Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தி திணிப்பு: நடிகர் சித்தார்த் போட்ட பதிவு - வைரலாகும் சம்பவம் - ஆதரவு கொடுத்த மதுரை எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தி திணிப்பு: நடிகர் சித்தார்த் போட்ட பதிவு - வைரலாகும் சம்பவம் - ஆதரவு கொடுத்த மதுரை எம்.பி

சித்தார்த்

பட மூலாதாரம்,ACTOR SIDDHARTH

4 மணி நேரங்களுக்கு முன்னர்

மதுரை விமானநிலையத்தில் தனது பெற்றோர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசச்சொல்லியும் தொடர்ந்து இந்தியிலேயே பேசியதாகவும் நடிகர் சித்தார்த் பகிர்ந்த சமூக ஊடக பதிவு ஒன்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

 

கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்துவரும் சித்தார்த், தனது பெற்றோருடன் விமானப்பயணத்திற்காக மதுரை விமானநிலையம் சென்றபோது அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து அதில் சாடியுள்ளார். பாதுகாப்பு சோதனையின் போது, எவ்வளவு சொல்லியும் அதிகாரிகள் தன்னிடம் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

 

 

இதுமட்டுமல்லாமல், அவரது பெற்றோரின் பைகளில் இருந்த நாணயங்களை கூட அவர்கள் வெளியே எடுக்கச் சொன்னதாகவும், வேலையற்றவர்கள் தங்களது அதிகாரத்தைக் காட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.  

 

24 மணிநேரம் மட்டுமே இருக்கக்கூடிய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வாயிலாக சித்தார்த் செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட ஒரு பதிவில், "மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் (அதிகாரிகளால்) 20 நிமிடம் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம். அவர்கள் வயதான எனது பெற்றோரின் பைகளில் இருந்த நாணயங்களை வரைக்கும் அகற்றச் செய்தார்கள். மேலும் ஆங்கிலத்தில் பேசச் சொன்ன பிறகும் எங்களிடம் பலமுறை இந்தியில் பேசினர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவில் இது இப்படித்தான் நடக்கும் எனக் கூறினர். வேலையற்றவர்கள் தங்களது அதிகாரத்தைக் காட்டுகின்றனர்," எனத் தெரிவித்திருந்தார்.

 

மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) கையாளுகிறது. இருப்பினும், சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், சிஆர்பிஎஃப் பிரிவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

 

கவனிக்கப்பட்ட சித்தார்த்தின் பழைய இடுகைகள்

இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இவ்விவகாரம் தொடர்பாக தகுந்த விசாரணை மேற்கொள்ள கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், "மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக 

திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமானநிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவு சமூக ஊடக பயனர்கள் மத்தியில் கவனம் பெற்றதோடு மொழி பயன்பாடு தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சித்தார்த்தின் பதிவு இப்படி பேசுபொருளாவது இது முதன்முறை அல்ல. 

 

சுமார் இருபது ஆண்டுகளாக திரைத்துறையில் நடிகராக இருந்துவரும் சித்தார்த் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். திரைத்துறை சம்பந்தப்பட்ட பதிவுகளைக் கடந்து சமூகம் குறித்தும் அரசியல் குறித்தும் தனது கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கும் ஒருசில நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். இவரது கருத்துக்கள் பலநேரம் நேர்மறையான விவாதங்களோடு ஆதரவுகளைப் பெற்றாலும் எதிர்மறை விமர்சனங்களையும் அவ்வப்போது பெற்று சர்ச்சையாகும். 

பாஜகவினர் மீது புகார் தெரிவித்த சித்தார்த்

குறிப்பாக மத்திய அரசின் பல செயல்பாடுகளை கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார் சித்தார்த். சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடங்கி மத்திய அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் வரை பலவற்றைத் தொடர்ந்து விமர்சித்துள்ளார். 

