Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

COP27: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கொடுத்த வாக்குறுதிகளின் நிலை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

COP27: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கொடுத்த வாக்குறுதிகளின் நிலை என்ன?

  • ஜானவி மூலே
  • பிபிசி மராத்தி
5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பருவநிலை உச்சி மாநாடு

பட மூலாதாரம்,REUTERS

வெப்பக்காற்று, புயல், சீரற்ற பருவமழை, வெள்ளம், வறட்சி என தீவிர வானிலை நிகழ்வுகள் இந்தியாவில் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இதில் பல நிகழ்வுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதை எதிர்கொள்ள போதுமான நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்துள்ளதா?

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இந்தாண்டின் பருவநிலை மாநாடு எகிப்தில் உள்ள ஷர்ம் அல் ஷேக்கில் நவம்பர் 6 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.

இது காலநிலை தொடர்பான 27ஆவது மாநாடு என்பதால் COP27 என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி உதவி ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா மாதிரியான நாடுகள் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன என்பது குறித்து அறியவும் இந்த மாநாடு நல்வாய்ப்பாக இருக்கும்.

இந்தியா என்ன வாக்கு கொடுத்துள்ளது?

உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரக்கூடாது என்பதை வலியுறுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 200 நாடுகள் கடந்த 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தத்தின் பெரும்பகுதி பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதை வலியுறுத்துகின்றன.

எனவே ஒவ்வொரு நாடும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட இலக்குகள் (NDC) தொடர்பான விவரங்களை சமர்பிக்க வேண்டும். அதில், ஒரு நாடு எவ்வளவு கார்பன் உமிழ்வைக் குறைக்க உறுதியளிக்கிறது மற்றும் அவை எவ்வாறு சாத்தியப்படுத்தப்படும் என்ற விவரங்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

 

இலங்கை

இந்தியா அளித்துள்ள மூன்று வாக்குறுதிகள்

இந்தியா தன்னுடைய கார்பன் உமிழ்வை 2030ஆம் ஆண்டிற்குள் 45 சதவிகித அளவிற்கு குறைக்கும்.

2030ஆம் ஆண்டிற்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 50 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்.

காடுகள் மற்றும் மரங்கள் வளர்ப்பை அதிகப்படுத்தி 2.5 முதல் 3 பில்லியன் டன் மதிப்பிலான கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை வளிமண்டலத்தில் மட்டுப்படுத்தும்.

 

இலங்கை

இதற்கு என்ன அர்த்தம்?

சுத்தமான எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், குறைவான உமிழ்வு கொண்ட பொருட்கள் மற்றும் மின்னணு வாகனங்கள் போன்ற பல திட்டங்களை அரசாங்கம் ஊக்குவிக்கும் என்றும் அதற்கான உதவிகள் வழங்கும் என்றும் இந்தியா உறுதியளித்துள்ளது.

 

கார்பன் உமிழ்வு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட NDC பற்றிய தகவலை வெளியிடும் போது, மத்திய அரசு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில், "இந்தியாவின் NDC தனிப்பட்ட எந்தத் துறையையும் சார்ந்தது அல்ல என்றும் ஒட்டுமொத்த உமிழ்வு தீவிரத்தை குறைப்பதும், காலப்போக்கில் அதன் பொருளாதாரத்தின் ஆற்றல் திறனை மேம்படுத்துவதும், அதே நேரத்தில் நமது சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரம் மற்றும் பிரிவுகளைப் பாதுகாப்பதும் இந்தியாவின் குறிக்கோள் என்று குறிப்பிடப்பட்டிருந்த்து.

கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற COP26 மாநாட்டில், இந்தியா 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைய பிரதமர் நரேந்திர மோதி இலக்கு நிர்ணயித்தார்.

ஐ.நா. வரையறையின்படி, 'நிகர பூஜ்யம்' என்பது பசுமை இல்ல வாயு உமிழ்வின் அளவும், அது உறிஞ்சிக்கொள்ளப்படும் அளவும் சமமாக இருப்பதாகும்.

ஒரு நாடு வளிமண்டலத்தில் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்கள் முற்றிலும் உறிஞ்சிக்கொள்ளப்படும்போது நிகர பூஜ்ஜிய இலக்கு அடையப்படும்.

