Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனவழிப்பு, நினைவேந்தல், உரிமை மறுப்பு 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவழிப்பு, நினைவேந்தல், உரிமை மறுப்பு 
==================================


சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றிகரமான  செயல்பாடுகளில் ஒன்று பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்திசையும் வகையில் சிறுபான்மை இனத்தவர்களில் இருந்து பலரை ஈர்த்து வைத்திருப்பதாகும். அந்த அடிப்படையில் தான் நாம் பல விடயங்களை  புரிந்து கொள்ள வேண்டும். அதுவே நாங்கள் சரியான முறையில் எதிர்வினையாற்ற வழி சமைக்கும்.

சம்பவம் ஒன்று: பேராசிரியர் சுரேன் ராகவன் இந்த வாரம் இலங்கைப் பாராளுமன்றில், கனடிய ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றில் உறுப்பினர் விஜய் தணிகாசலம் மே மாதம் தமிழர் இனவழிப்பு வாரம் அனுஷ்டிக்கும் பிரேரணையை கொண்டுவர முயற்சிப்பது தவறு, இலங்கையில் நடைபெறும் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும் என்கிறார்.
சம்பவம் இரண்டு: இரவோடிரவாக யாழ் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைத்து அகற்றப்படுகிறது. 

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன.
1. இரண்டுமே தமிழர்கள் மீதான இனவழிப்புத் தாக்குதல் தொடர்பானவை.
2. இரண்டிலுமே முன்னரங்கில் நிறுத்தப்பட்டவர்கள் தமிழர்கள்
3. இருவருமே பேராசிரியர் தரத்தில் உள்ள கல்விமான்கள்

ஆனால் இருவரும் இலங்கை அரசாங்கத்தின் அங்கம். ஒருவர் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் சென்றவர். மற்றவர் சனாதிபதியால் யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்டவர். இருவரின் செயற்பாடும் கருத்துரைகளும் அவர்கள் சார்ந்த அரச இயந்திரத்தின் அறிவுறுத்தல்களின்படியே அமையும் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் அவ்வாறே நடக்கச் சத்தியம் செய்தவர்கள்.

இந்த இரண்டு சம்பவங்களையும் இன்னுமொரு வகையிலும் பார்க்க வேண்டும். உண்மையில் விஜய் தணிகாசலம் இனவழிப்பு வாரம் ஒன்டாரியோவில் அனுஸ்டிக்கும் பிரேரணையை முன்வைத்தது கடந்த வருடம் மே மாதம். கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை புதிய பாராளுமன்றம் இயங்கத் தொடங்கிவிட்ட நிலையில் ஏன் சுரேன் ராகவன் இத்தனை மாதங்கள் கழித்து இந்த விடயத்தை கையில் எடுத்தார்? இலங்கைக்கு ஐ.நா. சபை கொடுத்தா நீட்டித்த காலக்கெடு இந்த வருடம் முடிவதற்கும் இதற்கும் தொடர்பிருக்கிறதா? சுரேன் ராகவன் குறித்த விடயத்தைப் பாராளுமன்றில் பேசிய மூன்றே நாட்களில் முள்ளிவாய்க்கால் நினைவு கட்டிடம் யாழில் உடைக்கப்பட்டது, முள்ளிவாய்க்கால் தொடர்பான சாட்சியமாக அது மாறிவிடக் கூடாது என்பதாலா? அல்லது இவை எல்லாம் எதேச்சையாக நடைபெற்றனவா? 

திங்கட் கிழமையிலிருந்து நேற்று வரை ஊடகங்களும் மக்களும் பேரா. சுரேன் ராகவனை துரோகியென்று, கோடரிக் காம்பென்றும் தூற்றிக் கொண்டிருந்தனர். நேற்றிலிருந்து அவருக்கு கொஞ்சம் ஒய்வு கொடுத்துவிட்டு பேரா. சற்குணராஜாவை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்கிறார்கள். சுரேன் ராகவனை திட்டியதைவிட இவர் மீதான தாக்குதல் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது.

