Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மைய அரசியல் வாதமும் அதன் பின்னணிகளும்? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மைய அரசியல் வாதமும் அதன் பின்னணிகளும்? - யதீந்திரா

அண்மையில் கிழக்கு-மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போவதல்ல என்னும் தலைப்பின் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆலோசகராக அடையாளம் காணப்படும் ஒருவர் அதற்கு எதிர்வினையாற்றிருந்தார். மீண்டும் அதற்கொரு பதில் எதிர்வினையாற்றும் கட்டுரையும் வெளியாகியிருந்தது.

உண்மையில் இப்படியொரு கட்டுரை எழுதுவதற்கான தூண்டுதலை மேற்படி உரையாடல்கள்தான் ஏற்படுத்தியிருந்தன. அண்மையில் என்னுடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருந்த ஒரு மட்டக்களப்பு நண்பர் – இவ்வாறு தெரிவித்தார். அதாவது, மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் சில முகநூல் பதிவுகளை பார்க்கும் போது, மிகவும் அருவருப்பாக இருக்கின்றது – சிலருடைய கருத்துக்களை பார்த்தால் தமிழ் மக்களுக்கிருக்கும் பிரதான பிரச்சினையே யாழ்ப்பாணத்தை எதிர்ப்பது போன்றுதான் சிலர் பேச எத்தணிக்கின்றனர் என்றார் அவர். மட்டக்களப்பில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, கணிசமான வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை பெற்றதை தொடர்ந்தே இவ்வாறானதொரு பார்வையை சிலர் முன்வைக்க முயற்சிக்கின்றனர். அதாவது, பிள்ளையானின் வெற்றியை வடக்கிற்கு – குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு எதிரான கிழக்கின் எழுச்சியாகவே அவர்கள் காண்பிக்க முயற்சிக்கின்றனர். உண்மையில் இது சரியானதொரு பார்வைதானா? மட்டக்களப்பு என்பது மட்டுமா கிழக்கு?

இவ்வாறான வாதங்கள் ஏன் தலையெடுக்கின்றன? உண்மையிலேயே இப்படியான வாதங்கள் மக்களின் நலனிலிருந்து முன்வைக்கப்படுகின்றதா அல்லது சிலரது அரசியல் அதிகார அவாவிலிருந்து மேலேழுகின்றதா? பிள்ளையானின் வெற்றியை உண்மையிலேயே கிழக்கு எழுச்சியின் வெளிப்பாடாக நோக்க முடியுமா? உண்மையில் பிள்ளையானின் வெற்றிக்கும் கிழக்கு எழுச்சிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.

பிள்ளையானின் வெற்றிக்கு பின்னால் சில காரணங்கள் இருந்தன. ஒன்று, பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த போது, தனது எதிர்கால அரசியலை இலக்காகக் கொண்டு சில வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தார். அதாவது, தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி, தனது சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் தனக்கானதொரு வாக்கு வங்கியை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இரண்டாவது, கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டம்தான் ஒப்பீட்டடிப்படையில் தமிழ் மக்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரேயொரு மாவட்டமாக இருக்கின்றது. அதாவது கிழக்கின் தமிழ் மத்தியதரவர்க்கம் ஒப்பீட்டிப்படையில் மட்டக்களப்பில்தான் சற்று பலமாக இருக்கின்றது. இந்த பின்னணியில்தான் அங்கு நிலவும் தமிழ் – முஸ்லிம் முரண்பாட்டை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் வளர்ச்சியின் நேரடி விளைவை அவர்கள் எதிர்கொள்ளுகின்றனர். இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியாக விளங்கிக்கொண்டு அதனை எதிர்கொள்வதற்கான உபாயங்களை கண்டடையவில்லை. ஆகக் குறைந்தது அதற்கான முயற்சிக்களைக் கூட முன்னெடுக்கவில்லை.

