Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதி மானுடர்கள் – சபரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதி மானுடர்கள் – சபரி

 

1987 யூலை 05ஆம் நாள் இரவு.

யாழ். நெல்லியடி மகா வித்தியாலயத்திலிருந்து பெரிய இடி முழக்கம் போன்றதொரு பேரதிர்வின் ஒலி கிளம்பிய போது, சுற்றிவர அமைந்திருந்த பல மைல்களுக்கு அப்பாலான பிரதேசங்களும் ஒரு தடவை அதிர்ந்து, குலுங்கி பின்னர் சம நிலைக்கு வந்தன. ஈழ விடுதலைப் போராட்டத்தின் புதிய சகாப்தம் ஒன்று உருவாகி விட்டதைக் கட்டியம் கூறிய அந்தப் பேரதிர்வின் சக்திமிக்க அதிர்வலைகள் உலக நாடுகளில் எல்லாம் தனது முத்திரையைப் பதித்த போது ஈடிணையற்ற உயிராயுதங்களின் பரிணாம வளர்ச்சியை வரலாறு பெருமையுடன் தன்னில் பதிவு செய்து கொண்டது.

உலகத் தமிழர் மத்தியிலும், உலக நாடுகளிலும் ‘மில்லர்’ என்ற மந்திர வார்த்தை தற்கொடையின் குறியீடாக வலம்வரத் தொடங்கியது.

unnamed-2.jpg?resize=696%2C302&ssl=11987 மே 26 யாழ்.வடமராட்சி மண்ணில் ‘ஒபரேஷன் லிபரேஷன்’ என்ற பெயரிட்டு, தமிழ் மக்கள் மீதான பாரிய இனப்படுகொலை நடவடிக்கையில் சிங்கள இராணுவம் இறங்கியது. தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டு இன்னும் பலர் இராணுவத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஏறத்தாழ பத்துத் தினங்கள் யூன் 04ஆம் நாள் வரை நீடித்த இந்த இன அழிப்பு வெற்றியின் இறுமாப்பில் மிதந்து கொண்டிருந்த சிங்கள அரசின் தலையில் யூலை 05ஆம் நாள் நெல்லியடி இராணுவ முகாம் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொடைத் தாக்குதல் சம்மட்டியாய் விழுந்து நிலை குலைய வைத்தது.

தனியொருவன் பெரும்படையணியாய் எழுந்து நிகழ்த்தி முடித்த அதிசயம் கண்டு, உலகத் தமிழினம் மட்டுமல்ல, உலக நாடுகள் அத்தனையுமே புருவம் உயர்த்தித் தமிழனுடைய வீரத்தை வியப்போடு நோக்கின.

இது புறநானூற்று வீரத்தின் புதிய பரிமாணமா என்றெண்ணும் வகையில், இந்தத் தற்கொடையாளர்களின் வீர சாதனைகள் தொடர்ந்து தமிழ் மண்ணில் அரங்கேறத் தொடங்கின.

தனது மண், தனது மக்கள், மண்ணுக்கான விடுதலை என்பவற்றால் தன்னைச் சுற்றிப் போட்டு வைத்திருந்த இறுக்கமான எல்லையைத் தாண்டி, குடும்பம், உறவுகள், இளமையின் இனிய வசந்தம் என்பவற்றில் ஒன்றைக்கூட ஒரு நொடிப் பொழுதிலேனும் உள்ளே வர அனுமதிக்காத கர்ம வீரர்களாக எங்கள் தேசத்தின் தற்கொடை வீரர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

ஒவ்வொரு தற்கொடையாளியினுடைய வாழ்க்கையும் மண் விடுதலைக்கான கடுந்தவம்.

lrg-634-kilinochi07.jpg?resize=696%2C469

ஆவி பிரியப் போகின்ற அடுத்த விநாடி பற்றிய அச்சம் இல்லாதவர்கள் அவர்கள். கிட்ட நெருங்க முடியாத இலக்கு என்றாலும், தொட்டு அணைத்து விடும் துணிச்சல் காரியான அந்தப் பெண், ஊமையாய் உறங்குகின்ற ஒரு பெரும் சரித்திரத்துக்கான புதிய அத்தியாய ஒன்றின் நாயகியாக இலக்கு நோக்கிய பயணத்தில் அடியெடுத்து நடக்கிறாள்.

தூரமும், நேரமும் நீண்டதொரு நடைபயணம் அது. தான் பிறந்த மண்ணாகிய வன்னிப் பெருநிலத்தின் சேமமடுவில் கால் பதித்த போது,

அமானுஷ்யமாய்க் கிடக்கிறது ஊர்.

