Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியானந்தாவின் கைலாசா: சுதந்திரமான அரசாக உருவாக எவை தேவை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
நித்தியானந்தாவின் கைலாசாவில் யாருக்கு முன்னுரிமை?

பட மூலாதாரம், KAILASA'S HDH NITHYANANDA PARAMASHIVAM / FB

 

இந்துக்களுக்கு என்று 'கைலாசா' எனும் தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை சென்ற ஆண்டின் இறுதியில் வெளியிட்டார் நித்தியானந்தா.

https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா விடுதலை பெற்று தனி நாடாகிவிட்டதாக ஒரு பிரகடனத்தை கேட்டலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தின் அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் பிராந்தியத் தலைவர்கள் கையெழுத்திட்டு 2017ஆம் ஆண்டு வெளியிட்டனர்.

இதன் பின்னணியில் எழுதப்பட்ட கட்டுரை.

சுதந்திரமான அரசாக உருவாக எவை தேவை?

அது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பிபிசி உலக சேவை விசாரித்து அறிந்தது

நான்கு குணாதிசயங்கள்

``விமான நிறுவனமும் பீரும் இல்லாவிட்டால் நீங்கள் உண்மையான நாடாக இருக்க முடியாது'' என்று ராக் இசைக் கலைஞர் பிராங்க் ஜாப்பா கூறினார்.

ஆனால் உண்மையில், ஓர் அரசுக்கான நான்கு முக்கியமான அம்சங்களை சர்வதேச சட்ட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்: மக்கள், எல்லை, அரசாங்கம், இறையாண்மை அடிப்படையில் மற்ற அரசுகளுடன் உறவுகளைப் பராமரிக்கும் தன்மை என்ற விஷயங்களை அவர்கள் கூறுகின்றனர்.

நித்தியானந்தாவின் கைலாசா: ஒரு நாட்டை எப்படி உருவாக்குவது?

பட மூலாதாரம், Getty Images

 

மக்கள் என்பதற்கான வரையறை மிகுந்த சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. தங்கள் நாட்டின் தேசியத்துவம் மீது நம்பிக்கை கொண்ட, கோட்பாட்டின் மீது நம்பிக்கை கொண்ட நிரந்தரமாக வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

``உறவுகள், செம்மையான உறவுகள், உரிமையான உறவுகள், அடையாளப்படுத்தும் உணர்வுகள் இருக்கின்றனவா'' என்று லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் சர்வதேச சட்டம் பயிற்றுவிக்கும் ஜேம்ஸ் இர்விங் கேள்வி எழுப்புகிறார்.

``நடைமுறையில் பகிர்ந்துக் கொள்ளக் கூடிய உணர்வுகளாக அவை இருக்க வேண்டும்'' என்று அவர் கூறுகிறார்.

அந்த நாட்டுக்கு வரையறுக்கப்பட்ட எல்லை இருக்க வேண்டும். அந்த எல்லைகளுக்குள் இறையாண்மை கொண்ட நாடாக அது இருக்க வேண்டும் என்பது அடுத்த முக்கியமான விஷயமாகக் கூறப்படுகிறது.

அரசாங்கம் என்று சொல்லிக் கொள்வதற்கு, ஸ்திரமான மற்றும் செம்மையான அரசாங்க அமைப்பு இருக்க வேண்டும் என்றும் சொல்லப் படுகிறது.

மற்ற நாடுகளுடன் உறவுகளைப் பராமரிக்கும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது அடுத்த அம்சமாக உள்ளது.

எனவே இறையாண்மை கொண்ட அரசுகள் என்பவை, இருதரப்பு உறவுகளில் ஈடுபட முடியும். உதாரணமாக, பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இரு நாடுகள் அல்லது பல நாடுகள் அளவிலான தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். சர்வதேச பருவநிலை மாற்ற ஒப்பந்தம் போன்றவற்றில் கையெழுத்திடும் அந்தஸ்து கொண்டதாக இருக்க வேண்டும்.

அதாவது இறையாண்மை கொண்ட நாடு என்பது எந்த ஒரு நாட்டையும் சார்ந்ததாகவோ, வேறு எந்த அரசுக்கும் கட்டுப்பட்டதாகவோ இல்லாது இருப்பதாகும்.

அப்படியானால் அரசுகள் எப்படி உண்மையான அரசுகளாக மாறுவது?

அங்கீகாரம்

தனிப்பட்ட நாடுகள் பரஸ்பரம் அங்கீகரித்துக் கொள்கின்றன. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தைப் பெறுவது தான் பெரிய அங்கீகாரமாக இருக்கும்.

இதன் ஆதாயங்கள் பலவாறாக இருக்கும்: சர்வதேசச் சட்டத்தின் பாதுகாப்பு கிடைக்கும். உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியத்திடம் இருந்து நிதி உதவி பெறலாம். எல்லைகளைக் கட்டுப்படுத்தலாம், பொருளாதார தொடர்புகளை மற்றும் நடைமுறைகளை உருவாக்கலாம்.