தமிழர்கள் இவ்வாறு இயங்குவது இதுதான் முதல் தடவையல்ல. கடந்த காலங்களிலும் அரசோடு இயங்கும் தமிழர்களையும் தேசியத்தை கேள்விக்குட்படுத்தும் தமிழரையும் துரோகியென்றும் காட்டி கொடுத்தவன், கூட்டிக் கொடுத்தவன் என்றும் பட்டம் சூட்டித் தங்கள் இயலாமையை திருப்திப்படுத்தும் வேலையையே பலர் செய்து வந்திருக்கின்றனர்.

நாம் முதலில் சுரேன் இராகவனையும் அவரின் அரசியலையும்  புரிந்து கொள்ள வேண்டும். அதே போல யாழ்பல்கலைக்கழக துணை வேந்தரையும் புரிந்து கொள்ள முடியுமா என்பதை பல்முனை கேள்விகளை எழுப்பி சிந்திக்க  வேண்டும்.   

சுரேன் இராகவனை எந்த அடிப்படையில் துரோகி என புரிந்து  வைத்திருக்கிறார்கள்? சுரேன் இராகவன் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒத்த நிகழ்ச்சி நிரலாளர் என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்கள், சுரேன் இராகவனை தமிழர் என்கிற அடிப்படையில், துரோகி என  விளிக்கிறார்கள்.  வீட்டில் உள்ள ஒருவர் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த போது அவரையே துரோகி என்கிற எம்மினம், இனத்துக்கே துரோகம் செய்தவனை துரோகி என்றுதானே அழைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் வாதம்.

ஆனால் அவ்வாறு சரியாக ஆராயாது ஒருவரை துரோகியென்று விளிப்பதும், தாழ்த்தி எழுதுவதும்  மட்டும் எமக்கான விடிவைத் தந்துவிடாது. இவ்வாறான செயல்கள், எம்மையே விரக்திக்குள் தள்ளுவதுடன் ஒடுக்கப்படும் இனம் முன்னெடுக்க வேண்டிய எதிர்ப்பரசியலில் அந்த இனத்தின் அறிவார்ந்த வீச்செல்லையை  மலினப்படுத்தும் செயலன்றி வேறல்ல. 

எப்போது சுரேன் இராகவன் ஈழத் தமிழர்களோடு தோளோடு தோள் நின்று ஈழப்பிரச்சினையில் எம் மக்களிற்காக குரல் கொடுத்தார், இன்று அவர் மாறி நின்று எமக்கு துரோகம் செய்வதற்கு? இந்த ஒரு சாமானியக் கேள்வியை கூட மனதளவில் உய்த்தறிய முடியாதவர்கள் தமிழ்த்தேசியர்களாக வலம் வந்தால் தமிழ்த்தேசியம் எவ்வாறு தமது இனத்துவ விடுதலையை தகவமைத்துக் கொள்ளும்?

வடமாகாணத்திற்கு தமிழர் ஒருவர் ஆளுநராக வரவேண்டும் என்ற அழுத்தம் இருந்தபோது அரசு கண்டெடுத்த முத்துத்தான் இந்த சுரேன் ராகவன். அப்போதும் சரி (ஆளுனர்) இப்போதும் சரி (பா.உ) அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஒரு இலங்கையராக, அரசின் அங்கமாகத் திறம்படச் செய்கிறார். அதனை அரசியல் இராஜதந்திர வழிமுறைகளில்  முறியடிப்பது தான் எமது அறிவுடமை. மாறாக அவருக்கு துரோகிப்பட்டம் கொடுத்து தொங்கவிடுவது  அல்ல. அதனால் எதுவும் மாறிவிடப் போவதுமில்லை.

இப்போது  யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு துரோகிப்பட்டம் கட்டித் தொங்க விடப்படுகிறது. முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது, அவர் ஒரு அரச ஊழியர். சனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவர், அவருக்கு UGC அல்லது சனாதிபதி இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதுதான் கடமை. அவர் பதவி விலகியிருக்க வேண்டும் என்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் விலகியிருந்தாலும் அந்த நினைவுச் சின்னம் அகற்றப்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை. இன்று இரானுவத் தளபதியும் UGCயின் தலைவரும் தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பத்தமும் இல்லை என்று சொல்லுவதையும் ஒரு தந்திர அரசியலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

