Jump to content

மலேசிய பொதுத் தேர்தல்: வாக்காளர்களை கவர பணம், தமிழ் சினிமா பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய பொதுத் தேர்தல்: வாக்காளர்களை கவர பணம், தமிழ் சினிமா பாடல்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சதீஷ் பார்த்தீபன்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

மலேசிய பொதுத்தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த இரண்டு ஆண்டுகளாக, மலேசிய மக்கள் எதிர்பார்த்த நிகழ்வு எதிர்வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றுதான் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மலேசியா சுதந்திரம் பெற்ற பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு வரை 14 பொதுத்தேர்தல்களை மலேசியர்கள் சந்தித்துள்ளனர். கடந்த தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்கள் அனைத்துமே பெரும்பாலும் அதிக பரபரப்புகளோ, எதிர்பார்ப்புகளோ இன்றிதான் நடந்துள்ளன.

பாரிசான் நேசனல் எனப்படும் தேசிய முன்னணி கூட்டணியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் சொற்ப எண்ணிக்கையிலான தொகுதிகளில் மட்டுமே வென்று வந்துள்ளன.

2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அன்றைய எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய பக்காத்தான் ஹராப்பான் எனப்படும் நம்பிக்கை கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியமைத்து. மலேசியாவில் முதன் முறையாக நிகழ்ந்த ஆட்சி மாற்றம் என்பதால் உலக நாடுகளின் பார்வை அதன் மீது பதிந்தது. அதன் பிறகும் மலேசிய அரசியல் களத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் மலேசிய குடிமக்கள் நான்கு பிரதமர்களைப் பார்த்துவிட்டனர். அரசியல் குழப்பத்தின் உச்சமும், பொருளாதார வீழ்ச்சியும் மலேசியர்களை அதிகம் யோசிக்க வைத்தது எனில், கொரோனா தொற்றுப் பரவலும் சுயநல அரசியலும் அம்மக்களிடம் அச்சத்தையும் ஒருவித கோபம் கலந்த சலிப்பையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம்.

 

வரலாறு காணாத போட்டி

மலேசியாவில் இம்முறை தேர்தல் களம் தொடக்கம் முதலே களைகட்டி உள்ளது. சிறிதும் பெரிதுமாக நான்கு கூட்டணிகள் களமிறங்கி உள்ளன. மலேசியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட தற்போது நான்கு பேர் களத்தில் உள்ளனர். நால்வருமே இன்று வெவ்வேறு அரசியல் கட்சிக் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள போதிலும், கடந்த காலத்தில் ஒரே கட்சியில் இருந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்க அம்சம்.

மகாதீர் மொஹம்மத், அன்வார் இப்ராகிம், நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப், மொஹிதின் யாசின் ஆகிய நால்வரும் பிரதமராகும் கனவுகளோடு, வியூகங்களை வகுத்துள்ளனர். அதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

 

இஸ்மாயில் சப்ரி யாகூப்

பட மூலாதாரம்,ISMAILSABRI60, FACEBOOK

 

படக்குறிப்பு,

நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்

மலேசிய வரலாற்றில் இதுபோன்ற கடும் போட்டி நிறைந்த தேர்தல் நடைபெற்றதில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பிரசாரக் கூட்டங்களின்போது மேடைக்கு எதிரே உள்ள இருக்கைகள் காலியாக காட்சியளிக்கின்றன.

அதேசமயம் சமூக ஊடகங்கள் வழி அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் பிரசார நடவடிக்கைகள் களைகட்டி உள்ளன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் என்று அனைத்துவிதமான வாய்ப்புகள் மூலமாக வாக்காளர்களிடம் 'பேசி' வருகிறார்கள் வேட்பாளர்கள்.

 

கடந்த 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மலேசியா இத்தகைய காட்சிகளைக் காணவில்லை. மாறாக பிரசார கூட்டங்களில் அனல் பறந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

 

தலைவர்கள் எதிர்த்தரப்பின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர். குறிப்பாக அன்றைய ஆளும்தரப்பின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பொதுவெளியில் பரவலாக விவாதிக்கப்பட்டன. இதற்கு சமூக ஊடகங்களும் கைகொடுத்தன.

