Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள அரசு இராணுவத் தீர்வையே விரும்புகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thesiyath-Thalaivar-1.jpg

குறிப்பு: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிரபல இந்திய ஆங்கில ஏடான ‘சண்டே’ வார இதழுக்கு அளித்த இரண்டாவது நேர்காணலின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம். இந்த விசேட நேர்காணல் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 29,  அக்டோபர் 5  இதழில் பிரசுரமாகியது. இந்தப் நேர்காணலில் சிறீலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக இராணுவத் தீர்விலேயே அரசு அக்கறை கொண்டிருப்பதாக விளக்குகிறார்.

தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இறுதியான தீர்வாக அமையுமென எடுத்துரைக்கும் அவர், தமிழீழத் தனியரசு உருவாகும் வரலாற்று நிகழ்வை எந்தவொரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் இவ் நேர்காணலில் வலியுறுத்துகிறார். தமிழீழ இலட்சியத்தை அடையும்வரை தமிழ் மக்கள் இரத்தம் சிந்திப் போராடவேண்டும் என்றும், இரத்தம் சிந்தாமல், தியாகம் புரியாமல் எந்தவொரு தேசமும் சுதந்திரம் பெற்றதில்லை என்றும் எடுத்து விளக்குகிறார்.

கேள்வி: நீங்கள் தலைமறைவாக இருக்கத் தீர்மானித்தது ஏன்?

பதில்: தலைமறைவாகும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை. எனது தாய் நாடாகிய தமிழீழம் சென்று சில காரியங்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. சமாதானப் பேச்சுவார்த்தை குறித்து எனது தளபதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தமிழ்ப் பகுதிகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலை பற்றியும், மக்கள் மனோநிலை பற்றியும் நேரில் கண்டறிய விரும்பினேன். நான் அங்கிருந்த சமயம் தமிழ்நாட்டில் சில சம்பவங்கள் நடந்தன. (தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார பூர்வமான பேச்சாளர் திரு. பாலசிங்கத்தின் நாடு கடத்தலைக் குறிப்பிட்டு) அதனால் நான் தொடர்ந்தும் அங்கிருக்க எண்ணினேன்.

கேள்வி: யுத்த நிறுத்தம் குறித்து உங்கள் தளபதிகளின் அபிப்பிராயம் என்ன?

பதில்: யுத்த நிறுத்தம் என்பது ஒரு நாடகம். இந்தப் போர்வையின் கீழ் சிங்கள ஆயுதப் படைகள் தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் அட்டூழியங்களைப் புரிந்து வருகின்றனர். இனப் படுகொலை தொடர்ந்தும் இடம்பெறுகிறது. தமிழ் மக்கள் தமது வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்படுகிறார்கள். இது உண்மையான போர் நிறுத்தமாக இருக்குமானால் எமது தளபதிகள் மகிழ்ச்சியடைவார்கள். நாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை செம்மையாகப் பேணி, எமது கெரில்லா நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தோம். ஆனால் சிங்கள ஆயுதப் படைகள் தொடர்ந்தும் பொது மக்களை தாக்கி வருகிறது. இதனால் நாம் திருப்பித் தாக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். இன்றைய சூழ்நிலையில் நாம் நிதானமாகச் செயல்பட வேண்டியிருக்கிறது. இந்த யுத்த நிறுத்தம் என்பதே ஒரு கேலிக்கூத்து. இந்தப் போலி நாடகத்தின் திரைக்குப் பின்னால் சிறீலங்கா அரசு இனப் படுகொலையை தொடர்ந்து நடத்தி வருகிறது என்பதை எனது தளபதிகளும் நன்கு அறிவார்கள். ஆகவே இச்சூழ்நிலையில் அவர்களையும் நான் சரியான முறையில் வழிநடத்த வேண்டியுள்ளது.

கேள்வி: பாலசிங்கம் நாடு கடத்தப்பட்டதும் நீங்கள் தலைமறைவாகத் தீர்மானித்தது ஏன்?

பதில்: நான் உடனடியாகத் திரும்பியிருக்கலாம். ஆனால் அந்த நாடு கடத்தல் உத்தரவு குறித்து எனது எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பினேன்.

கேள்வி: ஈழத்தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களுக்கு பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அழைப்பு விடுத்த போதும்கூட நீங்கள் தொடர்ந்தும் அணுக முடியாத நிலையில் இருந்தீர்கள். இது இந்திய அரசுக்கும், உங்களுக்குமிடையிலான உறவைப் பாதிக்கும் என நீங்கள் கருதவில்லையா?

பதில்: இந்த நாடு கடத்தல் உத்தரவு அவசியமில்லை என நான் திடமாக எண்ணியதால் எனது அதிருப்தியை வெளிக்காட்ட விரும்பினேன்.

கேள்வி: அப்படியானால் நீங்கள் மீண்டும் வெளியே வந்த காரணம் என்ன?

பதில்: பல காரணங்கள் உண்டு. முதலாவதாக நான் தலைமறைவாக இருந்தமையால் நாம் பேச்சுவார்த்தைக்கு எதிரானவர்கள் என்றும், நாம் ஆபத்தான பயங்கரவாதிகள் என்றும் சில தீய சக்திகள், விடுதலைக்கு விரோதமான சக்திகள் எம்மைத் தவறாக உருவகப்படுத்த முயன்றன. இரண்டாவதாக, நாம் இராணுவ ரீதியான தீர்வை மட்டும் விரும்பும் அதி தீவிரவாதிகள் என எம்மை அந்நியப்படுத்தி இனம் காட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு எம்மை ஆபத்தான பயங்கரவாதிகள் எனச் சித்திரித்துக்காட்டும் வகையில் சில பத்திரிகைகள் செய்திகளை திரித்து மிகைப்படுத்தி வெளியிட்டதுடன் பொது மக்கள் மத்தியிலும் பொய் வதந்திகள் பரப்பப்பட்டன. மூன்றாவதாக, எனது தலைமறைவைப் பயன்படுத்தி சிறீலங்கா அரசு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உறுப்பினர்களைக் கொலை செய்தது விடுதலைப் புலிகள் என எம்மீது அபாண்டமான குற்றத்தைச் சுமத்தியது.

கேள்வி: பிரதமர் ராஜீவ் காந்தியை சந்திப்பதன் மூலம் என்ன பலனை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: எமது பிரச்சினையை தெளிவாக எடுத்து விளக்கலாம் என நம்புகிறோம். போர்நிறுத்தம் என்ற போர்வையின் கீழ், ஜெயவர்த்தனா தமிழ் மக்களைப் படிப்படியாக கொன்று குவித்து வருகிறார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இலங்கையில் இடம்பெறுவது ஒரு இனப் படுகொலை என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி விளக்குவோம். போர் நிறுத்தம் என்று சொல்லிக்கொண்டு அங்கு உண்மையில் நடைபெறும் சம்பவங்கள் என்ன என்பதை விபரமாக எடுத்துரைப்போம். இலங்கை அரசாங்கமானது இதுவரையும் உருப்படியான, அர்த்தமுள்ள சமரஸத் திட்டம் எதையும் முன்வைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவோம். இதுவரையும் நாம் மூன்றாவது நபர்கள் மூலமாகவே இந்தியப் பிரதமருடன் தொடர்புகளை வைத்திருந்தோம். அவரை நேரடியாகச் சந்திப்பதன் மூலம் பல தப்பபிப்பிராயங்கள், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

கேள்வி: பிரதமர் அனுதாபம் காட்டுவார் என நினைக்கிறீர்களா?

பதில்: அப்படித்தான் நம்புகிறேன்.

கேள்வி: கடந்த மூன்று மாதங்களாக விடுதலைப் போராளிகள் சம்பந்தப்பட்ட மட்டில் இந்திய அரசின் நிலைப்பாடு கடினமாகியுள்ளது என எண்ணுகிறீர்களா?

பதில்: ஆரம்பத்தில் நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் பாலசிங்கத்தை நாடு கடத்தியதை அடுத்து இந்தியா கடுமையான போக்கை கடைப்பிடிக்கிறது என்பதை நம்ப வேண்டியிருக்கிறது.

கேள்வி: இந்தியாவின் நிலைப்பாட்டில் இவ்வித மாற்றம் ஏற்பட்டதன் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

பதில்: இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. சில சமயங்களில் சர்வதேச நெருக்கடிகள் அல்லது அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம். இந்த மாற்றத்திற்கான காரணத்தை உடனடியாக எம்மால் அனுமானிக்க முடியாது. ஆனால் காலப்போக்கில் அதன் காரணங்கள் என்னவென்பது தெரியவரும்.

கேள்வி: இந்திய அரசு இலங்கைக்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என நினைக்கிறீர்களா?

பதில்: இதன் அடிப்படையில் நாம் இதுவரை சிந்தித்ததே இல்லை. ஆயினும் நடைபெற்ற சில சம்பவங்கள் இத்தகைய சந்தேகத்தை எமது மனதில் கிளப்பியிருக்கிறது.

கேள்வி: திம்புவில் இரண்டாவது கட்டப் பேச்சுக்கள் முறிந்ததை அடுத்து ராஜீவ் காந்தி உங்களை அழைத்த போது நீங்கள் ஏன் உடனடியாகப் பதிலளிக்கவில்லை?

