Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏதிலி நாவல் - எப்போது விடுதலை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது விடுதலை?

ஈழப் போரின் பின்னணியில் எவ்வளவோ நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதன் சில பக்கங்கள் இன்னும் ஆழமாக அணுகப்படாமலே இருக்கின்றன. போரால் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை மகத்தான இலக்கியங்களாக்கிய ஷோபாசக்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “போராட்டத்துக்கும் சாதிக்கும் இடையேயான தொடர்பு, குழந்தைப் போராளிகளின் அகவுலகம், ஈழப் பிரச்சினை குறித்த சிங்கள அடித்தள மக்களின் பார்வை, போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என முழுமையான படைப்புகள் இனிதான் எழுதப்பட வேண்டும்” என்றார். இந்த வரிசையில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் ஈழ அகதிகள் பற்றியது. எஸ்.ஏ.உதயன் எழுதிய ‘தெம்மாடுகள்’ நாவலும், தொ.பத்தினாதன் எழுதிய ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’ கட்டுரைத் தொகுப்பும் இந்தக் களத்தை அடிப்படையாகக் கொண்டவை. சமீபத்தில், அ.சி.விஜிதரன் எழுதி ‘சிந்தன் புக்ஸ்’ வெளியீடாக வந்திருக்கும் ‘ஏதிலி’, தமிழக முகாம்களின் சகல பரிமாணங்களையும் பேசும் முக்கியமான நாவல்.

e0ae8fe0aea4e0aebfe0aeb2e0aebf.jpg?w=549

 

 

நாவல்களில் அனுபவங்கள் மட்டும் ஒரு ஆவணம்போல பதிவுசெய்யப்படுவதை விமர்சகர்கள் சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. அதே நேரத்தில், இதுவரை இலக்கியம் கண்டிராத வாழ்க்கையை முதன்முறையாகப் பேசும்போது முதலில் அந்த வாழ்க்கையை விலாவாரியாகச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் படைப்பாளிக்கு வந்துவிடுகிறது. தமிழக அகதி முகாம்கள் அதிகமும் இலக்கியமானதில்லை என்பதோடு, அவர்களைப் பற்றிய எந்தச் சித்திரமும் அவர்களின் அருகிலேயே வாழும் தமிழகத்தவர்களுக்குத் தெரியாது எனும்போது அப்படியான நிர்ப்பந்தம் விஜிதரனுக்கும் இருந்திருக்கக்கூடும். ஆனால், நாவலில் முகாம் வாழ்க்கை குறித்த வர்ணனைகள் ஏதுமில்லாமலேயே முகாம் வாழ்க்கையின் முழுச் சித்திரத்தையும் உருவாக்கும் லாகவம் விஜிதரனுக்கு வாய்த்திருக்கிறது. மேலும், இந்நாவலானது முகாம் வாழ்க்கையோடு மட்டும் மட்டுப்பட்டுவிடாமல், வேறு பல விஷயங்களையும் நுட்பமாக உள்ளடக்கியிருக்கிறது எனும் வகையில் தனித்துவமான படைப்பாகவும் ஆகிறது.

ஈழத் தமிழர்களின் வாழ்க்கை இந்த நாற்பது ஆண்டுகளில் சிதறுண்டு போயிருக்கிறது. குடும்பம், உறவு, சமூகம், நாடு என ஒவ்வொரு அடுக்கிலும் சிதைந்துபோயிருக்கிறது. இப்படியான சிதைந்துபோன வாழ்க்கையைச் சொல்வதற்காக இந்நாவலிலும் சிதறுண்ட உத்தியையே விஜிதரன் கையாண்டிருக்கிறார். பதினான்கு கதைகள். ஒவ்வொன்றும் வெவ்வேறு பிரச்சினைகள். எல்லாம் ஈழ அகதிகள் என்ற மையத்தில் இணைகின்றன.

