Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் நாமாக, நாம் தமிழர்களாக இருப்போம் `எங்கள்', `உங்கள்' என்று பிரித்துப் பேசாதீர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் நாமாக, நாம் தமிழர்களாக இருப்போம் `எங்கள்', `உங்கள்' என்று பிரித்துப் பேசாதீர்

[29 - May - 2007]

* உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் கருணாநிதி வேண்டுகோள்

தமிழ் நமது மொழி, அதுவே நமது வழி. எனவே `எங்கள்`, `உங்கள்' என பிரித்துப் பேசாதீர்கள். நாம் நாமாக இருப்போம். நாம் தமிழர்களாக இருப்போமென இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களிடம் முதலமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் சார்பில் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 7 ஆவது மகாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெற்றுவந்தது. இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் கருணாநிதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது;

வரவேற்புரையாற்றிய இதயத்துல்லா ஒரு கருத்தைச் சொன்னார். பக்கத்திலே உள்ள கர்நாடகாவில் 4 சதவீதம் சிறுபான்மை சமுதாயத்துக்கு என்று இட ஒதுக்கீடு, கேரளாவிலே இட ஒதுக்கீடு, ஆந்திராவிலும் அவ்வாறே ஒதுக்கீடு. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் நிலைநாட்டவேண்டும் என்று சொன்னார்கள். அங்கெல்லாம் அப்படி இட ஒதுக்கீடு இப்போது நடைமுறையிலே இருக்குமானால் நாளைக்கே அதற்கான ஆணை தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்களும் களிப்பு மிகுதியால் கைதட்டுகிறீர்கள். நானும் உற்சாகத்தோடு அதை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால், கர்நாடகாவிலும் கேரளாவிலும் ஓரளவு நடைமுறையிலேயே அது இருந்தபோதிலும், ஆந்திராவிலே இன்னும் நடைமுறைக்கு வரமுடியாமல் சில சட்ட சிக்கல்களை ஏற்படுத்தி குறுக்குப் பாதையிலே போனவர்கள்- குறுக்குப் பாதை என்றால் உங்களுக்குப் புரியும். அந்த குறுக்குப் பாதையிலே போனவர்கள், அதை தடுத்து வைத்து இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இல்லை அது அங்கே அமுல்படுத்தப்படுகிறது என்றால் விரைவிலே இந்த வாரத்திலே அதைப்பற்றி பரிசீலித்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும். அந்த அவசர சட்டத்துக்கு நான் மாத்திரமல்ல நம்முடைய ஆளுநரும் கையெழுத்திட தயாராக இருப்பார் என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கவிக்கோ அப்துல் ரகுமான் பேசும்போது, என்னுடைய பெயரையே குறிப்பிட்டு, பெயரிலேயே நிதி இருக்கிறது. தாராளமாக வழங்கலாம் என்றெல்லாம் சொன்னார். அவர் என்னுடைய பெயரை உற்றுக் கவனித்தால், `கருணை' தான் அதிகம் இருக்கிறது. `நிதி' குறைவாகத் தான் இருக்கும். கருணை 3 எழுத்திலும், நிதி 2 எழுத்திலும் இருக்கும். என் தாய் தந்தையர் பெயர் வைக்கும்போதே, இப்படியெல்லாம் எதிர்காலத்திலே கோரிக்கைகள் வரும் என்று எதிர்பார்த்து புத்திசாலித்தனமாக முத்துவேலரும்,அஞ்சுகம் அம்மையாரும் "கருணாநிதி" என்று வைத்து, 3 எழுத்திலே கருணையையும் நிதி என்பதை 2 எழுத்திலும் பொருத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் கூட அந்த குறைவான "நிதி" யையும் கூட மக்களுக்காகத்தான், பொது நலனுக்காகத்தான் பயன்படுத்தப்படும்.

சான்றோர்கள் பலர் தமிழகத்திலும் இந்திய திருநாட்டிலும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சதாவதானி- அவருக்கு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று இங்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.அதை விரைவில் நிறைவேற்றுவோம் என்று அறிவித்துக்கொள்கிறேன். காரணம், அந்த துறையின் அமைச்சர் தம்பி ராஜா இங்கே வந்திருக்கிறார். அவர் மூலமாக இது நிறைவேற்றப்படும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்குத் தரப்பட்ட இந்த இலக்கிய விருதுக்கு பெயர் உமறுப் புலவர் விருது. உமறுப் புலவர் 1642 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் 63 ஆண்டுகள் வாழ்ந்தவர் என்றும் அந்த 63 ஆண்டுகளில் அவர் எழுதிக் குவித்த காவியம் அவர் பாடிய பாடல்கள், அவர் தந்த இலக்கிய செல்வம் அளப்பரியது என்றும் நாம் அறிகின்றோம். அப்படிப்பட்ட உமறுப் புலவரால் இயற்றப்பட்டது தான் சீறாப்புராணம். அந்த சீறாப் புராணத்திலே ஒரே ஒரு நிகழ்ச்சியை மாத்திரம் உங்களுக்கு எடுத்துக் காட்டினால் உலக நிலை, நாட்டு நிலை, நமது நிலை இவைகளை விளக்குவதற்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

சீறாப்புராணத்தில் மானுக்கு துணை நின்ற படலம் என்ற தலைப்பிலே ஒரு பகுதி வருகிறது. அதாவது, மானுக்குத் துணையாக இருந்த படலம் என்பதாகும். அது அருவிபோன்ற தமிழ் ஓட்டமும் ஆற்றுப் பெருக்குப் போன்ற வளமான சொற்களும் கொண்டன. அதிலே நபிகள் நாயகம் மான் ஒன்றை காப்பாற்றுவதற்காக அதற்கு பிணை கொடுத்து நின்றார் என்பதுதான் அந்தப் பகுதி.