பதில்: தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு பிரதிநிதிகளும் திரும்பிவிட்ட போதும் ஏனைய இயக்கங்களின் ஒவ்வொரு பிரதிநிதிகள் திம்புவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கத்தோடு ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களை டெல்லிக்கு அழைக்க இந்தியா விரும்பியது. அதேவேளை வவுனியாவிலும், திருக்கோணமலையிலும் தமிழ் மக்கள் பெருந்தொகையில் கொன்று குவிக்கப்பட்டு வந்தனர். இந்தச் சூழ்நிலையில், மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய போராளிகளாகிய நாம் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வது என்பது கேலிக்கூத்தான விடயம் அல்லவா? சிறீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த விதிகளை ஒழுங்காகப் பேணாது பொறுப்பற்ற முறையில் செயற்படும் போது சமாதானப் பேச்சுக்கள் என்பது அர்த்தமற்றது. தமிழ் மக்கள் கொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு எந்தவித உறுதிமொழியையும் இலங்கை அரசு தரவில்லை. இந்தச் சூழ்நிலையில் பேச்சுவார்த்தைகளை நிறுத்திக்கொள்வதென நாம் தீர்மானித்தோம்.

கேள்வி: தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்தார்களா? நீங்கள்தான் இதற்குப் பொறுப்பு என இந்திய உளவு ஸ்தாபனங்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனவே?

பதில்: இந்தக் கொலைகளுக்கு நாங்கள் பொறுப்பு அல்ல. உளவுத்துறையினரின் கூற்றுக்கு நாம் என்ன செய்ய முடியும்? நாம் தான் பொறுப்பு என சிறீலங்கா அரசு சுமத்திய குற்றச்சாட்டை நாம் உடனடியாக மறுத்துள்ளோம். ஈழத் தேசிய விடுதலை முன்னணியும் மறுத்துள்ளது. இந்திய உளவுத்துறையினர் அப்படித்தான் கூறினாலும் நாம் இதைச் செய்யவில்லை என்பதை யாழ்ப்பாணத்து மக்கள் நன்கறிவர். எவ்வித ஆதாரமுமின்றி இந்திய உளவுத்துறையினர் தப்பாக அனுமானித்திருக்கலாம். நான் தலைமறைவாகிய காரணத்தினால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். நாம் அப்படி செய்திருந்தால் அதற்கான காரணங்களை எடுத்துக்காட்டி உரிமை கோரி இருப்போம். கொள்கைத் தெளிவின் அடிப்படையில் தான் நாம் எமது நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். ஆகவே நாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் உண்மையை மறைத்திருக்கமாட்டோம். உதாரணமாக நாம் திரு. ஆலாலசுந்தரத்தைச் சுட்டபோது (அண்மையில் கொலை செய்யப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு. ஆலாலசுந்தரம் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் காலில் சுடப்பட்டவர்) நாம்தான் அதைச் செய்ததாக உரிமை கோரினோம். நாம் அவரை கொலை செய்யவில்லை. அது அவசியமாக இருக்கவில்லை. அவரது சமூக விரோத நடவடிக்கைகளுக்காக நாம் அவரைத் தண்டித்தோம். கூட்டுறவுச் சங்க ஊழலில் அவருக்கு பங்கிருந்தது. அவரது மோசடியை நிரூபிக்கும் ஆதாரங்களை நாம் மக்கள் முன்வைத்தோம். அதேசமயம் கூட்டுறவு ஊழலை நிரூபணம் செய்யக்கூடிய ஏராளமான பத்திரங்களை அவர்கள் கூட்டுறவுச் சங்கத்துள் வைத்து தீயினால் நாசமாக்கினர். நாம் ஆனந்தராசாவை (யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அதிபர்) சுட்டபோதும் அதற்கு உரிமை கோரத்தான் செய்தோம். இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபா சன்மானம் தருவதாக சிறீலங்கா அரசு அறிவித்தது. இந்த அறிவித்தலிலிருந்து சிங்கள அரசுக்கும், ஆனந்தராசாவுக்கும் இடையேயிருந்த உறவின் தன்மையை யாழ்ப்பாண மக்கள் புரிந்து கொண்டனர். நாம் எதற்காக அவரைக் கொன்றோம் என்பதை விளங்கிக் கொண்டதால் அவர்கள் மௌனமாக இருந்தனர். சிங்கள இராணுவம் எமது மக்களைக் கொன்று குவித்தும், எமது இளைஞர்களை வேட்டையாடியும், தமிழர் சொத்துக்களை தீ மூட்டி அழித்தும், தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தும் வெறியாட்டம் ஆடி வரும் வேளையில் ஆனந்தராசா இராணுவத்தினருடன் கிரிக்கட் பந்தாட்டம் நடத்த ஒழுங்குகள் செய்து கொண்டிருந்தார். சிங்கள ஆயுதப் படைகளுக்கும், தமிழ்ப் பொது மக்களுக்கும் மத்தியில் நட்புறவு நிலவுகிறது எனவும், ஒருசில தீவிரவாதிகளே இனப் பிரச்சினைக்கு தூபமிடுகிறார்கள் எனவும் உலகத்திற்கு எடுத்துக்காட்டிப் பிரசாரம் செய்யவே இந்தப் பந்தாட்டப் போட்டியை சிங்கள அரசு பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தது. ஆகவே தான் இவரை ஒழித்துக்கட்ட நாம் முடிவு செய்தோம்.

கேள்வி: தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த ஒருசில கிளர்ச்சிக்கார அங்கத்தினர் கொன்றிருக்கலாம் அல்லவா?

பதில்: நிச்சயமாக இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எனது அனுமதியின்றி எதுவுமே நடக்காது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் மத்தியிலான இடைவெளி ஆபத்தான முறையில் விரிவடைந்து வருகிறது. தமிழீழப் போராட்டத்தைக் கைவிட்ட துரோகிகளாகவே இளைய தலைமுறை அவர்களை நோக்குகிறது. தமிழீழத்தில் மக்கள் மத்தியில் இவர்கள் இல்லாததால் இந்த இடைவெளி இன்னும் விரிவடைந்து செல்கிறது. தமிழீழத்தின் யதார்த்த சூழலிலிருந்து இவர்கள் முற்றாக அந்நியப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும்வரை இளம் தலைமுறையினரிடமிருந்து இதுபோன்ற கடும் நடவடிக்கைகளை இவர்கள் எதிர்நோக்க வேண்டித்தான் இருக்கும். உண்மைநிலை என்னவென்றால், தமிழீழப் போராட்டத்தை நான் கைவிடுவதாயின் எனக்கும் இதே நிலைதான் ஏற்படும்.

கேள்வி: இளம் தலைமுறையினர் தமிழீழப் போராட்டத்தில் தீவிர உறுதிப்பாடு உடையவர்கள் என சொல்கிறீர்களா?

பதில்: தமிழீழத் தனியரசே ஒரே தீர்வாக இருக்கும் என்பதை தமிழீழத்தில் நடைபெற்ற சம்பவங்கள் காட்டுகின்றன. இனக் கொலையை இலக்காகக் கொண்ட எத்தனையோ தாக்குதல்களை எதிர்கொண்ட தமிழ் மக்கள் தாம் சமாதானமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டுமாயின் தமிழீழத்தைத் தவிர வேறு தீர்வு எதுவும் இருக்க முடியாது என்பதை நன்கு உணர்ந்துள்ளனர்.

கேள்வி: தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற சந்தேகம் ராஜீவ் காந்தியின் நிலைப்பாட்டை கடுமையாக்கிவிட்டது. இதனால்தான் பாலசிங்கத்தின் நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்ய அவர் தயாராக இருந்த போதும் ரத்து செய்யவில்லை?

பதில்: இந்தக் கொலைகளுக்கும் எமக்கும் சம்பந்தமேயில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொன்றது நாம் தான் என ஊகித்து நாடு கடத்தல் உத்தரவை இந்திய அரசு ரத்து செய்ய மறுத்தால் அது தவறானதாகும். எம்மைத் தண்டிப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை. இந்த செயலுக்குக் காரணமாகவிருந்த சக்திகளைத்தான் அவர்கள் தண்டித்திருக்க வேண்டும். அதன் மூலம்தான் மீண்டும் இவ்வித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கலாம்.

கேள்வி: பாலசிங்கம் நாடு கடத்தப்பட்டதால் உங்களுக்கு ஏற்பட்ட தாக்கம் என்ன?

பதில்: நாம் இந்திய அரசாங்கத்துடன் பெருமளவு ஒத்துழைத்திருக்கிறோம். அப்படியிருந்தும் இது நடந்திருப்பதால், இது எமக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவே கருதினோம். இச்சம்பவம் எமக்கும், அவர்களுக்குமிடையில் ஓரளவு கசப்புணர்வைத் தோற்றுவித்திருக்கிறது.

கேள்வி: உங்களுக்கும், பாலசிங்கத்திற்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது?

பதில்: அவர் எமது அரசியல் ஆலோசகர். ஒரு உண்மையான தேசபக்தராகிய அவர் எமது மக்களின் தேசிய உணர்வைப் பிரதிபலிக்கிறார்.

கேள்வி: பாலசிங்கத்தை இந்தியா நாடு கடத்தியதன் காரணம் என்ன?