இந்த இலக்கை அடையும் பொருட்டு, இந்திய ரயில்வே 2030ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, இந்திய ரயில்வே ஆண்டுதோறும் அதன் உமிழ்வை 60 மில்லியன் டன் குறைக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல, இந்தியாவின் மிகப்பெரிய எல்இடி விளக்கு இயக்கம் ஆண்டுதோறும் 40 மில்லியன் டன் உமிழ்வைக் குறைக்கிறது.

ஆற்றல் துறையில் உள்ள சவால்கள்

2030ஆம் ஆண்டுக்குள் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 50 சதவிகித மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக இந்தியா கூறியுள்ளது.

நீர் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் உயிரி ஆற்றல் உதவியுடன் அடுத்த எட்டு ஆண்டுகளில் இந்த இலக்கை இந்தியா அடைய வேண்டும்.

சுத்தமான எரிசக்தியின் பயன்பாடு தற்போது அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிந்தாலும், அதன் வேகம் இந்தியா எதிர்பார்த்த அளவில் இல்லை.

இன்றும்கூட, புதைபடிவ எரிபொருள் மூலம் கிடைக்கும் அனல் மின்சாரத்தையே இந்தியா பெரும்பாலும் சார்ந்துள்ளது. இந்த முறையில் நிலக்கரி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

நிலக்கரி

பட மூலாதாரம்,GAUTUM DEY/AFP

சமீபத்தில் நிறுவப்பட்ட புதிய மின்நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்தால், அதில் 60 சதவிகிதம் அனல் மின் நிலையங்கள் உள்ளன.

உலகம் முழுவதும் நிலக்கரி பயன்பாடு குறைவதற்குப் பதிலாக அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் இதை சுட்டிக்காட்டினார்.

அதேநேரத்தில், மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையின்படி சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தியா பின்தங்கியே உள்ளது. 2022 டிசம்பருக்குள் அதன் திறனை 175GW ஆக உயர்த்தவும், சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தி அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் இந்தியா திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த இலக்கில் இருந்து இந்தியா வெகு தொலைவில் உள்ளது. இந்தியா தற்போது 116 ஜிகாவாட் மின்சாரத்தை மட்டுமே இந்த வகையில் உற்பத்தி செய்கிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எரிசக்தி தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. சுத்தமான ஆற்றல் ஆதாரங்கள் மூலம் மட்டுமே அதில் தன்னிறைவு அடைவது பெரும் சவால்.

காடு வளர்ப்பில் உள்ள பிரச்னை

2.5 முதல் 3 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சக்கூடிய அளவிற்கு காடுகள் மற்றும் மரங்களை வளர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

வன ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் 2019-21ஆம் ஆண்டில் 2,261 சதுர கிலோமீட்டர் அளவிற்கு காடுகளின் பரப்பளவு அதிகரித்துள்ளதாக அரசு கூறுகிறது.

ஆனால், அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருந்தாலும் உண்மை வேறு மாதிரி இருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிபுணர் அதுல் தியோல்கோகர் சுட்டிக்காட்டுகிறார்.

பச்சை நிறத்தால் மூடப்பட்ட அனைத்து இடங்களும் காடுகள் அல்ல. இந்தியாவில், காடுகளின் பரப்பை அளவிடும் போது, தாவரங்களின் அடர்த்தி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. சில நேரங்களில் புதர்கள் மற்றும் பயிர் செய்யப்படும் இடங்கள்கூட காடுகளாக கணக்கிடப்படுகின்றன.

காடுகள் இயற்கையாக உருவாகும் என்றும் அதற்கு சிறந்த பாரம்பரியம் இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

ஏற்பு மற்றும் தொடரவும்
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

2019 மற்றும் 2021ஆம் ஆண்டு வன ஆய்வு அறிக்கையை ஒப்பிடுகையில், சதுப்புநிலங்களின் பரப்பளவு 17 சதுர கி.மீ மட்டுமே அதிகரித்துள்ளது. இது போதுமானதா?

மாநில அரசின் திட்டங்கள் என்ன?

NDC இலக்குகளை அடைய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.

