Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆத்திகம், நாத்திகம், இந்து மதம்: மனம் புண்படுவது தேவைதானா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: ஆத்திகம், நாத்திகம், இந்து மதம்: மனம் புண்படுவது தேவைதானா?

spacer.png

 

ராஜன் குறை

ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே மனித சிந்தனையின் சாத்தியங்கள்தான். வெகுகாலமாகவே இரண்டும் முரணுற்று விவாதித்து வந்துள்ளன. நல்ல பண்பட்ட சமூகத்தில் இரு தரப்பும் தொடர்ந்து இயங்குவதும், அவை தத்தமது பார்வைகளைத் தடையின்றி வெளிப்படுத்துவதும் அவசியம். அரசியல் நிர்ணய சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளில் தங்கள் மனத்துக்கு ஒப்பும் மதத்தைப் பின்பற்றும் உரிமையும் அடக்கம். அப்படி மத நம்பிக்கைகளை பின்பற்றாமல் அவற்றை கேள்விக்கு உட்படுத்துவதும், நாத்திகத்தை பிரச்சாரம் செய்வதும் அந்த உரிமையின் ஒரு பகுதிதான். அதாவது நாத்திகமும் ஒரு நம்பிக்கைதான். ஆத்திகம், நாத்திகம் ஆகிய இரண்டின் அடிப்படைகளையும் புரிந்துகொள்வது அவசியம். ஒரு விதத்தில் இரண்டையும் நாம் தொடர்ந்து பரிசீலிப்பதும் அவசியம். சிந்தனை வளம் பெற இந்த அடிப்படையான முரண் இன்றியமையாதது எனலாம்.

தெய்வம், இறைவன், கடவுள் என்ற வார்த்தைகளால் குறிப்பிடப்படும் மூல முதல் காரணமான சக்தியைப் பற்றிய கற்பிதம், கோட்பாடு, கற்பனைகள் போன்றவை மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமானவை என்றால் மிகையாகாது. அவை பெரியதொரு ஆறுதலை, ஆற்றலை மனிதர்களுக்கு வழங்கியுள்ளன. காலங்காலமாக மக்கள் தொகுதிகள் தங்கள் வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ள, தங்களைத் தகவமைத்துக்கொள்ள, ஒருவரோடு ஒருவர் அனுசரித்து வாழ, அறம் பேண இறை நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுள்ளன.

ஏன் இறை நம்பிக்கை இன்றும் செல்வாக்குடன் விளங்குகிறது என்பதற்கு முக்கிய காரணம் அடிப்படையான பல அம்சங்களை இன்னமும் விளக்க முடியாமல் இருப்பதுதான். பிரபஞ்சம் எல்லையற்று விரிகிறது என்பதன் பொருள் என்ன? அது எதிலிருந்து எப்படித் தோன்றியது? அதைவிட பெரிய பிரச்சினை ஏன் தோன்றியது? இப்படியெல்லாம் கேட்க சாத்தியமே தவிர, இதற்கு விளக்கம் எதுவும் கிடையாது. அதைப்போலவே ஜனனம், மரணம் உள்ளிட்ட பலவற்றை முழுவதும் காரண காரியத் தொடர்ச்சியில் விளக்க முடிவதில்லை. இயற்கை திடீரென ஒரு நுண்கிருமியை உருவாக்கி மானுட ஏற்பாடுகளைக் கலங்கடிக்கிறது. பொதுவாக தற்செயல் என்பதை ஏற்பது கடினமாக இருப்பதால் இறை நம்பிக்கை அல்லது கோட்பாடு செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது.

நாத்திகத்தின் தேவை என்ன?