பதில்: ‘பொது மக்கள் நலன்’ கருதியே அவர் நாடு கடத்தப்பட்டார் என இந்தியா கூறியிருக்கிறது. இந்தக் காரணம் கேலிக்கிடமானதாக இருக்கிறது. அவரை அனுப்பிவிட்டு எம்மை இங்கு பேச்சுவார்த்தைக்காக வைத்திருப்பதில் எவ்வித அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

கேள்வி: பாலசிங்கம் இல்லாமல் உங்களால் இயங்க முடியாது என்ற டெல்லியின் அனுமானம்தான் அவரை நாடு கடத்தியதன் உண்மையான காரணமாக இருக்கலாம் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: அவர்கள் அப்படி எண்ணுவார்களாயின் அவர்களது கணிப்பு தவறானதாகும். அவர்கள் கையாளும் பிரச்சினை தனி மனிதர்களான பாலசிங்கத்துடனோ அல்லது பிரபாகரனுடனோ சம்பந்தப்பட்டதல்ல. இது எமது மக்களின் தேசிய அபிலாசையோடு சம்பந்தப்பட்ட பிரச்சினை.

கேள்வி: இந்திய அரசாங்கம் இந்த நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்யும் என நினைக்கிறீர்களா?

பதில்: அப்படித்தான் நம்புகிறேன்.

கேள்வி: பாலசிங்கம் திருப்பி அழைக்கப்படாமல் பேச்சுவார்த்தை தொடராது என்பதில் ஈழத் தேசிய விடுதலை முன்னணி உறுதியாக இருக்கிறதா?

பதில்: பாலசிங்கம் இல்லாத பட்சத்தில் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக நான் சில பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் எதிர்நோக்க வேண்டி வரும். அரசியல் அமைப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால் பேச்சுவார்த்தைகளில் அவர் கலந்துகொள்வது அவசியமானது. நான் பிரதமரைச் சந்திக்கும் பொழுது இந்தக் காரணங்களை எடுத்து விளக்கி நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்யுமாறு கோருவேன்.

கேள்வி: நாடு கடத்தல் உத்தரவை ரத்து செய்வதற்கு பிரதமர் மறுத்துவிட்டால் என்ன நடக்கும்?

பதில்: அப்படியாயின் பேச்சுவார்த்தைகள் சம்பந்தப்பட்ட மட்டில் சில சிக்கல்கள் உருவாகலாம்.

கேள்வி: நீங்கள் பிரதம மந்திரியைச் சந்திக்கும் பொழுது தமிழீழம்தான் ஒரே தீர்வு என்ற உங்கள் இலட்சியத்தை எடுத்து விளக்குவீர்களா?

பதில்: நிச்சயமாக, தமிழீழத் தனியரசு அமைவதே ஒரே தீர்வு என்பதையும், இந்த முடிவுக்கு எம்மைத் தள்ளிய வரலாற்று ரீதியான காரணங்களையும் எடுத்து விளக்குவோம்.

கேள்வி: ஆனால் பிரிவினை கோரிக்கையை தாம் ஆதரிக்கப் போவதில்லை என்று பிரதமர் ஏற்கனவே கூறியிருக்கிறார் அல்லவா?

பதில்: நாம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதமருக்கு எமது முடிவை எடுத்துக் கூறுவோம். இந்திய அரசு வேறோரு தீர்வை வைத்திருக்குமானால் எமக்கு அதை சமர்ப்பிக்கட்டும். ஆனால் அந்தத் தீர்வு செயற்படத்தக்க உருப்படியான திட்டமாக அமையுமா என்பதை அவர்கள் எமக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும்.

கேள்வி: இந்தப் பேச்சு வார்த்தைகளால் ஒரு நியாயமான, நீதியான தீர்வை அடையலாம் என நினைக்கிறீர்களா?

பதில்: சிறீலங்கா அரசாங்கம் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்க்கப் போனால் பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் உண்மையான அக்கறை அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. யுத்த நிறுத்த காலத்தில் அவர்கள் பெருந்தொகையில் ஆயுதங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் ஒரு இராணுவத் தீர்வையே விரும்புகிறார்கள் என்பது புலனாகிறது. பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே தமிழ் மக்களை அவர்கள் தாய் மண்ணிலிருந்து விரட்டியடித்து அகதிகளாக்கியிருக்கிறார்கள். திருக்கோணமலையில் மட்டும் இப்பொழுது 35,000 தமிழ் அகதிகள் இருக்கிறார்கள். யுத்த நிறுத்தம் பேணப்படுவதாகச் சொல்லிக் கொண்டு 600 அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்திருக்கிறார்கள்.

கேள்வி: நீங்கள் ஒரு குருவானவரின் அங்கியணிந்து மாறுவேடத்தில் மட்டக்களப்பில் காணப்பட்டதாக செய்திகள் கூறின?

பதில்: நான் தமிழீழத்தில் இருந்தது உண்மை. ஆனால் மற்றவை எல்லாம் கட்டுக்கதைகள்.

கேள்வி: சிறீலங்காவில் தமிழ் மக்கள் ஒரு இனப் படுகொலைக்கு ஆளாகி வருகின்றனர் என்பதை நீங்கள் உறுதியாக நம்பும் பட்சத்தில், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா கையாளக்கூடிய சிறந்த வழி என்ன என்று நினைக்கிறீர்கள்?

பதில்: விடுதலைப் போராளிகளுக்கு உதவி செய்வதன் மூலம் அவர்கள் இந்த இனப் படுகொலையை தடுத்து நிறுத்தலாம். தமிழ் மக்களைப் பாதுகாக்க முயற்சிப்பவர்களுக்கு அவர்கள் உதவலாம். எமக்கு இந்தியாவின் தார்மீக ஆதரவு அவசியம்.

கேள்வி: சிறீலங்காவில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட வேண்டும் என நினைக்கிறீர்களா? நான் இந்த வாதத்தை ஆதரிக்கவில்லை. அது இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் பல சிக்கல்களை உருவாக்கும். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ராஜீவ் காந்தியின் நிலைப்பாடு அவரது தாயாரின் கொள்கையிலிருந்து மாறுபட்டுள்ளதா?

பதில்: அப்படிப் பெரும் வேறுபாடு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கேள்வி: ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ‘சண்டே’ இதழுக்கு நீங்கள் அளித்த பேட்டியில் வவுனியாவிலும், திருக்கோணமலையிலும் இராணுவப் பயங்கரவாதம் தாண்டவமாடும் என திட்டவட்டமாகக் கூறியிருந்தீர்கள். இன்று உண்மையாகிவிட்ட இந்த சம்பவங்களை அன்று எப்படி உங்களால் அனுமானிக்க முடிந்தது?

பதில்: இப்பகுதியில் இராணுவத் தாக்குதல்கள் நடைபெறும் என நான் ஊகிக்க முடிந்ததற்கும் காரணம் என்னவென்றால் இப்பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எமது பிரதேசங்களை ஆக்கிரமித்து தமிழ் மக்களை யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள் தள்ளிவிடும் திட்டம் ஒன்று படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வந்தது. அவர்களது சூத்திரகாரத் திட்டம் என்ன என்பதை நாம் முன்கூட்டியே அறிந்ததால் இத்திட்டத்தை முறியடிக்கும் நோக்குடன் நாம் வவுனியாவிலும், திருக்கோணமலையிலும் தளங்களை அமைத்தோம். நேற்றுத்தான் (செப்டம்பா 15) நாம் திருக்கோணமலையில் ஒரு ஹெலிகப்டரைச் சுட்டு வீழ்த்தினோம். எமது எல்லைகளைப் பாதுகாப்பது அத்தியாவசியமானது. அல்லாவிடின் எல்லைகள் எமது வாசல்வரை வந்துவிடும். எமது தளங்கள் காரணமாகத்தான் ஜெயவர்த்தனா எமது எல்லைகளை உட்புறமாகத்தள்ள முடியாது திண்டாடுகிறார். எதிர்காலத்திலும் அவரால் அப்படிச் செய்ய முடியாது.

கேள்வி: அண்மிய வருங்காலத்தில் என்ன நடக்கலாம் என நினைக்கிறீர்கள்?

பதில்: தமிழீழத்திற்கான போராட்டம் வளர்ந்து நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. தமிழீழத் தனியரசு அமைவது திண்ணம். இந்த வரலாற்று நிகழ்ச்சியை எந்தவொரு சக்தியாலும், அது எத்தனை வலிமை வாய்ந்ததாக இருந்தாலும், தடுத்து நிறுத்தவே முடியாது. இதற்கு மாறாக ஏதாவது நிகழுமானால் அது தமிழ் மக்கள் இப்போராட்டத்தில் அழிவதாகத்தான் இருக்கும். நாம் எல்லோரும் அழிந்து தமிழினமே இத்தீவிலிருந்து முற்றாக சங்காரம் செய்யப்படலாம்.

கேள்வி: விடுதலைப் போராளிகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்த திட்டமிடுகிறார்கள் என சிறீலங்கா அரசு கூறுகிறது. இது உண்மையா?

பதில்: நாம் அப்படி ஒரு முடிவும் எடுக்கவில்லை. நாம் ஒருபொழுதும் பொய் வதந்திகளையும், மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும் வெளியிடுவதில்லை.

கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்ப் பொது மக்களை விரைவில் ஆயுத பாணியாக்குவார்கள் எனப் பாலசிங்கம் கூறியிருக்கிறாரே?

பதில்: அவர் எதிர்காலத்தைப் பற்றி கூறியிருக்கிறார். எதிர்காலத்தில் அப்படி நடக்கும்.

கேள்வி: சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது பிரமாண்டமான தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: ஆம். அப்படித்தான் எதிர்பார்க்கிறோம். பெய்ரூட்டில் நடந்ததைவிட மிகப் பெரிய அளவிலாக இது இடம்பெறலாம். 1983 ஜூலையில் நிகழ்ந்த கலவரத்தை விட திருக்கோணமலையிலும், வவுனியாவிலும் நடந்த சம்பவங்கள் மிகவும் மோசமானவை. இது போன்ற சம்பவங்கள் மிகவும் கொடூரமான முறையில் மீண்டும் நடைபெறலாம். எம்மை ஒரேயடியாக ஒழித்துக் கட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கிறது என்பதற்கு தமிழ்ப் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் ஆரம்ப அறிகுறியாகும்.