நெஞ்சுக்குள் வலி.

“அம்மா…” நான் ஓடியாடி மண் அளைஞ்சு விளையாடிய இடம்…”

நடந்து கொண்டிருந்தவள் ஒரு இடம் வந்த போது அப்படியே நிற்கிறாள்.

“என்ன யாழினி, ஏதாவது பிரச்சினையா?” கூட வந்த தோழர் தோழியர் கேட்கிறார்கள்.

“இது தான் எங்கடை வீடு”

அவள் காட்டிய வீடு பாழடைந்து வெறிச்சோடிக் கிடந்தது.

அந்த வீடு மட்டுமல்ல… சேமமடுப் பிரதேசத்தின் பல வீடுகள் இப்படித்தான் தங்களுக்குரியவர்களைக் காணாமல் தவித்துக் கிடந்தன.

என்ன நினைத்துக் கொண்டாளோ?

சட்டைப் பையிலிருந்து ஒரு துண்டுக் கடதாசியும், பேனாவும் எடுத்து அவசரம் அவசரமாக எழுதினாள்.

“என்னருமை அம்மா.. நீங்களெல்லாம் திரும்பவும் எங்கடை வீடுகளிலை வந்து சந்தோசமாய் இருக்கப் போகும் நாள் தூரத்திலில்லை. அந்த நாள் வரும் போது வேப்ப மரத்துக் குருவிகள் என்னைத் தேடும்… நான் எங்கே என்று அவை உங்களிடம் கேட்கும்.

“அவள்… என்னருமை மகள்… தன் உயிர்ப் பூவைக் கிள்ளியெடுத்து மண்ணின் விடுதலைக்கு விலையாய்க் கொடுத்தாள்” என்ற சேதியை அதுகளிட்டைச் சொல்லி விடுங்கோ”

பெத்தவளுக்கு அவள்- அந்தத் தற்கொடை வீராங்கனை எழுதிய கடைசி வரிகள் இவை.

வீட்டுக்குள் ஓடி, திகதி கிழிக்கப்படாமல் இருந்த நாட்காட்டியில் கடிதத்தைச் சொருகி வைத்து விட்டு வந்தவளைத் தோழர்கள் வியப்போடு பார்த்தார்கள்.

தமிழின அழிப்பின் தொடர்ச்சியாய் 1997 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு என்னும் இராணுவ நடவடிக்கை வன்னி மண்ணில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நேரம் அது.

அன்று 10.06.1997

அதோ – அவள் நிலையெடுத்து விட்டாள்.

தமிழ் நிலத்தின் முதல் தரைத் தற்கொடையாளிப் பெண்ணாய்… எதிரியைத் துவம்சம் செய்யும் மகிஷாசுரமர்த்தினியாய் யாழினி!

கூடவே இரண்டு தற்கொடைத் தோழர்களும். பயங்கர வெடியதிர்வைத் தொடர்ந்து தீயின் செந்நிற நாக்கேன் வான் நோக்கிப் பாய்கின்றன.

சிங்கள தேசத்தின் ஆன்மா கலங்க…

சிங்களப் படைகளும் கூடவே அவர்களுடைய இறுமாப்பும் சிதைந்து தவிடுபொடியாகின.

தசைத் துண்டுகளாகிப் போன மூன்று தற்கொடைக் கண்மணிகளையும் தமிழனுடைய வீரத்தின் வேர்கள் என்ற பெருமையோடு சேமமடு மண் தன்னுடன் சேர்த்துக் கொண்டது.

unnamed-1-1.jpg?resize=696%2C236&ssl=1

எல்லாள மன்னன் கோலோச்சிய மண்ணில், நூற்றாண்டுகளின் சுழற்சியில் சிங்களத்தின் வான்படைத்தளம் அமைந்திருக்கிறது.

22.10.2007

அதே மண்ணில் அணி வகுத்து நிற்கிறது 21 தற்கொடை வீரர்களைக் கொண்ட ஒரு படையணி

எல்லாளன் படை!

உடல்களில் கட்டப்பட்ட வெடிமருந்துப் பொதிகள்..

கைகளில் ஏந்திய ஆயுதங்கள்… நெஞ்சங்களில் உறுதியும், வீரமும்..

நள்ளிரவு தாண்டிய நேரம்.

“இருபத்தொரு பேர் போறியள்.. சாதிப்பியள்…”

“நிச்சயம் சாதிப்பமண்ணை!”

