Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லை நில மக்களின் தொழில்கள்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை நில மக்களின் தொழில்கள்..

agriancient.jpg

முன்னுரை

சங்க இலக்கியம் என்பது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் உள்ளடக்கியது. இதில் அகம், புறம், அகம்புறம் என பகுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு அடிப்படையாக அமைவது தொழிலாகும். மக்கள் தாங்கள் வாழும் நிலத்தின் அடிப்படையில் தொழில் காணலாம். மலையும் மலை சார்ந்த நிலத்தைக் குறிஞ்சி என்பர். காடும் காடு சார்ந்த நிலத்தை முல்லை என்பர். வயலும் வயல் சார்ந்த நிலத்தை மருதம் என்பர். கடலும் கடல் சார்ந்த நிலத்தை நெய்தல் என்பர். சங்க இலக்கியத்தில் முல்லை நிலத்தொழில்கள் பற்றிய கருத்துக்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியத்தில் தொழில்

“ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப்பெயர்

ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே”
(தொல். அகத்திணை நூ. 23)

என்ற அடிகள் வழியாக முல்லை நிலத்தில் ஆண்களை உணர்த்தும் திணைப்பெயர் ஆயர் எனவும், வேட்டுவர் எனவும் தொல்காப்பியர் கூறுகின்றார்.

ஆநிரை மேய்த்தல்

ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழில் முல்லை நிலத்தவரின் தலையாய தொழிலாகும். முல்லை நிலக் கடவுள் திருமால் என்பர். இடையர்கள் ஆடுகளையும், மாடுகளையும் மேய்த்து அதில் இருந்து வரும் பொருள்களையே வருமானமாகக் கொண்டனர்.

“பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய

பாலொடு வந்த கூழொடு பெயரும்

ஆடுடை இடைமகன் சென்னிச்

சூடிய எல்லாம் சிறுபசு முகையே”
(குறு. 221:2-5)

இவ்வடிகள் வாயிலாக ஆடுகளையேத் தமக்கு செல்வமாகக் கொண்ட கடைக்குடியில் பிறந்த மகன் மாலைப் பொழுதில் கையில் எடுத்துச் சென்ற பனை ஓலையால் ஆன பறி ஓலையை விரித்துப் படுத்துறங்குவான். காலையில் எழுந்து பாலைக் கரந்து ஊர்ப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று கொடுப்பான். பிறகு அவர்கள் கொடுக்கும் உணவினை வீட்டுக்கு கொண்டுவந்து கொடுப்பான்.

“படுமணி மிடற்ற பயநிரை ஆயம்

கொடு மடி உடையர் கோற் முகைக் கோவலர்

கொன்றை அம்குழலர் பின்றைத் தூங்க”
(அகம். 54:9-11)

அதாவது, மாலை நேரங்களில் மெதுவான நடையை உடைய இளங்கன்றுகள் கயிறுகளால் கட்டப்பட்டிருக்கும். அக்கன்றுகள் பெருத்த பால் மடிகள் சுருங்குவதை விரும்பினவாய் குரலை எழுப்பியவாறு ஒலிக்கும். அதனைக் கண்ட கோவலர் அக்கன்றுகளை அவிழ்த்து விட, ஒலிக்கும் மணிகள் உடைய கழுத்தினைக் கொண்ட பசுக்கூட்டங்கள் வீடுகள் நோக்கிச் செல்லும். கோவலர்கள் கையிலேக் கோலை வைத்துக்கொண்டு பின்னே நடந்து வருவார்.

