Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிப்டோ கரன்சி ஹேக்கருக்கு ஜாக்பாட்: திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்ததற்காக பல கோடி ரூபாய் பரிசு - தண்டனையில் இருந்தும் விலக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரிப்டோ கரன்சி ஹேக்கருக்கு ஜாக்பாட்: திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்ததற்காக பல கோடி ரூபாய் பரிசு - தண்டனையில் இருந்தும் விலக்கு

13 ஆகஸ்ட் 2021, 14:34 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கிரிப்டோ

பட மூலாதாரம்,REUTERS

சுமார் 4.5 ஆயிரம் கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி பணத்தைத் திருடிவிட்டு அதில் சுமார் பாதியை திருப்பிக் கொடுத்த ஹேக்கருக்கு சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் வெகுமதியாக வழங்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யாமல் இருக்கும் வகையிலான உத்தரவாதமும் அளிக்கப்பட்டிருக்கிறது.

பணத்தைப் பறிகொடுத்த பாலி நெட்வொர்க் என்ற நிறுவனம் இந்தச் சலுகையை அறிவித்திருக்கிறது. மொத்தப் பணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்ற உறுதிக்குப் பிறகு இத்தகைய முடிவை பாலி நெட்வொர்க் எடுத்திருக்கிறது.

ஆனால் திருட்டு தொடர்பாக தண்டனை அளிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் எஃப்பிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

கிரிப்டோ கரன்சி திருடப்பட்டது குறித்து தொடர்புடைய ஹேக்கரிடம் உதவி கோரி பாலி நெட்வொர்க் நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பொதுவெளியில் கோரிக்கை விடுத்தது.

ஆன்லைனில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய திருட்டாக இது கருதப்படுகிறது. தங்களது அமைப்பில் மிகப்பெரிய பாதிப்பை அந்த ஹேக்கர் ஏற்படுத்திவிட்டதாக பாலி நெட்வொர்க் கூறியது.

ஏற்கெனவே பெரும்பகுதி பணத்தை ஹேக்கர் திருப்பியளித்து விட்டார். தனக்கு வெகுமதியைப் பெறுவதில் நாட்டமில்லை எனவும் அவர் அறிவித்துவிட்டார்.

பாலி நெட்வொர்க் என்பது பிளாக் செயின் தளங்களுள் ஒன்று. கிரிப்டோ கரன்சி வைத்திருப்போர் அவற்றைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதற்காக இந்தத் தளங்கள் பயன்படுகின்றனர்.

பாலி நெட்வொர்க்கில் ஹேக்கிங் கொள்ளை நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த நிறுவனத்தை கேலி செய்யும் வகையிலான குறிப்புகளை அவர்களது இணையதளத்திலேயே வெளியிட்டார்.

பின்னர் தனக்குப் பணத்தில் ஆர்வமில்லை எனவும் அதைத் திருப்பியளிப்பதாகவும் உறுதியளித்தார்.

கிரிப்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹேக்கரின் வசம் உள்ள மீதமுள்ள கிரிப்டோ கரன்சி பணமும் ஹேக்கர் மற்றும் நிறுவனத்தால் கையாளும் வகையிலான புதிய டிஜிட்டல் வாலட்டுக்கு பரிமாற்றம் செய்யப்படும் என பாலி நெட்வொர்க் அறிவித்துள்ளது.

திருப்பிச் செலுத்தப்படும் நடைமுறை முடிவடைவதற்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் பாலிநெட்வொர்க், இன்னும் ஹேக்கருடன் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட கிரிப்டோ நாணங்களில் ஒரு பகுதி பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சிறிது நேரத்துக்குள்ளாகவே முடக்கப்பட்டு விட்டது. அதனால் அதை ஹேக்கரும் பயன்படுத்த முடியாது.

"கொள்ளையடிக்கப்பட்ட நாணயங்களில் சுமார் 220 கோடி ரூபாய் அளவுக்கான டோக்கன்களை இன்னும் ஹேக்கர் வைத்திருக்கிறார். ஆனால் அவை முடக்கப்பட்டுவிட்டன" என்று லண்டனை தளமாகக் கொண்ட பிளாக்செயின் ஆய்வு நிறுவனமான எலிப்டிக்கின் இணை நிறுவனர் டாம் ராபின்சன் பிபிசியிடம் கூறினார்.