கேள்வி: தமிழ்ப் பகுதிகள் மீது குண்டுகள் பொழியப்படும் போது உங்கள் உறுதிப்பாட்டால் என்ன செய்ய முடியும்?

பதில்: குண்டுகளும் அணுவாயுதங்களும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கக் கூடியவை. ஆனால் இந்த ஆயுதங்கள் யாருடைய கையில் இருக்கிறது என்பது தான் முக்கியம். இந்த ஆயுதங்கள் தற்சமயம் சிறீலங்கா அரசாங்கத்திடம் இருக்கிறது. இவற்றை அவர்களிடமிருந்து கைப்பற்றுவது கடினமான காரியமில்லை. எம்மிடமிருக்கும் ஆயுதங்களில் பெரும்பாலானவை சிங்கள ஆயுதப் படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்டவைதானே.

கேள்வி: யுத்த நிறுத்தத்தை நீடிப்பதற்கு நீங்கள் இணங்குவீர்களா?

பதில்: நாம் ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கவில்லை. எமது மக்களை இன அழிவிலிருந்து காப்பாற்ற ஒரு தற்காப்புப் போராட்டத்தையே நடத்தி வருகிறோம். இனப் படுகொலையை இலக்காகக் கொண்ட தாக்குதல்கள் நிறுத்தப்படுமாயின் எமது கெரில்லாப் போர் நடவடிக்கைகளையும் நிறுத்திக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். யுத்த நிறுத்த மீறல்களை தடுக்கும் முகமாக அதைக் கண்காணிப்பதற்கு ஒரு வெளி ஸ்தாபனம் இல்லாத பட்சத்தில் யுத்த நிறுத்தத்தை நீடிப்பதற்கு நாம் இணங்குவது சிரமமானதே. யுத்த நிறுத்தத்தை நீடிப்பதாயின் சிறீலங்காவும், மத்தியஸ்தராகச் செயற்படும் இந்தியாவும், யுத்த நிறுத்தம் மீறப்படாது என எமக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்கவும், அரசியல் கைதிகளின் நிலைமையைக் கண்டறியவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அரசாங்க சார்பற்ற ஸ்தாபனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

கேள்வி: சிறீலங்கா இராணுவம் கட்டுப்பாட்டை மீறி இயங்குகிறது என நினைக்கிறீர்களா?

பதில்: நான் அப்படி நினைக்கவேயில்லை. இந்தத் தாக்குதல்களை எல்லாம் திட்டமிட்டு நடத்தும் சூத்திரதாரி ஜெயவர்த்தனாதான். அவர் இரட்டை வேடம் போடுகிறார். ஒருபுறம், தமிழ் மக்கள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுமாறு இராணுவத்துக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, மறுபுறம் இராணுவத்தினர் கட்டுப்பாட்டை மீறி நடக்கிறார்கள் எனக் கூறி தப்பித்துக்கொள்ள முனைகிறார். இராணுவத்தில் கிளர்ச்சிக்காரர்கள் இருப்பார்களாயின் இதுவரையில் ஒரு சதி நடந்து ஜெயவர்த்தனா பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டிருப்பார்.

கேள்வி: ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதில் ஜெயவர்த்தனாவுக்கு உண்மையான அக்கறை இருக்கிறதா? அவரது இடத்தில் வேறொரு தலைவர் இருந்தால் பேச்சுக்கள் மூலம் தீர்வு ஏற்படும் சாத்தியம் அதிகரிக்குமா?

பதில்: சிங்களத் தலைமைப்பீடத்தில் மாற்றம் ஏற்பட்டாற் போல இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமென நாம் நினைக்கவில்லை. மாறிமாறிப் பதவிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எம்மை ஏமாற்றித் துரோகமிழைத்தமையை எமது வரலாறு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

கேள்வி: தமிழீழ இலட்சியத்திற்காக நீண்டகால அடிப்படையில் இரத்தம் சிந்தவும், வன்முறையை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறீர்களா?

பதில்: நிச்சயமாக. உலகத்தில் எந்த ஒரு நாடும் இரத்தம் சிந்தாமலும், தியாகங்கள் புரியாமலும் சுதந்திரம் பெற்றதில்லை. தமிழராகிய நாம் எமது விடுதலைக்காக உயிரை அர்ப்பணிக்கவும் தயாராக இருக்கிறோம்.

கேள்வி: ஆனால், தென் ஆபிரிக்கா போன்று சுதந்திரப் போராட்டமானது மிக நீண்ட காலத்திற்கு எவ்வித முடிவுமின்றி இழுபட்டுச் செல்லக்கூடும் அல்லவா?

பதில்: ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வித கால வரம்பையும் நிர்ணயிக்க முடியாது. இறுதி இலட்சியத்தை அடையும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இது ஒரு மக்கள் யுத்தம். ஆகவே, ஒரு சில கெரில்லாப் போராளிகள் இறந்து போவதால் விடுதலைப் போராட்டம் ஒரு முடிவுக்கு வருவதில்லை. மக்களின் உறுதிப்பாடு, சர்வதேச ஆதரவு மற்றும் சூழ்நிலைதான் ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு வழி வகுக்கின்றன. எமது வாழ்நாளிலேயே தமிழீழத்தை அடையலாம் என்ற நம்பிக்கையில் நாம் போராடுகிறோம். எமது விடுதலைப் போராட்டத்தின் பழுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.

கேள்வி: அடுத்தகட்ட சமாதானப் பேச்சுக்களில் நீங்கள் பங்குபற்றுவீர்களா?

பதில்: அது சிறீலங்கா அனுப்பும் தூதுக் குழுவின் தகைமையைப் பொறுத்திருக்கிறது.

கேள்வி: விடுதலைப் போராளிகள் மீது இந்தியா ஒரு தீர்வைத் திணிக்கும் என நினைக்கிறீர்களா?

பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. அப்படி ஒரு தீர்வை திணிக்க முயல்வதில் அர்த்தமில்லை. ஏனென்றால் எமது மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைபூர்த்தி செய்யாத எந்தவொரு தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

கேள்வி: சமாதானப் பேச்சுக்கள் என்ற போர்வையில் காலத்தைக் கடத்தி இராணுவததைப் பலப்படுத்துவதுதான் ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சியாக இருக்கலாம் என நினைக்கறீர்களா?

பதில்: ஆம். அப்படித்தான் நினைக்கிறேன். அதேவேளை காலம் எமக்குப் பயனளிக்கும்.

கேள்வி: மக்களால் போற்றப்படும் ஒரு வீர புருஷனான நீங்கள தமிழ்ப்பகுதிகளில் பிரபல்யமடைந்துள்ளீர்கள். உங்கள் வாழ்நாளிலேயே நீங்கள் ஒரு வரலாற்று நாயகனாக உருவாகி வருவதன் காரணம் என்ன?

பதில்: இதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும். அடிப்படையில், இவ்விதமான உணர்ச்சிப் பாங்கினை நான் வெறுக்கிறேன். ஏனென்றால் இது ஒருவனின் அகந்தையை தட்டிக் கொடுக்கிறது. ஒரு விடுதலைப் போராளியானவன் தனது சுயத்தின் வரம்புகளுக்கு அப்பால் மேலோங்கி தன்னை முழுமையாகப் போராட்டத்திற்கு அர்ப்பணக்க வேண்டும். நான் எமது மக்களின் சுதந்திர வேட்கைகையைப் பிரதிபலிக்கும் ஒரு வடிவம்தான்.

கேள்வி: சில சூழ்நிலைகள் காரணமாக தமிழ் விடுதலைப் போராளிகளுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் மத்தியிலான உறவுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இந்தியா தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறது என வைத்துக் கொள்வோம். அப்படியாயின் தனித்து நின்று போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் இருக்கிறீர்களா?

பதில்: எமக்கு வேறெதாவது மாற்று வழியுண்டா? எமது இலட்சியத்தை அடையும்வரை நாம் போராடித்தான் ஆகவேண்டும். இந்தியாவின் அனுதாபம் எமக்குத் தார்மீக பலத்தைக் கொடுக்கிறது. ஆனால் இந்தியா தனது ஆதரவை நிறுத்திக் கொள்ளுமாயின் அதனால் எமது விடுதலைப் போராட்டம் நின்றுவிடப் போவதில்லை. இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறெந்த வெளிநாட்டு சக்திகளின் உதவியுடனோ நாம் எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை நாம் சாகும் வரை போராடியே தீருவோம். நான் இறந்துபோக நேருமாயின் இன்னுமொருவர் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுவார். மாவீரன் சுபாஸ் சந்திர போஸ் குறிப்பிட்டது போல, “எந்த ஒரு விடுதலைப் போராளியும் தான் தனியாக நின்று சுதந்திரத்தைப் பெற்றுத் தரமுடியும் என தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது.” எனது தலைமுறை சுதந்திரத்தை அடைய முடியாது அழிந்துபோனால் அடுத்த பரம்பரை போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்.

https://thesakkatru.com/the-sri-lanka-government-wants-a-military-solution/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கம் பெற்றது ஏன்?