“நாம் அவரை நல்லது செய்வார் என்றும் நம்பினோம், இப்படித் துரோகம் செய்துவிட்டார்” என்று வருந்துவோரும் வைவோரும் ஒன்றை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவர் ஒன்றும் வடக்கிற்கு விடிவெள்ளியாக பதவியேற்கவில்லை. யாழ் பல்கலைக்கழகத்தின் தலைமை நிர்வாகி. அவ்வளவுதான். நீங்கள்தான் அவருக்கு உங்களுக்குப் பிடித்த வகையில் பட்டுக் குஞ்சம் கட்டி மகிழ்ந்தீர்கள். இதில் அவர் குற்றம் ஏதுமில்லை. 2019 February இல் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த நினைவுத் தூபியை அகற்ற முயன்ற அரசு அது முடியாத நிலையில்தான் முன்னர் இருந்தவரைத் தூக்கிவிட்டு இவரை உபவேந்தராகக் கொண்டு வந்தது என்று சொல்லப்படுவது உண்மையென்றால் அதன் பின்னணியில் இவரில் யாரும் கோபப்படுவதில் நியாயமில்லை. 

மேற் சொன்ன இரண்டு சம்பவங்களிலும் அரசு தந்திரமாகத் தான் செய்ய நினைப்பதை தமிழ் பேசுவோரை கருவிகளாக பயன்படுத்தி செய்து முடித்திருக்கிறது. இதில் அரசுக்கு மூன்று ஆதாயங்கள்.  ஒன்று, அரசு செய்ய நினைப்பதை தமிழரைக் கொண்டே செய்துவிடுகிறது. இரண்டு, இதன்போது தமிழர்களை முன்னிறுத்துவதால், இந்த அரசு தமிழருக்கு எதிரானது இல்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த முடியும். மூன்று, நிகழ்வின் பின்னர் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டு குறித்த தமிழரையே குறிவைத்துத் தாக்குவார்கள். அதனால் அரசின் மீதான கோபம் இலகுவாகத் திசை திருப்பப்படும். இதையேதான் கடந்தகால அரசுகளும் செய்து வந்திருக்கின்றன. நாமும் உணர்ச்சிவசப்பட்டு தமிழரையே குறிவைத்துத் தாக்கி வந்திருக்கிறோம். 

தமிழ் மக்கள் தொடர்ந்தும் எய்தவன் இருக்க அம்பைத்தான் நோகிறார்களே தவிர எய்தவன்மீதுதான் எப்போதும் எமது இலக்கு இருக்க வேண்டும் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள். நாம் இவ்வாறு தொடர்ந்தும் அடக்கு முறை அரசின்  பதவிசார் கட்டிப்பாட்டில் இருக்கும் தமிழர்களைத் துரோகி ஆக்குவது அறிவார்ந்த விடயமல்ல. தமிழ் மக்களை அடக்கியாளும் அரச இயந்திரத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய மக்கள் சக்தியை வீணடிக்காது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான இறந்தவரை நினைவுகூரலுக்குரிய உரிமைகளை அரச இயந்திரம் தடுப்பதை எதிர்த்து குரல் கொடுப்பதே இன்றுள்ள தேவை. 

அதேநேரத்தில், இந்தத் தூபி இறுதி யுத்த காலத்தில் இறந்த யாழ் பல்கலைக் கழக மாணவர்கள், அவர்களின் குடும்பத்தார் நினைவாகக் கட்டப்பட்டது என்ற வகையில்  உபவேந்தர் மாற்று நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்ற வாதத்தைப் புறந்தள்ள முடியாது. இந்த இடத்தில் சுரேன் ராகவன் உச்சரிக்கும் “நல்லிணக்கம்” பல்லிளிக்கிறது என்பதுதான் உண்மை. தன்னோடு உடன் படித்த சக மாணவர்களை நினைவுகூரும் உரிமையையே அரசு மறுக்கிறது என்றால் சுரேன் ராகவன் வலியுறுத்தும் நல்லிணக்கம் எது என்ற கேள்விதான் இன்று பூதாகரமாக எங்கள் முன் நிற்கிறது.