 

தேவையில்லாத திட்டத்திற்கு 20,000 கோடி செலவிடப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்கும் பொதுச் சுகாதாரத்துக்கும் இந்த நிதியைப் பயன்படுத்தலாம் என மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சென்ட்ரல் விஸ்டா திட்டம் குறித்து சித்தார்த் பதிவிட்ட பதிவு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்வினைகளை பெற்றது. அதேபோல மத்திய அரசின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் தனது சமூக ஊடக பக்கத்தில் விமர்சித்திருக்கிறார் சித்தார்த். 

 

இதன் விளைவாக பாஜகவைச் சேர்ந்தவர்களால் தான் மிரட்டப்படுவதாகவும் பின்னாட்களில் சித்தார்த் தெரிவித்தார். பாஜகவின் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப பிரிவு அவரது தொலைபேசி எண்ணை ஆன்லைனில் கசியவிட்டதால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மற்றும் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு காவல்துறை முன்வந்தது. ஆனால், "இந்தச் சலுகையை நான் பணிவுடன் விட்டுக்கொடுக்க விரும்புகிறேன். ஏனென்றால் இந்தத் தொற்றுநோய் காலத்தில் இந்த அதிகாரிகள் தங்களது நேரத்தை வேறு ஏதேனும் சிறப்பான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம்" எனப் பாதுகாப்பை நிராகரித்தார். 

 

ஆனால், இப்படி பாதுகாப்பு கொடுக்க முன்வந்த தமிழ்நாடு காவல்துறையே சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பிய நிகழ்வும் பிற்காலத்தில் நடந்தது. 

நடிகர் சித்தார்த்

பட மூலாதாரம்,WORLDOFSIDDHARTH INSTAGARAM

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோதி பஞ்சாப் சென்றிருந்த போது, ஃபெரோஸ்பூரில் போராட்டக்காரர்கள் நடத்திய முற்றுகையால் பிரதமரின் கான்வாய் மேம்பாலத்தில் சிக்கியது. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி என்பதால் இவ்விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. அப்போது, பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து சாய்னா நேவால் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட்டிற்கு சித்தார்த் பதிலளித்தார். நடிகரின் இந்தப் பதிவு பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. 

 

இவ்விவகாரம் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வரை சென்றது. இந்த ட்வீட் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த புகார்களின் அடிப்படையில் சித்தார்த் தரப்பு விளக்கத்தைப் பெற அவருக்கு சம்மன் அனுப்பியது காவல்துறை. பின்னர் இதற்காக சித்தார்த் மன்னிப்பு கோரினார்.

 

இதேபோல பாஜக இளம் தலைவர் தேஜஸ்வி சூர்யாவை பயங்கரவாதி அஜ்மல் கசாப்புடன் அவர் ஒப்பிட்டதும் மிகப்பெரிய சர்ச்சையானது. 

 

அரசியலைக் கடந்து இந்தி திணிப்புக்கு எதிரான இவரது ட்வீட்களும் இந்தியா முழுதும் அதிகம் கவனிக்கப்பட்டு வந்திருக்கின்றன. புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்தின் போது, அது இந்திக்கு சாதகமாக இருப்பதாக சில கருத்துக்கள் எழுந்தன. இதனால் இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துக்கள் மீண்டும் தமிழக அரசியல் களத்தில் ஒலிக்க ஆரம்பித்தன. இதுகுறித்தும் சித்தார்த் அப்போது பேசத் தவறவில்லை. 

நடிகர் சித்தார்த்

பட மூலாதாரம்,WORLDOFSIDDHARTH INSTAGRAM

இது தொடர்பான அவரது அடுத்தடுத்த ட்வீட்களில், "சகோதரர்களே இந்தியை விட பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பல மொழிகளை சவுத்வாலா என்று இணைப்பதை முதலில் நீங்கள் நிறுத்துங்கள்! இரண்டாவதாக, நமது மாநிலங்கள் மற்றும் மொழிகளின் பெயர்களைக் கற்று, பெயர்களைச் சரியாக உச்சரிக்க முயற்சியுங்கள்.