சரி, நம்மால் விளக்க முடியாத இயற்கையின் தற்செயல் நிகழ்வுகளை கடவுளின் திருவிளையாடல் என்று சொல்லி ஆறுதல் படுத்திக்கொள்வது நல்லதுதானே என்று தோன்றும். ஆனால், அது மானுடரை அவர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கச் செய்துவிடும் அபாயம் தோன்றுகிறது. சமூகத்தில் பலர் செல்வச் செழிப்புடன் இருக்கும்போது சிலர் பட்டினி கிடக்கிறார்களே என்று கேட்டால் அது இறைவன் செயல், தலையெழுத்து என்று பதில் சொல்லும்போது மனிதனின் செயலுக்கு இறைவனைப் பொறுப்பாக்கும் போக்கு தொடங்குகிறது. “பிறவிப்பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவனடி சேராதார்” என்று கூறிய வள்ளுவர்தான் “இறந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் கெடுக இவ்வுலகியற்றியான்” என்றும் கூறினார்.

இயற்கையின் பிரமாண்டமான புதிர்த்தன்மையை எதிர்கொள்ள இறைவன் என்ற கோட்பாடும் நம்பிக்கையும் மனிதர்களுக்கு உதவலாம். ஆனால், அதே கோட்பாட்டை, நம்பிக்கையை தங்களுடைய செயல்களை விளக்கவும் மனிதர்கள் பயன்படுத்தும்போது இறை நம்பிக்கை அறமற்றதாக, அநியாயமானதாக மாறுகிறது. பெரும்பாலும் மத அமைப்புகள், பூசாரி வர்க்கம் போன்றவை மானுட சமூகங்களில் ஆதிக்க மையங்களைக் கட்டமைக்க கடவுள் என்ற கற்பிதத்தைப் பயன்படுத்துகின்றன. பல்வேறு விதமான ஒடுக்கு முறைகளைக் கடவுள் பெயரால் நியாயப்படுத்துகின்றன.

இந்தச் சூழ்நிலை கடவுள் கோட்பாட்டை கேள்விக்கு உள்ளாக்கும் தேவையை உருவாக்குகிறது. நம்பிக்கைகள் திறந்த சிந்தனைகளாக இல்லாமல் மூடுண்டு, மூட நம்பிக்கைகளாக, கேள்விகளை அனுமதிக்காத கருத்துகளாக மாறும்போது அந்த மூட நம்பிக்கைகளைத் தகர்த்து மீண்டும் சிந்தனையை சுதந்திரமானதாக மாற்ற நாத்திகம் தேவைப்படுகிறது.

இந்து மதம் தொகுக்கப்பட்டதில் உருவான பிரச்சினைகள்

இந்து மதத்தைச் சிறந்த மதமாக பேசுபவர்கள்கூட அது ஒரு தொகுக்கப்பட்ட மதம் என்பதை ஏற்றுக்கொள்வார்கள். அதாவது பல்வேறு தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவை கலந்துதான் இந்து மதம் என்ற ஒற்றை பெயரில் வழங்கப்படுகிறது. ஆனால் இவ்விதம் தொகுத்தபோது பார்ப்பனர்கள் என்ற பூசாரி சமூகத்தை மையப்படுத்தி அது தொகுக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக அவர்கள் கூறிய சாதிபடிநிலை அமைப்பு, தீண்டாமை போன்ற சமூக நடைமுறைகளை சாத்திரங்கள் சார்ந்ததாக, மத நம்பிக்கை சார்ந்ததாக மாற்றிவிடுவது நிகழ்ந்தது. அதனால் இந்து கோயில்கள் என்று சொல்லப்பட்டவற்றின் உள்ளேயே பல இந்து சாதி மக்களை அனுமதிக்க மறுக்கும் நிலை இருந்து வந்தது. இருபதாம் நூற்றாண்டில் சமத்துவ உணர்வு ஏற்பட்டபோதுதான் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்தி தங்கள் மதத்தின் கோயில்களுக்குள் நுழையும் உரிமையையே இந்து மதத்தின் பல சாதிகள் பெற முடிந்தது.

