Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 SEP, 2023 | 10:24 AM
image
 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் பேரவையின் தலைவர் வக்லவ் பலெக்கின் (செக் குடியரசு தூதுவர்) தலைமையில் இன்று திங்கட்கிழமை (11) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.

ஜெனிவா நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒருமாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. 

அதன்படி 54 ஆவது கூட்டத்தொடரின் முதலாம்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் ஆரம்ப உரை இன்று இடம்பெறும். 

அதனைத்தொடர்ந்து இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்படும். 

அதற்கு இலங்கை சார்பில் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்த வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக தலைமையிலான பிரதிநிதிகள் குழு பதிலளிக்கும்.

இக்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படாத போதிலும், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவிருப்பதுடன் இதில் உறுப்புநாடுகள் பங்கேற்கும். அதேபோன்று கூட்டத்தொடரின் இரண்டாம் வார நிகழ்வுகளைப் பொறுத்தமட்டில் 19 ஆம் திகதி செவ்வாய்கிழமை வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் இடம்பெறும்.

இதன்போது இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள், அச்சம்பவங்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டல், இழப்பீடு வழங்கல் மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பன பற்றியும் விரிவாக ஆராயப்படும்.

https://www.virakesari.lk/article/164284

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கு பொறுப்புக்கூறல் மிகவும் அவசியமானது - ஐநா

Published By: RAJEEBAN

11 SEP, 2023 | 05:30 PM
image
 

இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கை அதிகாரிகளிற்குள்ளது என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடாநசீவ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 54வது அமர்வு இன்று ஆரம்பமானவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை நடத்துவதை தாமதிப்பதும் 13வது திருத்தத்தின் கீழ் மாகாணசபைகளை மறுசீரமைப்பதும் அரசியலில் பங்கெடுப்பது மற்றும் வாக்காளர்களின் சுதந்திரமான வெளிப்பாடு ஆகியவற்றிற்கான உரிமைகளை மட்டுப்படுத்துகின்றது.


அரசாங்கத்தின் பொருளாதார மீட்சி கொள்கைகள் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதன் கடப்பாடுகளால் வழிநடத்தப்படவேண்டும்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைகளை மறுப்பது மக்கள் தங்கள் உண்மையான துயரங்களை வெளிப்படுத்துவதை ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதை  தடுக்கும் இதனால் நாட்டில் மேலும் பதற்றம் உருவாகும்.


உண்மையை கண்டறிவது மாத்திரம் போதுமானதல்ல அதனுடன் பொறுப்புக்கூறலிற்கான தெளிவான அர்ப்பணிப்பும் இணைந்திருக்கவேண்டும்.
சர்வதேச தற்காலிக சிறப்பு நீதிமன்றங்கள் மூலமும்இதனை முன்னெடுக்கவேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சுயாதீன வெளிப்படையான ஒரு பின்தொடர்தல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் தொடர்ச்சியாக இலங்கைக்கு பரிந்துரை செய்து வந்துள்ளார்.

இதனை முழுமையான சர்வதேச மற்றும் பாதிக்கப்பட்டவர்களின்  பிரதிநிதிகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/164346

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது இலங்கை

Published By: RAJEEBAN

11 SEP, 2023 | 05:10 PM
image
 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல்தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஜெனீவா ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக  தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைபேரவையின் 54 அமர்வின் ஆரம்பத்தில் நேற்று இலங்கையின் நிலைப்பாட்டை முன்னிறுத்தி உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டத்தை சந்தேகத்திற்குரிய ஆணை என வர்ணித்துள்ள அவர் மேலும்தெரிவித்துள்ளதாவது,

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழிவகுத்த இரண்டு 46.1 - 51.1 தீர்மானங்களையும் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது என்பதை நான் ஆரம்பத்திலேயே தெரிவிக்க விரும்புகின்றேன். எழுத்து மூல அறிக்கைகளையும் முடிவுகளையும் பரிந்துரைகளையும் நாங்கள் நிராகரிக்கின்றோம்.

இந்த தீர்மானங்களின் காணப்படும் உள்ளடக்கங்களை ஏற்றுக்கொள்ளாததால் பல நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன அல்லது அதில் வாக்களிப்பதை தவிர்த்தன  என்பதை நாங்கள் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். குறிப்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை  அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை. ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளமை முன்னொருபோதும் இடம்பெறாத விடயம்.

இது மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் பேரவைக்கு வழங்கிய ஆணைக்கு அப்பால் செல்கின்றது என்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது. இந்த தீர்மானங்கள் உள்விவகாரங்களில் தலையிடுபவை சமூகங்களை துருவமயப்படுத்துபவவை.