"சில ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ள வேறு பல டோக்கன்கள் ஹேக்கரின் வசம் இருப்பதை பிளாக் செயின் குறிப்புகளில் காணலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் இவையெல்லாம் கொள்ளையடிக்கப்பட்ட கிரிப்டோ கரன்சியின் ஒரு பகுதியா அல்லது பணத்தைத் திருப்பிக் கொடுத்ததற்காக மக்கள் அவருக்கு வழங்கிய நன்கொடையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வேடிக்கைக்காகவும், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பாலி நெட்வொர்க்கின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அறிவுறுத்துவதற்காகவும் இதைச் செய்திருப்பதாக மூன்று பக்கங்களைக் கொண்ட தனது கேள்வி பதில் விளக்கத்தில் ஹேக்கர் குறிப்பிட்டுள்ளார்.

தண்டனையில் இருந்து விலக்கு கிடைக்குமா?

ஹேக்கரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட பாலி நெட்வொர்க் நிறுவனம் அவரை "மிஸ்டர் ஒயிட் ஹாட்" என்று குறிப்பிட்டது.

ஒயிட் ஹேட் அல்லது வெள்ளை தொப்பி ஹேக்கர்கள் என்பவர்கள் நெறிமுறை கொண்ட பாதுகாப்பு ஆய்வாளர்கள். அமைப்பில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிய அவர்கள் நிறுவனங்களுக்கு உதவுவார்கள்.

"உங்கள் நடவடிக்கை வெள்ளை தொப்பி ஹேக்கரின் நடத்தை என்று நாங்கள் நம்புகிறோம், நாங்கள் உங்களுக்கு 500,000 டாலர்கள் வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்" என்று ஹேக்கருக்கு உறுதியளித்திருப்பதை பாலி நெட்வொர்க் நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

"இந்தக் கொள்ளைக்கு உங்களைப் பொறுப்பாக்க மாட்டோம்" என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் பாலி நெட்வொர்க் நிறுவனத்தின் இத்தகைய சலுகை சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்புரியும் ஹேக்கர்கள் தங்களது செயலை நியாயப் படுத்துவதற்கான முன்னுதாரணமாக இது அமைந்துவிடும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

"இந்தக் கொள்ளையை வெள்ளைத் தொப்பி ஹேக்கிங் என்று கூறுவது எமாற்றமளிக்கிறது" என வெள்ளை தொப்பி ஹேக்கரும் மான்செஸ்டர் பல்கலைக்கழக விரிவுரையாளருமான கேத்தி பாக்ஸ்டன்-ஃபியர் கூறுகிறார்.

கிரிப்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க பாதுகாப்புத் துறை முதல் வெரிசோன் மீடியா வரையிலான நிறுவனங்களில் 30 க்கும் மேற்பட்ட குறைபாடுகளைக் கண்டறிந்தவர் கேத்தி

"குற்றச்சாட்டில் இருந்து விலக்களிக்க அதிகாரம் இல்லை"

"வெள்ளை தொப்பி ஹேக்கிங் என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டிருப்பது. சில அம்சங்களில் அது தலையிடாது. குழுவுடன் பணிபுரிதல், கண்டறிந்தவற்றை அறிக்கைகளாக எழுதுதல் ஆகிய எல்லைக்குள் இது இருக்க வேண்டும். அதைத் தாண்டி மேலே சென்றுவிடக் கூடாது." என்று கேத்தி கூறினார்.

"யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதே என்பதுதான் எங்களது அணுகுமுறை" என்கிறார் அவர்.

முன்னாள் எஃப்.பி.ஐ அதிகாரியான சார்லி ஸ்டீலும் ஹேக்கருக்கு பாலி நெட்வொர்க் தரும் சலுகை குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்.