இந்தாண்டு செப்டம்பரில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது, இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்களும் பங்கேற்றனர். இதில், மாநில அரசின் செயல் திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்ட்து.

மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயல் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தது.

இந்தாண்டு மார்ச் மாதத்தில் மும்பை நகருக்கான காலநிலை செயல்திட்டத்தை மும்பை மாநகராட்சி அறிவித்த்து. நிகர பூஜ்ஜிய இலக்கை மும்பை 2050ஆம் ஆண்டிற்குள் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவநிலை இலக்கை ஆதரிப்பதற்கான நிதி உதவி

 

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கார்பன் உமிழ்வைக் குறைப்பது என்பது வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு எளிதானது அல்ல என்பதால் COP 27 மாநாட்டில் நிதி உதவி குறித்த விவாதம் மையமாக இருக்கும்.

மின்சார விநியோக தேவையைப் பூர்த்தி செய்ய, சுத்தமான எரிசக்தி துறையில் பெரிய முதலீடுகள் அவசியம். இந்தியாவும் ஆற்றலைச் சேகரிப்பதற்கான சேமிப்புத் திறனைக் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக இந்தியாவிற்கு 401 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என பாங்க் ஆஃப் அமெரிக்கா சர்வே கூறுகிறது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்கள் குறித்த விவாதங்களும் COP27 மாநாட்டில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு 2020ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்குவதாக கடந்த 2009ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை உச்சி மாநாட்டில் பணக்கார நாடுகள் உறுதியளித்தன.

இந்தாண்டு அது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளரும் நாடுகள் சார்பாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-63525926

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

COP27: வளரும் நாடுகளுக்கு காலநிலை நிதி கிடைக்குமா? விவாதமாகும் “இழப்பு மற்றும் சேதம்”

  • நவீன் சிங் கட்கா
  • சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி
50 நிமிடங்களுக்கு முன்னர்
 

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எகிப்தில் நடந்துகொண்டிருக்கும் இந்த ஆண்டின் காலநிலை மாநாட்டில் சலசலப்பை ஏற்படுத்தும் இரண்டு பெரிய வார்த்தைகள் "இழப்பு" மற்றும் "சேதம்." அவற்றுக்குரிய அர்த்தம் என்ன? ஏன் அவை விவாதங்களை ஏற்படுத்துகின்றன?

பசுமை இல்ல வாயுக்களை எவ்வாறு குறைப்பது, காலநிலை நெருக்கடியின் தாக்கங்களை எப்படிச் சமாளிப்பது ஆகிய கேள்விகளில் தான் பெரும்பாலும் காலநிலை பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்துகின்றன. இந்த ஆண்டு மாநாட்டில் மூன்றாவதாக இன்னொரு பிரச்னையும் ஆதிக்கம் செலுத்தலாம். காலநிலை மாற்ற சிக்கலை ஏற்படுத்துவதில் பெரும்பான்மையாகப் பங்களிக்கும் அதிக தொழில்மயமான நாடுகள், பாதிப்புகளை நேரடியாக அனுபவிக்கக்கூடிய நாடுகளுக்குப் பணம் செலுத்த வேண்டுமா என்பதுதான் அந்த மூன்றாவது பிரச்னை.

காலநிலை மாற்றத்தின் விளைவாக, வெள்ளம், வறட்சி, சூறாவளி, நிலச்சரிவு, காட்டுத்தீ போன்ற பேரழிவுகள் அனைத்தும் அடிக்கடி நிகழ்வதோடு தீவிரமடைந்தும் வருகின்றன. பாதிக்கப்பட்ட நாடுகள் அவற்றின் விளைவுகளைச் சமாளிக்கப் பல ஆண்டுகளாக நிதியுதவி கேட்டுக் கொண்டிருக்கின்றன.

இதுதான் "இழப்பு மற்றும் சேதம்" என்ற வார்த்தையின் அர்த்தம். இந்தச் சொற்றொடர் வீடுகள், நிலம், வேளாண் நிலங்கள், வணிகங்கள் போன்றவற்றில் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மற்றும் உயிரிழப்ப்பு, கலாசார தளங்களின் இழப்பு, பல்லுயிர் இழப்பு போன்ற பொருளாதாரமல்லாத இழப்புகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.