அத்தனை வீரர்களின் மனங்களிலும் எதிரொலி செய்த அந்த மந்திரக் குரல் ஏற்படுத்திய எழுச்சியில் எல்லாளன் படை எழுதிக் கொண்டிருந்த வீர காவியத்தைப் பெருமையுடன் வரலாறு தன்னில் பதிவு செய்து கொண்டது. இந்த வரலாற்று சாதனையின் உச்சமாய், எரிந்து கொண்டிருந்த எதிரியின் விமானப்படைத் தளத்தில் தமிழருடைய தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது!

உலகமே வியந்து பார்த்த அந்தப் பெரு வெற்றியின் நாயகர்களாய் 21 தற்கொடை மைந்தர்கள் அந்தப் பூமியில் வித்தாகிப் போனார்கள்.

download-2.jpg?resize=696%2C381&ssl=1

இந்த வியத்தகு போர் வடிவத்தின் நெகிழ்ச்சி நிரம்பிய உச்சக்கட்ட பரிமாணமாய், சொந்த மண்ணைப் பிரிந்து சென்று அஞ்ஞாதவாசம் மேற்கொண்டு, சாதனை புரிந்தவர்களும் பலர். அவசியம் கருதி, ஊரும் பேரும் சொல்லாமலேயே கண்மூடிப் போன மனிதகுல திலகங்கள் இவர்கள் என்றால் மிகையல்ல.

இந்த அதி மானுடர்களின் பெயர் சொல்லிக் கைகூப்பித் தமிழன் வணங்கும் ஒரு தருணம் – தாயக விடுதலை –

தமிழனுக்கு எப்போது கைகூடப் போகிறது?

கைகூட வேண்டும். கைகூடும்.

 

 

https://www.ilakku.org/athi-manudar-sabari/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் கொடுத்து உயிர் காத்தோர்க்கான நினைவேந்தல்

 

ஈழமக்கள் தாயக வரலாற்றில் ஆடி மாதத்துக்கு ஒரு தனி இடமுண்டு. ஈழமக்களை அழிப்பதற்கான சிங்கள பௌத்த இனவெறித் தீ சிறீலங்காவால் 1983 ஆடி மாதத்தில் தான் அனைத்துலகச் சட்டங்களுக்கு அஞ்சாது மூட்டப்பட்டது.

இந்தச் சிங்கள பௌத்த இனவெறித் தீயிலிருந்து ஈழமக்களைக் காப்பதற்காக உயிர் கொடுத்து உயிர் காக்கும் விடுதலைப் பேரொளியும் இதே ஆடி மாதத்தில் தான் மில்லர் வரலாற்றால் 1987 இல் ஈழமண்ணில் எழுந்தது.

ஆம். சிறீலங்கா 1983 ஆடியைத் தனது ஈழத்தமிழின அழிப்புத் திட்டத்தின் வெள்ளிவிழா ஆண்டுக் கொண்டாட்டமாக மாற்றியது. இந்த ஆடித் தமிழின அழிப்புக் கலவரத்தால், சிறீலங்கா அரச படை பலத்துடன் சிங்களப் பயங்கரவாதிகள், ஆயிரக் கணக்கான தமிழர்களை இனப் படுகொலை செய்தனர். பல மில்லியன் டொலர் பெறுமதியான சொத்து இழப்புக்களையும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தினர். ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தப் பட்ட இந்த இனங் காணக் கூடிய அச்சத்தால்  ஆயிரக் கணக்கில் ஈழத் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறி, அரசியல் புகலிடம் கோரி, உலகெங்கும் பரந்து வாழும் அலைவு உலைவு வாழ்வையும் தொடக்கி வைத்தனர்.

சிறீலங்கா அரசாங்கப் படைபல ஆதரவுடனான சிங்களப் பயங்கரவாதிகள் இலங்கைத் தீவின் பல பகுதிகளிலும் வாழ்ந்த மக்களை இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அடித்து அனுப்பித் தமிழர்களின் தாயகம் இதுதானென எல்லை வரைவு செய்த இந்த வரலாற்று நிகழ்வானது, தமிழீழத் தாயகம் என்ற தேசம் ஒன்றின் இருப்பை உலகுக்குத் தெளிவு படுத்தியது. அதே வேளை தமிழர் தாயகத்தைப் பகை நாடொன்றைத் தாக்கி அழிப்பது போல் சிறீலங்கா முப்படைகளையும் கொண்டு தாக்கி அழிக்க முற்பட்டது. தன் ஆளணியும் படைப் பலமும் மிக அதிகமாக உள்ளது என்ற உணர்வில் ஒரு சிறிய மக்கள் கூட்டமான ஈழத்தமிழ் மக்களை அடிமைப்படுத்தி, ஆளுவது இலகு என்ற நோக்கிலேயே அப்பாவித் தமிழர்களுடைய உயிரையும், உடலையும், வீடுகளையும், சொத்துக்களையும், தொழில் முயற்சிகளையும்  விமானக் குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் வழி சிறீலங்கா அழிக்கத் தொடங்கியது.