"தனியார் நிறுவனங்களுக்கு கிரிமினல் வழக்குகளில் இருந்து விலக்கு தருவதாக உறுதியளிக்க அதிகாரம் இல்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"இந்தக் கொள்ளையில் ஒரு ஹேக்கர் 600 மில்லியன் டாலரை 'வேடிக்கைக்காக' திருடிவிட்டு பின்னர் அதில் பெரும்பகுதியை திருப்பி அனுப்பியிருக்கிறார். இவையெல்லாம் அவர் அனாமதேயமாக இருந்து கொண்டே நடத்தியிருக்கிறார். இது கிரிப்டோ-நாணயங்களால் ஏற்படும் பல்வேறு அபாயங்கள் குறித்த கவலையை குறைக்க வாய்ப்பில்லை" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கிரிப்டோகரன்சி என்பது என்ன?

கிரிப்டோகரன்சி என்பது என்பது டிஜிட்டல் பணம். ரூபாய்த் தாள்களைப் போலவோ, உலோக நாணயங்களைப் போலவோ அவற்றை நமது பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ள முடியாது. அது இருப்பது இன்டெர்நெட்டில். வர்த்தகம் செய்வதும் இன்டர்நெட்டில்தான்.

கிரிப்டோகரன்சி எந்த நாட்டு அரசாலோ, ஒழுங்குமுறை அமைப்பாலோ கிரிப்டோகரன்சிகள் வெளியிடப்படவில்லை.

ஆன்லைன் மோசடிகள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் பற்றிய தனது அச்சத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது.

முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சிகளையும் அதைப் பயன்படுத்தும் அமைப்புகளையும் தடை செய்தது.

கிரிப்டோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம் "இது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும் சட்டத்தை உருவாக்கவும்" உத்தரவிட்டது.

பின்பு இந்தியாவுக்கென தனியாக கிரிப்டோகரன்சியை வெளியிடலாமா என்பது குறித்தும், அது எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியது ரிசர்வ் வங்கி. அரசின் முடிவில் இது முக்கியமானது. இந்திய நாணய முறையின் எதிர்காலம் பற்றியது.

இந்தியாவில் எவ்வளவு கிரிப்டோகரன்சிகள் வாங்கப்பட்டிருக்கின்றன என தரவுகள் இல்லாவிட்டாலும், பல லட்சக் கணக்கானோர் டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/global-58203996

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தடுத்து நடக்கும் தொடர்ந்த க்ரிப்டோ-ஹேக்கில் உண்மையாக பாதிக்கப்படுபவர்கள் யார்?

  • ஜோ டைடி
  • சைபர் பிரிவு
4 மணி நேரங்களுக்கு முன்னர்
மனிதர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாக்ஸி ஓட்டுநர் க்ரிஸ் திரும்பத் திரும்ப அலைபேசியைத் திறந்து பார்க்கிறார்.

"2500 யூரோ மதிப்புள்ள க்ரிப்டோ கரன்சி காயின்கள் வைத்திருந்தேன். அவை எல்லாம் போய்விடும்போல இருக்கிறதே" என்று புலம்புகிறார். ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு க்ரிப்டோ பயனாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். சென்றவாரம் லிக்விட் க்ளோபல் என்ற க்ரிப்டோகரன்சி பரிமாற்ற மையம் ஹேக் செய்யப்பட்டதில் க்ரிஸ் உட்பட பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நூறு மில்லியன் டாலர் ஹேக்கிங் தாக்குதலில் பணத்தை இழந்த எல்லாருக்கும் இழந்த பணம் திருப்பித் தரப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கையில் பணம் வரும்வரை பெரும்பாலான நுகர்வோர் கவலையில்தான் இருப்பார்கள்.

தனது பழைய வோக்ஸ்வேகன் காரில் பயணிகளை ஏற்றிச் செல்லும்போதெல்லாம், 38 வயதான க்ரிஸ் இதை நினைத்து பயப்படுகிறார். "இந்தக் காரின் வயது 20. க்ரிப்டோகரன்சியில் பணத்தைப் போடாமல் இருந்திருந்தால் நான் ஒரு புது காரையே வாங்கியிருப்பேன். இது என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் இது பெரிய இழப்புதான். இந்தக் காசை மறுபடியும் சேர்க்க ஒரு வருடமாகும்" என்கிறார்.