 

https://www.facebook.com/101881847986243/posts/251902726317487/?d=n

இணைப்புக்கு நன்றி கிருபன். சிறந்த கட்டுரை.உசுப்பேற்றலூடாக பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கும் கட்டுரைகள் மத்தியில் இப்படியான சிறந்த அறிவூட்டல் கட்டுரைகளும் வருவது மகிழ்ச்சி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினையும் எதிர்வினையும்
=====================

நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஸ்பம் சாத்தியே
முட்டு முட்டு முணுமுணென்று மந்திரங்கள் ஓதியும்....!

ஓ! மன்னிக்கவும். சொல்ல வந்ததை விட்டுவிட்டு மறந்து போய் சித்தர் பாடலில் ஆரம்பித்து விட்டேன். சரி விடயத்துக்கு வருவோம். ஒருவழியாக ஜனவரி 11ம் திகதி காலையில் உபவேந்தர் மாணவர்களின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்ததோடு பூசை செய்து இரண்டு கற்கள் வைத்து அடிக்கல்லும் நாட்டியுள்ளார். இனி......!?

இன்றும் நாளையும், மாணவர்கள் தமது உண்ணாநோன்பே வென்றதென்று மகிழக் கூடும். இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தாங்களே சாதித்ததாக மகிழவும் கூடும். கனடாவில் வாகனத்தில் புலிக்கொடி கட்டி ஊர்வலம் போனோர் தங்கள் செயலால் இலங்கை அரசு வெருண்டு விட்டது என்று மார்தட்டிக் கொள்ளவும் கூடும். தமிழக அரசியல்வாதிகளும் தங்கள் பங்கிற்கு, தங்களுக்குப் பயந்தே இலங்கை அரசு இறங்கி வந்ததாக மேடை போட்டுச் சொல்லக் கூடும்.

ஆனாலும் நான் சிறுவயதில் படித்த “பருத்தித்துறை ஊராம், பவளக்கொடி பேராம்” என்ற கதைப்பாடல்தான் இப்போது நினைவுக்கு வருகிறது. Moral of the story – கைக்கு வருமுன்னே நெய்க்கு விலை பேசேல். இந்த விடயத்தில் இந்தக் கதைதான் மிகப் பொருத்தமானது.

அடிக்கல் நாட்டும் முன்னர் உபவேந்தர் பொலிஸ் அதிகாரியிடம் பேசுவதைக் கவனித்தால் இலைமறையான சில விடயங்களைப் புரிந்து கொள்ளலாம். அவர் பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுகிறார்.
1. நான் UGCக்கு எழுதினேன். எனக்கு அரசிலிருந்து பிரச்சனையை சுமுகமாக கையாளும்படி  சொல்லப்பட்டுள்ளது.
2. தமிழ்நாட்டில் கன பிரச்சினை. இன்று சம்பத் இந்திய தூதரகத்துக்குப் போறார்.
3. முறையான அனுமதியுடன்தான் மீண்டும் தூபி கட்டப்படும்.
4. இன்று இந்தப் பிள்ளைகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதை அடையாளப்படுத்த மட்டுமே இரண்டு கற்கள் வைத்து அடிக்கல் நாட்டுவது மட்டுமே நடைபெறும்.

இதில் நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? 

உபவேந்தர் பொலிஸ் அதிகாரியுடன் பேசிய விடயங்களிலிருந்து நாங்கள் ஊகிக்கக்கூடியது, தற்போதைக்கு இந்தப் பிரச்சனையை தற்காலிகமாக தணிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த அழுத்தம் இந்தியாவிலிருந்து வந்துள்ளது. ஆனால் அதற்காக தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலங்கை அரசு பயந்துவிட்டதாக நினைத்து விடாதீர்கள். 

