகிறது. அரச வன்முறையினை நியாயப்படுத்தும் ஒரு கருத்தியல் 1970களின் ஆரம்பத்திலும், 1980களின் இறுதியிலும் இடம்பெற்ற ஜே.வி.பியினரின் கிளர்ச்சிகளை அடக்கும் போதும், அரசினால் சிங்கள மக்களின் ஒடுக்கப்பட்ட, வறிய பிரிவினருக்கு எதிராகவும் முன்னிறுத்தப்பட்டது. எனவே இது நாட்டின் எல்லா மக்களுக்கும் எதிரான கருத்தியலாகவும் அமைகிறது.

நாட்டிலே மிகவும் அசாதாரண நிலைமைகள் தோன்றும் போது, அவற்றைக் கையாளுவதற்கு ஜனநாயகத்தினை விஸ்தரிப்பதற்கான வழிகளினையே நாம் தேட வேண்டும். போரினையும், வன்முறையினையும், எதேச்சாதிகாரத்தினையும் கொண்டாடும் மனநிலையினை ஊக்குவிப்போமாயின், நாட்டின் விவசாயம், மீன்பிடி, கல்வி, பொருளாதாரம் என எல்லாத் துறைகளிலும் இன்றும் எதிர்காலத்திலும் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு, வன்முறை மிக்க‌ கட்டுப்படுத்தற் செயன்முறைகளே தீர்வு என யோசிக்கும் அபாய நிலைக்கு நாம் செல்லக் கூடும்.

பொருளாதாரமும் வன்முறையும்

நோய்த்தொற்றினை அடுத்து ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் சிறிய திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளை வன்முறையினாலும், சட்டங்களினாலும் தீர்க்க முடியாது. மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலும், மக்களின் தொழில்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும், அவர்கள் வேறு வழியின்றித் திருடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இவ்வாறான சூழலில் அரசு வன்முறையினைப் பிரயோகிப்பதனை விடுத்து, மக்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

நாட்டின் பெருமளவிலான செல்வமும், வருமானமும், சொத்துக்களும் ஒரு சிறுபிரிவினரின் கைகளில் இருப்பது கூட ஒரு வகையிலான திருட்டே. ஆனால் அது குறித்து அதிகாரம் மிக்கவர்கள் அதிகம் பேசுவதில்லை. மாறாக வறியவர்கள் செய்யும் சிறு திருட்டுக்களை நோக்கியே எமது கண்டனங்களும், விமர்சனங்களும் அமைகின்றன. வருமானங்களையும், வளங்களையும் மீள்பங்கீடு செய்து உருவாக்கப்படும் ஒரு பொருளாதாரமே மக்களின் ஒட்டுமொத்த நலனுக்குப் பாதுகாப்பாக அமையும். வன்முறை மூலம் வறுமையினைத் தீர்க்க முடியாது.

 

நாட்டில் தோன்றியிருக்கும் பொருளாதார நெருக்கடியினை நாம் விளங்கிக் கொள்ளாவிடின், திருட்டு, சட்ட விரோத மதுபானம் தயாரித்தல் போன்ற சம்பவங்களினை நாம் மிகவும் குறுகிய முறையில், ஒழுக்கக் குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினைகளாகப் பார்ப்பதற்குப் பழக்கப்பட்டு விடுவோம். இப்பிரச்சினைகளை ஒழுக்கக் குறைபாடுகளாக விளங்கப்படுத்த முற்படுவதன் மூலம், மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தான் ஆற்ற வேண்டிய பணிகளில் இருந்து தப்பித்துக்கொள்ள அரசு முற்படுகிறது. இவ்வாறான ஒழுக்கப்படுத்தல் பற்றிய கருத்தியலானது பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் ஒடுக்கப்பட்டிருக்கும் சமூகங்களுக்கு எதிரான வன்முறையினைத் தூண்டக் கூடிய அபாயம் இன்று எழுந்துள்ளது. இது எம்மத்தியிலே சமூக ரீதியிலான பிளவுகள் மேலும் அதிகரிப்பதனை ஊக்குவிக்கும்.

சமூகப் பிளவுகளும் வன்முறையும்

நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையினை குறுகிய தேசியவாத சக்திகளும், மதவாதச் சக்திகளும், ஆணாதிக்கச் சக்திகளும் கூடத் தமக்குச் சாதகமாக்க முற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகப் பரப்பப்படும் கருத்துக்களும், முஸ்லிம் விரோதப் போக்குகளும், பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளும் இந்த சக்திகள் தமது அதிகாரத்தினை உறுதிப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளே. எம்மத்தியிலே வளர்ந்து வரும் இன மதப் பன்மைத்துவத்தினை மதிக்காத போக்குகளும், ஆண் பெண் சமத்துவத்தினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் போதிய அளவில் மேற்கொள்ளாமையும், சாதிப் பாகுபாடும் சமூக ரீதியிலான வன்முறைகளுக்கு நீண்டகாலக் காரணங்களாக அமைகின்றன.

ஊரடங்கினாலும், சமூகத் தனிமைப்படுத்தலினாலும் பெண்கள், சிறுவர்கள், சிறுபான்மையினர், தொழிலாளர்கள் போன்ற பிரிவினருக்குப் பாதுகாப்பாக இருந்த நீதிக் கட்டமைப்புக்களின் தொழிற்பாடுகள் இன்றைய நாட்களிலே குறைந்துள்ளன. இந்த நிலைமை வன்முறைகளுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. உதாரணமாக வீட்டில் இருந்து வெளியேறி உரியவர்களிடம் முறைப்பாடு செய்ய முடியாத நிலையிலே பெண்கள் வீட்டு வன்முறையினை இந்த நெருக்கடியின் போது எதிர்கொள்கிறார்கள்.

வீட்டிலே குழந்தைகள் வளர்க்கப்படும் முறை, பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வி, பிள்ளைகளுக்கு வழங்கப்படும் உடலியல் சார் தண்டனைகள், பத்திரிகைகள், சமய ரீதியிலான பிரசாரங்கள், சமூக நிறுவனங்கள் என எல்லாத் தளங்களிலும் வெறுப்பினை விதைக்கும் போக்குகள் அவதானிக்கப்படுகின்றன. இவற்றின் நீண்ட விளைவுகளாகவும் நாம் இன்று வன்முறையினை எதிர்கொள்ளுகிறோம். வெறுப்பும், வன்முறையும் ஒழுக்கப்படுத்தல் எனவும், சமூகப், பொருளாதார, மருத்துவப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒடுக்கும் தன்மை மிக்க வன்முறை அவசியம் எனவும் விளங்கப்படுத்தும் அவல நிலையினை நாம் இன்று சமூகமாக நோக்குகிறோம். வன்முறையினைச் சாதாரணப் படுத்தும் எல்லா சக்திகளையும், காரணங்களையும் இனங்கண்டு அவற்றுக்குச் சவால் விடும் வகையில் விழிப்புணர்வுடன் செயற்படுவது இன்றைய காலத்தில் மிகவும் அவசியம்.

சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது.

http://thinakkural.lk/article/40928

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.