Tamileela-Thisiyath-Thalaivar-1.jpg

குறிப்பு: பம்பாயிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில மாதச் சஞ்சிகையான ‘ஜென்டில்மன்’, ‘பாயும் புலி’ என்ற தலைப்பில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நேர்காணலை முக்கியம் கொடுத்து பிரசுரித்தது. 1986 ஆம் ஆண்டு மார்ச் மாத இதழில் பிரசுரமாகிய இவ்நேர்காணலை தமிழில் மொழிபெயர்த்து இங்கு தருகிறோம். தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பல முக்கிய விடயங்கள் பற்றிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கருத்துக்களை இவ் நேர்காணல் தாங்கி வருகிறது.

கேள்வி: உங்களை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்த காரணங்கள் என்ன?

பதில்: தமிழ் மக்களின் அவலநிலைதான் என்னை ஆயுதமேந்த நிர்ப்பந்தித்தது. அப்பாவித் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதியான, மனிதாபிமானமற்ற கொடுமைகள் என்னிடம் ஒரு கொதிப்புணர்வை ஏற்படுத்தியது. ஈவிரக்கமற்ற முறையில் எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டமையும், அவர்களது சொத்துடமைகள் அநியாயமாக அழிக்கப்பட்டமையும் எனக்கு ஒரு உண்மையைப் புலப்படுத்தியது. அதாவது, எமது மக்கள் திட்டமிடப்பட்ட ஒரு இனப்படுகொலைக்கு ஆளாகிவருகிறார்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். தமிழினத்தை வேரோடு ஒழித்துக்கட்ட திட்டமிட்டுச் செயற்பட்ட பாசிச சர்வாதிகார அரசிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றி அவர்களது விடுதலையை வென்றெடுக்கவேண்டுமென்றால் புரட்சிகர ஆயுதப் போராட்டம் தான் ஒரே வழி என்பதை நான் உணர்ந்தேன்.

கேள்வி: உங்களது மக்களின் குறைபாடுகளை, அபிலாசைகளை, பாராளுமன்ற சனநாயகம் மூலமாகவும், சுதந்திர பத்திரிகை உலகம் வாயிலாகவும் வெளிப்பாடு காண நீங்கள் முயற்சித்திருக்கலாம் அல்லவா?

பதில்: முப்பது ஆண்டு காலத்திற்கு மேலாக, தமிழ் மக்கள் தமது குறைபாடுகளை பாராளுமன்றம் மூலமாக வெளியிட்டு வந்திருக்கிறார்கள். பாலைவனத்தில் எழுந்த அவல ஓலம் போன்று பாராளுமன்றத்தில் அவர்கள் எழுப்பிய குரலை யாருமே செவிமடுக்கவில்லை. மக்களின் அபிலாசைகள், குறைபாடுகள் தீர்வு காணும் ஒரு அரசியல் அரங்காக சிறீலங்காவின் பாராளுமன்ற சனநாயகம் செயல்படவில்லை. சிறீலங்காவில் பாராளுமன்ற சனநாயகம் என்பதே இல்லை. பெரும்பான்மை இனத்தின் சர்வாதிகார கொடுங்கோன்மை ஆட்சிமுறையே பாராளுமன்றம் என்ற பெயரில் அங்கு செயல்பட்டுவருகிறது. இறுதியாக, இந்தப் பாராளுமன்றத்திலிருந்து தமிழ்ப் பிரதிநிதிகளும் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறீலங்காவில் பத்திரிகைச் சுதந்திரமும் இல்லை. அரசின் கட்டுப்பாட்டிலேயே பத்திரிகைகள் இயங்குகின்றன. அந்தப் பத்திரிகைகளிலும் இனத் துவேசம் கொண்டவர்களே ஆசிரியர்களாகச் செயல்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்கள் தமது அபிலாசைகளுக்கு சனநாயக வழிமுறையில் வெளிப்பாடுகாண முடியாது.

கேள்வி: சிங்கள மக்களின் நல்லாதரவைப்பெற நீங்கள் முயற்சி செய்கின்றீர்களா?

பதில்: சிங்கள மக்களின் ஆதரவைப் பெற நாம் எம்மாலான முயற்சிகளைச் செய்து வருகிறோம். ஆயினும், இனவாத அரசியல்வாதிகளும் பௌத்த குருமாரும் தமிழ் மக்களுக்கு எதிரான முறையில் சிங்கள மக்களின் மனதில் விஷத்தை ஊட்டிவருகிறார்கள். இதனால், எமது போராட்டம் நியாயமானதாக இருப்பினும் சிங்கள மக்களை எமது போராட்டத்திற்கு ஆதரவாக அணி திரட்டுவது கடினமாக உள்ளது. எனினும் சிங்கள மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சிப்போம்.

கேள்வி: இன்றைய விரிசல் நிலையிலும், தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் ஒரே தன்மையுடைய சமூக, பொருளாதார அபிலாசைகள் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

பதில்: ஆம். சாதாரண சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு வருகிறார்கள். ஆகவே, இவ்விரு இனத்தவர் மத்தியிலும் ஒரே தன்மையுடைய சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளும் அபிலாசைகளும் இருக்கத்தான் செய்கிறது. தேசிய முரண்பாடுதான் இவர்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்துகிறது. தனது ஆட்சியை நிலைப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காக சிங்கள ஆளும்வர்க்கமானது தமிழ், சிங்கள மக்களிடையே இன முரண்பாட்டிற்கு தூபமிட்டுவருகிறது.

கேள்வி: தீவிரவாத அரசியல் போராட்டத்தில் உங்களை இறங்கவைத்த புறநிலைகள் பற்றி கூறுவீர்களா?

பதில்: சிறுபிராயத்திலிருந்தே தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள், கொடுமைகள் பற்றி கேள்விப்பட்டுவந்தேன். எனது பாடசாலைப் பருவத்தில் இன ஒடுக்குமுறையின் தாக்கத்தை நான் நேரடியாக உணர்ந்துகொள்ள முடிந்தது. தமிழ்த் தேசத்தை சூழ்ந்துவரும் அரச ஒடுக்குமுறையின் பேராபத்தை எனது வாலிபப் பருவத்தில் நான் தெட்டத் தெளிவாக உணரமுடிந்தது. இந்தப் பேராபத்திலிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதாயின் ஆயுத எதிர்ப்பு இயக்கம் ஒன்றை கட்டி எழுப்பவேண்டும் என எண்ணிக்கொண்டேன். இந்த விழிப்புணர்வின் அடிப்படையில் தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்றுவித்து, ஆயுதப் போராட்டத்தை தொடங்கினேன்.

கேள்வி: உங்களது குடும்பப் பின்னணி பற்றியும், குடும்பத்துடனான உங்கள் உறவு பற்றியும் கூறுவீர்களா?

பதில்: நான் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். எனது தந்தையார் ஒரு அரச ஊழியர். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்கள் திருமணமாகி குடும்பம் நடத்துகிறார்கள். இளம் பராயத்திலிருந்தே புரட்சிகர அரசியலில் ஈர்க்கப்பட்ட நான் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தேன். இதனால் 19 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கையில் ஈடுபடநேர்ந்தது. அதிலிருந்து பெற்றோருடனான உறவுகளை நான் இழந்துவிட்டேன்.

கேள்வி: தமிழரின் தீவிரவாத போராட்டத்தின் சின்னமாக உங்களைச் சித்திரித்துக் காட்டுகிறார்கள். உங்களது இயக்கம் உங்களை ஒரு மாவீரனாக வர்ணிக்கிறது. ஒரு புரட்சிவாதி என்ற ரீதியில், இப்படியான தனிமனித வழிபாட்டினை நீங்கள் அனுமதிக்கலாமா?

பதில்: இப்படியான கருத்துருவ தோற்றப்பாடுகள் சித்திரிப்புகளுக்கு என்னால் ஒன்றும் செய்ய இயலாதிருக்கிறது. ஒடுக்கப்பட்ட எனது மக்களின் சமூக விடிவும், அரசியல் விடுதலையுமே என்னை சதா ஆட்கொண்டுவரும் அக்கறைகளாகும், எனது விடுதலைப்பற்றை மக்கள் நன்கு அறிவார்கள். அதனால் என்மீது அவர்களுக்கு அபார நம்பிக்கையுண்டு. நான் அவர்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்கிறேன் என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். இதனால் என் மீது ஆழமான அன்பைக் காட்டுகிறார்கள். என்னைப்பற்றிய தோற்றப்பாடுகள் மக்கள் என்மீதுகொண்ட அன்புணர்வின் வெளிப்பாடுகளாக இருக்கலாம்.

கேள்வி: சிறீலங்காவின் அரசியல் நிலைமை பற்றி உங்களது கணிப்பீடு என்ன?

பதில்: சிறீலங்காவின் அரசியல் நிலைமை மிகவும் நெருக்கடி மிகுந்ததாக இருக்கிறது. தமிழ் இனம் ஒரு இனப்படுகொலையை எதிர்கொண்டு நிற்கிறது. சிங்கள ஆயுதப்படைகள் தொடர்ந்து தமிழர்கள்மீது வெறியாட்டம் ஆடிவருகிறது. கொலை, கொள்ளை, தீவைப்பு. சித்திரவதை, பாலியல் வல்லுறவு போன்ற கொடுமைகளுக்கு தமிழ் மக்கள் ஆளாகி வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்தக் கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து அகதிகளாக அல்லல்படுகிறார்கள். போர் நிறுத்தம் என்ற போர்வையில் எமது மண்ணைப் பறிப்பதிலும், எமது மக்களைக் கொன்று அழிப்பதிலும் ஆயுதப் படைகள் ஈடுபட்டுவருகின்றன. தமிழ் மக்களுக்கு நீதி வழங்க சிங்கள ஆளும்வர்க்கம் தயாராக இல்லை, சமாதான வழியில் பேச்சுக்கள் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் அவர்கள் தயாராக இல்லை. ஆயுத பலத்தால் தமிழர்களை அடக்கி ஆளவேண்டும் என்பதே சிங்கள அதிகார வர்க்கத்தின் கொள்கையாக இருக்கிறது. இந்த இனத்துவேச அடக்குமுறைக் கொள்கை காரணமாக ஒரு நெருக்கடியான, ஆபத்தான நிலைமை உருவாகி வருகிறது.