அழுத்தம் கொடுப்பது இந்திய மத்திய அரசு. மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதற்கு தமிழக அரசியல்வாதிகள்தான் காரணம் போல் தெரிந்தாலும் அவர்களால் தமிழக மக்கள் மத்தியில் இந்தத் தூபி தொடர்பாக தற்போதுள்ள கொதிநிலையே காரணம். இந்த வருடம் மே மாதம் இந்தியாவில் தேர்தல் வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு செல்வாக்கில்லை. இந்த தூபி விவகாரம் தமிழ்நாட்டில் சூடு பிடித்துள்ள நிலையில் பா.ஜ.க. கட்சி தற்போது ஆளும்கட்சியாக உள்ள அ.தி.மு.க. வுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால் அது மீண்டும் தமிழ்நாட்டில் மண் கெளவும் நிலையே ஏற்படும். அதைத் தவிர்க்கவே இந்தியா அவசர அவசரமாக இலங்கைமீது அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

அடுத்து, உபவேந்தர் தெளிவாகச் சொல்லுவது கேட்கிறது, “இன்று அடிக்கல் மட்டுமே நாட்டுகிறோம். பின்னர் முறையான அனுமதி பெற்றே தூபி கட்டப்படும்”. இங்கு நாம் சில விடயங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். முதலில் எதற்கெடுத்தாலும் உபவேந்தரின் மேல் பாய்வதை நிறுத்துங்கள். அவர் வெறும் பகடைக் காய் மட்டுமே. இரண்டாவதாக,  இந்த விடயத்தைத் தற்காலிகமாக தணிப்பதற்காகவே இந்த அடிக்கல் நாட்டுவிழா என்பதை நாம் தெளிவாகப் புரிந்த கொள்ள வேண்டும். இதற்கான அனுமதிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டதா அல்லது அரசு என்று அனுமதி வழங்கும் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

நாளை (அடுத்த வாரமோ, அடுத்த மாதமோ வருசமோ) மீண்டும் அனுமதி கொடுக்கப்படாவிட்டால் மீண்டும் ஒருமுறை உபவேந்தர் பலிக்கடா ஆக்கப்படக்கூடும். உடனே எமது ஊடகர்களும் அரசியவாதிகளும் அவரையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் கூடும். 

இங்கு முதலில் வினையாற்றிய இலங்கை அரசு அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய யாழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கோ தமிழ் அரசியல்வாதிகளுக்கோ பயந்துவிடவில்லை. தமிழகத்தில் எழுந்த எதிர்வினையால், இந்திய ஆளும் கட்சி கொடுத்த அழுத்தத்தாலேயே தற்காலிகமாக இந்த விடயத்தைத் தள்ளிப் போடும் வகையில் நடந்து கொள்கிறது. 

2009 இல் இதேபோல மே மாதம் தமிழகத்தில் நடைபெற இருந்த தேர்தலுக்கு முன்னர் இறுதி யுத்தத்தை துரிதப்படுத்தி முடிவுக்குக் கொண்டுவர இந்தியா அழுத்தம் கொடுத்தது. இன்று தேர்தல் முடியும்வரை இழுத்தடித்து நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கிறது. 

இந்த வகையில், மாணவர்களும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சரியான திசையில் எதிர்வினையாற்றவில்லை என்றால், நேற்று யாழ் வளாகத்தில்  நாட்டப்பட்டது அடிக்கல்லாக அல்ல, தூபிக்கு வைத்த முற்றுப்புள்ளியாகவே  நிலைத்துவிடும்.

நாம் எப்படி வினையாற்ற வேண்டும் அல்லது எதிர்வினையாற்ற வேண்டும்?

1. மாணவர்கள்
முதலில் இந்த விடயத்தில் யாழ் பல்கலைக் கழகத்தின் மாணவர் சமூகம் ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்ட வேண்டும். உங்கள் தற்காலிக வெற்றி நிரந்தர வெற்றியாக வாழ்த்துக்கள். ஆனால் நீங்கள் சரியான திசையில்தான் காய் நகர்த்துகிறீர்களா?

உங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வந்த அரசியல்வாதிகளும் சரி அறிக்கை விட்டவர்களும் சரி உணமையிலேயே உங்கள் உணர்வை மதித்துதான் ஆதரவு செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்க்குள் சிலர் நேர்மையாக உங்களுடன் நிற்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம் என்றபோதும், பலரும் இதனைத் தங்கள் அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்தவே முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 

தமிழகத்தில் மாணவர்கள், அரசியல்வாதிகளைத் கொஞ்சம் தள்ளி வைத்துப் போராடிய விடயங்களில்தான் வெற்றி பெற்றார்கள் என்பது வரலாறு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஒரு பாடம். நீங்களும் இந்த அரசியல்வாதிகளை அவர்கள் எங்கு போராடவேண்டுமோ அங்கு சென்று போராடச் சொல்லுங்கள். இதில் மட்டுமல்ல, பல்கலைக் கழகம் சார்ந்த வேறு விடயங்களிலும் அரசியல்வாதிகள் மூக்கை நுழைக்க அனுமதிக்காதீர்கள்.