இப்படியான இந்து மதத்தின் சாதி ஏற்றத்தாழ்வு காலங்காலமாக பல சீரமைப்பாளர்களை, புரட்சியாளர்களை உருவாக்கியது. அவர்கள் மத நடைமுறைகளை தொடர்ந்து மாற்றியமைக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் காலத்துக்குப் பிறகு மீண்டும் ஏற்றத்தாழ்வுகளும், விலக்கல்களும் தொடரத்தான் செய்தன. இத்தகைய போக்குகள் இறை மறுப்புக்கும், நாத்திகத்துக்கும் காரணமாயின.

எனவே மற்ற சமூகங்கள் எல்லாவற்றையும் விட இந்து சமூகத்தில் நாத்திகத்துக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது எனலாம். நாத்திகம் தொடர்ந்து நம்பிக்கைகளைக் கேள்வி கேட்பது என்பது, சுய சிந்தனையை ஊக்குவிப்பதற்கும், கடவுள் பெயரால் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளை, செயலின்மையை எதிர்த்துப் போராடுவதற்கும் அவசியமானதாக ஆகிறது.

 

பெரியாரை ஏற்றுக்கொண்ட ஆத்திகர்கள்

தமிழகத்தில் பெரியார் ஈ.வே.ராமசாமி தன்னுடைய சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டத்தில் கடவுள் மறுப்புக்கும் முக்கிய இடமளித்தார். அவருடைய பிரதான நோக்கம் கடவுள் மறுப்பல்ல என்றாலும், சாதி வேற்றுமையை வலியுறுத்தும் சாத்திரங்கள், சடங்குகள் மதம் சார்ந்து இருந்ததால் அவர் தவிர்க்க இயலாமல் பகுத்தறிவு சார்ந்து கடவுள் நம்பிக்கையைக் கேள்விக்குட்படுத்தினார்.

பெரியாரின் கேள்விகளைப் புரிந்துகொண்ட மக்கள், முற்றிலும் கடவுள் நம்பிக்கையைத் துறக்கவில்லை என்றாலும், அவர் கேட்கும் கேள்விகளின் நியாயத்தைப் புரிந்துகொண்டனர். தங்கள் செயல்களுக்கான எல்லா பழியையும் கடவுள் மேல் போடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டனர். தாங்கள் ஏற்படுத்தும் அநீதியான சமூக அமைப்பைக் கடவுள் பெயரால் நியாயப்படுத்தக் கூடாது என்பதை பெரியாரின் செய்தியாகப் புரிந்துகொண்டனர்.

கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திகர்கள் பலரால் பெரியார் சமூக சீர்திருத்தவாதியாக, சமூகத் தொண்டராக மதிக்கப்பட்டார். அவரும் ஆத்திகர்களுடன் தனிப்பட்ட முறையில் சுமுகமாகவே பழகினார். குன்றக்குடி அடிகளார் போன்ற துறவிகளுடன் பொது மேடையில் தோன்றினார். ஆத்திகர்களும், நாத்திகர்களும் பொதுவான சமூக நோக்கத்துக்காக, சமூக நீதிக்காக இணைந்து குரல் கொடுக்க முடியும் என்பதை அவர்கள் நிரூபித்தனர்.

பெரியாருக்குப் பல நூற்றாண்டுகள் முன்பே சித்தர்கள் எனப்பட்ட சைவ மத பெரியோர்கள் சாதி வேற்றுமை, சிலை வழிபாடு, சடங்குகள் போன்றவற்றை ஆன்மிக தளத்திலிருந்தே கண்டித்து உள்ளனர். “நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்?” என்ற சித்தர் கேள்வி அனைவரும் அறிந்தது. இது போன்ற பல எதிர் மரபுகளின் இருப்பை புரிந்துகொள்ளும் ஆற்றல் மக்களுக்கு எப்போதும் இருந்து வந்துள்ளது.

மனம் புண்படுதல் தேவையா?