வர்த்தகச் சட்டத்தின் கீழான பாதுகாப்பும் கிடைப்பதால், வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொள்வது எளிதாக இருக்கும்.

நித்தியானந்தாவின் கைலாசா: ஒரு நாட்டை எப்படி உருவாக்குவது?

பட மூலாதாரம், Getty Images

 

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் இல்லாமல், ஓர் அரசாங்கமாக இருக்க முடியுமா?

``பழங்காலத்தில் கூறுவதைப் போல, வாத்து மாதிரி நடந்து, வாத்து மாதிரி குரல் எழுப்பினால் அதை வாத்து என்று கூறுவோம் என்பார்கள்'' என்று கீலே பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறை விரிவுரையாளர் ரெபெக்கா ரிச்சர்ட்ஸ் கூறுகிறார்.

``அது ஓர் அரசாங்கம் மாதிரி என அங்கீகரிப்போம், இருந்தாலும் அதற்கான அங்கீகாரம் இல்லாத அரசாகக் கருதுவோம்'' என்கிறார் அவர்.

சோமாலிலேண்ட் ஒரு உதாரணமாக உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த அந்தப் பகுதி 1960ல் நான்கு நாட்கள் சுதந்திர நாடாகக் கருதப்பட்டது. பிறகு இத்தாலிய சோமாலியாவுடன் இணைந்தது.

சோமாலிலேண்ட்

பட மூலாதாரம், Getty Images

 

1991ல் சோமாலியா அரசு சீர்குலைந்த காலம் வரையில் அது சோமாலியாவின் அங்கமாக இருந்தது.

பிறகு சோமாலிலேண்ட் தன்னிச்சையாக சுதந்திர நாடாக அறிவிப்பு செய்து கொண்டது.

``அங்கு குறிப்பிடத்தக்க வகையில் வலுவான அரசாங்கம் உள்ளது'' என்று ரெபெக்கா ரிச்சர்ட்ஸ் விளக்குகிறார்.

``அங்கு ஜனநாயக முறையில் தொடர்ந்து தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. அமைதியாக, ஸ்திரமாக இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகள் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கின்றன. ஓர் அரசாங்கத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ அந்த அம்சங்கள் எல்லாம் அங்கே உள்ளன'' என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் எந்த நாடும் சோமாலிலேண்ட் நாட்டை அங்கீகரிக்கவில்லை என்பதால், வாழ்க்கை கடினமானதாக உள்ளது.

``வளர்ச்சிக்கான உதவி அல்லது மனிதாபிமான உதவிகள் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இருந்தாலும், ஐ.நா.வில் இருந்து வரும் உதவிகள் சோமாலியா மூலமாக அனுப்பப் படுகின்றன'' என்று அவர் குறிப்பிட்டார்.

சட்ட ரீதியிலான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் சர்வதேச சந்தையில் ஈடுபடுவது சாத்தியமற்றது.

சோமாலிலேண்ட்டின் கரன்சிக்கு வெளிநாடுகளில் அங்கீகாரம் கிடையாது என்பதால், அதற்கு சர்வதேச மதிப்பு இல்லை.

சட்ட ரீதியிலான தடங்கல்கள்

ஒரு தேசம் என்று கூறுவதாக இருந்தால் ``சுய நிர்ணய அதிகாரம்'' இருக்க வேண்டும்.

நித்தியானந்தாவின் கைலாசா: ஒரு நாட்டை எப்படி உருவாக்குவது?

பட மூலாதாரம், Getty Images

 

இதை ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி பின்வருமாறு வரையறை செய்கிறது:

``தங்களுக்கான அரசு எந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்பதை அந்த மக்களே முடிவு செய்யும் அதிகாரம்; அரசாங்க அந்தஸ்தை தாங்களாக நிர்ணயித்தல், தங்கள் செயல்பாடுகளில் உரிமை கோருதல்'' என்று கூறுகிறது.

இந்த உரிமை ஜூன் 1945ல் ஐ.நா விதிகளில் சேர்க்கப்பட்டது.

சுயநிர்ணயம் என்பது - காலனி ஆதிக்கத்தில் இருந்த மக்கள் சுதந்திரம் பெறுவதற்கான ஒரு வழிமுறையாக அல்லது முந்தைய காலனி அதிகாரத்துடன் அல்லது வேறொரு நாட்டுடன் ஏதாவது ஒரு வகையிலான தொடர்பை தேர்வு செய்தல் என்பதாக ஆரம்பத்தில் இருந்தது.