மேலும் இந்த தீர்மானங்களை மனித உரிமைகளிற்கு அப்பாற்பட்ட காரணங்களிற்காகவும் தங்களின் உள்நாட்டு அரசியலுக்காகவும்  ஒரு சில நாடுகள் பின்பற்றுகின்றன. இந்த தீர்மானத்தின் நிதிசார்ந்த தாக்கங்கள் குறித்து பல நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. இது பேரவையினதும் உறுப்பு நாடுகளினதும் வளங்கள் மீது பயனற்றவிதத்தில் செலவுகளை உருவாக்ககூடியது என்பதை இலங்கை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிவந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கை இதற்கு ஒத்துழைப்பு வழங்காது. எனினும் பல்தரப்பு கட்டமைப்பில் ஆக்கபூர்வமாக பங்கெடுக்கின்ற நாடு என்ற அடிப்படையிலும் சர்வதேச சமூகத்துடனான எங்களின் ஆழமான ஈடுபாட்டை கருத்தில் கொண்டும் இலங்கை பேரவையின் ஏனைய பொறிமுறைகளுடன் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை தொடர்ந்தும்பேணும்.

https://www.virakesari.lk/article/164354

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை தருமாறு பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன-ஐநாவின் பிரதி மனித உரிமை ஆணையாளர்

Published By: RAJEEBAN

11 SEP, 2023 | 08:35 PM
image
 

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பத்துபேரின் விபரங்களை தருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திடம் பல நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன என ஐக்கியநாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல் நசீவ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் உரிய தகவல்கள் ஆதாரங்களை வழங்குவதற்காகவும் உரிய நீதித்துறை மற்றும் ஏனைய செயற்பாடுகளிற்கு ஆதரவை வழங்குவதற்காகவும் தனது அலுவலகம் ஆதாரங்கள், தகவல்களை சேகரித்துப் பாதுகாத்து ஆராயும் நோக்கில் பொறுப்புக்கூறல் திட்டத்தை ஆரம்பித்துள்ளது என  குறிப்பிட்டுள்ளார்.

தனது திட்டத்திடமிருந்து தகுதிவாய்ந்த அதிகாரிகள்  அதிகளவில் வேண்டுகோள்களை விடுக்கின்றனர்  குறிப்பாக பத்துபேர் குறித்த விபரங்களை கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/164365

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் அவசியம் - ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச நாடுகள் வலியுறுத்தல்

11 SEP, 2023 | 09:50 PM
image

(நா.தனுஜா)

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. 

இங்கு ஐ.நா மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையைத் தொடர்ந்து ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உரையாற்றினர்.

அதன்படி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சார்பில் பேரவையில் உரையாற்றிய பிரதிநிதி, அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், ஒன்றுகூடுவதற்குமான பொதுமக்களின் உரிமைக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டும் என வலியுறுத்தினார். 

அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நீண்டகாலமாக உண்மை மற்றும் நீதிக்காகக் காத்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் அதேவேளை பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்றார்.

 அதேவேளை அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வட மெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்ரனேக்ரோ ஆகிய இணையனுசரனை நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி, இலங்கையில் அதிகாரப்பகிர்வு மற்றும் காணி விடுவிப்பு என்பன இன்னமும் கரிசனைக்குரிய பிரச்சினைகளாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார். 

அத்தோடு கடந்தகால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த அவர், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் பட்சத்தில், பாதிக்கப்பட்டோர் உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுப்பதன் ஊடாக மாத்திரமே அது வெற்றிகரமானதொரு பொறிமுறையாக இயங்கமுடியும் எனக் குறிப்பிட்டார்.

 அர்த்தபூர்வமான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி, சகல தரப்பினருடனும் கலந்துரையாடி மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென ஜப்பான் பிரதிநிதி வலியுறுத்தினார். 

அது மாத்திரமன்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளடங்கலாக நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்குத் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

மேலும் நியூஸிலாந்து, ஓமான், எகிப்து, லக்ஸம்பேர்க், ஜேர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், துருக்கி, கியூபா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை தொடர்பில் பேரவையில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/164368

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதி, சமத்துவம், சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யுங்கள் - ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தல்

Published By: DIGITAL DESK 3

12 SEP, 2023 | 02:44 PM
image

(நா.தனுஜா)

நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவற்றை மேம்படுத்துவதிலும் 51/1 தீர்மானம் நேர்மறையானதொரு வகிபாகத்தைக் கொண்டிருக்கவில்லை என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. அன்றைய தினம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையும், அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளின் உரையும் இடம்பெற்றது.

அதன்படி இந்தியா சார்பில் பேரவையில் உரையாற்றிய மணி பாண்டேவினால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையின் அயல்நாடு மற்றும் நெருங்கிய நட்புநாடு என்ற ரீதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் நிவாரணம், புனர்வாழ்வளித்தல், மீள்குடியேற்றம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் ஆகியவற்றை முன்னிறுத்திய இலங்கையின் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்கிவந்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதற்கு சுமார் 4 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய உதவிகளை இந்தியா வழங்கியிருக்கின்றது.

