இரான் ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவியது எப்படி? அவசர விசாரணை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,அராட் நகரில் இரான் ஏவுகணை நேரடியாகத் தாக்கிய இடத்தைப் பார்வையிடும் தீவிர மரபுவழி யூத குடியிருப்பாளர்கள் கட்டுரை தகவல் செபாஸ்டியன் அஷர், அராட், ஜரோஸ்லாவ் லுகிவ், மற்றும் பேட்ரிக் ஜேக்சன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இஸ்ரேலிய அணுசக்தி நிலையத்திற்கு அருகே இரு நகரங்களில் இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 180 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை (மார்ச் 21) மாலை இரு நகரங்களின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில், அராட் நகரில் 116 பேரும், டிமோனா நகரில் 64 பேரும் காயமடைந்ததாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. டிமோனா நகருக்கு வெளியே சுமார் 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அணு ஆராய்ச்சி நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியுள்ளது. முன்னதாக, சனிக்கிழமை இரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. ஞாயிற்றுக்கிழமை, டெல் அவிவ் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் காயமடைந்ததாக அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளன. பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, தெஹ்ரான் இஸ்ரேல் மீது 400 ஏவுகணைகளை வீசியுள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது. இதில் 92% ஏவுகணைகள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக அது மேலும் கூறியுள்ளது. அராட் நகரில், சனிக்கிழமை கேட்ட வெடிப்புச் சத்தங்கள் மிகவும் திகிலூட்டுவதாக இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஏவுகணைத் தாக்குதலால் பல கட்டடங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. தரையில் ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த கட்டடத்திற்குள் பொருட்கள் விழுந்து நசுக்கியதில், "தலை மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயமடைந்த பல குழந்தைகளை" தான் பார்த்ததாக அந்த ஊரைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் நரம் சையத் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார். "உடைந்த கண்ணாடிகளால் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில், தலையில் காயமடைந்த 10 வயது சிறுமியை நான் தேற்ற முயன்றேன்," என்று அவர் கூறினார். "அவளுடைய பெற்றோர் கட்டடத்திற்குள்ளேயே சிக்கி இருந்ததால், அவள் ஆம்புலன்ஸில் ஏற மறுத்துவிட்டாள். இடிந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவளது பெற்றோர் மீட்கப்படும் வரை நாங்கள் காத்திருந்து, பின்னர் அவர்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம்." தாக்குதலின் வேகத்தில் இரண்டு குடியிருப்பு கட்டடங்களின் வெளிப்புறச் சுவர்கள் பெயர்ந்து போயிருந்தன. நெகேவ் பாலைவனத்தில் உள்ள இந்தத் தீவிர மரபுவழி யூதர்கள் வாழும் நகரில், கருப்பு நிற உடை அணிந்த ஆண்கள் கூட்டமாக நின்று அந்தச் சேதங்களை உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,தெற்கு இஸ்ரேலின் அராட் நகரில் இரான் வீசிய ஏவுகணை அடுக்குமாடி குடியிருப்புகளைத் தகர்த்தது டிமோனா நகரிலும் இதேபோன்ற ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு காயமடைந்த பலரில் 10 வயது சிறுவனும் ஒருவன். அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர். "டிமோனா மற்றும் அராட் ஆகிய இரு நகரங்களிலும், ஏவுகணைகளை இடைமறிக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகள் இலக்கைத் தவறவிட்டன. இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள வெடிபொருட்களை கொண்ட இரு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேரடியாகத் தாக்கின" என்று இஸ்ரேலிய தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். அஹ்மதியல் பென் யெஹுதா, டிமோனாவில் ஏவுகணை விழுந்த இடத்திலிருந்து இரண்டு நிமிட நடைப்பயணத் தொலைவில் வசிக்கிறார். தாக்குதல் நடந்தபோது, தான் பாதுகாப்பு அறைக்கு செல்லும் படிக்கட்டுகளில் இருந்ததாக அவர் கூறுகிறார். "எனது வீடு உட்பட பல வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன, ஜன்னல்கள் உடைந்து சிதறின." என்றார் அவர். ஏவுகணை விழுந்த வீதியைப் பார்வையிடச் சென்ற பென் யெஹுதா, "ஒரு மழலையர் பள்ளி உட்பட அந்தப் பகுதியே உருக்குலைந்து போயுள்ளது" என்றார். பலருடைய அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக அழிந்துவிட்டதை அவர் நேரில் பார்த்தார். "நான் பயங்கரமான அச்சத்தை உணர்ந்தேன். ஒரு ஏவுகணை கான்கிரீட் கட்டடங்களுக்கு இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அழிவைப் பார்ப்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது." இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) பாதிப்புக்குள்ளான இடங்களைப் பார்வையிட்டனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நெதன்யாகு அராட் நகரில் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிடுகிறார் இரான் இஸ்ரேலுக்குள் தொடர்ந்து இத்தகைய சேதங்களை ஏற்படுத்தும் திறன் கொண்டிருப்பது, இந்தப் போரினால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகளை நினைவூட்டுகிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஏவுகணைகள் எவ்வாறு ஊடுருவின என்பதைக் கண்டறிய அவசர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெகேவ் பாலைவனத்தில் அமைந்துள்ள 'ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையம்' பொதுவாக "டிமோனா அணு உலை" என்று அழைக்கப்படுகிறது. மத்திய கிழக்கின் ஒரே அணு ஆயுதக் கிடங்கு இருப்பதாக நம்பப்படும் ஒரு இடமாக அது உள்ளது. பட மூலாதாரம்,Maxar படக்குறிப்பு,2020-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஷிமோன் பெரெஸ் நெகேவ் அணு ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக, இந்தத் தளம் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், கடந்த ஆறு தசாப்தங்களாக இஸ்ரேல் இங்கு அணு குண்டை உருவாக்கியது என்பது வெளிப்படையான ரகசியமாகும். இருப்பினும், அடுத்தடுத்து வந்த இஸ்ரேலிய அரசாங்கங்களும் இது குறித்து தெளிவற்ற நிலையையே பராமரித்து வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் அணு ஆயுத வல்லமை கொண்ட ஒரே நாடாக இஸ்ரேல் உள்ளது. எனவே, இந்த தளம் இலக்கு வைக்கப்படுவதற்கான எந்தவொரு அறிகுறியும் இஸ்ரேலால் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும், இரான் அணு குண்டை தயாரிப்பதற்கான எந்தவொரு சாத்தியமான திறனையும் அழிப்பதையே இந்தப் போரின் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளன. நடான்ஸ் மீதான தாக்குதலை அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று இரானின் அணுசக்தி அமைப்பு வர்ணித்துள்ளது. இருப்பினும், "கதிரியக்க கசிவு ஏதும் ஏற்படவில்லை" என்றும், "சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்றும் அது கூறியுள்ளது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரின் முதல் நாட்களிலும், கடந்த ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரின் போதும், அமெரிக்க - இஸ்ரேல் படைகளால் நடான்ஸ் குறிவைக்கப்பட்டது. சனிக்கிழமை நடான்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டபோது, அந்தப் பகுதியில் இத்தகைய தாக்குதல் நடந்ததாகத் தங்களுக்குத் தெரியாது என்று இஸ்ரேலிய மற்றும் சர்வதேச ஊடகங்களிடம் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. கூடுதல் தகவல்கள்: டாம் பென்னட் மற்றும் கேப்ரியலா பொமரோய். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gdxx1jnpgo
By
ஏராளன் · 10 minutes ago 10 min
Archived
This topic is now archived and is closed to further replies.