Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் கிழக்கின் கரையோரப் பிரதேசங்கள்’ – மட்டு.நகரான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

‘அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் கிழக்கின் கரையோரப் பிரதேசங்கள்’ – மட்டு.நகரான்

June 18, 2021
Capture-15.jpg

 

வடகிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில், இலங்கையில் தொடர்ச்சியான அழிவுகளையும், இன்னல்களையும் எதிர்கொண்ட சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இழப்புகளையும், வேதனைகளையும், மீளமுடியாத துன்பங்களையும் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுகின்றனர்.

தமிழ் மக்களின் வாழ்க்கையில் இயற்கையும், செயற்கையான செயற்பாடுகளும் மாறிமாறி ஏற்படுத்தும் துன்பங்களை பேரினவாத அரசுகள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்ளும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புப் பிரதேசமாக மாறி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக நாங்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையிலும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் கிழக்கு மாகாண தமிழர்கள் எதிர்காலத்தில் பாரியளவிலான அத்துமீறல்களையும், நில அபகரிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும் நிலையெழுந்து வருகின்றது.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் மேய்ச்சல் தரை அபகரிப்பு, தொல்பொருள் பாகாப்பு என்ற போர்வையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு வரும் நிலையில், தற்போது தொழிற்பேட்டையென்ற பெயரில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழர் செயற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா பகுதியில் கடற்கரைப் பிரதேசங்களை அண்டியதாக சுமார் 150ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை அரசாங்கம் தொழில்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது.

Capture.JPG-1-5-300x225.jpg

சுமார் 5000பேர் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறும், பல்வேறு தொழில்துறைகளை உள்ளடக்கியதாகவும் இந்தத் தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இந்தத் தொழிற் பேட்டைக்குத் தேவையான வளங்களும், மனித வளங்களும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் மட்டும் பெற்றுக் கொள்ளப்படுமானால், அதனை வரவேற்க முடியும். ஆனால் இந்த வேலைத் திட்டம் தேசிய ரீதியான வேலைத் திட்டம் என்ற காரணத்தினால் எதிர்காலத்தில் இப்பகுதியில் சிங்கள மக்களை பாரியளவில் குடியேற்றுவதற்கான ஒரு திட்டமாகவும் கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால், யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மட்டக்களப்பு, கல்குடாப் பகுதியின் பாசிக்குடா பகுதியில் பெருமளவான தமிழர் நிலங்கள் சுற்றுலாத் துறைக்காக தென்பகுதி வர்த்தகர்களுக்கு ஹோட்டல்கள் அமைப்பதற்கு வழங்கப்பட்டன. அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளங்களையே பயன்படுத்த வேண்டும், மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு முழுமையாக வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பல்வேறு நிபந்தனைகளுடனேயே இவ்வாறு நிலங்கள் வழங்கப்பட்டன.

anilana-pasikuda.jpg

ஆனால் இன்று பாசிக்குடாவில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் சிங்களவர்களே கடமையாற்றும் நிலையுள்ளது. அத்துடன் ஹோட்டலுக்குத் தேவையான பொருட்களும் சிங்களப் பகுதிகளில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன. பாசிக்குடாப் பகுதியின் அனைத்து வளங்களையும் சிங்களவர்களே அனுபவிக்கும் நிலையில், தமிழர்களுக்கு அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாசிக்குடாக் கடற் கரையினை அண்டிய பகுதிகளில் சுமார் 100இற்கும் அதிகமான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. அத்துடன் அப்பகுதியில் பௌத்த பாடசாலையும், பௌத்த மதத்தலமும் அமைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இவை தொடர்பில் கதைப்பதற்கோ கேட்பதற்கோ யாரும் அற்ற நிலையே காணப்படுகின்றது.

கல்குடாப் பகுதியின் பாசிக்குடாப் பகுதியென்பது, தமிழர்களின் இயற்கையாக அமைந்த பொருளாதார கேந்திரத்துவமிக்க பகுதி ஆகும். இன்று அப்பகுதி பெரும்பான்மை இனத்தவர்களின் கேந்திர பூமியாக மாற்றமடைந்துள்ளது. அன்றைய காலத்தில் தமிழர்கள் முதலீடுகள் செய்ய அனுமதிக்கப்படாமல், முற்றுமுழுதாக சிங்களவர்களின் முதலீடாக ஹோட்டல்கள் நிரம்பிக் காணப்படுகின்றன.

இதேபோன்றதான ஒருநிலை ஏறாவூர்ப்பற்று பகுதியிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பது தமிழர்கள் மத்தியில் காணப்படும் கருத்தாகும். குறிப்பாக பல காலமாக ஏறாவூர்ப்பற்று மற்றும் வாகரை, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகள் சிங்களப் பேரினவாத அரசுகளினால் குறிவைக்கப்பட்ட நிலையினை காண முடிகின்றது.

குறிப்பாக வாகரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் சிங்கள வர்த்தகர்களுக்கு யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டன. அந்தக் காணிகள் இன்று வேலிகள் அடைக்கப்பட்டு, கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. சுமார் 100வருடங்கள் என்ற வகையில் குறித்த காணிகள் தொழில் முயற்சிகளுக்காக தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்தக் காணிகளில் சிங்களக் குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன.