"அதீதமான பதற்றத்தில் இருக்கிறேன்"

இந்தோனேசியாவைச் சேர்ந்த 27 வயது டீனா அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார். "ஹேக்கர்களை நினைத்தால் ஆத்திரமாக இருக்கிறது. என்னை நினைத்தால் பதற்றம் வருகிறது. 30,000 டாலர்கள் இதில் போட்டிருக்கிறேன். வாழ்வதற்கு அந்தப் பணம் தேவை. நான் ஒரு சாதாரணக் குடும்பத் தலைவி. க்ரிப்டோ மூலம் கொஞ்சம் பணம் சேர்க்க நினைத்தேன்" என்கிறார்.

 

இன்னொருபுறம் 42 வயதான நார்வே மருத்துவர் ஒருவர், தனது வாழ்நாள் சேமிப்பே கரைந்துவிட்டது என்கிறார். "கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த பொக்கிஷம் இது. என்னால் எதிலும் கவனம் செலுத்தவே முடியவில்லை. 9,69,000 யூரோக்கள் வைத்திருந்தேன். அதீத பதற்றத்தில் இருக்கிறேன். கிட்டத்தட்ட 8/10 பதற்றம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். கவலையாக இருக்கிறது. எப்போதும் இதைப் பற்றியே நினைக்கிறேன்" என்கிறார்.

பிட்காயின்

பட மூலாதாரம்,REUTERS

பதற்றமடையும் பெற்றோர்கள்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸின் பெற்றோர்கள் மிகவும் பதற்றத்தில் இருக்கிறார்கள். பரிவர்த்தனைகளை அந்த நிறுவனம் நிறுத்துவதற்கு முன்பு அவர்கள் வேகமாக பணத்தைத் திரும்ப எடுத்ததில் நஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

"அப்பா அம்மா இருவருமாக சேர்ந்து 70,000 டாலர் மதிப்பிலான ஒரு பிட்காயினை வைத்திருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது பெரிய தொகை. முதலில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பீதியில் அவர்கள் அதை விற்கவேண்டி வந்தது. 10000 டாலர் நஷ்டமாகிவிட்டது. நிறைய மன உளைச்சல் ஏற்பட்டது" என்கிறார் ஜேம்ஸ்.

சென்றவாரம் லிக்விட் க்ளோபல் ஹேக் செய்யப்பட்டது. பணம் மீட்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.

ஜப்பானைச் சேர்ந்த லிக்விட் க்ளோபல் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்துவருவதாகவும் இதனால் பயனாளிகளுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது என்று உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஹேக்கிங் பற்றி நேரடியாகத் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், ஒருவேளை கம்பெனியின் ட்விட்டர் பக்கத்தையோ செய்தியையோ பார்த்திருக்காவிட்டால் தங்களுக்கு எதுவும் தெரிந்திருக்காது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

பரிமாற்ற நிறுவனங்கள் பாதுகாப்பானவையா?

லிக்விட் க்ளோபல் போன்ற நிறுவனங்கள் க்ரிப்டோகரன்சி உலகில் முக்கியமானவை. பிட்காயின், எதரியம் உள்ளிட்ட டிஜிட்டல் காசுகளை விற்கவும் வாங்கவும் அவை உதவுகின்றன. தங்கள் காசுகளைப் பாதுகாக்கவும் ப்யனர்கள் இந்த நிறுவனங்களையே நாடுகின்றனர். ஆனால் இந்த நிறுவனங்கள் பாதுகாப்பானவையா என்பது கேள்விக்குறிதான்.

இந்த மாதத் தொடக்கத்தில் பாலி நெட்வொர்க் என்கிற க்ரிப்டோ தளமும் ஹேக் செய்யப்பட்டதில் 610 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. 2014லிருந்து இன்றுவரை டஜனுக்கும் மேற்பட்ட ஹேக்கிங் நிகழ்வுகளில் 1.6 பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய க்ரிப்டோகரன்சி ஹேக்கிங் நிகழ்வுகள்

· பிட்க்ரெயில்: இத்தாலியைச் சேர்ந்த இந்த நிறுவனம் 2018ல் ஹேக் செய்யப்பட்டது. 146 மில்லியன் டாலர்கள் தொகையை 2,30,000 பயனாளர்கள் இழந்தார்கள்.