 
 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

நவம்பர் 6ஆம் தேதி 27வது காலநிலை மாநாடு (COP27) தொடங்குவதற்கு முன் இரண்டு நாட்களாக நடந்த தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த விஷயத்தை அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரலில் சேர்க்க பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.

ஏழை நாடுகள் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைப்பது, காலநிலை மாற்ற தாக்கங்களைச் சமாளிக்க நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுக்காக பருவநிலை நிதியுதவியில் பணக்கார நாடுகள் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள் கொடுக்க ஒப்புக்கொண்டதோடு கூடுதலாக இந்த நிதியை ஏழை நாடுகள் கேட்கின்றன.

"தீவிரமான புயல்கள், பேரழிவு தரும் வெள்ளம், உருகும் பனிப்பாறைகள் ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகள் மற்றும் சேதங்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். வளரும் நாடுகளில் உள்ளவர்களுக்கு ஒரு பேரிடர் நடந்து பிறகு மீண்டும் அடுத்த பேரிடர் தாக்குதல் நடப்பதற்கு முன்பாக மறுகட்டமைப்பு செய்துகொண்டு உரிய நேரத்தில் மீண்டு வருவதற்குச் சரியான ஆதரவு இல்லை.

மோசமான தாக்கங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் வகையில் முன்வரிசையில் இப்போதுள்ள மக்கள் சமூகங்கள் இந்த நெருக்கடியை ஏற்படுத்துவதில் குறைந்த பங்களிப்பையே செய்துள்ளன," என்கிறார் கிளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க் இன்டர்நேஷனலில் உலகளாவிய அரசியல் மூலோபாயத்தின் தலைவர் ஹர்ஜீத் சிங்.

இழப்பு மற்றும் சேதத்திற்கான செலவு எவ்வளவு பெரியது?

உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்களின் குழுவான லாஸ் அண்ட் டேமேஜ் கொலாபரேஷன், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, மாறிவரும் காலநிலைக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய 55 நாடுகளின் பொருளாதாரங்கள், 2000 முதல் 2020 வரை அரை டிரில்லியன் டாலர்களுக்கு மேல் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சந்தித்ததாகக் கூறுகிறது. அடுத்த பத்தாண்டுகளில் அது இன்னும் அரை டிரில்லியனாக உயரலாம்.

 

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

வேளாண்கள் மற்றும் கால்நடைகளின் இழப்பு என்பது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதத்தின் ஒரு வடிவம்

"மேலும் புவி வெப்பமயமாதலின் ஒவ்வொரு டிகிரியும் அதிக காலநிலை தாக்கங்களைக் குறிக்கிறது. வளரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகள் 2030ஆம் ஆண்டுக்குள் 290 பில்லியன் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அந்த அறிக்கையின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது உலகம் ஏற்கெனவே சராசரியாக 1.1 டிகிரி வெப்பநிலை உயர்வைக் கண்டிருந்தது.

ஏழ்மையான மற்றும் குறைந்த தொழில்மயத்தைக் கண்டுள்ள நாடுகள், இதன் விளைவாக ஏற்படும் தீவிர வானிலையின் தாக்கம் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் தாங்கள் மேற்கொள்ளும் எந்த முன்னேற்றத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கூறுகின்றன. எதிர்கொண்ட இழப்புகளையும் சேதங்களையும் சமாளிக்க கடன் வாங்க வேண்டியிருப்பதால், கடன் சுமையில் சிக்கிவிட்டதாகச் சிலர் கூறுகிறார்கள்.

இழப்பு மற்றும் சேதங்களுக்கான கொடுப்பனவுகள் எவ்வளவு காலமாக விவாதிக்கப்பட்டன?

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, பாரிஸ் ஒப்பந்தம் "காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளுடன் தொடர்புடைய இழப்பு மற்றும் சேதத்தைத் தவிர்ப்பது, குறைப்பது மற்றும் நிவர்த்தி செய்வது," ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தது. ஆனால், இதை எப்படிச் செய்வது என்று முடிவு செய்யப்படவில்லை.

