Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ப் பேசும் தரப்புகள் வெளியேற முழுப்பேரினவாத மயப்படும் அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-08-04

தமிழ்ப் பேசும் தரப்புகள் வெளியேற முழுப்பேரினவாத மயப்படும் அரசு

அரசுப் பக்கமும் எதிரணிப் பக்கமும் மாறி மாறி சாய்ந்தாடும் தனது வழமையான அரசியல் தந்திரோபாயத்தின் அடுத்த அத்தியாயத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரங்கேற்றியிருக்கின்றது.

புத்தாயிரமாம் ஆண்டு பிறந்த பின்னர் இந்த ஏழரை ஆண்டுகளுக்குள்ளேயே பல தடவைகள் அணி மாறிப் பாய்ந்து விட்டது சேவல் கட்சி.

புத்தாயிரமாம் ஆண்டு பிறந்தபோது பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் வகித்துக்கொண்டிருந்த அக்கட்சி 2001 ஒக்டோபரில் எதிரணிக்குத் தாவியது. இரண்டு மாதத்தில் வந்த பொதுத்தேர்தலை ஐ. தே. கட்சியுடன் இணைந்து எதிர்கொண்டு, அந்த அரசுடன் இரண்டு ஆண்டுகள் இயங்கியது. அந்த அரசு 2004 இல் கலைக்கப்பட்டு 2004 ஏப்ரலில் ஜனாதிபதி சந்திரிகாவின் அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது இ. தொ. கா. எதிரணியில் அமர்ந்தது. ஆனால் ஆறு மாதத்துக்குக் கூட அது நீடிக்கவில்லை. மீண்டும் அணி மாற்றம். 2004 செப்டெம்பரில் சந்திரிகா அரசில் திரும்பவும் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை ஏற்றனர் இ.தொ.காவினர். ஆனால் அதுவும் ஓராண்டிற்குள் மாறியது. மீண்டும் 2005 செப்டெம்பரில் அரசை விட்டு வெளியேறிய இ.தொ.கா., நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, ஐ. தே. கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அணி சேர்ந்தது. அத்தேர்தலில் ரணில் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோற்றதன் காரணமாக எதிரணியில் தொடர்ந்து அமரவேண்டிய இக்கட்டு இ.தொ.காவினருக்கு ஏற்பட்டது. ஆனால் அப்படி எதிரணியில் அமர்ந்திருப்பதில் அதிகம் விருப்பம் கொண்டிராத அக்கட்சி மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தபோது அரசுப்பக்கம் தாவியது. கடந்த ஆண்டு ஓகஸ்ட்டில் மஹிந்த அரசில் இணைந்து தங்களை அரச தரப்பாக மாற்றிக்கொண்ட இ. தொ. காவினர் இப்போது திரும்பவும் எதிரணிக்கு வந்திருக்கின்றார்கள்.

இப்படி எப்போதும் "ஆயாராம் காயாராம்' அரசியலில் ஊறிப்போன இ.தொ.காவினர், இப்போது இருக்கும் எதிரணி நிலையில் கூட எவ்வளவு காலம் நீடிப்பார்கள் என்பது கேள்விக்குரியதே.

நாளையே - ஏன் இன்றுகூட - அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சமரசம் செய்துகொண்டு மீண்டும் அரசுப் பக்கம் அடிவருடத் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'அரசுடன் இணைந்து நமது மக்களுக்கு உரியதைப் பெற்றுக்கொடுத்தல்' என்ற தத்துவம் - கோட்பாடு - சுலோகம் - கைவசம் இருக்கும் வரை தங்களின் 'பதவிமோக' அரசியல் குத்துக்கரணங்களுக்கு நியாயம் கற்பிப்பது ஒன்றும் அவர்களுக்குக் கஷ்டமான காரியமாக இருக்கப்போவதில்லை.

இ.தொ.காவினர் இப்போது அரசிலிருந்து வெளியேறியிருப்பது எத்தகைய அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இன்று ஆய்வுக்குரிய விடயம்.