மக்கள் ஒரு விடயத்தை நெருக்கடியாக உணருகின்ற போது, அந்த விடயத்தில் ஒரு ஆற்றுப்படுத்துனராக அரசியல் தலைமைகள் தொழிற்பட வேண்டும். அவ்வாறில்லாது போனால், மக்கள் புதிய ஆற்றுப்படுத்துனரைத் தேடவே முயற்சிப்பர். மட்டக்களப்பில் ஒரு பகுதி மக்களுக்கு பிள்ளையானின் கட்சி, ஒரு நல்ல ஆற்றுப்படுத்துனராக தெரிந்திருக்கின்றது. மூன்றாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்பட்ட கடுமையான அதிருப்தி. இந்தக் காரணங்கள்தான் பிள்ளையானின் வெற்றியை தீர்மானித்திருந்தன. இதற்கு வெளியில் காரணங்களை தேட முற்படுவதானது, வலிந்து மேற்கொள்ளப்படும் ஒரு தீய-உள்நோக்கம் கொண்ட அரசியல் கோசமாகவே இருக்க முடியும். இதே போன்றுதான் அம்பாறையில் நிலவும் முஸ்லிம் – தமிழ் முரண்பாடுகளை கூட்டமைப்பால் சரியாக விளங்கிக்கொண்டு அதற்கேற்ப செயலாற்ற முடியவில்லை. இதன் காரணமாகவே அங்கு கருணாவினால் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தது. முஸ்லிம் விவகாரம் சரியாக கையாளப்படாது போனால் எதிர்காலத்திலும் மக்கள் புதிய ஆற்றுப்படுத்துனர்களை தேடலாம்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம் – அதவாது, அவ்வாறாயின் கிழக்கு மைய அரசியல் என்பது தவாறான ஒன்றா? கிழக்கில் ஆற்றல்மிக்க தலைமையொன்று எழுச்சிபெறக் கூடாதா? எப்போதும் யாழ் மாநகரத்திற்குள் வசிப்பவர்கள் மட்டும்தான் அரசியலை தீர்மானிக்க வேண்டுமா? இந்தக் கேள்விகள் அனைத்துக்குமான எனது பதில் – இல்லை என்பதே! இவைகள் எதுவும் தவறல்ல ஆனால் கிழக்கின் எழுச்சிக்காக தெற்கில் அடைக்கலம் தேடுவதுதான் தவறானது. அந்த வகையில் கிழக்கு – மைய அரசியலென்பது தெற்கை நோக்கிப் போவதல்ல என்னும் வாதத்தை இந்தக் கட்டுரை முற்றிலுமாக ஆதரிக்கின்றது. அதே வேளை கிழக்கின் பிரச்சினைகளை வெறும் யாழ்- மாநகர எல்லைக்குள்ளிருந்து கொண்டு பார்க்க முற்படுவதையும் இந்தக் கட்டுரை ஆதரிக்கவில்லை. அது தவறானதொரு அரசியல் அணுகுமுறையாகும். இவ்வாறான தவறான அணுகுமுறைகள்தான் யாழ்ப்பாண எதிர்ப்பை தங்களின் அரசியலுக்கு தீணியாக்கிக் கொள்ள, நினைப்பவர்களுக்கான வாய்புக்களை இன்றும் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

 

இன்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த உரையாடல்கள் அனைத்துமே யாழ் – மாநகர எல்லைக்குள்தான் இடம்பெறுகின்றன. யாழ் கண் – கொண்டு, கிழக்கிற்கான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. வடக்கிற்கான தேர்தல் வியூகத்தினடிப்படையில் கிழக்கிற்கான தேர்தல் வியூகங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், இவ்வாறான விடயங்களில் தலைவர்கள் என்பவர்கள் இதுவரையில் தங்களை திருத்திக்கொள்ளவில்லை. கிழக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை மாவட்டம் தொடர்பில் முடிவுகளை எடுக்கின்ற போது, பொதுவாக ஒரு சொல்லை எல்லோருமே பயன்படுத்துவதுண்டு. அதாவது, திருகோணமலை ஈழத்தின் தலைநகரம். அதனை எப்படி நாங்கள் கைவிடலாம். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, திருகோணமலையில் போட்டியிட்டது. அதே போன்று கஜேந்திரகுமார் தலைமையிலான முன்னணியும் போட்டியிட்டது. உண்மையில் அது சரியானதொரு முடிவல்ல. ஏனெனில் திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழர்கள் ஒரு ஆசனத்தையே பெற முடியும். இது தொடர்பில் குறித்த கூட்டணியினருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. விக்கினேஸ்வரன் அதனை ஏற்றுக்கொண்டார் ஆனால் அவருடன் இருந்த ஏனைய தரப்பினர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது ஈழத்தின் தலைநகரம் என்னும் சுலோகமே கையிலெடுக்கப்பட்டது. என்றோ ஒரு நாள் கூறப்பட்ட ஒரு விடயத்தை இன்றும் தூக்கிப்பிடிக்க முற்படுவபர்கள், திருகோணமலை தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக இதுவரை செய்தது என்ன?

இன்றைய நிலையில் திருகோணமலை தமிழர் சமூகம் மிகவும் பலவீனமான மக்கள் கூட்டமாகவே இருக்கின்றனர். திருகோணமலையில் தமிழ் மக்களின் தனித்துவத்தை நிலைநாட்டும் வகையிலான பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அதற்கு எவருமே உதவியதில்லை. அவ்வாறாயின் திருகோணமலையை ஈழத்தின் தலைநகரம் என அழைப்பதில் ஏதாவது பொருளுண்டா? தேசிய பட்டியல் அசனத்திற்கு வாக்குகளை சேகரிக்கும் நோக்கிலேயே கிழக்கு மாகாணத்தை சில கட்சிகள் தெரிவு செய்கின்றன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தங்களுக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கிழக்கு மாகாணத்திற்கு வழங்கியிருக்கலாம் ஆனால் வழங்கவில்லை. இப்படியான தவறுகள்தான் யாழ் எதிர்ப்பு – கிழக்கு மைய அரசியல் பேச முயற்சிப்பவர்களுக்கான வாய்புக்களை வழங்குகின்றது.

