Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்க திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்க திட்டம்!

அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்க திட்டம்!

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவின் தலைவர்கள், அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்குவதற்கான புதிய விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள மற்ற தலைவர்களுடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதனடிப்படையில், பிரித்தானியாவின் ரோல்ஸ் ராய்ஸ் தயாரித்த உலைகள் உட்பட, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய கடற்படையை உருவாக்க குறித்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்.

Aukus ஒப்பந்தத்தின் கீழ், அவுஸ்ரேலியா முதலில் அமெரிக்காவிலிருந்து குறைந்தது மூன்று அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறும். மேற்கு அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா சில நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்தும். இவை பிரித்தானிய வடிவமைப்புகள் மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல்களாக இருக்கும்.

2030ஆம் ஆண்டுகளில் அவுஸ்ரேலியா ஐந்து அமெரிக்க வர்ஜீனியா தர அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும்.

2021ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்தோ-பசிபிக் பாதுகாப்பு உடன்படிக்கை, சீனாவின் வளர்ந்து வரும் சக்தி மற்றும் பிராந்தியத்தில் உறுதியான நிலைப்பாட்டை எதிர்கொள்ளும் முயற்சியாகக் கருதப்படுகிறது மற்றும் இது சீனாவிடம் இருந்து கண்டனத்தைப் பெற்றுள்ளது.

https://athavannews.com/2023/1327399

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் 3 வல்லரசுகள் உருவாக்க திட்டமிடும் அணுசக்தி நீர்மூழ்கி படை - இதை சீனா எதிர்ப்பது ஏன்?

சீனாவுக்கு எதிராக ஆக்கஸ் ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,கேத்தரின் ஆம்ஸ்ட்ராங், பிரான்சிஸ் மாவோ & டாம் ஹூஸ்டன்
  • பதவி,லண்டன், சிங்கப்பூர், சிட்னியில் இருந்து
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய - பசிஃபிக் பிராந்தியத்தில் சீன செல்வாக்கை எதிர்கொள்ள அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் படையை உருவாக்க அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. அது குறித்த விவரங்களையும் அந்நாடுகள் வெளியிட்டுள்ளன.

ஆக்கஸ் என அழைக்கப்படும் இந்த மூன்று நாடுகளின் ஒப்பந்தப்படி, ஆஸ்திரேலியா முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை பெறுகிறது. குறைந்தபட்சம் 3 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் உருவாக்கிய ரோல்ஸ்-ராய்ஸ் அணுஉலைகளை உள்ளடக்கிய அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் படையை உருவாக்க இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

"தவறான பாதையில் மூன்று நாடுகள்"

3 நாடுகளின் இந்த கடற்படை ஒப்பந்தத்தை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.

 

"3 நாடுகளும் மேலும் மேலும் தவறான, ஆபத்தான பாதையில் அடியெடுத்து வைக்கின்றன" என்று சீன வெளியுறவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

அணுஆயுத பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கு நாடுகள் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக ஐ.நா.வுக்கான சீன தூதர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆனால் அந்த பிராந்தியத்தில் அமைதியை பராமரிக்கும் நோக்கிலேயே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் அணுசக்தியால் இயங்குபவையே தவிர, அணுஆயுதங்களைக் கொண்டவை அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கலிஃபோர்னியாவின் சான்டியாகோ நகரில் பிரிட்டன், ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்த பைடன், அணுசக்தி அல்லாத நாடாக நீடித்திருக்க வேண்டும் என்ற ஆஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை இந்த ஒப்பந்தம் சீர்குலைக்காது என்றார்.

சீனாவுக்கு எதிராக ஆக்கஸ் ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சான்டியாகோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ்

ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை, அதன் ராணுவ வலிமையை வலுப்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். பிரிட்டனுக்குப் பிறகு, அமெரிக்காவின் அதிநவீன அணுசக்தி தொழில்நுட்பத்தைப் பெறும் இரண்டாவது நாடு ஆஸ்திரேலியாதான்.

ஆஸ்திரேலியாவிடம் தற்போதுள்ள டீசல் எஞ்சின் நீர்மூழ்கிக் கப்பல்களைக் காட்டிலும் அதிக தொலைவிலும், அதிவேகத்திலும் அந்நாட்டின் கப்பல் படை செயல்பட முடியும். இதன் மூலம் எதிரிகளின் நீண்ட தூர இலக்குகளையும் தாக்கும் வல்லமையை ஆஸ்திரேலியா முதன் முதலாகப் பெற்றிருக்கிறது.