கண்ணியமாக வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் கோழிக்கூண்டுகளைக் கிடத்தி வைத்ததுபோல வீடுகள், இப்படிப்பட்ட கட்டமைப்புகளால் குடும்பங்களுக்குள் உருவாகும் மனநெருக்கடிகள், எப்போதும் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டிய நிலை, மழை பெய்தால் வீடுகளுக்குள் புகுந்துவிடும் குப்பைக்கூளங்கள், அரசியல்வாதிகளின் அபத்தக் கோஷங்கள், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் கூத்துகள், தனிநபர் பிரச்சினைகளை ஒட்டுமொத்த அகதிகளின் அடையாளத்தோடு அணுகும் போக்கு, இதுதான் நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை என்று இயல்பாகக் கடந்துபோகும் வாழ்க்கைமுறை; இவையெல்லாம் வாழ்வனுபவங்களாகப் பதிவாகாமல் கேள்விகள்போல வாசகர்களிடம் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய எந்தப் பிரச்சினை குறித்து அவர்கள் யோசித்தாலும் அது கடந்த காலத்தில் போய் நிற்கிறது. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் கடந்த காலச் சுமையிலிருந்து மீள வழியில்லாமல் திரிய வேண்டியிருக்கிறது. பத்து வருடங்களில் உருவான ஆயிரம் மாணவர்களில் பத்துப் பேர்தான் தேறுகிறார்கள்; மற்றவர்களெல்லாம் கூலிகள் ஆகிறார்கள். வெறும் கூலிகளை மட்டுமே உருவாக்கும் சமூகம் எப்படி இருக்கும்?

நிலம் உயிர்களைத் தாங்கும் வழக்கத்துக்கு மாறாக இவர்கள் நிலத்தை மனதில் தாங்கி நடைபோடுகிறார்கள். ஊரை விட்டு வெளியேறும் பொருட்டுப் படகில் ஏறியதும் அது பாடையில் ஏறியதுபோல அமுதாவுக்குத் தோன்றுகிறது. பெருவெளிகளின் நிசப்த இருட்டுக்குள் தன்னை உருக்கி விளக்காக்கிப் போய்க்கொண்டிருக்கிறாள் ஷாமினி. முகாமில் பிறந்து, முகாமில் வளர்ந்து, மீண்டும் முகாம் வாழ்க்கையாகவே ஒரு வட்டச் சுழிக்குள் பெண்களின் வாழ்க்கை சிக்கிக்கொள்கிறது. அனுபவங்கள் உருவாக்கிக்கொடுக்கும் மொழிக்குக் கூடுதல் பலம் வந்துவிடுகிறது.

ஈழத் தமிழர்கள் இந்தியாவுக்குத் தஞ்சமடையத் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. தற்போது தமிழகத்திலுள்ள நூற்றுச்சொச்சம் அகதிகள் முகாம்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. நிச்சயம், இது சொற்பமான எண்ணிக்கை அல்ல! அவர்களுக்குக் குடும்ப அட்டை இருக்கிறது, ஆதார் அட்டையும்கூட இருக்கிறது; ஆனால், குடியுரிமை கிடையாது. பக்கத்துக்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால்கூட காவல் துறையிடமும் வட்டாட்சியரிடமும் அனுமதி வாங்க வேண்டிய கட்டாயம். அகதிகளுடைய பிரச்சினைகள் குறித்து அபூர்வமாக ஊடகக் கவனம் கிடைக்கும்போது, தாங்கள் திறந்தவெளிச் சிறையில் வாழ்வதாகத் தவறாமல் சொல்வார்கள். ‘ஏதிலி’ நாவலிலும் வெவ்வேறு இடங்களில் இந்த வார்த்தைகள் வருகின்றன. 80 ஆயிரம் குடும்பங்களின் சிறைவாசத்துக்கு எப்போது விடுதலை? ஈழ அகதிகளின் இன்றைய நிலைக்கு ஒருவிதத்தில் நாமும் பொறுப்பு என்று எப்போது தமிழகம் உணர்கிறதோ, அப்போதுதான். அந்தப் பொறுப்புணர்வை ‘ஏதிலி’ விதைக்கிறது.

ஏதிலி
அ.சி.விஜிதரன்
சிந்தன் புக்ஸ் வெளியீடு
விலை: ரூ.250

 

https://saabakkaadu.wordpress.com/2020/07/26/yethili/

 

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகதி முகாமின் வாழ்வியலை பேசும் ஏதிலி நாவல்!

-பீட்டர் துரைராஜ்

 

FB_IMG_1649166919079-1.jpg

தமிழ்நாட்டின்  அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை அகதிகளின் சொல்லப்படாத வாழ்வியலை கருப் பொருளாக்கி, அ.சி. விஜிதரன் எழுதியுள்ள நாவல் ‘ஏதிலி’. ஒரு திறந்த வெளிச் சிறைச் சாலையில் இருக்கும் குடும்பங்கள் சந்திக்கும் துயரங்கள், வலிகள் ஆகியவை இலக்கிய வடிவம் கண்டுள்ளன!

தமிழகம் எங்கும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் கிட்டத்தட்ட ஒன்னரை இலட்சம் அகதிகள் உள்ளனர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் ! அவர்கள் வாழ்வு எத்தகையது ?  எதிர் கொள்ளும் இன்னல்கள் யாவை? என்பதை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் சித்தரிக்கும் நாவல்தான் ஏதிலி. இதனை ஏதிலியான ஒருவர் எழுதும் போது, அதற்கு உயிர்ப்பு வந்து விடுகிறது.