· குகாயின்: சிஷெல்ஸைச் சேர்ந்த இந்த பரிமாற்ற நிறுவனத்தை வடகொரியாவைச் சேர்ந்தவர்கள் ஹேக் செய்ததாக சொல்லப்படுகிறது. 2020ல் நடந்த இந்த நிகழ்வில் 281 மில்லியன் டாலர்கள் திருடப்பட்டன. பெரும்பாலான அளவில் பணம் மீட்கப்பட்டு நுகர்வோருக்கு அளிக்கப்பட்டது.

· எம்டிகாக்ஸ்: இந்த ஜப்பானிய நிறுவனம் 2014ல் ஹேக் செய்யப்பட்டதில் 450 டாலர் நஷ்டம் ஏற்பட்டது. இன்னும் இழந்தவர்களின் பணம் திரும்ப வரவில்லை.

· காயின்செக்: ஜப்பானிய நிறுவனமான காயின்செக் 2018ல் ஹேக் செய்யப்பட்டது. 534 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. நுகர்வோருக்கு நிறுவனம் பணத்தைத் திரும்பக் கொடுத்தது.

· பாலி நெட்வொர்க்: இந்த சீன நிறுவனம் இந்த மாதம் ஹேக் செய்யப்பட்டதில் 610 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. ஹேக்கர் பணத்தைத் திரும்பத் தந்தால் இப்போது நுகர்வோருக்குப் பணம் திரும்பத் தரப்படுகிறது.

நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஹேக்கிங் நிகழ்வுகள் மாதம் ஒருமுறை நடக்கின்றன. இந்தத் தளங்கள் எந்த விதிமுறைக்கும் உட்படுவதில்லை என்பதால், நுகர்வோருக்குப் பணம் திரும்பக் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

பிட்காயின் வரைப்படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"முடிவெட்டிக் கொள்ளுதல்"

சில நேரம் நுகர்வோருக்குப் பாதிப்பணம் மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. இது "taking a hair cut" என்று அழைக்கப்படுகிறது. "அப்படி எதுவும் நடக்காது" என்று லிக்விட் க்ளோபலின் இயக்குநர் செத் மெலாமெட் தனது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நிதி விமர்சகர் ஃப்ராசெஸ் கொப்போலா, இதுபோன்ற பாதுகாப்புப் பிரச்சனைகளிலிருந்து இந்த நிறுவனங்கள் பாடம் கற்றுக்கொள்ள நீண்ட காலம் எடுத்துக்கொள்கின்றன என்று குற்றம் சாட்டுகிறார். "வழக்கமான வங்கிகள் மிகவும் சரியாகப் பாதுகாப்பைக் கையாளுகின்றன. அங்கு பாதுகாப்பு பற்றிய விதிமுறைகளும் அதிகம். இன்னும் சொல்லப்போனால் வங்கிகளிலும் தொடர்ந்து ஹேக்கிங் நடக்கிறது. ஆனால் அங்கு தீவிர பாதுகாப்பு இருப்பதால் அது யாரையும் பாதிப்பதில்லை. தவிர, பயனாளர்களுக்குப் பணத்தைத் திரும்பித்தர்வேண்டிய கட்டாயம் வங்கிகளுக்கு உண்டு. க்ரிப்டோ கரன்சி நிறுவனங்களுக்கு அது கிடையாது. பொதுவான வங்கி அமைப்புகளில் தனிப்பட்ட பயனாளர்கள் ஹேக் செய்யப்படவே வாய்ப்புகள் அதிகம், அதனால் நஷ்டமும் ஏற்படுகிறது" என்று விளக்கம் தருகிறார்.

வங்கிகளில் நடக்கும் ஹேக்கிங்

பெரிய வங்கிகளில் பணிபுரிந்துவிட்டு இப்போது அல்லையன்ஸ் ப்ளாக் என்ற க்ரிப்டோ தளத்தின் நிறுவனராக இருக்கும் முனைவர் ஆம்பர் காட்டர், வங்கிகளிலும் பெரிய ஹேக்கிங் திருட்டுகள் நடந்திருக்கின்றன என்கிறார்.