 

யாரும் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை. பிரச்னை இந்தி திணிப்பில் உள்ளது. அழகான பிராந்திய மொழிகளைக் கற்க இந்தி பேசுபவர்களிடமிருந்து எந்த முயற்சியும் இல்லை. ஆங்கிலம் போன்ற நடுநிலையான, திறமையான இரண்டாம் மொழியை விட இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற முட்டாள்தனமான எதிர்பார்ப்பு ஏன்?

 

தாய்மொழியான தமிழ் மொழி பேசுபவர் இந்தி கற்பதற்கும், அதைப் படித்து அதில் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. நான் 5 மொழிகளைப் பேசுகிறேன், 10 மொழிகளைப் புரிந்துகொள்கிறேன். நான் அவற்றைக் கற்க வேண்டிய கட்டாயம் இல்லை, அது அப்படித்தான் இருக்க வேண்டும். இந்தியா என்பது பல மொழிகளின் கலவையாகும். அதனை அப்படியே இருக்க விடுங்கள்," எனப் பதிவிட்டார். இது இந்திய அளவில் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது. 

 

இதேபோல நவாஸுதீன் சித்திக் நடிப்பில் உருவான தாக்கரே படத்தின் ட்ரைலர் வெளியான போது, அது தென்னிந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாக விமர்சித்தார். அதேபோல பாலிவுட் நடிகை சைரா வாசிம் மதத்தினை காரணம் காட்டி திரையுலகிலிருந்து விலகுவதாக அறிவித்தபோது, "நமது கலை மற்றும் தொழில் தான் நமது வாழ்க்கை என்று நான் நம்புகிறேன். மதத்தை அதிலிருந்து விலக்கி வைக்கப் போராடுகிறோம். இங்கு மதத்திற்கு இடமில்லை" என்ற சித்தார்த்தின் கருத்து பல தரப்பிலும் நேர்மறையான எதிர்வினைகளைப் பெற்றது. 

 

இப்படி சமூக ஊடகம் மூலமாகத் தொடர்ந்து தனது அரசியல் மற்றும் சமூகநிலைபாட்டை முன்னிறுத்திவரும் சித்தார்த் இம்முறை தான் சந்தித்த தனிப்பட்ட பிரச்னையை முன்வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

பிரதமரின் கான்வாய்

பிரதமரின் கண்ணும் வாயும் எப்படி மேம்பாலத்தில் சிக்கியது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

பிரதமரின் கண்ணும் வாயும் எப்படி மேம்பாலத்தில் சிக்கியது?

பிரதமரின் பாதுகாப்பு வாகனத் தொடரணி(convoy) ஆங்கில உச்சரிப்பை தமிழ்நாட்டில் இவ்வாறே குறிக்கின்றனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் சித்தார்த் விளக்கம்: "இந்தி புரியுமில்ல? நாங்க எதை அகற்ற சொல்றோமோ அதுதான் விதி" - மதுரை விமான நிலைய சம்பவம் முழு விவரம்

நடிகர் சித்தார்த்

பட மூலாதாரம்,SIDDHARTH INSTAGRAM PAGE

2 மணி நேரங்களுக்கு முன்னர்

மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறிய பிறகும் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து இந்தியிலேயே பேசியதாகவும் நடிகர் சித்தார்த் சமூக ஊடகத்தில் பதிவிட்டது இணையத்தில் பேசுபொருளான நிலையில், விமான நிலையத்தில் என்ன நடந்தது என்ற விரிவான விளக்கத்தை நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தனது பெற்றோருடன் விமானப் பயணத்திற்காக மதுரை விமான நிலையம் சென்றிருந்தபோது அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து தனது முந்தைய பதிவில் சாடியிருந்தார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடம் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம். அவர்கள் வயதான எனது பெற்றோரின் பைகளில் இருந்து நாணயங்கள் வரை அனைத்தையும் அகற்றுமாறு கூறினார்கள்.