இந்த ஒப்பந்தப்படி, ஆஸ்திரேலிய கப்பல் படை மாலுமிகள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளங்களுக்கு இந்த ஆண்டு முதல் அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கே, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற பயிற்சியை அவர்கள் பெறுவார்கள்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அமெரிக்காவும், பிரிட்டனும் 2027-ம் ஆண்டு முதல் சிறிய அளவில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் படைத் தளத்தை பராமரிக்கும்.

2030களின் தொடக்கத்தில் அமெரிக்காவிடம் இருந்து 3 விர்ஜினியா வகை நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்கும். தேவை மற்றும் விருப்பத்தைப் பொருத்து, அதே வகை நீர்மூழ்கிக் கப்பல்களில் மேலும் இரண்டை ஆஸ்திரேலியா வாங்கிக் கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது.

சீனாவுக்கு எதிராக ஆக்கஸ் ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

அணுசக்தியால் இயங்கும் விர்ஜினியா வகை நீர்மூழ்கிக் கப்பல்

அதன் பிறகு, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்காக முழுக்கமுழுக்க புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து, நிர்மாணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் எஸ்.எஸ்.என்.-ஆக்கஸ் என்று அழைக்கப்படும்.

இந்த தாக்குதல் வகை அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷ் வடிவமைப்பின் அடிப்படையின் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் கட்டப்படும். 3 நாடுகளின் சிறந்த தொழில்நுட்பங்களும் அதில் பயன்படுத்தப்படும்.

இந்திய, பசிஃபிக் பிராந்தியம் சுதந்திரமான, திறந்த வெளியாக இருப்பதை உறுதி செய்ய 3 நாடுகளும் உறுதிபூண்டிருப்பதாக பைடன் தெரிவித்தார்.

"இந்த புதிய கூட்டணி மூலம், ஜனநாயக சக்திகள் சுய பாதுகாப்பையும், வளத்தையும் எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என்பதை நாங்கள் வெளிக்காட்டியுள்ளோம். இது நமக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிற்குமானது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் கட்டும் திறனை அதிகரிக்கவும், தற்போதுள்ள அணுசக்தியால் இயங்கும் விர்ஜினியா வகை நீர்மூழ்கி கப்பல்களின் பராமரிப்பை மேம்படுத்தவும் 4.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பேனிஸ் பேசுகையில், "இந்த திட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த 30 ஆண்டுகளில் 368 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு பிடிக்கும். ஆஸ்திரேலிய வரலாற்றில் அதன் பாதுகாப்புத் திறனை அதிகரிக்க ஒரே நேரத்தில் செய்யப்படும் மிகப்பெரிய முதலீடு இது" என்று கூறினார்.

ஆஸ்திரேலிய கப்பல் கட்டும் தளங்களில் நீர்மூழ்கிகளை கட்டுவது உள்நாட்டில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

இதேபோல், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சூனக்கும், இந்த நீர்மூழ்கிகளை கட்டும் பணிகள் நடக்கவுள்ள டெர்பி மற்றும் பரோ-இன்-ஃபர்னஸ் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார்.

ஆக்கஸ் கூட்டணி உருவாக்கப்பட்ட பிறகு கடந்த 18 மாதங்களில் உலகின் நிலைத்தன்மைக்கான சவால்கள் அதிகரித்திருப்பதாக ரிஷி சூனக் கூறினார்.

"யுக்ரேன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்பு, அதிகரித்து வரும் சீனாவின் சீற்றம், இரான் மற்றும் வட கொரியாவின் மோசமான நடத்தை ஆகிய அனைத்துமே ஆபத்து, சீர்குலைவு, பிளவுபட்ட உலகை உருவாக்க அச்சுறுத்துகின்றன" என்கிறார் அவர்.

அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக, எதிரி நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொருட்டு பிரிட்டனின் பாதுகாப்பு செலவை அடுத்த 2 ஆண்டுகளில் 6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரிக்க ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.

2021-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் ராணுவக் கூட்டணி குறித்து சீனா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் ஆயுதப் போட்டியை உருவாக்கும் ஆபத்து கொண்டது என்று சீன வெளியுறவுத்துறை கடந்த வாரமும் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

ஆனால், இந்திய, பசிஃபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அந்த 3 மேற்கத்திய நாடுகளும் கூறுகின்றன.

மூன்று தலைவர்களுமே, இந்த ஒப்பந்தம் தங்களுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று வலியுறுத்திச் சொன்னாலும் கூட, இதற்கு அரசியல் எதிரொலி இல்லாமல் இல்லை.

இதற்காகவே, பிரான்சுடன் செய்து கொண்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள டீசல் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது. இது பிரான்சுடன் அரசியல் கருத்துவேறுபாடு உருவாகக் காரணமானது.