ஈழத்து வாழ்வியலை,  இராணுவத்தோடு, அரசோடு மக்களுக்கு ஏற்பட்ட மோதலை முன் வைத்து பல படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்தியாவில் அகதிகளாக வாழும், ஈழத் தமிழர்கள் பற்றிய படைப்பு ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் இது வித்தியாசமானது. இதன்  நூலாசிரியரான அ.சி.விஜிதரன், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர். முகாமில் வளர்ந்தவர். எனவே தனது சக பயணிகளின் வாழ்க்கை இவரை சலனப்படுத்தியிருக்கும். அதன் விளைவாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது என்று கூறலாம். அமெரிக்காவில் நடக்கும் தொழிலாளர் புரட்சியை வைத்து ஜாக் லண்டன் எழுதிய ‘இரும்புக் குதிகால்’ என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். ‘குருதி வழியும் பாடல்’, என்ற கவிதைத் தொகுதியையும் எழுதியுள்ளார்.

இந்த நாவல் அடிப்படையான பல கேள்விகளை எழுப்புகிறது. தனி ஈழம் அமைவதற்காக ஆதரவு அளித்த தமிழகம், அதன்  அகதிகளுக்காக அதே அளவு ஆதரவளிக்கிறதா ! குடியுரிமை, வேலைவாய்ப்பு, கல்வி உரிமை போன்ற உரிமைகளை அகதிகள் பெற இயலும். அதனைப் பெறுகிறார்களா ! அதற்காக ஆதரவுக் குரலையாவது நாம் எழுப்புகிறோமா! அகதிகள் உரிமை பற்றிய பிரகடனத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது குறித்த சட்டம் எதையும் இந்திய அரசு இயற்றி இருக்கிறதா ! அகதிகள் என்பதற்காகவே, நம் தயவில் அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பது ஆதிக்க மனோபாவம் இல்லையா !

585734.jpg

தன் நிலத்தை விட்டு, ஒரு கால் இழந்த கணவனோடும், சிறுவனோடும் இலங்கையில் பேருந்திலும், பிறகு படகிலும்  பயணிக்கும் அமுதா இந்தியா வருகிறாள். காலிழந்த அவன் புலியாக இருப்பதற்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன. கள்ளத்தோணியில் முன்னாள் போராளிகளை வெளியே அனுப்புவதாக பிடிபட்டால் அவ்வளவுதான். இவர்களின் படபடப்பும், வேதனையும், மனக்கிலேசமும் வாசகனையும்  பற்றிக்கொள்கின்றன. ஒரு வழியாக தமிழ்நாட்டில் அகதி முகாமை அடைந்து, விசாரணையை எதிர்கொள்ளும் போது சாதி என்னவென்று கேட்கிறார்கள். வெள்ளாளர் என்று சொல்கிறாள். எல்லாருமே ‘வெள்ளாளர்’ என்றே பதிவு செய்திருக்கின்றனர். இப்படி இந்த நாவல், அரசியல் பார்வையோடு விரிவடைகிறது. இதுபோன்று ரசிக்கும் பல இடங்களை நாவல் நெடுகிலும் காண இயலும்.

முகாம்வாசி என்பதால் குற்றவாளியாக நடத்தப்படுவதை சகிக்க முடியாமல் சுயமரியாதையோடு காத்திரமாக வெளிப்படும் ஒரு கதாபாத்திரம், வாழ்வின் பல கொடூரங்களை கண்ட நிலையில் யாரிடம், எதற்காகவும் சார்ந்து வாழக் கூடாது என்ற வைராக்கியத்துடன் வெளிப்படும் ஒரு இளம் பெண் கதாபாத்திரம், ஈழத் தமிழர்கள் துன்பத்தைப் பேசி, பிரபாகரனுடன் இருந்த நெருக்கத்தை பேசி பிழைப்பு நடத்துபவர்களை அம்பலப்படுத்தும் ஒரு கதாபாத்திரம்.. என பலர் நம்முள் பதிந்து விடுகின்றனர்!