“பல் ஆ தந்த கல்லாக் கோவலர்

கொன்றை அம்தீம் குழல் மன்று தோறு இயம்ப”
(நற். 364:9-10)

ஆடுமாடுகளை மேய்த்து வந்த ஆயர்கள், மேய்த்தல் தொழில் தவிர பிறிதொன்றும் அறியாதவர்கள். புல்லாங்குழல் இசைத்தபடி ஆடுமாடுகளை மேய்த்தனர். புல்லிய மயிரைக் கொண்ட மணிகள் கட்டப்பட்ட ஆடுகளின் கூட்டம் மாலை நேரம் வந்ததை அறிந்து மேய்வதை நிறுத்திவிட்டு தொழுவத்தைச் சேரும் என்பதை,

“நுண்பல் துவலை ஒரு திறம் நனைப்ப

தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன்”
(அகம். 274:7-8)

கார்காலத்து நள்ளிரவில் தாம்புக் கயிற்றினைக் கொண்ட உறியினையும் பானையையும் கொண்டுக் கோலினைத் தன் காலுடன் சேர்த்துத் தனியே நிற்கும் இடையன். செம்மறி ஆட்டின் காவலுக்கு நிற்கிறான். தீக்கடைக் கோலினால் தீ ஏற்படுத்தி வாயை மடித்துச் சீழ்க்கை ஒலியை எழுப்புகின்றான். அவ்வொலிக்குப் பயந்து ஆட்டுக்குட்டியைப் பிடிக்க வந்த குள்ளநரி ஓடியது.

ஆடுகளை மேய்க்கும் இடையன் முல்லை மலரைப் பறித்து மாலையாகச் சூடிக்கொள்வான் என்பதை,

“கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்த்த

குறுங் காற் குரவின் குவி இணர் வான்பூ

ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்”
(நற். 266:1-3)

முல்லை நிலத்தில் ஆடுகளை மேய்க்கும் இடையன், ஆடுகள் ஒன்று சேர்ந்து கூட்டமாக கூடுவதற்கு வேற்று இடம் நோக்கிச் செல்லாமல் இருப்பதற்கு நாவை மடித்தபடி ‘வீளை’ ஒலியை எழுப்புவான். இரவில் உறங்கும் தன் படுக்கையை பனை ஓலைப் பாயொடு ஆட்டுக்கிடை அருகிலேக் கட்டிலில் உறங்குவான். இடையன் பால் கரந்து ஊர் மக்களிடத்தில் விலைக் கூறி விற்று வருவான்.

“பறிப் புறத்த இட்ட பால் நொடை இடையன்” (நற். 142:4)

பால் மோர் விற்றல் (பண்ட மாற்றுதல்)


ஆயர் குலப்பெண்கள் அந்தி காலைப் பொழுதிலேப் பறவை எழும் முன்பே துயில் எழுபவர்கள். மோர் கடைந்து அருகில் உள்ள ஊரில் சென்று விற்கக் கூடியவள். அதற்கு இணையான உணவுகளைப் பெற்றுவருவாள். ஆயர் குலப் பெண்கள், தான் பெற்ற பணத்திற்கு ஈடாகப் பசுக்களை வாங்கி வளர்ப்பார்கள். தங்கம் கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள மாட்டாள்.
(குறு. 210:2-3, கலித். 106:44, 109:13-16, 22-24)

“பாலொடு வந்த கூழொடு பெயரும்

ஆடுடை இடைமான் சென்னி”
(குறு. 221:3-4)

ஆயர்கள் உழவு

முல்லை நிலத்தில் பெரும் மழை பொழிந்தது. இடைவிடாது பெய்த மழையால் முல்லை அழகுறக் காட்சியளித்தது என்பதனை,
(நற்.121:1-3, குறு.155:1-3)

“வானம்பாடி வறம் களைந்து ஆனாது

அழிதுளி தலைஇய புறவில் காண்வர”
(ஐங். 496:1-2)

என ஐங்குறுநூறு ஆசிரியர் சுட்டுகின்றார். மேலும் முல்லை நிலத்தில் பறவையினமும் விலங்கினமும் தத்தம் துணையோடு கூடி மகிழ்ந்து துள்ளித் திரியவும், கிளைகளிலும், கொடிகளிலும் பலவகையான பழவகைகள் நிறைந்து தோன்றவும், அவற்றால் வளமுற்று மணம் நாறும் காடு என ஐங்குறுநூறில் (414) கூறுவதிலிருந்து காட்டின் வளம் புலப்படுத்துவதை அறியலாம்.