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் சமூகத்தில் அறுதிப் பெரும்பான்மையாக உள்ளார்கள். நாத்திகர்கள் சிறுபான்மையினர்தான். ஆத்திகர்களின் செயல்கள் தங்கள் மனத்தைப் புண்படுத்துவதாக நாத்திகர்கள் கூற முடியாது. ஆத்திகர்கள் ஊரையெல்லாம் கூட்டி மிகப்பெரிய திருவிழாக்களை நடத்துகிறார்கள். ஒலிபெருக்கியில் பாடல்களைப் போடுகிறார்கள். தெருவெல்லாம் ஊர்வலம் போகிறார்கள். எனக்கு இறை நம்பிக்கை கிடையாது; பொது இடங்களில் இத்தகைய செயல்கள் என் மனத்தைப் புண்படுத்துகிறது என்று ஒரு நாத்திகவாதி புகார் செய்ய முடியுமா? ஆத்திகர்களின் நம்பிக்கையை நாத்திகர்கள் புரிந்து கொள்கிறார்கள்.

நாத்திகர்கள் அவர்கள் அவர்கள் கருத்துகளைப் பதிவேற்றும் தளங்களில் இறை நம்பிக்கையின் வடிவங்களை கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அது அவர்கள் கொள்கை, கோட்பாடு சார்ந்த செயல்பாடு. அவர்கள் ஆத்திகர்களைப் போல ஊரெல்லாம் ஒலிபெருக்கி கட்டி இறை நிந்தனை செய்வதில்லை. அவர்கள் ஒரு பத்திரிகையில், ஒரு யூடியூப் சேனல் எனப்படும் இணைய வெளி சேனலில் சில கருத்துகளை, இறை நம்பிக்கையைக் கேள்விக்கு உட்படுத்தும் சிந்தனைகளைப் பதிவு செய்கிறார்கள். ஆத்திகர்கள் அவர்கள் உரிமையை மதிக்க வேண்டும். அதுவே முதிர்ச்சி. அவர்கள் வலைதளத்தை, யூடியூப் சேனலை ஆத்திகர்கள் பார்க்க வேண்டிய தேவை இல்லையே.

இவ்வாறான அணுகுமுறைக்குப் பதிலாக ஒரு மக்களாட்சி அரசு கருப்பர் கூட்டம் என்ற அந்த யூடியூப் சேனலை முடக்கியுள்ளது. கந்த சஷ்டி கவசம் என்ற ஒரு வழிபாட்டுப் பாடலை கேலியாகக் கேள்விக்கு உள்ளாக்கியவரை, அவர் கூட்டாளிகளைக் கைது செய்துள்ளது. இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. நாளை நாத்திகர்கள் பெரும்பான்மையானால் ஆத்திகர்களைக் கைது செய்யலாமா? கோயில்களை பூட்டி விடலாமா? அது பெரும்பான்மைவாதம் ஆகிவிடுமல்லவா? எப்படி அனைவருக்கும் அவரவர் மனத்துக்கு உகந்தபடி வழிபடும் உரிமை இருக்கிறதோ, அதேபோல அந்த வழிபாட்டு முறைகளைக் கேள்வி கேட்கவும் உரிமை இருக்கிறது.

மக்களாட்சி நெறிமுறைகளிலும், முதிர்ந்த சமூக உறவுகளிலும் நம்பிக்கையுள்ள ஆத்திகர்கள், கடவுள் நம்பிக்கையாளர்கள் கருப்பர் கூட்டத்தின் மீது அரசு எடுத்துள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டிக்க முன்வர வேண்டும். எந்தச் சூழலிலும் பெரும்பான்மையானவர்களின் கொள்கை சிறுபான்மையினர் மாறுபடும் உரிமையை நசுக்கக் கூடாது. அது மெல்ல மெல்ல அனைவரது உரிமைகளையும் பறிப்பதற்கே வழி வகுக்கும். மாற்றுக் கருத்தால் நம் மனம் புண்படுகிறது என்ற கூற்று சகிப்பின்மைக்கே வழிவகுக்கும். சமூகத்துக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும். புண்படாத மனங்களே ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு:

 

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம்,

 

https://minnambalam.com/public/2020/07/27/8/hindu-religion-atheists-periyar-hope-of-god

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.