Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியில் நாடு ; மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்கவேண்டும் - அரசியல்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியில் நாடு ; மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில் முன்னெடுக்கவேண்டும் - அரசியல்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை

(நா.தனுஜா)

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கக்கூடிய வரலாறு காணாதவகையிலான மிகமோசமான பொருளாதார நெருக்கடியானது நீண்டகால மற்றும் குறுங்கால அடிப்படைகளில் மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பதாக சுட்டிக்காட்டியிருப்பதுடன் இப்பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நடவடிக்கைகளை அரசாங்கம் மிகத்துரிதமாக முன்னெடுக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்கட்சித்தலைவர்கள், உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி உக்கிரமடையும் நிலைமை | www.theevakam.com

அத்தோடு தேசிய பொருளாதாரக்கொள்கையில் திறமான சீர்திருத்தத்தின் அவசியத்தை அங்கீகரிப்பதுடன் அச்சீர்திருத்தம் இந்த நிலைமைக்கான அடிப்படைக்காரணங்களை நிவர்த்தி செய்யவும் முன்னெப்போதும் நாம் கண்டிராத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குமான நிலையான தீர்வுகளை வழங்கக்கூடியவகையில் அமையும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாடு மிகப்பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதற்குத் தீர்வுகாண்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் விரைந்து மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், ஹர்ஷ டி சில்வா, எரான் விக்ரமரத்ன, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், லங்கா சமசமாஜக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகரும் கரு ஜயசூரிய ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இதில் கையெழுத்திட்டுள்ள நாம், தற்போது எதிர்கொண்டிருக்கின்ற, முன்னெப்போதும் நாம் கண்டிராத பொருளாதார நெருக்கடிகளின் தன்மையை உணர்ந்து, எம்மை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ள இந்த சவால்மிக்க சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு அவசரமானதும் ஆக்கபூர்வமானதும் நிலையானதுமான தீர்வுகளைக் கோரிநிற்கின்றோம்.

சர்வதேச கடன் சந்தைகளின் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் அளவிற்கு நாட்டின் மதிப்பீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. கடந்த 2020 ஏப்ரல் மாதம் தொடக்கம் உலகசந்தையில் சர்வதேச பிணைமுறி பத்திரங்களைப் பயன்படுத்தி கடன் பெறுவதிலிருந்து இலங்கை விலக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சூழலில் அமெரிக்க டொலர் வடிவிலான கடனைத் திருப்பிச்செலுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு இருப்புக்கள் ஒருமாதகால இறக்குமதிக்குத் தேவையான அளவை விடவும் குறைவாகவே காணப்படுகின்றது.

இது நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் பதிவுசெய்யப்பட்ட மிகக்குறைந்தளவான இருப்பாகும். அதேபோன்று அரசின் கடனுக்கான வட்டி விகிதம் 2020 ஆம் ஆண்டில் 70 சதவீதத்திற்கும் அதிகமாகக் காணப்பட்டது. இது இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் மிகவும் உயர்வு என்பதுடன் சர்வதேச ரீதியில் மிக உயர்வான விகிதங்களில் இதுவும் உள்ளடங்குகின்றது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்புடன் ஒப்பிடும்போது பொதுக்கடனின் விகிதம் 120 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் அண்ணளவாக 25 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளது. இவ்விரு நிலைமைகளும் மிகப்பாரதூரமான பொருளாதார நெருக்கடியினைத் தோற்றுவிக்கும்.

ஒரேநேரத்தில் நிகழ்கின்ற மிகமோசமானதும் வரலாறு காணாததுமான இந்தப் பொருளாதார நெருக்கடி குறுகிய மற்றும் நீண்டகால அடிப்படைகளில் எமது எதிர்காலத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றது. சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத்திற்கு ஒரு கடினமான பணி இருக்கின்றது என்பதை நாம் அங்கீகரிக்கின்றோம். அதேவேளை ஒரு நாடாக இந்தச் சவாலுக்கு முகங்கொடுத்து, அதனைக் கடந்துவருவதற்கு நாமனைவரும் ஒன்றுடவேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் பாதகமான தாக்கத்திலிருந்து வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்கும் மக்களின் சமூகநலனை உறுதிப்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதுமாத்திரமன்றி தேசிய பொருளாதாரக்கொள்கையில் திறமான சீர்திருத்தத்தின் அவசியத்தை அங்கீகரிப்பதுடன் அச்சீர்திருத்தம் இந்த நிலைமைக்கான அடிப்படைக்காரணங்களை நிவர்த்தி செய்யவும் முன்னெப்போதும் நாம் கண்டிராத பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குமான நிலையான தீர்வுகளை உறுதிசெய்து, எமது எதிர்கால சந்ததியினருக்கு சமத்துவமானதும் நியாயமானதுமான சூழ்நிலையைக் கட்டியெழுப்பும் வகையில் அமையவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

பொதுநிதியின் முழுக்கட்டுப்பாட்டையும் பாராளுமன்றம் கொண்டிருக்கின்றது என்பதையும் இலங்கையில் பொதுநிதியை முறையாக நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இருக்கின்றது என்பதை நாம் நன்கறிவோம். இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையின் பிணைமுறி கடனை மீளச்செலுத்தும் வகையில் சீரான பேச்சுவார்த்தை மூலமான ஒத்திவைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான பல படிமுறைகள் அடங்கிய செயன்முறையை உடனடியாக ஆரம்பிப்பதே சிறந்த வழிமுறை என்று நாங்கள் கருதுகின்றோம்.

அதன்மூலம் இலங்கை நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் கடன் முகாமைத்துவ பாதையை நோக்கி தனது கொள்கைகளை சரிசெய்துகொள்ளவும் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் அதன் மக்களுக்கும் அத்தியாவசியத்தேவைகள் மற்றும் பொருட்களை அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்வதற்கும் முடியும். இது தற்போது அந்நியச்செலாவணிப் பற்றாக்குறையினால் நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் குறைவடைவதற்கு வழிவகுக்கும். எந்தவொரு முன்நோக்கிய நடவடிக்கைகளிலும் நாட்டிலுள்ள வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உரியவாறான சமூக மற்றும் ஏனைய பாதுகாப்பு வசதிகளையும் நிவாரணங்களையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்று அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/122384

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.