‘என்ன நடந்தது/ எனது நகரம் எரிக்கப்பட்டது/எனது மக்கள் முகங்கள் இழந்தனர்/எனது நிலம், எனது காற்று/எல்லாவற்றிலும்/ அந்நியப் பதிவு’ என்பது சேரன் எழுதிய கவிதை. இதைப் போன்ற பல பொருத்தமான, கவிதைகளை ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் முன்பும் ஆசிரியர் எடுத்து வைத்துள்ளார். கதையானது, முகாமிற்கு காலம் கடந்து வரும் கடிதங்கள் வாயிலாக, நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருக்கும் குறிப்புகள் வழியாக , உண்ணாவிரத உரை போல, முகாம் அறிவிப்பு போல,   கேள்வி-பதில் போல பல வடிவங்களில்  சொல்லப்பட்டுள்ளது. ஆரம்பம் இல்லை; முடிவும் இல்லை. வழக்கமான புத்தக அளவும் இல்லை; அளவு குறைவாக, படிக்க இலகுவாக உள்ளது.

முகாமில் படித்த அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. அவர்களுக்கு கிடைக்கும் இலகுவான தொழில் பெயிண்டிங்தான். அதை வைத்துதான் வாழ முடியும். முகாமிலேயே பிறந்து, வளர்ந்த தலைமுறையும் அங்கு வளர்கிறது. அவர்களுடைய  பிரச்சினை  என்ன என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.

mcms-4.jpg

வசதி உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு போனார்கள். இல்லாதவர்கள் இங்கு இருக்கிறார்கள். ஒரு மாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு 350 சதுர அடி வேண்டும். அப்படியென்றால், ஒரு குடும்பத்திற்கு எவ்வளவு இடம் வேண்டும் ? 13 வயது முதல் 18 வயது வரையுள்ள வளரிளம் பெண்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கலை ஆய்வு செய்ய வரும் கதாப்பாத்திரம் கேட்கும் கேள்வி இது. முகாம் என்பது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்பது அவளுடைய கணிப்பு.

தலைமைக்கு வரும் முகாம் பொறுப்பாளர்கள், அவர்களது நடத்தைகள், கியூ பிரிவு போலீசாருக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு, முகாமில் உருவாகும் கோவில்கள் –  வேத கோவில்கள், காதல் – அதை எதிர் கொள்ளும் பெற்றோர் என நாம் சாதாரணமாக காணும் பல சம்பவங்கள் வந்து செல்கின்றன.

சைவ மத பெருமையைப் பேசும் ஆறுமுக நாவலார் கனவில் வருகிறார். அவரை ஒரு இளைஞன் கேள்வி கேட்கிறான். மறுபடியும் இலங்கையில் குடியேறச் செய்யும் ஒரு என்.ஜி.ஓ வின் அரசியல் தோலுரிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஓர் அகதி முகாமிற்கு சென்று வந்த உணர்வை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.

மக்கள் சிவில் உரிமைகள் கழக செயற்பாட்டாளர் ச.பாலமுருகன் முன்னுரை எழுதியுள்ளார்.’ ஈழத் தமிழர்கள் நமது பொதுப் பதிவில், இலக்கியங்களில் காணாமல் போனவர்கள். அவர்கள் வாழும் இடத்தில் கூட அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள்’ என்கிறார். ‘இயல்பாக எல்லா ஏதிலியர்களும் எதிர் கொள்ளும், பாதுகாப்பின்மை, அவமானம், இயலாமை, அடங்கிப் போதல் அதன் நீட்சியாய் எழும் மனப் பிறழ்வு போன்ற பாதிப்புகளைத் தாங்கிய பல மனிதர்கள் நாவலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்கிறார்.

எளிய வார்த்தைகளில் வெகு இயல்பாக எழுதப்பட்டுள்ள கதை இது. ஓரிரு தினங்களில் இலகுவாகப் படித்துவிடலாம். நாவல் என்பதால் கதைக்கு ஒரு தொடர்ச்சி இருப்பதாக யாரும் எண்ண வேண்டாம். 14 அத்தியாயங்களில், 14 குடும்பங்கள் வருகின்றன. அவை ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டிருப்பதால் நாவல் வடிவம் பெறுகிறது. கதாபாத்திரங்களின் வழியே உண்மையைப் பேசுவதால், படைப்புக்கு ஒரு உன்னதம் வந்து விடுகிறது. இதைப் படிக்க வேண்டிய அவசியமும் நமக்கு வந்து விடுகிறது.

நூல் விமர்சனம்;  பீட்டர் துரைராஜ்

நூல்; ஏதிலி

ஆசிரியர்; அ.சி.விஜிதரன்

பக்கங்கள்; 305, விலை; ரூ.250

வெளியீடு; சிந்தன் புக்ஸ்,

கோபாலபுரம், சென்னை – 600086

தொடர்புக்கு: 9445123164/

 

https://aramonline.in/8586/yeheli-a-c-vijidharan-novel-refugee/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.