கேள்வி: சிறீலங்கா அரசுக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் மத்தியில் தற்போது நடைபெறும் பேச்சு வார்த்தைகள்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: இந்தப் பேச்சுவார்த்தைகள் ஒரு கேலிக்கூத்தாகவே முடியும். இந்தப் பேச்சுவார்த்தை என்பது உலகத்தை ஏமாற்றுவதற்காக ஜெயவர்த்தனா மேடையேற்றியுள்ள ஒரு அரசியல் நாடகமன்றி வேறொன்றுமல்ல. தன்னை ஒரு சமாதானத்தின் பிரியனாக ஜெயவர்த்தனா காட்டிக் கொண்டபோதும் உண்மையில் அவர் சமாதானத் தீர்வை விரும்பவில்லை. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும்வகையில் ஒரு நியாயமான தீர்வுத் திட்டம் எதையும் முன்வைக்க அவர் தயாராக இல்லை, சமாதானத்தின் போர்வையில், இனப்படுகொலையை இலக்காகக் கொண்ட ஒரு பயங்கரயுத்தத்தையே அவர் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்.

கேள்வி: தனது இராணுவ நிலையைப் பலப்படுத்தவே ஜெயவர்த்தனா அரசு போர்நிறுத்த உடன்பாட்டை பயன்படுத்தியது என நீங்கள் அண்மையில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தீர்கள் அல்லவா?

பதில்: ஆம். போர்நிறுத்த உடன்பாட்டை அனுகூலமாகப் பயன்படுத்தி ஜெயவர்த்தனா அரசு ஒரு பாரிய இராணுவ மயப்படுத்தல் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தது. தனது இராணுவ இயந்திரத்தை பலப்படுத்துவதிலேயே அரசாங்கம் தனது தேசிய வரவு செலவுத் திட்டத்தில் பெரும்பகுதி நிதியை செலவுசெய்து வருகிறது. இந்தப் பணத்தைக்கொண்டு உலக சந்தையிலிருந்து மிகவும் பயங்கரமான ஆயுதங்களை சிறீலங்கா வாங்கியுள்ளது. அதே சமயம், கட்டாய இராணுவ சேவைக்கான சட்டம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது. முழுச் சிங்கள தேசமுமே ஒரு பெரிய யுத்தத்திற்காக அணிதிரட்டப்படுகிறது. தமிழ்ப் பகுதிகளில் புதிய இராணுவ முகாம்கள் நிறுவப்படுகின்றன. அந்நியக் கூலிப் படைகள் சேவைக்கு அமர்த்தப்படுகின்றன. அதேசமயம், சிங்கள இராணுவத்தினருக்கு எதிர்ப் புரட்சி யுக்திகளில் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உதவிபுரிகின்றன. இந்தத் தயாரிப்பு நடவடிக்கைகளிலிருந்து ஒரு உண்மை தெட்டத்தெளிவாக புலனாகிறது. அதாவது, சிங்கள அரசு சமாதான வழியிலான அரசியல் தீர்வை விரும்பவில்லை. இராணுவ அணுகுமுறையிலேயே சிங்கள ஆட்சிபீடம் அதீத அக்கறை காட்டி வருகிறது.

கேள்வி: சென்ற தடவை நீங்கள் டெல்லிக்கு விஜயம் செய்தபொழுது உங்களுக்கு அரசியல் சாதகமான முறையில் போர் நிறுத்த கண்காணிப்பு குழு ஒன்றை நியமிக்க சிறீலங்கா அரசாங்கம் இணங்கியது அல்லவா? இந்தப் போர்நிறுத்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதை அடுத்து வன்முறை தணிந்து சமாதானம் நிலவக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை பிறந்துள்ளது என்று சொல்லலாமா?

பதில்: நீங்கள் எந்தக் கண்காணிப்புக் குழுபற்றி சொல்கிறீர்களோ எனக்குத் தெரியாது. அப்படி இந்தக் கண்காணிப்புக் குழு ஏதாவது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறதா? ஜெயவர்த்தனா அரசின் ஆயுதம் தரித்த காடையர்கள் புரிந்த போர்நிறுத்த மீறல்கள் பற்றி இந்தக்குழு விசாரணை ஏதாவது நடத்தியிருக்கிறதா? உண்மை என்னவென்றால், பேச்சுக்கள் ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறு புறம் மேலும், மேலும் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். எமது மீனவர்களைக் கொன்று அழிப்பதற்காக சிங்கள அரசு சிங்கப்பூரிலிருந்து பீரங்கிப் படகுகளை வாங்கியிருக்கிறது. தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுமே கூட்டாகச் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. இது தான் உண்மை நிலை.

கேள்வி: அப்பொழுது இந்த சமாதான அணுகுமுறை தோற்றுவிட்டது என்றா சொல்கிறீர்கள்?

பதில்: சமாதானப் பேச்சுக்களால் உருப்படியான பலன் எதுவும் கிட்டவில்லை என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி: இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வுகாணும் சாத்தியக்கூறுகள் இப்போது இல்லை என்பது அதன் அர்த்தமா?

பதில்: அது எதனைப் பொறுத்தது என்றால்…

கேள்வி: இந்தியாவின் நிலையைப் பொறுத்தது…. அப்படித்தானே?

பதில்: ஒருவகையில் ஆம்.

கேள்வி: மேலும் இரத்தக்களரியைத் தவிர்ப்பதென்றால் சமாதானப் பேச்சு மூலம் தீர்வு ஒன்றை காண்பதற்கு வாய்ப்புக்கள் அளிக்கப்பட வேண்டும் என எண்ணுகிறீர்களா?

பதில்: கடந்தகால வரலாற்று அனுபவங்களிலிருந்து பார்த்தால் சிங்கள அரசு ஒரு நியாயமான இணக்கப்பாட்டிற்கு வரப் போவதில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். ஜெயவர்த்தனா ஒரு நாடகத்தை அரங்கேற்றி சமாதானப் பிரியன் என்ற முகமூடி அணிந்து நடிக்கிறார். ஜெயவர்த்தனாவின் இந்த கபட நாடகத்தால் இந்திய அரசு தான் விரும்பியது எதையுமே சாதிக்கமுடியவில்லை. இதனால் ஒரு முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருக்கிறது. இரு தரப்பினரையும் ஒரு இணக்கத்திற்கு கொண்டுவர இந்தியா முயற்சிக்கலாம். இவ் விசயத்தில் இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

கேள்வி: ரொமேஷ் பண்டாரியுடன் நீங்கள் பேச்சுக்களை நடத்திய போது இது பற்றிச் சொன்னீர்களா?

பதில்: ஆம். இதுபற்றிக் கூறினோம்.

கேள்வி: சிங்கள குடிமக்கள் மீது தீவிரவாதப் போராளிகள் தாக்குதல்களை நடத்தினார்கள் என பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. ஆயுதப் போராட்ட இலக்கில் குடிமக்கள் சம்பந்தமான உங்கள் கொள்கைப்பாடு என்ன ?

பதில்: இந்தப் பத்திரிகை செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. எமது விடுதலை இயக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தவே இப்படியான பொய்ப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. நாமல்வத்தை என்ற இடத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை. எமது சகோதர தமிழ் அமைப்புக்கள் இச் சம்பவத்தில் ஈடுபட்டனவா என்பதும் எமக்குத் தெரியாது.

கேள்வி: சிங்களக் குடிமக்கள் தமிழ்த் தீவிரவாத போராளிகளால் தாக்கப்படுகிறார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் டெல்லியிலுள்ள சிறீலங்கா தூதரக அதிகாரி ஒருவர் எனக்குச் சில புகைப்படங்களைக் காண்பித்தார்.

பதில்: இதோ பாருங்கள், சிங்களப் பகுதிகளில் ஊர்காவற்படையினர் என்ற பெயரில் ஆயுதம் தரித்த காடையர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்குச் சிங்கள இராணுவத்தினரே பயிற்சியும் அளித்து ஆயுதங்களையும் கொடுக்கிறார்கள். இவர்கள் குடிமக்கள் என்ற போர்வையில் நடமாடும் கொலைப்படையினர். தமிழ் மக்களைக் கொல்லவும், அவர்களது சொத்துடமைகளை நாசம் செய்யவும் இவர்கள் காலத்திற்கு காலம் ஏவப்படுகிறார்கள். இவர்கள் மீது சில தடவைகள் நாம் தாக்குதலை நடத்தியிருக்கிறோம். இது ஒருபுறமிருக்க, எல்லைப் புறங்களில் சிங்கள, தமிழ் கலவரங்களும் வெடிப்பதுண்டு. தமிழ்க் கிராமங்களில் சிங்களவர்கள் பலவந்தமாக குடியமரும்பொழுது நிலத்தைப் பாதுகாக்க மோதல்கள் நிகழ்வதுண்டு. இப்படியான சம்பவங்களின் போது நிகழும் அனர்த்தங்களை புகைப்படம் எடுத்து ஜே. ஆரின் பிரச்சார முகாமையாளர்கள் உலகெங்கும் விநியோகிக்கும் விவகாரம் எமக்கு நன்கு தெரியும். இதைக் காண்பித்து போராளிகள் பொதுமக்களைத் தாக்குவதாகப் பொய்ப் பிரச்சாரம் நடக்கிறது. ஆனால் உண்மை நிலபரத்தை அவர்கள் ஒருபொழுதும் சொல்வதில்லை.