Capture.JPG-2-3-300x176.jpg

ஏற்கனவே 2016ஆம் ஆண்டு வாகரை, ஏறாவூர் பற்று ஆகிய பகுதிகளில் யுத்தத்திற்குள் சிங்கள மக்கள் வாழ்ந்ததாக கூறி சுமார் 250 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அன்றைய அரசாங்கத்திலிருந்த சில சிங்கள கடும் போக்காளர்கள் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். எனினும் அன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், குறித்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்ததுடன், கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்ட போதிலும், அந்தத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன.

இதன் கீழ் மாங்கேணி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள காரமுனைப் பகுதியில் 178 குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டிருந்தன. யுத்தத்திற்கு முன்னர் குறித்த பகுதியில் சிங்களவர்கள் வாழ்ந்ததாகவும், மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் கூறியே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த கைவிடப்பட்ட நடவடிக்கையினை 2020ஆம் ஆண்டு கைப்பற்றிய கோத்தபாய ராஜபக்ஸவின் அரசாங்கத்தின் ஆளுநராக பொறுப்பேற்ற அனுராதா யாம்பட் தொடர்ந்த நிலையில், அதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது. இதனால் இது அடக்கி வாசிக்கப்படுகின்றது.

இதேபோன்று ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடாக் கடற்கரைப் பகுதியில் யுத்தத்திற்கு முன்பாக சிங்களவர்கள் வாழ்ந்ததாகத் தெரிவித்து, சிங்களவர்களை குடியேற்றும் முயற்சிகள் பல தடவைகள் முன்னெடுக்கப்பட்டன. நீர்கொழும்பு, சிலாபம், அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களைக் கொண்டு வந்து குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அதற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால், அவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே இன்று கிழக்கு மாகாணத்தினை ஆக்கிரமிக்கும் ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகத்துக்கு வடமேல் திசையில் எரிந்த ‘எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ சரக்குக் கப்பலின் தீயானது கிழக்குத் தமிழ் மக்களின் வயற்றிலும் தீயை மூட்டியுள்ளது.

இன்று தெற்குப் பகுதியில் உள்ள கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடித்து, தமது தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளதன் காரணமாக அவர்களின் பார்வையானது கிழக்கினை நோக்கித் திரும்புவதற்கான சமிக்ஞைகள் தெரியத் தொடங்கி விட்டன. இன்று கிழக்கின் கடற்பரப்புக்குள் பெருமளவு சிங்களவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வந்து மீன்பிடியில் ஈடுபடுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே சிங்களவர்களை மீனவர்கள் என்னும் போர்வையில் குடியேற்றங்களை செய்ய வேண்டும் என்று பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் இந்த சிங்களப் பேரிவாத அரசுகளுக்கு இன்றைய சூழ்நிலையினை பயன்படுத்தக் கூடிய சாத்திய நிலை அதிகளவில் காணப்படுகின்றது.

எதிர் காலத்தில் கிழக்கின் கரையோரப் பிரதேசங்கள் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளும் அச்சுறுத்தல்களுக்குள் செல்லும் நிலையிருக்கின்றது. தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையினையும் தங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்தி, திட்டமிட்ட வகையிலான ஆக்கிரமிப்பு நடவடிக்கை நிலையை விரைவுபடுத்தக் கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

தற்போது இந்த அரசாங்கத்திற்கு தெற்கில் உள்ள சரிவினை ஈடுசெய்வதற்கு இனவாதிகளை திருப்திப்படுத்த வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. இந்த நிலையில் தெற்கில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மூலம் தனது செல்வாக்கினை நிலைநிறுத்திக் கொள்வதற்கான செயற்பாட்டினை துரிதப்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்கப் போவதில்லை.

இவ்வாறான நிலையில் தமிழர் தரப்பு இவ்வாறான அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்தி, தமிழர் நிலத்தினை பாதுகாப்பதற்கு என்ன செய்யப் போகின்றது என்பது அடுத்த கேள்வியாகவுள்ளது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழர்களின் காணி அபகரிப்பு தொடர்பில் தொடர்ச்சியாக அதனை வைத்து அரசியல் செய்யும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, குறித்த விடயங்களைத் தடுப்பதற்கோ அல்லது அது தொடர்பில் தமிழ் மக்களை அறிவுறுத்தவோ எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இன்று பாராளுமன்றம் சென்றுள்ள தமிழ்த் தேசிய அரசியல் மக்கள் பிரதிநிதிகள் முகநூல்கள் ஊடாக நேரலை செய்தலும், தமிழ் மக்களுக்கு முக்கியத்துவமற்ற விடயங்களிலும் ஈடுபட்டு வருகின்றதை காணமுடிகின்றது. வெறுமனே தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருப்பதாக கூறும் இந்த தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், அந்த சர்வதேசத்திற்கு தமிழ் மக்களின் தற்போதைய பிரச்சினைகளை கொண்டு செல்வதற்கான எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்பதே உண்மையான விடயமாகும்.

இனிவரும் காலத்திலாவது தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இவ்வாறான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி, அது தொடர்பான சகல விடயங்களையும் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதன் மூலமே எதிர்காலத்தில் கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பினைக் காப்பற்ற முடியும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

https://www.ilakku.org/?p=52677

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.