மூலை முடுக்குகளில் எல்லாம் விவாதங்கள் நடைபெற்றன. ஊழலுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாகவும், மலேசியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றும் பலர் ஆவேசப்பட்டனர்.

 

இத்தனைக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவரான அன்வார் இப்ராகிம் அச்சமயம் சிறையில் இருந்தார். எனினும் அன்வார் அலை வீசியது.

அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கேற்ப, மலேசிய அரசியல் களத்தில் திடீர்த் திருப்பங்கள் நிகழ்ந்தது. பரம எதிரிகள் என்று கருதப்பட்ட அன்வாரும் மகாதீரும் நேசக்கரங்களை நீட்டினர், இணைந்து செயல்பட முடிவெடுத்தனர். தமது 93ஆவது வயதில் மீண்டும் மலேசியாவின் பிரதமரானார். இதை யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?

அதன் பின்னர் அன்வாருக்கு அரச மன்னிப்பு கிடைத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானதும், தேர்தலுக்கு முன்பு செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரிடம் மகாதீர் பிரதமர் பதவியை ஒப்படைக்கத் தவறியதும் மலேசிய அரசியல் வரலாற்றின் குழப்ப பக்கங்களுக்குச் சொந்தமானவை.

40 லட்சம் இளம் வாக்காளர்கள்

 

இளம் வாக்காளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மலேசிய பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 18ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை 21 வயது பூர்த்தியானவர்களே வாக்களிக்க முடியும். எனவே நான்கு மில்லியன் இளம் வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர்.

 

அனைத்து அரசியல் கட்சிகளிலும் இளைஞர் பிரிவு உள்ள போதிலும், இன்றைய இளம் வாக்காளர்களின் மனப்போக்கு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை என்றே பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

எனவே நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இளம் வாக்காளர்கள் உருவெடுக்கக்கூடும்.

"எதிர்வரும் நவம்­பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்­த­லில் 21 மில்­லி­யன் மலேசிய குடிமக்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கட்சி, வேட்பாளர்களை சார்ந்துதான் வாக்களிக்கக்கூடும். எனினும் நாட்டின் பொருளாதாரம், ஸ்திரமான அரசியல் சூழல், புதுத்திட்டங்கள் ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிப்பதற்கும் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் காத்திருக்கக்கூடும்," என்று மலேசிய ஊடகங்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

பொருளாதாரச் சூழல் குறித்து அதிகம் கவலைப்படும் மலேசியர்கள்

 

மலேசிய பொதுத்தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அண்மையில் மெர்டெக்கா சென்டர் என்ற தனியார் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் பங்கேற்றவர்களில் சுமார் 75 விழுக்காட்டினர் நாட்டின் பொருளாதாரச் சூழல்தான் தங்களை அதிக கவலையில் ஆழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 

எனவே இந்த அம்சம் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வெகுவாக சரிந்திருப்பது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை மந்தப்படுத்தி உள்ளது என்பதுடன், ஏற்றுமதி-இறக்குமதியையும் பாதித்துள்ளது.

அதேசமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரித்துள்ளதை மேற்கோள் காட்டி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருவதாகச் சொல்கிறார் மலேசிய மத்திய வங்கி (பேங்க் நேகாரா) ஆளுநர் நோர் ஷம்சியா யூனுஸ் (Nor Shamsiah Yunus). கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 14.2% அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சாமானிய மக்களோ, முட்டை தொடங்கி கோழிகள் வரை, சமையல் எண்ணெய் தொடங்கி காய்கறிகள் வரை அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மனநிறைவை அளிக்கவில்லை என்றும் சமூக ஊடகங்களில் கொந்தளிக்கின்றனர்.