அதோடு, ஆங்கிலத்தில் பேசுமாறு கூறிய பிறகும் எங்களிடம் பலமுறை இந்தியில் பேசினார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது இந்தியாவில் இப்படித்தான் நடக்கும் எனக் கூறினர். வேலையற்றவர்கள் தங்கள் அதிகாரத்தைக் காட்டுகின்றனர்,” என தெரிவித்திருந்தார்.

மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப் கையாளுகிறது. இருப்பினும், சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சிஆர்பிஎஃப் பிரிவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

 

அவருடைய பதிவுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்படப் பலரும் எதிர்வினையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் என்ன நடந்தது என்பதை விவரமாக விவரித்து, சித்தார்த் இன்ஸ்டாகிராமில் மீண்டுமொரு பதிவை இட்டுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் என்ன நடந்தது என்ற சித்தார்த்தின் விளக்கமான பதிவின் சாராம்சம் கீழே.

 

“விமான நிலைய சம்பவத்துக்கு பின்னர், தங்களின் அனுபவம் குறித்து பலரும் என்னிடம் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். பல்வேறு ஊடகங்களும் என்னைத் தொடர்புகொண்டு வருகின்றன. எனது அனுபவத்தை இங்கு தெரிவிப்பது சரியாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். என் மீது வெளிச்சம் பாய்ச்சுவதை விட இந்த விவகாரத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறேன். தேவையில்லாத கவனக் குவிப்பு என் குடும்பத்தினரை மேலும் கவலை அடையச் செய்யும்.

 

மதுரை விமான நிலையத்திற்கு இதற்கு முன்னரே பலமுறை சென்று வந்துள்ளேன். ஆனால், இதுவரை இப்படி ஓர் அசௌகர்யமான சூழலை எதிர்கொண்டதில்லை.

 

மூன்று முதியவர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் சில பெரியவர்கள் என இந்த முறை எனது குடும்பத்தினருடன் நான் பயணித்தேன். விமான நிலையத்தில் கூட்டம் இல்லாததால் போர்டிங் நேரத்திற்கு முன்பாகவே பாதுகாப்பு தொடர்பான செயல்முறைகளை முடிக்கச் சென்றோம்.

பாதுகாப்பு வரிசையும் ஆளின்றி இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம். கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்திருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படையைச் சேர்ந்த நபர், குழந்தைகளின் பாஸ்போர்ட் உட்பட எங்களின் அடையாள அட்டைகளை சோதனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது, எனது முகத்தையும் ஆதார் அட்டையிலிருந்த என் புகைப்படத்தையும் பார்த்துவிட்டு ‘ யே தும் ஹோ’ என்று கூச்சலிட்டார்.

"நான்தான் அது என்றும் ஏன் இப்படிக் கேட்டீர்கள்?" என்றும் அவரிடம் கேட்டேன். அப்போது சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார்.

Instagram பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Instagram பதிவின் முடிவு

பின்னர், அடுத்த நபர், "ஹிந்தி சமஜ்தே ஹை நா? (இந்தி புரியுமில்ல?) " என்று கூச்சலிட்டார். நாங்கள் பதிலளிக்கும் முன்னரே, அவர் கண்ணில் பட்ட ஐபாட், ஐஃபோன் ஆகியவற்றை வெளியே விசிறினார். பின்னர், எனது இயர்போனை எடுத்து வீசினார். ஏற்கெனவே பல்வேறு விமான நிலையங்களில், இயர்போன் போன்ற மின்சார கருவிகளை நாங்கள் திருட்டு சம்பவம் காரணமாக இழந்துள்ளதால், அவற்றை ட்ரேவில் வீச வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். அதற்கு இது மதுரை என்றும் இவைதான் விதிகள் என்றும் எங்களிடம் கூறப்பட்டது.

 

முதியவர்கள் இருப்பதால் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும்படி அவரிடம் கூறினேன்.

பின்னர், அவர்கள் எனது அம்மாவின் பர்ஸை வெளியே எடுத்து அதன் உள்ளே நாணயங்கள் உள்ளதா என்று கேட்டனர். அவர் ஆம் என்று கூறியபோது, அவற்றையெல்லாம் வெளியே எடுக்கும்படி கூறினர்.