அத்துடன், ஆஸ்திரேலியா தனது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனாவுடன் கொண்டுள்ள உறவில் தர்மசங்கடத்தை எதிர்கொண்டுள்ளது. சீனாவுடன் வலுவான வர்த்தக உறவுகளை வைத்துக் கொள்ளும் அதேநேரத்தில், அமெரிக்காவுடனான ராணுவ உறவையும் தொடர்ந்து வலுப்படுத்த முடியுமா என்பதே ஆஸ்திரேலியா முன்புள்ள கேள்வி என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/cld16yd5q9lo

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கஸ்: சீனாவை எதிர்க்கும் நீர்மூழ்கி தயாரிக்க பிரிட்டன் நிறுவனத்துக்கு ரூ.40,000 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்ட பின்னணி

ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம்

பட மூலாதாரம்,BAE SYSTEMS

படக்குறிப்பு,

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் இணைந்து திட்டமிட்டுள்ளன.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பீட்டர் ஹோஸ்கின்ஸ்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், புதிய தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்ட ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பிரிட்டனின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் பெற்றுள்ளது.

2030 களின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்குவதற்கான ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த விவரங்களை மார்ச் மாதம், மூன்று நாடுகளும் அறிவித்தன.

BAE சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சார்லஸ் வுட்பர்ன் கூறுகையில், "இந்த முக்கியமான, மூன்று நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை நிறைவேற்றுவதில் எங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு இருக்கிறது என்ற தகவலால் நாங்கள் நம்பமுடியாத அளவிற்கு பெருமிதம் கொள்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த தசாப்தத்தின் இறுதியில் கப்பல் கட்டும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2028 ஆம் ஆண்டுக்கான திட்டப் பணிகளுக்கு இந்த நிதி வழங்கப்படும் என்று BAE தெரிவித்துள்ளது.

ஆக்கஸ் (AUKUS) திட்டம் என்றால் என்ன?

சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்தன.

இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

ஆக்கஸ் என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் ராணுவப் பரவல் குறித்து மூன்று நாடுகளும் கவலை கொண்டுள்ளன.

இந்த நிலையில்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அப்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆஸ்திரேலியாப் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டனர்.

"இந்தக் கூட்டு முயற்சி இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும். நமது நலன்களுக்கும் மதிப்புக்கும் உதவும் வகையில் பயன்படுத்தப்படும்" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

பிரிட்டன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஆஸ்திரேலியாவின் படைத் திறனை ஒரு குறிப்பிட்ட, அடையக் கூடிய கால அளவுக்குள் மேம்படுத்தி அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே இந்தக் கூட்டுத் திட்டத்தின் நோக்கமாகும்" என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

இருப்பினும் அணு ஆயுதமற்ற நாடாக நீடித்திருப்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருக்கும் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சைபர் திறன்கள், செயற்கை நுண்ணறிவு, "கடலுக்கு அடியில் கூடுதலாகத் திறன்" ஆகியவற்றிலும் இந்தக் கூட்டு முயற்சி கவனம் செலுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மூன்று நாடுகளும் இயற்கையான கூட்டாளிகள் என்றும், இந்தக் கூட்டணி முன் எப்போதையும் விட நெருக்கமாக வந்திருப்பதாகவும் அப்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.

"இந்தக் கூட்டு நமது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும்,, மக்களைக் காக்கவும் இன்றியமையாதது" என்று அவர் தெரிவித்தார்.

இந்தோ- பசிபிக் பிராந்தியம் பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கொண்ட, தீர்க்கப்படாத தகராறுகள் நீடித்திருக்கக் கூடிய, மோதல் ஏற்படும் ஆபத்துகள் நிறைந்திருக்கும் ஒரு பகுதியாகும் என்று பிரிட்டன், அமெரிக்க, ஆஸ்திரேலியக் கூட்டறிக்கை கூறுகிறது.

 
ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆக்கஸ் பாதுகாப்பு திட்டத்துக்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சீனாவின் எதிர்வினை என்ன?

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்த உடன்பாட்டை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. "சற்றும் பொறுப்பில்லாதது" என்றும், "குறுகிய மனப்பாங்கு" கொண்டது என்றும் சீனா இத்திட்டம் குறித்து விமர்சித்தது.

"பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். ஆயுதப் போட்டியை உருவாக்கும் திட்டம்" என சீனா அப்போது கூறியிருந்தது. "இது காலாவதியான பனிப்போர் மனநிலை" என்றும் குற்றம்சாட்டியிருந்தது.

"ஆஸ்திரேலியா தன்னைத்தானே சீனாவின் எதிரியாக மாற்றிக் கொண்டிருக்கிறது" என்று "குளோபல் டைம்ஸ்" செய்தித்தாள் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தது.

சீனாவை எதிர்க்க ஆஸ்திரேலியா தேர்வு செய்யப்பட்டது ஏன்?