இவ்வாறு மழையானது இடைவிடாது பெய்தமையால் இடையர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதனால் தங்களுடைய காட்டை உழுதனர் என்பதனை,

“பழமழைக் கலித்த புதுப்புன வரகின்

இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை”
(குறுந். 220:1-2)

என்று இடம்பெறும் அடிகளில், உழுத புன்செய் நிலத்தில் வரகுப் பயிரை விதைத்ததையும், விதைக்கப்பட்ட வரகானது நன்கு வளர்ந்து வந்ததையும், அறுவடை செய்யப்பட்ட கதிர்களின் இளந்தளிர்களை மான்கள் உண்ணுவதையும் காண முடிகிறது. முல்லை நில மக்கள் தரிசாகக் கிடக்கும் நிலத்தை உழுது, அவற்றில் புதுப்பயிர் செய்து மாலையில் வீடு திரும்பினார்கள். ஒரே நிலத்தில் ஆயர்கள் பலமுறை வரகு விதைத்தனர். பலமுறையும் வரகு முதிர்ந்த நிலையிலேயே காணப்பட்டது.

பூவிற்றல் தொழில்

முல்லை நிலத்தில் வசிக்கும் உழவர் குலப்பெண் பசிய குருக்கத்தி மலருடன், சிறு சண்பக மலரையும் வாங்கிக் கொள்வீராக என கடகப் பெட்டியைக் கைகளிலேயே வைத்துக் கொண்டு பூ விற்கும் உழவரின் இளமகள்
(நற். 97 : 6-7, நெடு. 38-

தச்சனின் தொழில்

மரத்தை அறுத்து அதன் மூலம் பொருள்களைச் செய்வோர் தச்சர் எனப்பட்டனர். தச்சன் செய்த சிறிய தேரினைக் குதிரைகள் பூட்டியபடி சிறுவர்கள் அத்தேரினை இழுத்து விளையாடுவார்கள். (பெரும். 248, நெடுநல். 118-119)

“தச்சன் செய்த சிறுமா வையம்” (குறு. 61:1-3)

“எண்தேர் செய்யும் தச்சன்” (புறம். 87:2-4)

கிணறு தோண்டுதல்

செம்மண் பரந்த நிலமான முல்லை நிலத்தில் கிணறு தோண்டுதல். அக்கிணற்றில் உள்ள தண்ணீரை எறபெட்டி போட்டு இறைத்து, ஆடு மாடு தண்ணீர்க் குடிக்கப் பயன்படுத்துவார்கள். அத்தண்ணீரைக் கொண்டு உழவுத் தொழில் செய்வார்கள் ஆயர்கள். (புறம். 311:1-2, பெரு. 98)

கூடை முறம் முடைதல்

கோரை, பனை ஓலை, நார், மூங்கில், கிடைச்சு முதலியவற்றால் கூடை, முறம், வட்டி போன்ற பொருள்களைச் செய்தனர். இத்தொழில் செய்வோர் மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பர். (புறம். 32:3-4, கலி. 117:7-8)

முடிவுரை

சங்க இலக்கியத்தில் முல்லை நிலத்தில் ஆயர்களுக்கு ஆடுமாடு மேய்த்தல் மட்டும் தொழிலாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் ஆடு மாடுகளுக்குத் தேவையான தாவர உணவுகளை முதலில் காட்டில் விளைவித்து உற்பத்தி செய்து இருக்கலாம். அப்போது பக்கத்து நிலத்தில் பயிர்கள் விளைந்ததைப் பார்த்திருக்க வேண்டும். எனவே அம்மக்கள் காட்டைத் திருத்தி உழுது, வரகு விதைத்து அதில் வந்ததை உணவாகக் கொண்டிருந்தனர் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

முனைவர் . ஜோதி

திருச்சி.

http://www.muthukamalam.com/essay/literature/p212.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.