Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்கான தீர்வு, மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா அக்கறை காண்பிக்கவேண்டும் - அமெரிக்கத்தூதுவரிடம் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

18 JUL, 2023 | 09:41 AM
image
 

(நா.தனுஜா)

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்கும் விவகாரத்தில் அமெரிக்கா அவதானம் செலுத்த வேண்டும் என்றும், தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வலுவான நிலைப்பாட்டை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அது மாத்திரமன்றி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓரளவுக்கு மிதவாதத் தலைவராக இருந்தாலும், அவரால் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியாது என்றும், அதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்றும் அவர்கள் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், குருந்தூர் மலை விவகாரம், காணி அபகரிப்பு, பயங்கரவாதத் தடைச் சட்டப்பிரயோகம் உள்ளிட்ட விவகாரங்களுக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கூறுவது ஒன்றாக இருக்கின்றபோதிலும், யதார்த்தத்தில் நடைபெறுகின்ற விடயங்கள் வேறொன்றாக இருப்பதாக தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்த்தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று தூதுவரின் அழைப்பின்பேரில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு தூதுவர் இல்லத்தில் நடைபெற்றது. 

சுமார் இருமணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தனும், ரெலோ சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் கட்சித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின் தொடக்கத்தில் கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், இவ்வார இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படும் பின்னணியில், மேலோட்டமாகப் பார்க்கையில் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பது போல் தெரிவதாகவும், எனவே இதுபற்றிக் கேட்டறிவதற்காகவே அனைத்துத் தரப்பினருக்கும் ஒருமித்து  அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலளித்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த தமது நிலைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர். அதன்படி முதலில் கருத்து வெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படும் விடயங்களையும், தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ்மக்களிடம் கூறப்படும் விடயங்களையும் அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் ஏனைய கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கும் எமது நிலைப்பாட்டுக்கும் இடையில் பெருமளவான வித்தியாசங்கள் ஏதுமில்லை. 

ஆனால் தேர்தல் முடிவடைந்த பின்னர் அவர்களது நிலைப்பாட்டுக்கும் எமது நிலைப்பாட்டுக்கும் இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் என்பது ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழுள்ள ஒரு விடயம். 

எனவே, அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வைக் கோரவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ முடியாது. எனவே இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது' என்று விளக்கமளித்துள்ளார்.

அதேவேளை, அரசியல் தீர்வு விடயத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு குறித்துத் தூதுவருக்கு விளக்கமளித்த சுமந்திரன், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியம் என்பதில் தமக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வையே தாம் கோருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை இந்தியா வலியுறுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டுக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை நினைவுகூர்ந்த அவர், அதற்கு முன்னர் வரையில் '13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதேவேளை, அதற்கு அப்பால்சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்கவேண்டும்' என்று வலியுறுத்திவந்த இந்தியா, அக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு மாத்திரம் வலியுறுத்துவதைத் தாம் அவதானித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

எனவே, ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தம் குறித்து தாம் எதனையும் கூறவில்லை என்றும், ஆகையினாலேயே இம்முறை 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்தி அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் தாம் கையெழுத்திடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன் ஆகியோர் சமஷ்டி முறையிலான தீர்வு அவசியம் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தற்போது இருப்பதையும் கைவிட்டுவிடக்கூடாது என்பதாலேயே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதாகவும், அதனைத் தீர்வுக்கான ஆரம்பமாக நோக்குவதாகவும் அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகளின் மாறுபட்ட நிலைப்பாடுகளை செவிமடுத்த அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், அடுத்து வரும் தேர்தல் சார்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கக்கூடிய அழுத்தங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியதுடன் ரணில் விக்ரமசிங்க குறித்த தமிழ்க்கட்சிப் பிரதிநிதிகளின் நிலைப்பாட்டையும் கேட்டறிந்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த பிரதிநிதிகள், ரணில் விக்ரமசிங்க ஓரளவுக்கு மிதவாதத்தலைவராக இருந்தாலும்கூட, அவரால் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கமுடியாது என்றும், அவரைச்சுற்றி அதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தூதுவரிடம் எடுத்துரைத்த அவர்கள், காணி விடுவிப்பு, தொல்லியல் விவகாரம் போன்றவற்றில் ஜனாதிபதி கூறுவது ஒன்றாக இருந்தாலும், பேச்சுவார்த்தைக்கு அழைத்து நல்லிணக்கத்துக்குத் தயார் என்பதுபோல காண்பித்தாலும், உண்மையில் நடப்பது வேறொன்றாக இருப்பதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். இதுபற்றிக் கருத்துரைத்த தூதுவர் ஜுலி சங், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் பதிவாகும் கரிசனைக்குரிய விடயங்கள் குறித்து தாம் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாகக் கூறிவருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சந்திப்பின்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழித்தல், படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கண்டறிதல், மனிதப்புதைகுழிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தல் என்பன உள்ளடங்கலாகத் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/160263

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.