Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்ற உள்ளார்ந்த உணர்வு கருணாநிதிக்கு இல்லை -பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்ற உள்ளார்ந்த உணர்வு கருணாநிதிக்கு இல்லை

* பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு

தமிழகத்திலுள்ள இரு பிரதான கட்சிகளும், உணவுக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதைப் போலவே ஈழத் தமிழர் பிரச்சினையைக் கையாளுவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்ற உள்ளார்ந்த உணர்வு முதலமைச்சர் கருணாநிதிக்கு இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

ஏழாயிரம் ஈழத் தமிழர்களை இந்திய இராணுவம் படுகொலை செய்துவிட்டதாக விடுதலைப் புலிகளும், எமது பிரதமரை புலிகள் கொன்றுவிட்டதாக நாமும் கூறிக் கொண்டிருப்பதில் என்ன இலாபம்? இது புலிகளின் பிரச்சினையோ ஈழத்தமிழர்களின் பிரச்சினையோ அல்ல. இலங்கை இனப்பிரச்சினை இந்தியாவுக்கே ஆபத்தை விளைவிக்கும் பிரச்சினையாக மாறிவிட்டிருக்கும் நிலையில் நாம் மௌனம் சாதிப்பது விசித்திரமாக இருக்கின்றதெனவும் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து வெளியாகும் `தினமணி' நாளிதழுக்கு வழங்கிய பேட்டியிலேயே பழ. நெடுமாறன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அப்பேட்டி விபரம் வருமாறு;

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இந்தியா தவிர வேறு யாரும் தலையிட நாம் அனுமதிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அப்படி அனுமதிப்பது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்றும் நான் நினைக்கிறேன். இதை இந்திரா அம்மையார் புரிந்து கொண்டிருந்தார். இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

இந்திரா காந்தியின் அணுகுமுறை இந்த விஷயத்தில் எப்படி இருந்தது?

1983 ஆம் ஆண்டு கொழும்பில் இனக்கலவரம் நடைபெற்று சுமார் 3,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா அம்மையார் அன்றைய வெளியுறவு ஆலோசகர் ஜி.பார்த்தசாரதியையும் வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். இலங்கை ஒரு சிறிய நாடு. அங்கு நடக்கும் சிறிய பிரச்சினைதானே என்று கருதாமல் இரண்டு மூத்த அரசியல்வாதிகளை அனுப்பி வைத்து, இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனவுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்பினார்.

அதாவது, `இந்தியா இந்த விஷயத்தை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளாது, ஜாக்கிரதை' என்பதைத்தான் வெளியுறவுத்துறை அமைச்சரையும் அமைச்சர் அந்தஸ்திலுள்ள மூத்த வெளியுறவுத் துறை ஆலோசகரையும் அனுப்புவதன் மூலம் உணர்த்தினார் இந்திரா அம்மையார். உலக நாடுகளுக்கும் இந்த விஷயத்தில் யாரும் தலையிடுவதை இந்தியா விரும்பாது என்று மறைமுகமாக எச்சரிக்கும் செய்கை அது. இவ்வளவு செய்தும், ஜெயவர்தன தனது வாக்குறுதியைக் காப்பாற்றாமல் மழுப்புகிறார் என்று தெரிந்ததும், போராளிக் குழுக்களை அழைத்து வந்து, நமது இராணுவத்தின் மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஒருவேளை, இந்திரா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால், இலங்கைப் பிரச்சினை எப்போதோ சுமுகமான ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்பதுதான் எனது கருத்து.

தமிழ் ஈழத்தை இந்திரா காந்தி ஆதரிப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

நான் அப்படிச் சொல்லவில்லை. ஆரம்பம் முதலே இந்திரா அம்மையார் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், ஈழத் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் அதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதிலும் இந்திரா அம்மையார் தீர்மானமாக இருந்தார்.

ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட என்ன காரணம்?