இந்தியா எப்போதும் இரண்டு அடிப்படைக்கொள்கைகளின் பிரகாரமே செயற்பட்டுவருகின்றது. நீதி, சமத்துவம், கௌரவம், சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் இலங்கையின் ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவையே அவையாகும். 

இவ்வாறானதொரு பின்னணியில் நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்திசெய்யும் என்றும், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தல் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் ஆகிய கடப்பாடுகளை நிறைவேற்றும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவது குறித்து இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கும் உத்தரவாதத்தைக் கவனத்திற்கொள்ளும் அதேவேளை, அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் போதுமானவையாக இல்லை. ஆகவே அனைத்துப் பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான தமது கடப்பாடுகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை பேரவையில் உரையாற்றிய சீனப்பிரதிநிதி, நல்லிணக்கம், மீளக்கட்டியெழுப்பல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நலிவடைந்த நிலையிலுள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், பொருளாதார மீட்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல் என்பன உள்ளடங்கலாக மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலை முன்னிறுத்தி இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை, சமூக உறுதிப்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய விடயங்களில் தாம் இலங்கைக்கு வலுவான ஆதரவை வழங்குவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானமானது நியாயத்துவம் மற்றும் பக்கச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு அமையவில்லை என்பதுடன், சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதியையும் பெறவில்லை. அதுமாத்திரமன்றி இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவற்றை மேம்படுத்துவதிலும் இத்தீர்மானம் நேர்மறையானதொரு வகிபாகத்தைக் கொண்டிருக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது நாடுகளின் இறையாண்மை மற்றும் அரசியல் சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றும், மனித உரிமைகளின் மேம்பாட்டுக்காக அந்நாடுகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை அங்கீகரிக்கவேண்டும் என்றும் கருதுகின்றோம்' என்றும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/164403

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ரீதியான தன்முனைப்பின்மையால் உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் தோல்வி - ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டு

Published By: DIGITAL DESK 3

13 SEP, 2023 | 10:39 AM
image

(நா.தனுஜா)

இலங்கையில் அரசியல் ரீதியான தன்முனைப்பின்மை மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றமை என்பவற்றின் காரணமாக உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. அன்றைய தினம் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையும், அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின் உரையும் இடம்பெற்றது. அதன்படி பேரவையில் உரையாற்றிய மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளால் இலங்கை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களைப் பாதிக்கக்கூடியவகையில் அண்மையகாலங்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் மிகுந்த விசனமடைகின்றோம். முறையான நீதிக்கட்டமைப்பின்றி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனையானது கடந்தகாலக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மீண்டுமொரு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவது குறித்துக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாததன் விளைவாக, இத்தகைய ஆணைக்குழுக்களின்மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்.

அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள தமிழ்மக்களின் சில வழிபாட்டுத்தலங்கள் தொல்லியல் பகுதியாக அறிவிக்கப்படுவது குறித்தும், நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக அவ்விடங்களில் பௌத்த சின்னங்கள் ஸ்தாபிக்கப்படுவது குறித்தும் நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கின்றோம். இச்செயன்முறையை சீரமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன், குறித்தவொரு பகுதியை தொல்லியல் இடமாக அறிவிப்பதற்கு விஞ்ஞானபூர்வமான முறையைப் பயன்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்று மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவையின் பிரதிநிதி தெரிவித்தார்.

சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு

அரசியல் ரீதியான தன்முனைப்பின்மை மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றமை என்பவற்றின் காரணமாக உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் தோல்வியடைந்துள்ளன. தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் உரியவாறான தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யவில்லை. 

வட, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களை ஒடுக்குவதற்கு அரச அதிகாரிகள் மற்றும் மதத்தலைவர்கள் பயன்படுத்தப்படல், சிவில் செயற்பாடுகளில் மிகையான அளவில் படையினர் ஈடுபடுத்தப்படல் என்பன தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழி உள்ளடங்கலாக அனைத்து மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர் என்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

பிரான்ஸ் தமிழர்கள் அமைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்காகக் காத்திருக்கின்றனர். இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஆகியவற்றின் மூலம் இப்பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளித்துவருகின்றன. அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தினால் சிறுபான்மையினத் தமிழ்மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரான்ஸ் தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதி கரிசனை வெளியிட்டார்.

உலகளாவிய எவான்ஜலிகல் கூட்டணி

அண்மையில் நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களின் மதவழிபாட்டுத்தலங்கள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகள் இனங்களுக்கு இடையிலான அமைதியின்மை நிலையைத் தோற்றுவிக்கக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தின. அதேபோன்று பெருமளவான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் ஆகியவற்றின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 

உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை என்று உலகளாவிய எவான்ஜலிகல் கூட்டணியின் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/164457

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.