"இழப்பு மற்றும் சேதம் பல ஆண்டுகளாக மிகவும் பிரச்னைக்குரிய தலைப்பாக இருந்தது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே மிக மிக சூடான விவாதஙகள் நடந்துள்ளன," என்று ஜெர்மனியின் பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் மாநில செயலாளர் ஜோச்சன் ஃப்ளாஸ்பர்த் கூறுகிறார்.

 

சிவப்புக் கோடு

இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதி இந்தியாவுக்கு பலனளிக்குமா?

காலநிலை மாநாட்டில் இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதி வசதியை நிறுவுவதற்கான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டால், அது வளரும் நாடுகள் தங்களைக் கட்டியெழுப்பும் வேகத்தைக் கூட்டக்கூடும் என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை இந்த நிதி உடனடி தாக்கத்தைத் தாங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றாலும் அதையே முழுவதுமாக நம்பிவிட முடியாது என்கிறார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்.

"இது மிகவும் அவசியமான, சமநிலைப்படுத்தும் செயலாக ஒரு நல்ல விஷயம். இருப்பினும், இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவற்றை விரிவான முறையில் தீர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். வழக்கம்போல், அமெரிக்கா போன்ற அதிக கரிம வெளியீட்டிற்குப் பொறுப்பாளியான நாடுகள் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் ஒப்புக்கொள்ளலாம். ஆனால், கணக்கீடுகள், நியாயத்தன்மை போன்றவை இதன் நீண்டகால செயலாக்கத்தை உருவாக்கும்.

ஆரம்பத்தில் கரிம கிரெடிட் முறையும் இதுபோல் பெரியளவில் சென்றடையவில்லை. ஆனால், இப்போது பரவலாகச் சென்றடைந்து, சில மதிப்பாய்வு தொழில்நுட்பங்களோடு இப்போது அமலில் உள்ளது. இதுவும் அதேபோல் நடக்கலாம். ஆனால், அதற்கு மிக நீண்ட காலம் எடுக்க வாய்ப்புள்ளது.

 

இந்தியா வெப்ப அலை 2022

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவை பொறுத்தவரை, மிகப்பெரிய கடலோர நிலப்பரப்பு உள்ளது. அது கடல்மட்ட உயர்வு, சுனாமி, வெள்ள பாதிப்புகள் என்று பல்வேறு பேரிடர் அபாயங்களைக் கொண்டுள்ளன. அதுபோக, நிலநடுக்கம், வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் அபாயங்களும் இந்திய நிலப்பரப்புகளில் இருக்கின்றன. ஆகவே, கொடுப்பதை விட அதிகமாக இந்தப் பேரிடர்களைச் சமாளிக்க நிதி கிடைக்கவே வாய்ப்புள்ளது.

இந்தியா, தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துப் பேசி அதற்குரிய நிதியைப் பெற வேண்டும். இருப்பினும், இது தான் நம்மை இழப்புகளில் இருந்து காப்பாற்றும் என்று எதிர்பார்த்துவிட முடியாது. நாம் பேரிடர் இழப்புகளால் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு ஒரு கட்டம் வரை நமக்கு உதவலாம். எவ்வளவு நிதி இதில் சேரப் போகிறது, எந்த அடிப்படையில் மதிப்பீடு செய்யப் போகிறார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை," என்று பிபிசி தமிழுக்காகப் பேசியபோது கூறினார் பொருளாதார நிபுணர் வ.நாகப்பன்.

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா, பாகிஸ்தானில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலைகள் 30 மடங்கு அதிகமாக இருந்தது. உரிய தரவுகள் இல்லாமல் உண்மையான சூழலியல் இழப்புகளைக் கணக்கிட முடியாது. இருப்பினும், உயிரிழப்புகள், பெரியளவிலான பயிர் இழப்புகள், அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பின்மை போன்றவை, வெப்ப அலை போன்ற பாதிப்புகளின் தீவிரத்தையும் அவற்றின் நேரடி இழப்புகளையும் சேதங்களையும் காட்டுகின்றன. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், அவற்றைச் சமாளிப்பதில் இந்த நிதி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கலாம்.