ராஜீவ் காந்தி வந்தவுடன், இலங்கைப் பிரச்சினையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்த, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஏ.பி.வெங்கடேஸ்வரனை ராஜிநாமா செய்யச் சொன்னதுதான், ஈழப் பிரச்சினைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. ஜி.பார்த்தசாரதியும் நரசிம்மராவும் கையாண்ட ஈழப் பிரச்சினையை, ரமேஷ் பண்டாரியை அனுப்பிப் பேசச் சொன்னபோது, ராஜீவ் அரசு இந்தப் பிரச்சினையை முக்கியமாகக் கருதவில்லை என்கிற தோற்றத்தை இலங்கைக்கும் உலக நாடுகளுக்கும் ஏற்படுத்தி விட்டார். அப்போது வெளியுறவுக் கொள்கையில் இலங்கைப் பிரச்சினைக்கு ஏற்பட்ட பின்னடைவுதான் இன்றைய நிலைமைக்குக் காரணம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்வது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று கூறினீர்கள். அது ஏன்?

இந்தியாவின் வடபகுதிதான் பாகிஸ்தான். சீனா போன்ற நாடுகளின் தாக்குதலுக்கு உட்படும் பகுதியாக இருக்கிறதே தவிர, இந்தியாவின் தென்பகுதி அபாயம் இல்லாத பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையைத் தவிர இங்கே வேறு அண்டை நாடு எதுவும் நமக்குக் கிடையாது. நமக்கு ஆபத்தே இல்லாமல் இருந்த தென்பகுதியில் இப்போது பாகிஸ்தான், இஸ்ரேல் என்ற பல அந்நிய சக்திகள் காலூன்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவுக்குத் தலைவலி கொடுக்க இலங்கையைத் தளமாக்க நினைக்கின்றன நமக்கு விரோதமான சக்திகள்.

இந்திரா காந்தியின் காலத்தில் அந்நியத் தலையீடு இலங்கையில் இல்லவே இல்லை என்கிறீர்களா?

நிச்சயமாக இருக்கவில்லை. ஜெயவர்தன அமெரிக்காவுடன் இராணுவத் தளம் அமைப்பது பற்றிப் பேச இருக்கிறார் என்பது தெரிந்ததும், இந்திரா அம்மையார் பாராளுமன்றத்தில் ஓர் எச்சரிக்கை விடுத்தார். இந்து மகா சமுத்திரத்தில் எந்த அந்நிய சக்தி நுழைய முயற்சித்தாலும் அது எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாகத்தான் இந்தியா கருதும் என்று அவர் சொன்னதுதான் தாமதம், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது, இலங்கை இராணுவத்தின் விமானங்களையும் பாகிஸ்தானியர்கள்தான் செலுத்துகிறார்கள. நாம் பயந்துபோய், சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இலங்கை ஆயுதம் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக இந்தியா ஆயுதம் கொடுக்கிறது என்று நமது பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் கூறுகிறார். இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை, டில்லியிலிருக்கும் நமது அரசு உணரவே இல்லை.

இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு நேரடி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா?

நேரடி ஆதரவு தரவேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. எங்கேயோ இருக்கும் நோர்வே இந்தப் பிரச்சினையில் பஞ்சாயத்து செய்யும்படி விட்டது இந்திய அரசு செய்த மிகப்பெரிய தவறு. இப்போது இந்தப் பிரச்சினை தீர்ந்தாலும்கூட அதில் இந்தியாவில் பங்கு இல்லை என்றாகிவிடுகிறதே, அதுதான் தவறு என்கிறேன்.

அப்படியொரு நிலைப்பாடு எடுத்து நாம் அமைதிப்படையை அனுப்பி அவமானப்பட்டது போதாதா? இன்னொரு முறை இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தலைகுனிந்து நிற்க வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா?

தப்பான நிலைப்பாட்டை அப்போது எடுத்ததால்தானே அப்படியொரு நிலைமை ஏற்பட்டது. அமைதிப்படை ஆயுதம் தாங்க வேண்டிய அவசியம் என்ன? `நமது வீரர்கள் கரப்பந்து விளையாடுகிறார்கள். இந்திய வீரர்கள்தான் செத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று ஜெயவர்தன சந்தோஷமாகச் சொன்னார். அந்த மோதலுக்குக் காரணம் விடுதலைப் புலிகள் அல்ல என்று இந்திய அமைதிப்படைக்குத் தலைமை தாங்கிய திபேந்தர் சிங் தான் எழுதிய புத்தகத்தில் தெளிவாகச் சொல்கிறார். மோதலுக்கு காரணம் `ரோ' உளவுத்துறை செய்த தவறு. இந்த மோதல் ஏற்பட வேண்டும் என்று ஜெயவர்தன விரும்பினார். அது நடந்தது.

ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது மிகப்பெரிய தவறில்லையா? அதற்குப் பிறகும் நாம் எப்படி விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

யார் யாரைக் கொலை செய்தாலும் அது தவறு என்று சொல்பவன் நான். அதுமட்டுமல்ல, நேரு குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவன். ஏழாயிரம் ஈழத்தமிழர்களை இந்திய இராணுவம் படுகொலை செய்ததே என்று அவர்களும் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொன்றுவிட்டனர் என்று நாமும் சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன இலாபம்? நமது நாட்டிற்குள் நுழைந்து நமது முன்னாள் பிரதமரை அவர்கள் கொன்றுவிட்டனர் என்கிறோம் நாம். எங்கள் நாட்டிற்குள் நுழைந்து எங்கள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது உங்கள் இராணுவம் என்கிறார்கள் அவர்கள். இது விடுதலைப் புலிகளின் பிரச்சினையோ, ஈழத் தமிழர் பிரச்சினையோ அல்ல. இந்தியாவுக்கே ஆபத்தை விளைவிக்கும் பிரச்சினையாக மாறிவிட்டிருக்கும் நிலையில் நாம் மௌனம் சாதிப்பது விசித்திரமாக இருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

அந்த இரண்டு கட்சிகளுமே, சாப்பாட்டிற்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வது போலத்தான் ஈழத் தமிழர் பிரச்சினையை அணுகுகிறார்கள். நியாயமாக இந்தப் பிரச்சினையில், மத்திய அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்று சொல்ல வேண்டிய பொறுப்பு இங்கே தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சியிடம் தானே இருக்கிறது? ஆனால், முதல்வர் கருணாநிதி திரும்பத் திரும்ப `மத்திய அரசின் முடிவுதான் எங்கள் முடிவு' என்றல்லவா சொல்கிறார். மேற்கு வங்கத்தில் ஃபராக்கா அணைப்பிரச்சினை வந்தபோது, அன்றைய முதல்வர் ஜோதிபாசு பங்களாதேஷ் அதிபருடன் பேசி எடுத்த முடிவைத் தானே மத்திய அரசு அங்கீகரித்து ஒப்பந்தம் போட்டது. ஜோதிபாசுவுக்கு இருந்த துணிவு தமிழர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த உணர்வும் முதல்வர் கருணாநிதிக்கு இல்லை.

தமிழ் ஈழம் அமையுமேயானால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்காதா? நாளைக்கே தமிழகம் பிரிந்து போக அது வழிகோலாதா?

அது தவறான கண்ணோட்டம். கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து பங்களாதேஷ் உருவானதற்கு இந்தியா துணைபுரிந்தது. ஒரு காலத்தில் ஒன்றாகத்தான் பங்களாதேஷ் இருந்தது. இரண்டு பகுதிகளுமே வங்களா மொழி பேசும் பகுதிகள்தான். மேற்கு வங்கம் பிரிவினை கேட்கிறதா என்ன? தமிழ்நாடு, யாழ்ப்பாணமும் ஒரு காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை. வங்காளி மீது ஏற்படாத சந்தேகம் தமிழன் மீது மட்டும் ஏன் வருகிறது என்பதுதான் எனது கேள்வி. ஆகவே, இந்த வாதத்திற்கு அர்த்தமில்லை.

-தினக்குரல்

தமிழ் ஈழம் அமையுமேயானால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்காதா? நாளைக்கே தமிழகம் பிரிந்து போக அது வழிகோலாதா?

அது தவறான கண்ணோட்டம். கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து பங்களாதேஷ் உருவானதற்கு இந்தியா துணைபுரிந்தது. ஒரு காலத்தில் ஒன்றாகத்தான் பங்களாதேஷ் இருந்தது. இரண்டு பகுதிகளுமே வங்களா மொழி பேசும் பகுதிகள்தான். மேற்கு வங்கம் பிரிவினை கேட்கிறதா என்ன? தமிழ்நாடு, யாழ்ப்பாணமும் ஒரு காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை. வங்காளி மீது ஏற்படாத சந்தேகம் தமிழன் மீது மட்டும் ஏன் வருகிறது என்பதுதான் எனது கேள்வி. ஆகவே, இந்த வாதத்திற்கு அர்த்தமில்லை.

-தினக்குரல்

இதைச் சொல்லி சொல்லியே தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் போல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.