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா விளங்கி வந்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளுக்கும் இடையே பல பிணக்குகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த காலத்தில் இரு நாடுகளும் நெருக்கமான உறவைக்கொண்டிருந்தன.

பசிபிக் தீவுகளில் சீனா செய்துவரும் பரவலான முதலீடுகள் மேற்கத்திய நாடுகளையும் அதிருப்தியடைச் செய்திருக்கின்றன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கும் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றன.

இப்படியொரு சூழலில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பகையை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்வதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 
ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சான் டீகோவில் நடைபெற்ற ஆக்கஸ் நிகழ்வு ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் (உள்ளூரில் ஆல்பனேஸீ என அழைக்கப்படுகிறார்) ஆகியோர் பங்கேற்றனர்.

பிரிட்டன் நிறுவனத்திடம் நீர்மூழ்கி தயாரிப்புப் பணி ஒப்படைக்கப்பட்டது ஏன்?

இந்நிலையில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தின் புதிய விவரங்களை நேச நாடுகள் தற்போது வெளியிட்டுள்ளன.

முதல் SSN-Aukus நீர்மூழ்கிக் கப்பலை 2030 களின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டும் SSN-Aukus நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தும். இது பிரிட்டன் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

"ஆக்கஸ் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் இந்த பல பில்லியன் பவுண்டுகள் முதலீடு என்பது, நீண்ட காலத்திற்கு செயல்திறன் மிக்க பங்களிப்பை அளிக்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கானது என்பது மட்டுமல்லாமல், பிரிட்டனுக்குத் தேவைப்படும் நமது வியூகங்களைப் பராமரிக்கவும், உலகளாவிய நாடுகளின் வரிசையில் எங்களின் முன்னணி இடத்தைப் பாதுகாக்கவும் உதவும்," என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் மான்செஸ்டரில் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கேற்கையில் கூறினார்.

ராயல் நேவியால் இயக்கப்படும் மிகப்பெரிய, சக்திவாய்ந்த மற்றும் மேம்பட்ட தாக்குதல் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலாக SSN-Aukus இருக்கும் என்று BAE கூறியுள்ளது. மேலும் அது கம்ப்ரியாவில் இருக்கும் பாரோ-இன்-ஃபர்னஸில் உள்ள அந்நிறுவனத்தின் தளத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் அஸ்டுட் கப்பலைப் போன்றதாகவே இருக்கும்.

இந்த ஒப்பந்தம், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் பாரோ-இன்-ஃபர்னஸ் கப்பல் கட்டும் தளத்தில் பல ஆண்டுகளுக்கு வேலை அளிக்கும் திட்டமாக இருக்கும்.

மேலும், இந்த ஒப்பந்தம் அந்த தளத்தில் குறிப்பிடத்தக்க முதலீடாக இருப்பதோடு, மேலும் ஐந்தாயிரம் பேருக்கு வேலை அளிக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

BAE நிறுவனம் பிரிட்டனில் 39,600 நபர்களை வேலைக்கு வைத்துள்ளது. இதுமட்டுமின்றி, 93,000 க்கும் அதிகமான உலகளாவிய பணியாளர்களுக்கு வேலை அளித்துள்ளது என்று இந்நிறுவனத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.

நீர்மூழ்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரிட்டனில் உள்ள மற்ற பெரிய பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களுக்கும் ஆக்கஸ் ஒப்பந்தத்தில் இருந்து வருமானம் கிடைக்கும்.

SSN-Aukus கப்பல்களுக்கு சக்தி அளிக்கும் அனைத்து அணு உலை ஆலைகளையும் ரோல்ஸ் ராய்ஸ் நீர்மூழ்கிக் கப்பல்கள் வழங்கும் என்று மார்ச் மாதம் உறுதி செய்யப்பட்டது .

ரோல்ஸ் ராய்ஸ் ஒப்பந்தத்தின் விளைவாக டெர்பியில் உள்ள அதன் ரேன்ஸ்வே கட்டுமானத் தளத்தின் அளவை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்குவதாக கடந்த ஜுன் மாதம் கூறியிருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தின் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பராமரிக்கும் நிறுவனமான பாப்காக் இன்டர்நேஷனல், SSN-Aukus வடிவமைப்பில் பணியாற்ற பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக ஞாயிற்றுக்கிழமையன்று கூறியது.

செப்டம்பரில் 2021 இல் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஆக்கஸ் பாதுகாப்பு கூட்டணிக்கு எதிராக சீனா பலமுறை விமர்சித்துள்ளது.

எது எப்படி என்றாலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மூன்று மேற்கத்திய நாடுகளும் இணைந்து ஸ்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

https://www.bbc.com/tamil/articles/c97myymgj0go

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.