``அது நல்ல சிந்தனையாக இருக்கிறது என நிறைய பேர் கருதினர். ஆனால் அது சொல்ல வரும் விஷயத்தைப் போல பெரிய அம்சமாக இருக்கவில்லை'' என்று டாக்டர் இர்விங் விளக்குகிறார்.

காலனி எல்லைக்கு உள்பட்ட மக்கள் தங்களுக்கான நாட்டை உருவாக்க விரும்பினால், சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டின்படி, அதைப் பெற முடியும்.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்த அரசியல் அந்தஸ்து மாற்றத்தைக் கண்டுள்ளனர்.

1945ல் 51 உறுப்பு நாடுகள் இருந்த ஐ.நா.வில் இப்போது 193 நாடுகள் உள்ளன.

ஆனாலும் ஒரு விஷயம் இருக்கிறது.

ஒரு காலனி நாடு சுதந்திரம் பெற்று, மேலும் பிரிவினை நடைபெறும்போது அல்லது எல்லைகள் மாற்றப்படும் போது, காலனி ஆதிக்கத்தில் இருந்து வெளியேறுகின்றன என்று சர்வதேச சட்டங்கள் அறிந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சுய நிர்ணயம் என்ற சிந்தனைக்கு எதிரானதாக இது இருக்கிறது.

``எல்லைகளை மாற்ற முடியாது. ஆனாலும் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க அந்த மக்களுக்கு உரிமை இருக்கும் என்ற இரு விஷயங்கள் எப்படி இணைந்திருக்க முடியும்'' என்று லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் தென்கிழக்கு ஐரோப்பிய அரசியல் துறை மூத்த ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் கெர்-லின்ட்சே கேள்வி எழுப்புகிறார்.

தன்னாட்சி

குறிப்பிட்ட எல்லைக்குள் தங்களுக்கு சுதந்திரம் இருப்பதாகக் கருதும் மக்கள் வாழும் நிலையில், தன்னாட்சிக்கான சுயநிர்ணய அதிகாரம் இருந்தாலும், ஆனால் தனி நாடாக இருக்க முடியாது.

கொசாவோ விஷயத்தில் இந்தப் பிரச்சினை எழுந்தது.

யுகோஸ்லோவேகியா பிரிந்த போது, உருவான ஆறு குடியரசுகளில் செர்பியாவும் ஒன்று.

செர்பிய எல்லைக்குள் கொசாவோ மாகாணம் இருந்தது. ஆனால் அந்தப் பகுதிக்கான மக்கள் தனிப்பட்ட முறையில் சுதந்திரமாக இருந்து வந்தனர்.

நித்தியானந்தாவின் கைலாசா: ஒரு நாட்டை எப்படி உருவாக்குவது?

பட மூலாதாரம், Getty Images

 

கொசாவோ சுதந்திரம் பெற்றிருந்தால் செர்பியாவின் எல்லைகல் மாறி இருக்க வேண்டும், எல்லை ஒருமைப்பாடு என்ற கோட்பாடு மீறப்பட்டிருக்கும்.

``கொசாவோ என்ற நாட்டுக்கு உள்நாட்டு சுயநிர்ணய உரிமை இருக்க வேண்டும் என்பது தான் சர்வதேச அளவில் எழுந்த முதலாவது கருத்தாக இருந்தது'' என்று டாக்டர் கேர் லின்ட்சே கூறினார்.

``அது செர்பியாவின் ஒரு மாகாணமாக இருந்தது, ஆனால் மற்ற குடியரசு நாடுகளைப் போன்ற சுதந்திரத்துக்கான உரிமைகள் கிடையாது'' என்றார் அவர்.

``எனவே தங்களுக்கு அமைதியான வழியில் சுதந்திரம் கிடைக்காது என்று கொசாவோ மக்கள் உணர்ந்த போது புரட்சியில் ஈடுபட்டனர்'' என்றும் அவர் தெரிவித்தார்.

செர்பிய நிர்வாகஸ்தர்களுடன் முரண்பாடு ஏற்பட்டது. 1999ல் நேட்டோ படைகளின் தலையீட்டின் மூலம் அது முடிவுக்கு வந்தது.

பிறகு 2008 ஆம் ஆண்டில் கொசாவோ தன்னிச்சையாக சுதந்திர நாடாக அறிவிப்பு செய்து கொண்டது.

இது செல்லாது என்று செர்பியா கூறியது. சர்வதேச சட்ட சர்ச்சைகளை தீர்த்து வைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நீதிமன்றத்துக்கு இதைக் கொண்டு சென்றது.

``பொதுவான சர்வதேசச் சட்டத்திற்கு முரண்பட்டு கொசாவோ சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது'' என்றார் டாக்டர் கெர்-லின்ட்சே.

``எல்லையால் மட்டும் சுதந்திரத்தை அறிவிக்க முடியாது என்று சர்வதேச சட்டத்தில் சொல்லப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது.''