"2016ல் 81 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்திய வங்கதேச ஹேக்கிங், 2017ல் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஹேக் செய்யப்பட்டபோது ஹேக்கர்கள் 171 மில்லியன் டாலர்களைத் திருடிய நிகழ்வு என்று பல உதாரணங்கள் உண்டு" என்கிறார். யூனியன் வங்கியின் பணம் மீட்கப்பட்டது. இரு நிகழ்வுகளிலும் நுகர்வோருக்கு இழப்பு ஏற்படவில்லை.

"க்ரிப்டோ ஒரு புதிய துறை, வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அதன் அறிகுறிதான் இந்த ஹேக்கிங் நிகழ்வுகள் எல்லாமே. இந்தத் தளங்கள் ஓப்பன் சோர்ஸ் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்டவை. ஓப்பன்சோர்ஸ் இருந்தால் ஒரு சமூகத்தின் மொத்த அறிவையும் பயன்படுத்தி மென்பொருளை மேம்படுத்த முடியும். அது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அந்த கோடிங்கில் எதாவது ஒரு சின்ன ஓட்டை இருந்தால் அதையும் ஒரு புத்திசாலி ஹேக்கரால் கண்டுபிடித்து உள்ளே நிழைந்துவிட முடியும்" என்கிறார்.

விதிமுறைகளை அதிகப்படுத்துவதன்மூலம் இவற்றைத் தவிர்க்கலாம் என்று இவர் நம்புகிறார்.

"நாம் சரியாக இதை ஆராயவேண்டும், பரிசோதனை செய்யவேண்டும். எல்லாரும் பயன்படுத்தும்விதமாக க்ரிப்டோ கரன்சி வளரவேண்டும் என்றால் சந்தையில் அது நிற்கவேண்டும், தரம் வேண்டும்" என்கிறார்.

ஹேக்கிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

க்ரிப்டோ குழப்பங்கள்

இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் தவிர வேறு சில பிரச்சனைகளாலும் பல ஆண்டுகளாகவே முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆஃப்ரிக்ரிப்ட் என்ற பரிமாற்ற நிறுவனத்தின் நிறுவனர்கள் இந்த வருடத் தொடக்கத்தில் தலைமறைவானார்கள். அதனால் எத்தனை மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை இன்றுவரை முதலீட்டாளர்கள் கணக்கிட்டுவருகிறார்கள்.

கனடாவின் க்வாட்ரிகா சி.எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் 2019ல் இறந்தார். அவரது இறப்பின்போது 135 டாலர் மதிப்புள்ள காசுகள் கணக்கு வைக்கப்படாமல் இருந்தன. அதற்கான நஷ்டஈடு கேட்டு முதலீட்டாளர்கள் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரமிடு திட்டங்கள் மற்றும் பிற மோசடிகளால் வழக்கமான நிதி அமைப்புகளிலும் பெரிய அளவில் மோசடி நடப்பது இயல்புதான். அது க்ரிப்டோகரன்சி இழப்பை விடக் கூடுதலாகக் கூட இருக்கலாம்.

காணொளிக் குறிப்பு,

பிட்காயின் மதிப்பு கிடுகிடு உயர்வு: அமேசானுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

வேகமாக வளர்ந்தாலும் ஒப்பீட்டளவில் க்ரிப்டோ உலகம் சிறியது. அந்தத் துறை முழுக்கவே பாதுகாப்புப் பிரச்சனைகள் இருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

600 மில்லியன் திருடிய பிறகு அந்த ஹேக்கர் இப்படி ஒரு ட்வீட் மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்:

"ஹேக்கர்களான நாங்கள் ராணுவத்தைப் போன்றவர்கள். உங்களுக்கு ஆயுதம் தரப்பட்டால், பில்லியன் கணக்கான டாலர்களை மக்களிடமிருந்து பாதுகாக்கவேண்டும் என்று சொல்லப்பட்டால், நீங்கள் தீவிரவாதியாக இருப்பீர்களா பேட்மேன் ஆக இருப்பீர்களா?"

https://www.bbc.com/tamil/global-58349814

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.