அணிவகுத்து நிற்கும் ஊழல் குற்றச்சாட்டுகள்

நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழல் மோசமடைய முன்னாள் பிரதமர் நஜிப் தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடுகளும் ஊழல் முறைகேடுகளும் முக்கியக் காரணம் என பெரும்பாலானோர் கருதுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் நஜிப்புடன் தொடர்புடைய 1எம்டிபி ஊழல், அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள், அம்னோ கட்சித் தலைவர் சாஹித் ஹமிடி மீதான ஊழல் புகார்கள், அம்னோவில் உள்ள மற்ற மூத்த தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இப்போது அம்னோ கட்சியை உள்ளடக்கிய, தேசிய முன்னணிக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றன.

ஊழல் வழக்கில் நஜிப்புக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டுகால சிறைத்தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து அவர் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். அவரது மனைவி ரோஸ்மாவும் கடும் நெருக்கடியில் உள்ளார்.

கடந்த 2018ஆம் பொதுத்தேர்தலின்போது நஜிப்பையும் ரோஸ்மாவையும் எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின. இருவரது ஊழல்களையும் அம்பலப்படுத்துவோம் என அன்வார் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி உரக்கக் குரல் கொடுத்தது. இதற்கு ஆதரவு கிடைத்ததால்தான் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

இந்நிலையில், மீண்டும் ஊழல் தலைவிரித்தாடக் கூடாது என நினைக்கும் மலேசியர்கள் அன்வாரை ஆதரிக்க வேண்டும் என்ற பழைய முழக்கத்தை அவரது தரப்பு இப்போது முன்வைக்கிறது. ஆனால் இதற்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?

மலேசியாவில் உள்ள எல்லா இனங்களும் எல்லா வேளைகளிலும் சரிசமமாக நடத்தப்படுவதில்லை என்பதை மறுக்க இயலாது என 'மலேசியா இன்று' இணையத்தள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் அரசியல் விமர்சகர் இராகவன் கருப்பையா.

"ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் இன ரீதியாக வரையப்படுவது மலேசியாவில் மட்டுமே நிகழும் ஓர் அதிசயம் என பொருளாதார வல்லுநர்கள் அண்மைய காலமாக கருத்துரைத்து வருவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகக் காண முடிகிறது.

"ஒரே மலேசியா (சத்து மலேசியா), மலேசிய குடும்பம் (கெலுவார்கா மலேசியா), போன்ற பல்வேறு முழக்கங்களை தலைவர்கள் முன்வைக்கின்றனர். ஆனால் அவையெல்லாம் அந்தந்த சமயங்களில் பதவியில் இருங்கும் பிரதமர்களின் அரசியல் விளம்பரத்திற்கு மட்டும்தான் பயன்படுகின்றன," என்கிறார் இராகவன் கருப்பையா.

இந்தியர்களின் உருமாற்றப் பிரிவு, இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு, தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாடு ஆகியவற்றுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குறைபாடு குறித்து இந்தியர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இம்முறை வாக்களிக்க உள்ள 21 மில்லியன் (2.1 கோடி) வாக்காளர்களில் சுமார் 13 மில்லியன் (1.3 கோடி) பேர் மலாய்க்காரர்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்கிறார் மூத்த செய்தியாளர் தமிழ்மணி.

மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் மலாய்க்காரர்களின் வாக்குகள் 150 முதல் 160 தொகுதிகளின் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என்பது இவரது கணிப்பு.

எனவே தேர்தல் களத்தில் உள்ள கூட்டணிகள் மலாய்க்காரர்களை மையப்படுத்தியே எத்தகைய அறிவிப்பையும் வாக்குறுதியையும் வெளியிடுவார் என்பதை தமிழ்மணி கோடிகாட்டுகிறார். "நீண்ட நெடிய காலமாக தேசிய முன்னணி கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள அம்னோ கட்சிக்கு இன வாதமே முக்கியமான அரசியல் முதலீடாகியுள்ளது. இருப்பினும் அக்கூட்டணியில் மலேசிய சீனக் சங்கமும், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் அடிமைகள் போல் உள்ளதால், அவ்வப்போது அக்கூட்டணி தேசியம் குறித்தும் பேசும். அது வெறும் நாடகம்தான்.

"அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்குள் இனவாதமும் மதவாதமும் அறவே இல்லையென்று சொல்லிவிட முடியாது. ஆட்சியில் அமர்ந்து அரசாங்க நிர்வாக இயந்திரத்தை இயக்கும் போதுதான் அதனுடைய முழுமையான சுயரூபமும் வெடிக்க வாய்பிருக்குமென்று," என்கிறார் தமிழ்மணி.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் துணைப் பிரதமராக்க இன்றுள்ள அரசியல் கூட்டணிகள் முன்வருமா? என்ற கேள்வியையும் அவர் எழுப்பி உள்ளார்.

வாக்காளர்களைக் கவர பயன்படும் தமிழ்த் திரைப்பாடல்கள்

இணையம் வழி மேற்கொள்ளப்படும் பிரசாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால், பெரும்பாலான வேட்பாளர்கள் அதில் கவனம் செலுத்துகிறார்கள்.

பிரசாரப் பாடல்களும், வாக்கு சேகரிக்கும் காணொளிகளால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன.

தொகுதி மக்களுக்காக ஆற்றிய பணிகள், புதிய வாக்குறுதிகள், பல்லின மக்களுக்கான திட்டங்கள் குறித்த விவரங்களைப் பாடல் வரிகளாக மாற்றியுள்ளனர். இம்முறை தேர்தல் பிரசாரத்தில் 'டிக்டாக்' செயலியும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

இளைய தலைமுறையினரைக் கவர இச்செயலிதான் வேட்பாளர்களுக்கு வெகுவாகக் கைகொடுக்கிறது.

நன்கு அறிமுகமான சில வேட்பாளர்களை பல லட்சம் பேர் 'டிக்டாக்'கில் பின்தொடர்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரின் ரசிகர். அதனால் இந்தியர்கள் மத்தியில் அவர் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு எம்ஜிஆர் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக 'நான் ஆணையிட்டால்' பாடல் பின்னணியில் ஒலிக்க வாக்கு சேகரிக்கிறார் அன்வார். சில இடங்களில் அந்தப் பாடலின் சில வரிவகளை அவர் பாட முயற்சி செய்கிறார். இதேபோல் மற்ற தமிழ் வேட்பாளர்களும், தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடி வாக்கு சேகரிப்பதைக் காண முடிகிறது.

வாக்களிக்க பணம் தரப்படுவது உண்மையா?

 

வாக்களிக்க பணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழகத்தில் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகப் பரவலாகப் பேசப்படுவதுபோல், மலேசியாவிலும் தேர்தல் சமயங்களில் வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த பொதுத்தேர்தலின்போது கேமரன் மலை தொகுதியில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சிவராசா. எனினும் அத்தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர், தேர்தல் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுத்தார். விசாரணையின் முடிவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த புகார் நிரூபணமானதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால் சிவராசா தமது எம்பி பதவியை இழந்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, போட்டி கடுமையாக உள்ள தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, அன்றைய ஆளும் கட்சிகளில் ஒன்றான அம்னோ தலைமை சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், நடப்புத் தேர்தலிலும், வாக்களிக்கப் பணப் பட்டுவாடா நடந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

அரசாங்கம் முன்பே அளித்த திட்டங்களின் அடிப்படையிலும் வேறு சில காரணங்களை முன்வைத்தும் ஆளும் தரப்பினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.

தபால் வாக்குகளை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் முந்நூறு மலேசிய ரிங்கிட் விநியோகிப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

தேர்தல் களத்தில் யார் அலை வீசுகிறது?

தேர்தல் அறிக்கையில் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தும் விதமாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது தேசிய முன்னணி (பாரிசான் நேசனல்).

அன்வார் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) சமூகப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து அதன் அடிப்படையில் வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.

கடந்த 2018 பொதுத்தேர்தலில் அன்வாருக்கு ஆதரவான அலை வீசியது என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பு அன்றைய ஆளும் கட்சிக்கு எதிரான வீசியது என்றும் இன்றளவும் கூறி வருகின்றனர்.