நாணயங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஸ்கேனர் கருவியில் அவை தெளிவாகத் தெரியும் என்பதால், ஏன் அவற்றை வெளியே எடுக்க வேண்டும் என்றும் நான் அவர்களிடம் கேட்டேன்.

"நாங்கள் எதை அகற்றக் கூறுகிறோமோ அதை அகற்ற வேண்டும். அதுதான் இந்தியாவில் விதி" என்று அவர்கள் பதில் அளித்தனர்.

70 வயதைக் கடந்தவரிடம் இவ்வாறு கூறுவது சரியில்லை என்றும் ஏதாவது தவறு நடந்து விட்டதா, ஏன் இப்படி அடாவடியாகப் பேசுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன்.

 

ஸ்கேனர் கண்காணிப்பில் இருந்த மற்றொரு நபர் என் சகோதரியிடம் சிரிஞ்சுகளை எடுத்துச் செல்கிறீர்களா என்று சத்தமாகக் கேட்டார்.

மருத்துவ விவரங்களையெல்லாம் ஏன் அவர்கள் கேட்கிறார்கள்.

மக்களின் தனிப்பட்ட தகவல்களை இப்படி வெளியிடுவது சரியானது தானா?

இந்தி திணிப்பு

பட மூலாதாரம்,@ACTOR_SIDDHARTH

இவை 'துன்புறுத்தல்' என்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மேலும், "வந்ததில் இருந்து நீங்கள் கத்திக்கொண்டே இருக்கிறீர்கள்" என்று கூறியதோடு ஆங்கிலத்தில் உரையாடுமாறு கேட்டேன்.

அப்போது, இந்தியாவில் விதிகள் மற்றும் வரைமுறைகள் உள்ளன என்று எனக்கு பதில் கிடைத்தது.

 

இதிலேயே 20 நிமிடங்கள் கடந்துவிட்டன.

மூத்த அதிகாரியிடம்  பேசுமாறு என்னிடம் கூறப்பட்டது. நான் முக கவசத்தைக் கழற்றியதும் என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் ‘நான் உங்கள் ரசிகன். தயவுசெய்து நீங்கள் போகலாம்’ என்றார்.

என்னை அடையாளம் தெரிந்து நீங்கள் காட்டும் கரிசனம் எனக்குத் தேவையில்லை என்று அவரிடம் கூறினேன்.

 

என்னை அடையாளம் தெரிந்ததால் நீங்கள் மன்னிப்பு கூறினீர்கள்.

இதுபோன்ற இன்னல்களை எதிர்கொள்ளும் சாதாரண மக்களின் நிலை என்ன? பெரியோரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன்.

விமான நிலையத்தைப் பாதுகாப்பது என்பது கடினமான காரியம். அதை யாரும் மறுப்பதில்லை. ஆனால் அவர்கள் செயல்பட்ட விதம் சரியல்ல.

 

இந்த விவகாரத்தில் எனக்கு எதிராகவோ யாருக்கும் எதிராகவோ எவ்வித கொள்கைகளையும் சுமத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிறப்பு கவனிப்பு வழங்குங்கள் என்றூ நான் கேட்கவில்லை. நான் எதிர்பார்ப்பது எல்லாம் பெரியவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே" என்று சித்தார்த் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cd1z6n5v424o

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பிரதமரின் பாதுகாப்பு வாகனத் தொடரணி(convoy) ஆங்கில உச்சரிப்பை தமிழ்நாட்டில் இவ்வாறே குறிக்கின்றனர்.


இதுகூட ஒரு வகையிலான மொழிப் பிரயோகத்தைப் பிறழ்வாக்கி அழிக்கும் உத்தியே. இதனைத் தமிழக எழுத்தர்கள் உட்பட ஊடகங்கள் கவனத்திற் கொள்ளாதிருப்பது வியப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.