கேள்வி: பேச்சுவார்த்தைகள் ஒரு தேக்கநிலை அடைந்திருப்பதாகவும் ஒரு சமரசத் தீர்வுக்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை என்றும் கூறுகிறீர்கள். அப்படி என்றால் உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? சிங்கள ஆயுதப் படைகளுக்கு எதிராக மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தொடர்வதுதான் உங்களது திட்டமா?

பதில்: இப்பொழுது போர் நிறுத்தப்பட்டுள்ளது. எம்மீது தாக்குதல் நடைபெற்றால் நாம் எமது பாதுகாப்பிற்காக திருப்பித் தாக்குவோம். நாம் வலிந்து முன் சென்று தாக்குதலை நடத்தப்போவதில்லை.

கேள்வி: திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் விவசாயிகளை விரட்டிக்கலைத்து விட்டு அப்பகுதிகளில் இராணுவம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதாக சில செய்திகள் கூறுகின்றன. இந்தச் செய்திகள் உண்மையாக இருந்தால் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: நாம் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. போராட்டம் மூலமாகவே இராணுவத்தினரின் இத் திட்டத்தை முறியடிக்க முடியும்.

கேள்வி: தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறையும், இரு சாராருக்கும் இடையில் மத்தியத்துவம் வகிக்கும் இந்தியாவின் பங்கும் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதா?

பதில்: மத்தியஸ்தர் என்ற நிலையில் இனப் பிரச்சினைக்கு சமாதானப் பேச்சுக்கள் வாயிலாக ஒரு தீர்வுகாணவேண்டும் என இந்தியா நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இந்தியாவின் அணுகுமுறை எமக்குத் திருப்தியை அளித்த போதும் ஜெயவர்த்தனாவின் அணுகுமுறை ஆழமான ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காண வேண்டும் என்ற இந்தியாவின் நல்லெண்ண முயற்சிக்கு ஜெயவர்த்தனாவின் ஆணவம் கொண்ட கடும்போக்கு ஒரு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்து விட்டது.

கேள்வி: அப்படியென்றால் திம்பு பேச்சு வார்த்தையின்போது போராளிகள் அமைப்புக்கள் ஏன் வெளிநடப்புச் செய்தன?

பதில்: தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவ பயங்கரவாதமும், இனப்படுகொலையும் கட்டவிழ்த்து விடப்பட்ட காரணத்தினால் தான் நாம் வெளிநடப்புச் செய்தோம். அப்படியான ஒரு சூழ்நிலை தான் இப்பொழுதும் சிறீலங்காவில் தாண்டவமாடுகிறது.

கேள்வி: சிறீலங்காவில் உருவாகியுள்ள தமிழர் தேசிய நெருக்கடி உபகண்டத்தில் இந்திய நலனகளைப் பாதிப்பதாக நீங்கள் அடிக்கடி கூறிவருகிறீர்கள். உங்களது போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் தான் இப்படிக் கூறிவருகிறீர்களா?

பதில்: முன்பொரு காலம் உள்நாட்டு நெருக்கடியாக இருந்துவந்த தமிழர் பிரச்சினை இன்று சர்வதேசப் பரிமாணங்களைப் பெற்ற உலகப் பிரச்சினையாக விரிவடைந்துள்ளது. இது இந்தியாவிற்கு கலக்கத்தைக் கொடுக்கிறது. தமிழரின் சுதந்திரத்தை எப்படியாவது நசுக்கிவிடவேண்டும் என்ற இலட்சியத்தை நிறைவேற்றும் நோக்கில் சிறீலங்கா சர்வதேச நாசகார சக்திகளை இலங்கைத் தீவில் ஊடுருவ அனுமதித்திருக்கிறது. இஸ்ரேலிய உளவு நிறுவனங்கள், பிரித்தானிய கூலிப்படைகள் இலங்கையில் ஊடுருவி இருப்பது மட்டுமல்லாமல் பாகிஸ்தானிய தலையீடும் பாரிய இராணுவமயப்படுத்தல் திட்டமும் இப்பிராந்தியத்தில் சமாதானத்திற்கும், உறுதி நிலைக்கும் பங்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆபத்தான திருப்பநிலை இந்தியாவின் அரசியல் – பூகோள நலன்களைப் பாதிக்கும் என்பது திண்ணம். ஏனென்றால் இந்துமாசமுத்திரப் பகுதி ஒரு சமாதானப் பிரதேசமாக அமைய வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது.

கேள்வி: சிறீலங்காவின் நெருக்கடியில் அமெரிக்க ஆட்சிபீடம் வகிக்கும் பங்குபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: அமெரிக்காவிற்கு இப்பிரதேசத்தில் கேந்திர, அரசியல், பூகோள அபிலாசைகள் உண்டு. இலங்கையிலுள்ள திருக் கோணமலை இயற்கைத் துறைமுகம் இந்து மாசமுத்திரத்தில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. இலங்கையில் படிப்படியாக ஊடுருவி, இத்தீவை தமது ஆதிபத்தியத்தின்கீழ் கொண்டுவருவதே அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கமாகும் தீவிரமாகிவரும் இனநெருக்கடியானது அமெரிக்க உதவியை நாட ஜெயவர்த்தனா அரசை நிர்ப்பந்தித்தது. இஸ்ரேல், பாகிஸ்தான், தென் கொரியா, சீனா ஆகிய தனது நட்புறவு நாடுகள் மூலமாக அமெரிக்கா சிறீலங்காவிற்கு உதவி வருகிறது. இனநெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தி, படிப்படியாக இத்தீவில் காலூன்றி, திருகோணமலையில் தளம் ஒன்றை அமைத்துக்கொள்வதுதான் அமெரிக்காவின் நோக்கம்.

கேள்வி: சோசலிச நாடுகள் உங்களது இலட்சியத்திற்கு அனுதாபம் காட்டுகின்றனவா?

பதில்: ஆம். இந்நாடுகள் எமக்கு அனுதாபம் காட்டுகின்றன.

கேள்வி: உங்களது அரசியல் தத்துவம் என்ன? உங்களை பெரிதும் கவர்ந்த கெரில்லாப் போராட்டத் தலைவர் யார்?

பதில்: புரட்சிகர சோசலிசம்தான் எனது அரசியல் சித்தாந்தம். சோசலிசம் எனும்பொழுது வர்க்க வேறுபாடு ஒழிந்த, மனிதனை மனிதன் சுரண்டும் அநீதி நீங்கிய, சமத்துவ சமூக அமைப்பையே குறிப்பிடுகிறேன். இந்தப் புரட்சிகரமான சமுதாயத்தில் மனித சுதந்திரங்களும் உரிமைகளும் பேணிப் பாதுகாக்கப்படும், மனித வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கப்படும். சே குவாரா தான் என்னை மிகவும் கவர்ந்த கெரில்லாப் போராட்டத் தலைவர்.

கேள்வி: தமிழ் மக்களின் போராட்டத்தை எவ்வாறு வர்ணிப்பீர்கள்?

பதில்: தமிழ் மக்களின் போராட்டம் தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம். தமது அரசியல் தலைவிதியை தாமே நிர்ணயித்துக்கொள்ளும் அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டம்.

கேள்வி: இனப் பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி பற்றி விளக்குவீர்களா?

பதில்: தமிழரின் தேசிய இனப்பிரச்சினை நாற்பது ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. சிங்கள ஆளும் வர்க்கமானது பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக் கொள்கையைக் கடைப்பிடித்தது. தமிழ்த்தேசியத்தின் தனித்துவத்தை சிதைக்கும் நோக்கைக் கொண்ட இன அழிப்பு வடிவமாக இந்த ஒடுக்குமுறை அமைந்தது. மொழி, பண்பாடு, பொருளாதார வாழ்வு, தாயக நிலம் ஆகிய தமிழ்ச் சமூகத்தின் அத்திவாரங்களை தகர்த்தெறியும் நோக்கமாக இந்த ஒடுக்குமுறை ஏவிவிடப்பட்டது. இதனால் தமிழினம் தாங்கொணாத் துயருக்குள் தள்ளப்பட்டது. அத்தோடு தமிழருக்கு எதிராக திட்டமிட்ட வன்முறையை அரசு கட்டவிழ்த்துவிட்டது. காலத்திற்கு காலம் இலங்கைத் தீவில் வெடித்த இந்த இனப் பூகம்பங்களால் பாரிய உயிரிழப்புகளும் பொருளிழப்புகளும் ஏற்பட்டன. இந்த அரச பயங்கரவாதப் புயல் இன்னும் ஓயாது வீசிக்கொண்டேயிருக்கிறது.

ஆரம்பகாலத்தில் எமது மக்கள் காந்திய வழி தழுவிய அமைதிவழிப் போராட்டங்களை நடத்திவந்தனர். அரச வன்முறையை ஆட்சேபித்து சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் ஒத்துழையாமை இயக்கங்களையும் நடத்தினர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக, தமது அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் எமது மக்கள் மாநிலச் சுயாட்சி கோரி வந்தனர். ஆனால் அவர்களது கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் ஒப்பந்தங்களையும் உடன்பாடுகளையும் மீறிவந்தன. சமாதான வழியில் இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக சிங்கள அதிகார வர்க்கமானது ஈவிரக்கமற்ற இராணுவ அடக்குமுறைக் கொள்கையை கடைப்பிடித்துவருகிறது.