 

சிவப்புக் கோடு

"பெரியளவில் கரிம வெளியீடு செய்வோருக்கு இதுவொரு சட்டபூர்வ கடமையாக மாறக்கூடும் என்று வளர்ந்த நாடுகளில் கவலைகள் இருந்தன. பெரும்பாலான வளர்ந்த நாடுகளுக்கு இது ஒரு சிவப்புக் கோடாகவே இருந்து வருகிறது."

எகிப்தில் நடக்கும் 27வது காலநிலை மாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்துபவர்கள், பணக்கார நாடுகள் தாங்கள் என்பதையும் இழப்பு மற்றும் சேதத்திற்கு இழப்பீடு வழங்குவதற்கான எந்தவொரு கடமையும் தங்களுக்கு இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புவதாகக் கூறினர். வளரும் நாடுகள் அதை எதிர்த்தன. ஆனால், இப்போது பொறுப்பு மற்றும் இழப்பீடு விவாதிக்கப்படாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அபுதாபியில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மாநாட்டில் இடைக்கால முடிவெடுப்பதற்கும் 2024-க்குள் உறுதியான முடிவை எடுப்பதற்கும் இந்த மாநாட்டில் இழப்பு மற்றும் சேத நிதி குறித்து விவாதிக்கப்படும் என்று ஒப்பந்தம் கூறுகிறது.

"இன்றைய சூழலில் ஒவ்வொரு நாளும் வளரும் நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளைச் சமாளிக்க வழக்கமான, யூகிக்கக்கூடிய, நிலையான நிதியைக் கோரி வருகிறோம். இந்த ஒப்பந்தம் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தை எப்படி நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்," என்று ஐ.நா காலநிலை கூட்டங்களில் ஆப்பிரிக்கா குழுவுடன் முன்னணி காலநிலை பேச்சுவார்த்தையாளர் ஆல்ஃபா உமர் கலோகா கூறுகிறார்.

கிளைமேட் ஆக்ஷன் நெட்வொர்க்கை சேர்ந்த ஹர்ஜீத் சிங், ஒப்பந்தம் ஒரு சமரசம் என்கிறார். "பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் நாடுகளுக்கும் எந்தவித உறுதியான ஆதரவையும் வழங்காமல், வரலாற்றுரீதியாக மாசுபடுத்திக் கொண்டிருப்பவர்களை இழப்பீடு மற்றும் பொறுப்பேற்பதில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும், பணக்கார நாடுகள் வளரும் நாடுகளைத் தள்ளும் விதம் உண்மையில் ஒரு நம்பிக்கைத் துரோகம்."

 

பருவநிலை மாற்றம் தங்களின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துவிட்டதாக ஏழை நாடுகள் கூறுகின்றன

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பருவநிலை மாற்றம் தங்களின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்துவிட்டதாக ஏழை நாடுகள் கூறுகின்றன

இழப்பு மற்றும் சேதம் பற்றிய முக்கிய கருத்து வேறுபாடுகள் என்னவாக இருக்கும்?

இழப்பு மற்றும் சேதத்திற்கான கொடுப்பனவுகளை எந்த அமைப்பு கையாளும் என்பதை நாடுகள் ஒப்புக்கொள்வது கடினமாக இருக்கலாம்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா மாநாட்டின் மூலம் நிறுவப்பட்ட கருவிகளுக்குள்ளும் அதற்கு வெளியிலும் பொறுப்பேற்கக்கூடிய வழிமுறைகள் இருப்பதாக வளர்ந்த நாடுகள் கூறுகின்றன.

வளரும் நாடுகள், தற்போதுள்ள எந்த நிறுவனமும் அதற்குப் பொருத்தமானவையாக இல்லை என்று கூறுகின்றன.

"சான்றாக, பாகிஸ்தான் சமீபத்திய வெள்ளத்தால் பேரழிவை எதிர்கொண்டபோது, நைஜீரியா பாதிக்கப்பட்டபோது அல்லது சமீபத்தில் கரீபியனை தாக்கிய இயன் சூறாவளியின் போது அந்த அமைப்புகள் எங்கே இருந்தன?" எனக் கேட்கிறார், ஐ.நா காலநிலை கூட்டங்களில் கூட்டுப் பேச்சுவார்த்தை நடத்தும் 39 சிறிய தீவு நாடுகளின் குழுவான அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் (Aosis) என்ற கூட்டமைப்புக்கான முன்னணி காலநிலை நிதி பேச்சுவார்த்தையாளர் மிகாய் ராபர்ட்சன்.