ஆனால் கொசாவோ என்ற தேசத்தை அங்கீகரிப்பது சட்டம் சம்பந்தப்பட்ட கேள்வியாக இல்லை.

``ஐ.நா. உறுப்பு நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் கொசாவோ நாட்டுக்கு அங்கீகாரம் அளித்துள்ளன'' என்று டாக்டர் ரிச்சர்ட்ஸ் தெரிவிக்கிறார். ``ஆனால் இறையாண்மை கொண்ட நாடாக ஐ.நா. அங்கீகாரம் கிடைக்காததால், அது இன்னும் இறையாண்மை நாடாக அங்கீகரிக்கப் படாமல் இருக்கிறது'' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளக் கூடிய வசதி கொசாவோ நாட்டுக்குக் கிடைக்காது.

அதிகாரம் மிகுந்த நண்பர்கள்

``அதிகார பலம் மிகுந்த மற்ற நாடுகள் ஆதரவு அளிக்கத் தயாராக இல்லாத நிலையில், ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவித்து, அரசாங்க அமைப்பை உருவாக்கி இருப்பதாக அறிவிக்க முடியாது' என்று அமெரிக்காவில் கிளிவ்லாண்ட் அரசு பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டம் கற்பிக்கும் பேராசிரியர் மிலினா ஸ்டீரியோ கூறுகிறார்.

அதிகார பலம் மிகுந்த நாடுகள் உங்களுக்கு ஆதரவு அளிக்க, என்ன செய்ய வேண்டும்?

இந்தோனேசியா ஆக்கிரமிப்பு நடந்த 1960கள் வரையில் போர்ச்சுக்கீசிய காலனி நாடாக கிழக்கு திமோர் இருந்து வந்தது.

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தோனேசியா இருந்தது. அப்போது கிழக்கு திமோரின் சுதந்திரப் போராட்டத்துக்கு, குறைந்த அளவே ஆதரவு கிடைத்தது.

பனிப்போர் முடிந்த நிலையில், 1990களில் கிழக்கு திமோர் பக்கம் சர்வதேச கவனம் திரும்பியது. கம்யூனிஸம் வீழ்ந்துவிட்டதால், மேற்கத்திய நாடுகளுக்கு இந்தோனேசியாவின் நட்பு தேவைப்படவில்லை.

``கிழக்கு திமோரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களால் கவலை அடைந்த மேற்கத்திய வல்லமை நாடுகள் பின்வாங்கிக் கொண்டன. `தாமதிக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையை கிழக்கு திமோர் மக்கள் இப்போது தாங்களாகவே செய்து கொள்ளலாம்' என்று மேற்கத்திய நாடுகள் கூறிவிட்டன'' என்று பேராசிரியர் ஸ்டீரியோ தெரிவிக்கிறார்.

1999ல் திமோர் மக்கள் சுதந்திர நாடாக செயல்பட வாக்களித்தனர், 2002ல் அதற்கான அதிகாரம் கிடைத்தது.

ஆனால் அது வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. ஐ.நா. மற்றும் சர்வதேச அமைதி அமைப்புகளின் அரசியல் ஆதரவை நாட வேண்டியிருந்தது.

ஸ்பெயின் நிலைமை மிகவும் மாறுபட்டது.

இப்போதைய சர்வதேசச் சட்டத்தின்படி, கேட்டலான்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு. ஆனால் ஸ்பெயின் தனது எல்லைப் பாதுகாப்பை பராமரிக்க உரிமை உண்டு என்பதால், இது தன்னாட்சியாக இருக்கலாமே தவிர, சுதந்திரமாக இருக்காது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எனவே சுதந்திரத்துக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தால் என்ன நடக்கும்?

நித்தியானந்தாவின் கைலாசா: ஒரு நாட்டை எப்படி உருவாக்குவது?

பட மூலாதாரம், Getty Images

 

``ஸ்பெயின் நாட்டுக்குள் கேட்டலோனியா இருக்கும், அதிகபட்ச தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று கருதுகிறேன்'' என்று ஸ்டீரியோ கூறுகிறார்.

``கொசாவோ நாட்டை அங்கீகரிக்காத மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் இருந்தது. சுதந்திரம் கோரும் முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதில் ஸ்பெயினுக்கு அச்சம் உள்ளது. ஏனெனில் ஸ்பெயினின் எல்லைப் பாதுகாப்புக்கு கேட்டலோனியா அச்சுறுத்தலாக உள்ளது'' என்று அவர் விவரிக்கிறார்.

குர்துக்களின் நிலைமை மிகவும் மாறுபட்டதாக இருந்தாலும், அதிகாரம் மிக்க நாடுகளின் ஆதரவு இல்லை என்ற அதே பிரச்சினை அவர்களுக்கும் உள்ளது.https://www.bbc.com/tamil/india-53887377

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.