அன்வாரின் முழக்கங்களை ஏற்றுக்கொண்டு அவரது தரப்பிடம் ஆட்சிப் பொறுப்பை மலேசியர்கள் ஒப்படைத்தனர். எனினும் அவர் அந்த வாய்ப்பை, ஆட்சியை பாதுகாக்கத் தவறிவிட்டார் என்ற விமர்சனம் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே உள்ளது.

தற்போதுள்ள ஆட்சியாளர்கள் இம்முறையும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். பிரசார கூட்டங்கள், நடவடிக்கைகளில் ஏராளமானோர் பங்கேற்காவிட்டாலும், தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை மலேசியர்கள் முன்பே தீர்மானித்துவிட்டனர். எனவே மலேசியாவில் எந்தத் தலைவர், அரசியல் கட்சி, கூட்டணிக்கு ஆதரவான அலை வீசியது என்பது தேர்தல் முடிவடைந்த பிறகே தெரிய வரும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

https://www.bbc.com/tamil/articles/c10d5r4r88qo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு - இன்றே முடிவுகள் வெளியாகும்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சதீஷ் பார்த்தீபன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

மலேசிய பொதுத்தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மலேசிய நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய அரசை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இது மலேசிய நாடாளுமன்றத்தின் 15ஆவது பொதுத்தேர்தலாகும். இந்தத் தேர்தலில் மொத்தம் 2.1 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 21லிருந்து 18ஆக குறைக்கப்பட்டுள்ளதால் இன்றைய தேர்தலில் 40 லட்சம் இளம் வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்க உள்ளனர்.

 

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அனைத்துக் கட்சிகளும் சமூக ஊடகப் பிரசாரங்களில் தீவிர கவனம் செலுத்தின. தமிழ் மக்களைக் கவர எம்ஜிஆர் பாடல்கள் உட்பட தமிழ்த்திரைப்பட பாடல்கள் பிரசார களங்களில் பயன்படுத்தப்பட்டன.

கொரோனா காரணமாக மலேசிய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த நேரத்தில் தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

மலேசியாவில் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், சில இடங்களில் கனமழையைப் பொருட்படுத்தாமல், மக்கள் வாக்களிக்க திரண்டிருந்தனர். தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற முழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சாலை சுங்க கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தல் களத்தில் நான்கு கூட்டணிகள் களமிறங்கி உள்ளன. பிரதமர் பதவிக்கு ஆறு பேருக்கு இடையே நேரடியாகவும் மறைமுகமாகவும் போட்டி நிலவுகிறது.

எனினும், 70 மலாய் பேராசிரியர்களைக் கொண்ட குழு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பதாக கூறியுள்ளதை அடுத்து, கடைசி நேரத்தில் பிரதமர் பதவிக்கான போட்டியில் அன்வார் முன்னிலை வகிப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) அதிக நாடாளுமன்ற இடங்களைப் பிடிக்கும் என்றும், ஆனால் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

“தற்போது நிலைமை நன்றாக உள்ளது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என பினாங்கு மாநிலத்தில் வாக்களித்த பின்னர் அன்வார் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறினார்.

தங்கள் கூட்டணி தனிப்பெரும்பான்மையை இலக்காக கொண்டுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட தயார் என்று நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.

 

மலேசிய பொதுத்தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மலேசிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. பாடாங் செராய் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் காலமானதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 221 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்கு மலேசியாவில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் எந்த கூட்டணி 90 முதல் 100 தொகுதிகளைக் கைப்பற்றுகிறதோ, அந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும், வலிமையைப் பெறும் என்கிறார் செல்லியல் இணையதள ஆசிரியர் இரா.முத்தரசன்.

வாக்குப்பதிவுக்காக விடுமுறை அளிக்கப்பட்டதால், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சாலைகள் போக்குவரத்து இன்றி அமைதியாக காணப்படுகின்றன.

இன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு, நள்ளிரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cjr29827n18o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.