அரசியல் வாதிகள் மட்டும் இந்த விடயத்தில் தவறு செய்யவில்லை. சிவில் சமூக பிரதிநிதிகள் என்போரும் தவறு செய்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் சிலரை இணைத்துக் கொள்வதால் மட்டும், அது கிழக்கு மாகணத்திற்கான முடிவாக அமையாது. சில கத்தோலிக்க ஆயர்களை இணைத்துக் கொண்டால் முழு மாவட்டத்தையும் இணைத்துக் கொண்டதாக பொருளில்லை. உண்மையில் இன்று வடக்கிற்கும் கிழக்கிற்குமான தொடர்பாடல் முற்றிலும் தகர்ந்து போயிருக்கின்றது. யாழ்ப்பாண எதிர்ப்பை முன்வைத்து சிலர் அரசியல் ஆட்டத்தில் ஈடுபட எத்தணிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றி பேசுகின்றளவிற்கு கிழக்கிற்கும் வடக்கிற்கும் இடையில் அரசியல் உரையாடல்கள் இடம்பெறுகின்றனவா? இதனை ஒரு பிரதான திட்டமாக மேற்கொள்ளும் சிவில் சமூக அமைப்புக்கள் இருக்கின்றனவா?

தமிழ்த் தேசியத்தை பாதுகாப்பது தொடர்பில் பல்வேறு சந்திப்புக்கள் யாழ்-மாநகர எல்லைக்குள் இடம்பெறுகின்றன. இந்த உரையாடல்களில் எத்தனை கிழக்கு புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் பேசுகின்றனர். பங்குபற்றுகின்றனர். தடம்மாறுகின்றதா தமிழ்த் தேசியம் என்னும் தலைப்பில் சில கூட்டங்கள் முன்னர் இடம்பெற்றது. அதில் இந்த கட்டுரையாளரும் சில சந்தர்ப்பங்களில் பங்குகொண்டிருக்கின்றார். அப்போது இதனை ஏற்பாடு செய்த நண்பரிடம் – இவ்வாறான நிகழ்வுகளை கிழக்கிலும் செய்யலாமே என்றேன். அதற்கு அவரது பதில் – வவுணியாவை தாண்டி ஒருவருமே வரவிரும்புகிறார்கள் இல்லையே! என்ன செய்வது? – என்றார். இன்றும் இதுதான் உண்மையான நிலைமை. கிழக்கு நோக்கி திரும்பாமல், கிழக்கில் ஊடாட்டத்தை அதிகரிக்காமல் வெறும் உதட்டளவில் வடக்கு – கிழக்கு இணைப்பு பேசுவதில் என்ன பொருள் இருக்க முடியும்? இந்த பின்புலத்தில் சிந்தித்தால் கிழக்கில் என்ன செய்ய வேண்டுமென்பதல்ல இப்போதைக்கு தேவையான விவாதம் மாறாக, யாழ்ப்பாணத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே இப்போதைக்கு தேவையான விவாதம்.

அதே வேளை யாழ்ப்பாண மைய அரசியல் வாதிகளும் சிவில் சமூக தரப்பினரும் இழைக்கும் சில தவறுகளின் அடிப்படையில் தெற்கின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்குள் கிழக்கை அடகுவைப்பதை எந்த வகையிலும் நியாயப்பபடுத்த முடியாது. கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கு, கிழக்கில் சில தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தவறில்லை ஆனால் அந்த முயற்சிகள் ஒருபோதும் தெற்கின் நிகழ்சிநிரலுக்குள் சராணாகதியடைவதாக இருக்கக் கூடாது. அவ்வாறான சரணாகதி அரசியல் ஒரு போதும் கிழக்கு மைய அரசியலாகவும் இருக்க முடியாது. அது நிச்சயமாக, தெற்கு மைய அரசியலாகவே இருக்க முடியும். இன்று கிழக்கு மைய அரசியல் பேசும் அனைத்து தரப்பினரும் உண்மையில் தெற்கு மைய அரசியலின் பிரதிநிதிகளாக இருந்து கொண்டே கிழக்கு மைய அரசியல் பேசுபவர்களாக இருக்கின்றனர். அவ்வாறானவர்களை நோக்கி – இந்த கட்டுரை ஒரு சவாலை முன்வைக்கின்றது.

உங்களுடைய கிழக்கு – மைய அரசியல் சரியான பாதையில் பயணிப்பது உண்மையாயின், ஐனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கிழக்கிற்கான தொல் பொருள் செயலணியை உடனடியாக கலைப்பதற்கான கோரிக்கையை முன்வையுங்கள். ஒரு குறிப்பிட்ட மாகாணத்திற்கு மட்டும் எதற்காக செயலணி? இதில் உங்கள் கிழக்கு ஒற்றுமையை காண்பியுங்கள். நீங்கள் தெற்கின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்குள் அடகுவைக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை நிரூபியுங்கள். கிழக்கு – மைய அரசியல் என்பது தெற்கில் மையம் கொள்வதல்ல என்பதை உங்கள் செயல்களில் காட்டுங்கள்.
 

 

http://www.samakalam.com/செய்திகள்/கிழக்கு-மைய-அரசியல்-வாதம/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.