இந்தச் சூழலில் எத்தனை பெரிய படைபலம் ஆனாலும் அதனைத் தம் இன்னுயிர்களையே ஈகம் செய்து தடுத்து வாழ வேண்டிய கட்டாயத்துள் ஈழத்தமிழ் இளைய சமுதாயம் சென்றது. இதுவே தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையிலான ஈழமக்களின் எழுச்சிக்குப் பக்கபலம் சேர்த்த மில்லரின் வரலாறாகவும், அங்கயற்கண்ணியின் வரலாறாகவும்  அவர்கள் வழிநடந்த முகம் தெரியாத, பெயர் தெரியாதவர்களின் வரலாறாகவும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவாகியது.

அறுபதுகளில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ‘உயிர் கொடுத்து உயிர் காக்கும் உத்தமர்க்கோர் ஆலயம்’ என்று பிறர் வாழத் தம் இன்னுயிரை ஈகம் செய்யும் உத்தமர் நினைவேந்தி வாழும் ஆலயங்களாக நன்றியுணர்வுள்ள மனித உள்ளங்களைக் கலைதத்துவ உலகில் வெளிப்படுத்தியது. இந்த தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் நினைவேந்தும் யூலை மாதம் 5ஆம் நாள் உயிர் கொடுத்து உயிர் காத்தோரைப் போற்றும் ஈழத்தமிழர் வரலாற்று நாளாகியது. அதே வேளை இந்த செய்நன்றி மறவா நினைவேந்தல், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தன்னலமற்ற செயற்பாடுகளை ஊக்கப்படுத்திச் செயற்பாட்டுச் சக்தி தரும் நாளாகவும் திகழ்கிறது.

தமிழர்களுடைய மரபில் தன்னுயிர் மேலான ஆசையை விடுத்துத் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் உள்ளம் தான் தவவாழ்வு என்பது வள்ளுவர் தரு விளக்கம்.

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய

மன்னுயி ரெல்லாந் தொழும்

இந்தத் தவ வாழ்வினையே வையத்தில் வாழ்வாங்கு வாழும் சிறப்புடைய வாழ்வெனப் போற்றும் வள்ளுவர் இதுவே மனிதனுக்குக் கடவுள் தன்மை அளிக்கும் சிறந்த இல்லறம் ஆகும் என இல்லறம் என்னும் இயலை

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

தெய்வத்துள் வைக்கப்படும்”

என நிறைவுசெய்துள்ளமையைக் காண்கின்றோம்.

மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தின்  திருச்சதகத்தில் இறைவனைப் பாடும் பாடலான

“வான் ஆகி! மண் ஆகி!  வளி ஆகி! ஒளி ஆகி!

ஊன் ஆகி! உயிர்ஆகி! உண்மையும் ஆய்! இன்மையும் ஆய்!

கோன் ஆகி! யான், எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு

வான் ஆகி நின்றாயை! என் சொல்லி வாழ்த்துவனே!

என்பதைப் படிக்கையில், முகந் தெரியாமல் பெயர் தெரியாமல் உயிர் கொடுத்து உயிர் காத்த உத்தமர்கள், வானாகவும், மண்ணாகவும், வளியாகவும், ஒளியாகவும் மாறி வாழும் உயிர்களின் ஊனாகவும், உயிராகவும் இருத்தல் கொண்டு வாழ்பவர்களுக்குச் சக்தி தரவல்ல கடவுள் தன்மை கொண்டவர்கள் என்பது தெளிவாகும். இதனாலேயே துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கு இறைவழிபாடு செய்வது போல உயிர் கொடுத்து உயிர் காத்தோர்க்கான நினைவேந்தல் வழிபாட்டுடன் ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதத்தைத் தொடங்குவது ஈழமக்கள் தங்கள் துன்பங்களை எல்லாம் மாற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும் என்பது இலக்கின் நம்பிக்கையாக உள்ளது.

 

 

https://www.ilakku.org/give-life-keep-alive/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.