இந்த வரலாற்று சூழ்நிலையில் தான், அதாவது, அமைதி வழி தழுவிய சகல போராட்ட வடிவங்களும் தோல்விகண்ட தருணத்தில் தான் புரட்சிகர ஆயுதப் போராட்டம் எழுபதுகளின் ஆரம்பத்தில் தோற்றம் கொண்டது. விடுதலைப் புலிகள் இயக்கமே இந்த ஆயுதப் போராட்டத்தின் முன்னோடியாக திகழ்ந்தது. காலக்கிரமத்தில் எமது இயக்கமே தமிழர் தேசியப் போராட்டத்தின் முன்னணிப் படையாக வளர்ச்சிபெற்றது. எமது ஆயுதப் போராட்டமே எமது மக்களின் சுதந்திர இலட்சியத்தை முன்னெடுத்து வருகிறது. எமது ஆயுதப் போராட்டமே சிங்கள அரசுக்கு பெரும் சவாலாக எழுந்திருப்பதுடன், தமிழர் பிரச்சினையை சர்வதேச அரங்கில் பிரபல்யம் அடையவும் செய்துள்ளது.

கேள்வி: சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த குருமாரும் இனப்பிரச்சினையில் எத்தகைய பங்கு வகித்தார்கள் எனக் கருதுகிறீர்கள்?

பதில்: இந்தத் தேசியநெருக்கடியை உருவாக்கம் பெறச் செய்ததில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் பௌத்த குருமாருக்கும் முக்கியமாக பங்குண்டு. அரசியல் அதிகாரம்பெறும் ஒரே நோக்கத்திற்காக அரசியல்வாதிகள் சிங்கள மக்கள் மத்தியில் இனத்துவேச விதைகளை விதைத்தார்கள். பௌத்த குருமார் பேரினவாதத்தையும் மதவெறியையும் தூண்டிவிட்டார்கள். சிங்கள பௌத்த பேரினவாதச் சித்தாந்தமானது ஒரு பாரிய சக்தியாக சிங்கள மக்களைப் பற்றிக்கொண்டது. இதனால் தமிழர் விரோத அரசியல் வளர்ந்து இன்றைய இனப் பிரச்சினைக்கு மூல காரணியாக அமைந்தது.

கேள்வி: இன்றைய நெருக்கடி நிலை யாருடைய நலன்களைப் பேணுவதாக அமைகிறது என நினைக்கிறீர்கள்?

பதில்: இன்றைய நெருக்கடி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளதும், சிங்கள தரகு முதலாளித்துவ வர்க்கத்தினதும் நலன்களைமட்டுமே பேணுவதாக உள்ளது.

கேள்வி: எல்லாத் தமிழ் அமைப்புக்களுமே தமிழ் மக்களின் இலட்சியத்திற்காகப் போராடுகின்றன. அப்படியிருந்தும் இந்த அமைப்புக்கள் மத்தியில் பிளவுகளும் கருத்து முரண்பாடுகளும் நிலவுவதன் காரணம் என்ன? இந்த நிலைமையைச் சீரமைப்பதற்கு நீங்கள் என்ன யோசனை கூறுவீர்கள்?

பதில்: எல்லாத் தேசிய விடுதலைப் போராட்டங்களிலும் சித்தாந்த ரீதியில் கருத்து வேறுபாடுகள் நிலவுவது சர்வ சாதாரண விசயம். ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து ஓரளவிற்கு எமது நிலைமை சீரடைந்துள்ளது.

கேள்வி: உங்களுக்கும் உமாமகேஸ்வரனுக்கும் மத்தியில் பிளவு ஏற்பட்டதற்குக் காரணம் என்ன?

பதில்: இன்றைய அரசியல் சூழ்நிலையில் இவ் விவகாரம் குறித்து நான் எதையும் கூற விரும்பவில்லை. இன்று போராளி அமைப்புகள் மத்தியில் ஒற்றுமைப் பிரச்சினை என்பது முக்கிய விடயமாக மேலோங்கி நிற்கையில் பழைய விவகாரங்களைக் கிளறுவது புத்திசாலித்தனமாகாது.

கேள்வி: உங்கள் இருவருக்கும் மத்தியில் நிலவிய சித்தாந்த வேறுபாடுகள் தீர்ந்து விட்டதா?

பதில்: பழைய விடயங்கள் மீது இப்பொழுது பிரேத பரிசோதனை நடத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

கேள்வி: எதிர்காலத்தில் இந்த அமைப்பும் (உமாவின் அமைப்பு) ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டா?

பதில்: அந்த சாத்தியக்கூறு இல்லை என்று சொல்லமுடியாது.

கேள்வி: தமிழ் நாட்டில் உங்களது புகழ் மேலோங்குவதைக் கண்டு பயந்த எம். ஜி. ஆர்.; உமாமகேஸ்வரனுக்கு பகிரங்கமாக ஆதரவளிப்பதாக சொல்லப்படுகிறதே?

பதில்: உண்மையில், அப்படி எதுவும் நிகழவில்லை.

கேள்வி: தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்றதுமே தமிழ்ப் போராளிகளுக்கு வெறுப்பு ஏற்படுகிறதே எதற்காக? நீங்களும் அவர்களை சந்தர்ப்பவாதிகள் என குற்றம் சுமத்தியிருக்கிறீர்கள்.

பதில்: தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல்சந்தர்ப்பவாதம் என்பது சகலருக்கும் தெரிந்த விடயம். தமது சுயநல அரசியல் அபிலாசைகளுக்காக எமது மக்களை ஏமாற்றிவரும் பதவிவெறிபிடித்த அரசியல்வாதிகள் இவர்கள். தனித் தமிழ் அரசு அமைக்கப் போவதாகக்கூறி இவர்கள் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் எமது மக்களிடம் மனுப்பெற்றனர். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற இவர்கள் எதுவுமே செய்யவில்லை. அதேவேளை அற்ப சலுகைகளுக்காக இவர்கள் அரசுடன் பேச்சுக்களை நடத்துகிறார்கள். இந்த வகையில் இவர்களது அரசியல் நடவடிக்கைகளை துரோகத்தனம் என்றும் சந்தர்ப்பவாதம் என்றுமே நான் வர்ணிப்பேன்.

கேள்வி: தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் சிலர் தமிழ்ப் பேரினவாத உணர்வுகளை கிளறிவிட முயற்சிக்கிறார்கள். இவ்வாறு இவர்கள் பிரிவினைவாதத்தைத் தூண்டுவது உங்களது போராட்டத்தைப் பாதிக்கும் அல்லவா?

பதில்: நாம் அவர்களை இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. இலங்கையில் வதியும் தமது சகோதர்களின் அவலநிலை குறித்து தமிழ் நாட்டுத் தலைவர்கள் உண்மையாகவே கலக்கம் அடைகிறார்கள். சிங்கள இராணுவம் தமிழர்கள் மீது அட்டூழியங்கள் புரியும்போதெல்லாம் அவர்கள் மக்களை அணிதிரட்டி ஆட்சேபக்குரல் எழுப்புகிறார்கள். தமிழீழ மக்களின் இலட்சியப் போராட்டத்திற்கு தமிழ் நாட்டில் உணர்வுபூர்வமான பெரும் ஆதரவு பெருகி வருகிறது. ஈழத் தமிழ் மக்களை இனப் படுகொலையிலிருந்து காப்பாற்றி. அவர்களது பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா உதவவேண்டும் என தமிழ்நாட்டுத் தமிழர்கள் விரும்புகிறார்கள்.

கேள்வி: தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சி அளிப்பதாகவும், இந்தியாவில் போராளிகளுக்கு பயிற்சி முகாம்கள் இருப்பதாகவும் காலத்திற்கு காலம் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இந்த செய்திகளில் உண்மை எதுவும் இல்லை. எமக்கு இந்தியாவில் பயிற்சி முகாம்கள் எதுவுமில்லை. எமது மண்ணில் தான் எமது பயிற்சி முகாம்கள் அமைந்துள்ளன.

கேள்வி: தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காண்பதில் இந்தியா எத்தகைய பங்கை வகிக்கவேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

பதில்: உலகின் ஒடுக்கப்படும் சமூகங்களின் விடுதலைக்காக இந்திய மக்கள் குரல் கொடுத்துவருகிறார்கள். நீதிக்காகவும், மனித தர்மத்திற்காகவும் போராடும் ஒரு நீண்ட, மகத்தான பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் பாரத மக்கள். பாலஸ்தீன நமீபிய, தென் ஆபிரிக்க மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டங்களுக்கு இந்திய மக்கள் ஆதரவளித்து வந்திருக்கிறார்கள். சமீபத்தில்கூட பொலிசாரியோ விடுதலை இயக்கத்தை அங்கீகரித்திருக்கிறார்கள். தமது அயல் நாட்டில் நடைபெறும் ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு பாரத மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதிலும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கு அங்கீகாரம் வழங்குவார்கள் என்பதிலும் எனக்கு நம்பிக்கையுண்டு.

நன்றி: எனது மக்களின் விடுதலைக்காக நூல்.

 

https://thesakkatru.com/why-was-the-liberation-tigers-of-tamil-eelam-formed/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.