மறுபுறத்தில் உங்கள் பல்கலைக் கழகத்தில் 5000 க்கு மேற்பட்ட சிங்கள மாணவர்கள் உங்களுடன் சேர்ந்து கல்வி கற்கும் நிலையில் எவ்வளவு தூரம் நீங்கள் அவர்களை இவ்வாறான விடயங்களில் உள்ளீர்த்தீர்கள்? உங்கள் கோரிக்கை நியாமானது என்று குரல் கொடுத்துள்ள Law Students Association of Sri Lanka இன் தலைவரான சஜினி விக்ரமசிங்கவின் குரல் உங்கள் காதுகளில் விழுந்ததா? நீங்கள் ஏன் கிழக்குத் தவிர்ந்த ஏனைய பல்கலைக் கழக மாணவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை?

இனியாவது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாது, எமது பிரச்சினையை உங்கள் மாணவர் அமைப்பூடாக சிங்கள, முஸ்லிம் மாணவர்களிடம் எடுத்துச் செல்லுங்கள். அவர்கள் புரிந்து கொள்வதோடு உங்களுக்குத் தோள் கொடுப்பார்கள். அனைத்துப் பலகலைக் கழக மாணவர்கள் அமைப்பை அணுகுங்கள். இதன்மூலம் தலைநகரிலும் தெற்கிலும் இந்த விடயத்தை எடுத்துச் செல்ல முடியும். முடிந்தால் ஏனைய பல்கலைக் கழகங்களிலும் போரின்போது இறந்த பொதுமக்களுக்கு நினைவுத் தூபி கட்டுவதற்கு முயற்சி எடுக்க அந்தப் பல்கலைக் கழக மாணவர் சங்கங்களோடு இணைந்து முயற்சியெடுங்கள்.
  
2. அரசியல்வாதிகள்
வடக்கு, கிழக்கின் அரசியல்வாதிகளான நீங்கள் மாணவர் போராட்டதிற்கு ஆதரவு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். உங்களில் பலர் போராட்டக் களத்திற்கு சென்று மாணவர்களுடன் கதைத்து விபரம் கேட்பதைக் காணொளிகளில் பார்க்க முடிந்தது. அதன்பின்னர் நீங்கள் விட்ட அறிக்கைகளைப் பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது, மகிழ்ச்சி!! 

ஆனால் இவ்வாறு போராட்ட களத்திற்கு சென்று விபரம் சேகரிப்பதும் பின்னர் அதை செய்தியாக்கி வெளியிடுவதும் ஊடகங்களின் வேலையல்லவா? நீங்கள் எதற்காக ஊடகங்களின் வேலையைச் செய்கிறீர்கள்? அதற்குத்தான் எம்மத்தியில் தேவைக்கு அதிகமான ஊடகங்கள் இருக்கின்றனவே?

இந்த விடயம் தொடர்பாக பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுத் தலைவர், இந்தத் தூபி வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு தடை என்கிறார். அமைச்சர் ஒருவர், பொதுமக்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகளை தமிழ் மாணவர்கள் நினைவு கூருகிறார்கள் என்று கூறுகிறார். இவற்றுக்கு நீங்கள் ஆற்றிய எதிர்வினை என்ன? நீங்கள் ஏன் கொழும்பில் சிங்கள, ஆங்கில பத்திரிகைகளை அழைத்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைச் செய்து உண்மையான விடயங்களைத் தெரிவிக்கவில்லை. எத்தனை வருடங்களுக்குத்தான் இந்த உப்புச் சப்பில்லா கடையடைப்பு என்ற கண்துடைப்பைச் செய்யப் போகிறீர்கள்? எப்போது தமிழ் மக்களின் பிரச்சனைகளை சாதாரண சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லப் போகிறீர்கள்?

