Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில். விடுதியில் இருந்து சிறுமியின் சடலம் மீட்பு ; பாட்டியாரும் சுயநினைவற்ற நிலையில் மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

13 SEP, 2023 | 09:45 AM
image
 

யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் பாட்டியும், பேத்தியும் தங்கியிருந்த நிலையில், பேத்தியான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பாட்டி சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் தங்குமிட விடுதியில், திருகோணமலையைச் சேர்ந்த பாட்டியும், அவரது பேத்தியான சிறுமியும், வாடகைக்கு அறை எடுத்து கடந்த சில நாட்களாக தங்கி இருந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அறையை திறந்து பார்த்த போது, சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிறுமி உயிரிழந்து 03 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

அதேவேளை, சிறுமியின் பாட்டி அருகில் இருந்த கட்டிலில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்தனர் 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/164453

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நஞ்சூட்டி கொல்லப்பட்ட 12 வயது சிறுமி : பாட்டி கைது!

death.jpg

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பாட்டி கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி பாட்டியினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளதையடுத்து, 53 வயதான ஓய்வு பெற்ற குடும்ப நல உத்தியோகத்தரான அவரை இன்று நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று முன்தினம் சிறுமியொருவர் சடலமாகவும் மற்றொரு பெண் மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் யாழ் மாவட்ட நீதவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

சிறுமி திருகோணமலையில் தனது தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ள நிலையில், பாட்டி மற்றும் சிறுமி இருவரும், கடந்த 9ஆம் திகதி அந்த விடுதிக்கு சென்றுள்ளனர்.
உளச்சிக்கலுக்காக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற வந்ததாகவும் விடுதியில் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் இருவரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியே வராத நிலையில் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

பொலிஸார் விடுதி அறையின் கதவை உடைத்தபோது சிறுமி உயிரிழந்த நிலையிலும் பாட்டி மயக்கமுற்ற நிலையிலும் காணப்பட்டனர். இதனையடுத்து சிறுமியின் பாட்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை கோப்பாய் பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

சிறுமியின் சடலம் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஆபத்தை ஏற்படுத்தும் மருந்து வழங்கப்பட்டு கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதன்போது விடுதியில் கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், தனக்கு கடுமையாக உளச்சிக்கல் உள்ளதாகவும் சாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாகவும். தான் இறந்த பின்னர் எனது பேத்தி தனிமையில் கஷ்டப்படுவார் என்பதால் இருவரும் சாக எண்ணினோம். எமது மரணத்திற்கு யாரும் பொறுப்பில்லை. எங்கள் சடலங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம் வைத்தியசாலை ஊடாகவே அடக்கும் செய்யவும் என அந்த கடிதத்தில் குறித்த பெண் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைய அக்கடிதத்தின் அடிப்படையில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/273028

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் விடுதியில் சடலமாக சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் : நீதிமன்றில் ஆஜராகவுள்ள பாட்டி! - முக்கிய ஆதாரமாக சிக்கிய கடிதம்

Published By: DIGITAL DESK 3

14 SEP, 2023 | 01:28 PM
image
 

யாழ். திருநெல்வேலி பகுதியிலுள்ள விடுதியிலிருந்து 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பாட்டி (அம்மம்மா) கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.

சிறுமி தனது பாட்டியால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை உறுதியானதையடுத்து, 53 வயதுடைய ஓய்வுபெற்ற குடும்ப நல உத்தியோகத்தரான சந்தேக நபரை இன்று வியாழக்கிழமை (14) நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்தவுள்ளனர்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று முன்தினம் (12) சிறுமியொருவர் சடலமாகவும் சந்தேக நபரான பாட்டி மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டனர்.

அவ்வேளை சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், யாழ்ப்பாண மாவட்ட நீதவானும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சிறுமி, திருகோணமலையில் தனது தந்தையுடன் வளர்ந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியும் அவரது பாட்டியும் கடந்த 9ஆம் திகதி குறித்த விடுதியில் ‍அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

சிறுமிக்கு உளச்சிக்கல்கள் உள்ளதாகவும், அதற்காக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற தாம் இருவரும் வந்திருப்பதாகவும் விடுதியில் அந்த பாட்டி கூறியுள்ளார். 

மறுநாள் அவர் வெளியில் சென்று வந்தார். அதன் பின்னர், இருவரும் நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதனையடுத்து, பொலிஸார் விடுதி அறையின் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது சிறுமி உயிரிழந்த நிலையிலும் பாட்டி மயக்கமுற்ற நிலையிலும் காணப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து, சிறுமியின் பாட்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அத்தோடு, விடுதியில் இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கடிதம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

தனக்கு மனநோய் இருப்பதாகவும், அதனால் தானும் தனது பேத்தியும் உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகவும் பாட்டி எழுதியதைப் போன்ற அந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று (13) மாலை கோப்பாய் பொலிஸார் பாட்டியிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

அதேவேளை, சிறுமியின் சடலம் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டபோது ஆபத்தை ஏற்படுத்தும் மருந்து வழங்கப்பட்டே சிறுமி கொல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து, சந்தேக நபரான பாட்டி தனது பேத்திக்கு நஞ்சூட்டிக் கொன்றுள்ளமை உறுதியானதையடுத்தே, அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/164550

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். விடுதியில் சிறுமி கொலைச் சம்பவம் : பாட்டி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

14 SEP, 2023 | 06:06 PM
image
 

பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் என யாழ். விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் பாட்டி பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். 