கொடுத்த வாக்குறுதியை மீறுகிறவர்கள் உலக அளவிலும் இருக்கிறார்கள்- நாட்டு அளவிலும் இருக்கிறார்கள்- ஊரளவிலும் இருக்கிறார்கள்- நம்முடைய வீதி அளவிலும் இருக்கிறார்கள். நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். எனவே, வாக்குறுதிகளை மீறுவது எவ்வளவு பெரிய பாவமான செயல், எவ்வளவு வஞ்சகமான செயல் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் , அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறவர்கள் எவ்வளவு நேர்மையானவர்கள், எவ்வளவு வாய்மையானவர்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும் அதைப் போற்றுகின்ற மார்க்கமாக இஸ்லாம் மார்க்கம் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவும் இந்தக் கதை புனையப்பட்டு இருக்கிறது.

இப்போது வாக்குறுதி காப்பற்றப்படுகிறதா? ஈராக் நாட்டுக்குக் கூட வாக்குறுதி வழங்கினார் அமெரிக்க ஜனாதிபதி. என்ன வாக்குறுதி? நீங்கள் உயிர்க்கொல்லி ஆயுதங்களை, கருவிகளை பயன்படுத்தாமல் இருந்தால் உங்கள் நாட்டிலே உயிர்கொல்லி ஆயுதங்கள், குண்டுகள் பாதுகாத்து வைக்கப்படாமல் இருந்தால், நான் அனுப்புகிற விஞ்ஞானிகள் வந்து சோதனையிட்டு உயிர்க்கொல்லும் ஆயுதங்கள் இங்கே இல்லை என்று சொல்லி விடுவார்களேயானால், நான் ஈராக் நாட்டின் மீது படையெடுக்க மாட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி புஷ் சொன்னார். அவ்வாறே விஞ்ஞானிகள் வந்தார்கள், வந்து அந்த ஊரையும் சோதனையிட்டார்கள். உயிர்க்கொல்லி ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று அறிக்கை தந்தார்கள். தந்த பிறகும் புஷ் வாக்குறுதி மீறினார்.

மீறியதன் விளைவு சதாமை இழந்தோம். வாய்மைக்கே பாடை கட்டப்பட்டது. உண்மைக்கு புதைகுழி வெட்டப்பட்டது. வாய்மை அன்றைக்கு தவறிய காரணத்தால், வார்த்தை நிலைக்காத காரணத்தால் ஈராக்கிலே பெரும் படுகொலைகளை உலகம் சந்தித்தது. ஒரு மாவீரன், சதாம் கொல்லப்பட்டான். தூக்கிலே போடப்பட்டான். எனவே, வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும். அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். அதைத்தான் இந்த சிறு கதை மூலமாக நபிகள் நாயகத்தை ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு சீறாப்புராணத்திலே விளக்கியிருக்கிறார்.

இஸ்லாமியர்களும் நாங்களும் இந்த நாட்டினுடைய பிரஜைகள் என்று சொல்லிக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய அப்துல் ரகுமான் பேசும்போது கூட, நாங்கள், நீங்கள் என்று பிரித்துப் பேசினார். எனக்கு அப்போது கஷ்டமாக இருந்தது. இது எங்களுடைய பாஷை, இது எங்களுடைய மொழி, இது எங்களுடைய வழி என்றெல்லாம் சொன்னார். ரகுமானே, மன்னிக்கவேண்டும்- இனிமேல் நம்முடைய, நம்முடைய, நம்முடைய என்று பேசுங்கள் என்று நான் அப்துல் ரகுமானையும் கேட்டுக்கொண்டு, நாமெல்லாம் இந்த மகாநாட்டிலே கூட நாம் நாமாக இருப்போம், நமக்கு நாமே, நாம் தமிழர்களாக, நாம் இந்தியர்களாக , நாம் திராவிடர்களாக, நாம் பகுத்தறிவாளர்களாக வாழ்வோம் என்றார்.

விழாவில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் உமறுப்புலவர் விருதையும் பாராளுமன்ற மேல் சபைத் துணைத் தலைவர் ரகுமான்கான் ஒரு இலட்சம் ரூபாவுக்கான பொற்கிழியையும் வழங்கி பாராட்டிப் பேசினார்கள். சாகித்திய அகடமி விருது பெற்ற தோப்பில் முகம்மது மீரான், கவிக்கோ அப்துல் ரகுமான், மு.மேத்தா மற்றும் இஸ்லாமிய இலக்கியக் கழக விருது பெற்றோரை முதலமைச்சர் கருணாநிதி பாராட்டினார்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.