சிறிய தீவு நாடுகளின் குழுவான அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் (Aosis) என்ற கூட்டமைப்பு, ஆப்பிரிக்க குழு ஆகிய இரண்டும் ஐ.நா காலநிலை மாற்ற அமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு புதிய நிதி வசதிக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அந்த அமைப்பு, தற்போதுள்ள காலநிலை நிதி நிறுவனங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவம். இந்தத் தனித்த வசதியின் யோசனை பரவலான ஆதரவைப் பெறாமல் போகலாம் என்கிறார் ஃப்ளாஸ்பர்த்.

இதுவரை நடந்த COP27 மாநாட்டில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா?

கடந்த ஆண்டு 26வது காலநிலை மாநாட்டின்போது, இழப்பு மற்றும் சேதத்திற்கு ஸ்காட்லாந்து ஒரு மில்லியம் டாலர் நிதியுதவிக்கு உறுதியளித்தது. கடந்த மாதம், டென்மார்க் 13 மில்லியன் டாலர் பங்களிப்பதாக அறிவித்தது.

 

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இழப்பு மற்றும் சேதங்களுக்கான உரிமைகோரல்களுக்கு பணத்தை எவ்வாறு வழங்குவது என்பது ஒரு சர்ச்சைக்குரிய பிரச்னை

கடந்த வாரம், ஐரோப்பிய நாடாளுமன்றம், வளரும் நாடுகளுக்கு நிதியளிப்பதில் கவனம் செலுத்துவதற்கு, இழப்பு மற்றும் சேதங்களை "தவிர்ப்பதற்கு, குறைப்பதற்கு மற்றும் நிவர்த்தி செய்வதற்கு" கடன்களைவிட மானியங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

மேலும், 55 பாதிக்கப்பட்டக்கூடிய நிலையிலுள்ள நாடுகளின் குழுக்களான ஜி7 மற்றும் வீ20, சமீபத்தில் காலநிலை பேரிடர்களுக்கு எதிராக குளோபல் ஷீல்ட் என்ற முன்முயற்சியைத் தொடங்க ஒப்புக்கொண்டது. இது காப்பீட்டு முறை மூலமாக, ஓரளவுக்கு இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதியை வழங்கும்.

வி20 குழு, அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் அளவில் பாதி உறுப்பினர்களைக் கூட கொண்டிருக்கவில்லை என்பதால் இது முறையானதாக இருக்க முடியாது என்று அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் கூறுகிறது.

"ஜி7, அவர்கள் தேர்ந்தெடுத்த நாடுகளோடு மட்டுமல்ல, நம் அனைவருடனும் பேச வேண்டும்," என்று கூறுகிறார், அலையன்ஸ் ஆஃப் ஸ்மால் ஐலேண்ட் ஸ்டேட்டஸ் குழுவின் முன்னணி காலநிலை நிதி பேச்சுவார்த்தையாளர் மிகாய் ராபர்ட்சன்.

ஏழை நாடுகளால் இன்னும் கூடுதலான காலநிலை நிதியைப் பெற முடியுமா?

காலநிலை நிதியை அளிக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் அதைப் பெறும் நாடுகள் இரண்டிலும் கடந்த காலங்களில் சிக்கல்கள் இருந்துள்ளன.

சர்வதேச நிதி நிறுவனங்களின் அதிகாரத்துவம் காரணமாக, நிதி கிடைக்க நீண்ட காலம் எடுக்கும். மேலும் நிதியைப் பெறும் சில நாடுகளில் மோசமான நிர்வாகம், ஊழல் பிரச்னைகள் உள்ளன.

இருப்பினும், இழப்பு மற்றும் சேதத்திற்கான நிதியளிக்கும் திட்டத்தை ஓரங்கட்டுவதற்கு இதை ஒரு நியாயமான காரணமாக ஏழை நாடுகள் ஏற்றுக்கொள்ளாது.

https://www.bbc.com/tamil/science-63540131

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.