ஏற்கனவே பலர் இதெல்லாம் வரும் மாகாண சபைத் தேர்தலைக் குறிவைத்து நீங்கள் செய்யும் சித்து வேலை என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இது பொய்யென்று நிரூபிக்க இது நல்ல சந்தர்ப்பம். சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள். உங்களால் ஏன் உங்கள் கட்சி அலுவலகங்களில் ஒரு நினைவுத் தூபி கட்ட முடியாது? அப்படிக் ஒவ்வொரு கட்சியும் தூபிகளைக் கட்டினால் அதை எப்படி அரசாங்கம் சட்ட விரோதக் கட்டிடம் என்று சொல்லி அகற்ற முடியும்? பாராளுமன்றில் இதைப்பற்றி பேசுங்கள். நினைவுத் தூபி அமைவதை உறுதி செய்யுங்கள். 

3. தமிழ் ஊடகங்கள் 
இன்று பல தமிழ் ஊடகங்கள் எவ்வாறான பங்களிப்பை இந்த சமூகத்திற்கு வழங்குகின்றன என்ற கேள்வியை ஊடகங்கள் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இன்று இருக்கின்றன. ஏனெனில் இந்த நினைவுத் தூபி விடயத்திலும் தமிழ் ஊடகங்கள் சரியான பாதையில் மக்களை வழிநடத்தத் தவறிவிட்டன என்பதுதான் கள யதார்த்தமாக இருக்கிறது. 

இவர்கள் கடந்த சில நாட்களாக வெளியிடும் செய்திகள் பெரும்பாலும் யாரோ ஒருவர் சொல்லும் விடயத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டும் உபவேந்தரை மட்டுமே மையப்புள்ளியாக வைத்துமே வெளியிடப்படும் செய்திகளாகவே இருக்கின்றன. உபவேந்தர் நல்லவரா கெட்டவரா என்ற பட்டிமன்றம் ஒன்று வைக்காதது மட்டும்தான் குறை. 

இந்த விடயத்தில் உபவேந்தர் ஒரு கருவி மட்டுமே, இன்னொரு வகையில் சொன்னால் அவர் ஒரு பகடைக்காய். உண்மையில் அரசுதான் பின்னாலிருந்து இதனைச் செய்கிறது.  ஊடகங்களில் உள்ள சிலருக்கு இந்த உண்மை தெரியாமலும் இல்லை. ஆனால், இப்படியான பரபரப்பான செய்திகளையே வெளியிடுவதன் மூலம் மக்களைத் திசை திருப்பி, அரசின் அபிலாசைகளை தங்களையறியாமலே இந்த ஊடகங்களே நிறைவு செய்கின்றன. 

சில ஊடகங்கள் தாம் சார்ந்த அரசியல் கட்சிகளின் ஊதுகுழலாக இருப்பதாலும் இவ்வாறான அரைகுறைச் செய்திகளை வெளியிட்டு மக்களைத் தொடர்ந்தும் ஒரு மாயைக்குள் வைத்திருக்கின்றன. அதேபோல சில ஊடகங்கள் தமது பிழைப்புக்காக, அரசின் தவறை நேரடியாக சுட்டிக்காட்டாது இளகிய இரும்பாகப் பார்த்து அடிக்கும் வேலையையே செய்கின்றன. 

இப்படியாக ஒரு சாதாரண மனிதன் சமூக வலைத் தளத்தில் எழுதுவதுபோல எழுதும் இந்த ஊடகங்களின் தேவையென்ன? இவ்வாறான நிகழ்வுகளின்போது  பிரச்சனையின் பல பக்கங்களையும் ஆராய்ந்து அந்தத் தரவுகள் மூலம் தமது கருத்தை காத்திரமாக வெளியிடுவதே எமது ஊடகங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். இனிவரும் நாட்களிலாவது ஊடகங்கள் தமது பொறுப்புணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புகிறோம். 

4. பொதுமக்கள் 
பொதுமக்களுக்கு நாம் பணிவுடன் சொல்ல விரும்புவது – இந்தக் குறளைத் திரும்பத் திரும்ப வாசியுங்கள். இந்தக் குறளின் பொருளுணர்ந்து வாசியுங்கள்.
“எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பதறிவு”

 

https://www.facebook.com/101881847986243/posts/252949492879477/?d=n

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.