யாழ். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து 12 வயது சிறுமி சடலமாகவும், குறித்த பாட்டி சுயநினைவற்ற நிலையிலும் கடந்த செவ்வாய்க்கிழமை (12) மீட்கப்பட்டனர். 

சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட வயோதிபப் பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அதனையடுத்து, சிகிச்சையின் பின்னர் உடல்நலம் தேறிய நிலையில் அவரை கோப்பாய் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸ் விசாரணைகளின்போது அவர், தனது பெயர் நாகபூசணி (வயது 55) எனவும் தான் ஒரு மருத்துவ தாதியாக கடமையாற்றியவர் எனவும் தனது பேத்தியின் பெயர் பார்த்திமா ஹீமா (வயது 12) என்றும் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து அவர் வாக்குமூலம் அளிக்கையில், 

நான் மருத்துவ தாதியாக பணியாற்றியுள்ளேன். எனது மகள் முஸ்லிம் இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து, அவர்களுக்கு பெண்பிள்ளை பிறந்த நிலையில், அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அதன்போது அவர்களது பிள்ளை என்னிடம் வளர்ந்து வந்தது. 

சில காலங்களுக்கு பின்னர், இருவரும் வெவ்வேறு திருமணம் செய்துகொண்டு, வாழச் சென்றுவிட்டனர். 

பேத்தி என்னிடமிருந்து வளர்ந்து வந்தார். இந்நிலையில், பேத்தியின் தகப்பன் 'என்னுடன் எனது பிள்ளையை அனுப்புங்கள்; நான் வளர்க்கிறேன்' என கூறி எனது பேத்தியை அழைத்துச் சென்றுவிட்டார். 

பேத்தி என்னை விட்டுப் பிரிந்ததும், அவளின் பிரிவுத் துயரும், அவளின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகுதோ என்ற கவலையும் எனக்கு ஏற்பட்டது. அதனால் நான் சில மாதங்கள் மன உளைச்சலுக்குள்ளாகி இருந்தேன். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர், திருகோணமலைக்குச் சென்று, எனது பேத்தியின் தந்தையிடம் 'பேத்தி சில நாட்கள் என்னுடன் இருக்கட்டும், வீட்டுக்கு கூட்டிச் சென்று, சில நாட்களில் மீண்டும் அழைத்து வந்து விடுகிறேன்' என கூறி பேத்தியை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் வந்தேன். 

download.jpg

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பேத்திக்கு மருத்துவம் செய்ய வந்துள்ளோம் என கூறி, அந்த மருத்துவமனைக்கு அருகில் உள்ள தங்குமிடத்தில் அறையை வாடகைக்குப் பெற்று, தங்கியிருந்தோம். 

அப்போது பேத்தியின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகுதோ என்ற கவலையில் பேத்தியை கொலை செய்துவிட்டு, நானும் 'உயிரை மாய்த்துக்கொள்வோம்' என முடிவெடுத்தேன். 

அறையில் பேத்தியை விட்டுவிட்டு, அருகில் உள்ள மருந்தகத்துக்கு சென்று தூக்க மாத்திரை உள்ளிட்ட மாத்திரைகளையும் ஊசியையும், (சிறிஞ்) வாங்கினேன். என்னிடம், மருத்துவ தாதி என்பதற்கான அடையாள அட்டை இருந்தமையால், அதனை காட்டி மருந்துகளை வாங்கினேன். 

அறைக்கு வந்து பேத்திக்கு தூக்க மாத்திரைகளை போடக் கொடுத்து, அவள் தூங்கிய பின்னர் மருந்துகளை கலந்து ஊசி மூலம் அவளின் உடலில் செலுத்தினேன். 

பின்னர், அதனை எனக்கும் செலுத்திக்கொண்டேன். ஊசி ஏற்றியதில் அவள் இறந்துவிட்டாள். நான் காப்பாற்றப்பட்டுவிட்டேன்" என தெரிவித்துள்ளார். 

அதனை தொடர்ந்து, மேலதிக விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த சிறுமியின் பாட்டியை இன்றைய தினம் வியாழக்கிழமை (14) பொலிஸார் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது, அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

அதேவேளை, "எங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. எங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டாம்" என சிறுமியின் பாட்டி பொலிஸாருக்கு எழுதிய கடிதமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/164594

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.