இ.தொ.காவினரின் வெளியேற்றத்தால் நாடாளுமன்றில் அரசின் பெரும்பான்மைப் பலம் மயிரிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது என்பது உண்மையே.

இ.தொ.காவினரைப் போலவே அரசுப் பக்கமும் எதிரணிப்பக்கமும் அடிக்கடி மாறிமாறித் தாவும் குளறுபடி அரசியல்வாதிகளின் கூடாரமாகியிருக்கும் மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றையும் சேர்த்துத்தான் அரசு நாடாளுமன்றில் தனது பெரும்பான்மையைத் தட்டுத் தடுமாறி எட்டக்கூடிய நிலைமை இன்று காணப்படுகின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தை வசமாகப் பயன்படுத்தி இக்கட்சிகளும் தமது அரசியல் லாபத்துக்குப் பேரம் பேசும் அரசியலை முன்னெடுக்கலாம். பேரம் படியாமல் போனால் - காற்று எதிரணிப் பக்கம் வீசத் தொடங்கினால் - இக்கட்சிகளும் தமது குத்துக்காரணத்தை மீள ஒரு தடவை அரங்கேற்றலாம்.

அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், அரசு நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் தக்கவைக்க அல்லாடும் இக்கட்டு உருவாகும். இதனால் 'பழைய குருடி கதவைத் திறவடி' என்று ஜே. வி. பியின் காலில் போய்விழும் கட்டாயமும் இந்த அரசுத் தலைமைக்கு ஏற்படும்.

இன்றைய நிலையில் மஹிந்தரின் அரசு பெரும்பான்மை இழந்து, அதன் காரணமாக ஐ. தே. க. தலைமையிலான மாற்று அரசு ஆட்சிக்கு வருவதையோ, அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடப்பதையோ விரும்பாத ஜே. வி. பி, அதன் காரணமாக மஹிந்தரின் அரசுக்கு நிபந்தனையோடு ஆதரவு கொடுக்க முன்வரும். நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் தக்க வைப்பதற்காக வேறு வழியின்றி ஜே. வி. பி. இழுத்த இழுப்புக்கெல்லாம் இழுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நெருக்கடியில், ஜே. வி. பியின் தாளத்துக்கும் ஆடும் நிலைமை அரசுத் தலைமைக்கு ஏற்படும்.

ஆக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பறிகொடுக்காமல் தப்பிப்பிழைப்பதற்காக வேறு மார்க்கம் ஏதுமின்றி பௌத்த, சிங்கள மேலாண்மைச் சக்திகளின் - இனவாதக் கட்சிகளின் - வலைக்குள் அரசு விழுவதும் தவிர்க்கமுடியாததாக இருக்கும். ஏற்கனவே, பேரினவாதத்தைக் கக்கும் இந்த அரசு, அத்தகைய சந்தர்ப்பத்தில் முழு அளவில் பௌத்த - சிங்கள மேலாண்மை அரசாக உருவெடுக்கும்.

அரசுக்குள் எஞ்சியிருக்கும் ஒருசில தமிழ்ப்பேசும் தரப்புகளும் அரசை விட்டு வெளியேறுவது, சிங்கள - பௌத்த பேரினவாதத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்த அரசை முழு அளவில் இனவாத அரச கட்டமைப்பாக வெளிப்படுத்த வைத்து, அதை சர்வதேசத்துக்கும் அம்பலப்படுத்த வைக்கும்.

அத்தகைய நிலைமை இலங்கைத் தீவில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு மென்மேலும் மோசமான நெருக்குவாரங்களையும், இடர்களையும், சொல்லொணாக் கஷ்டங்களையும் உருவாக்குமாயினும், மறுபுறம் இந்த அரச ஒடுக்குமுறையின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு ஈழத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்துக்கு சர்வதேச ரீதியில் நியாயத்தை எடுத்துரைக்கும் வாய்ப்பையும் அது தரும் என்பதும் கவனிக்கத்தக்கது.

நன்றி - உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.