Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுக மூத்த அமைச்சர் எ.வ.வேலு இடங்களில் வருமானவரித்துறை சோதனை - முழு விவரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எ.வ. வேலு

பட மூலாதாரம்,E V VELU

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

திமுகவின் மூத்த தலைவர்களில் பலம் பொருந்திய நபரான எ.வ.வேலு(72) தற்போது வருமான வரித்துறை சோதனையை சந்தித்து வருகிறார்.

அமைச்சர் வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது. திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

ஏற்கனவே மூத்த அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கடந்த மாதம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. தற்போது அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார் அமைச்சர் வேலு.

தமிழ்நாடு அமைச்சரவையில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளை தன்வசம் வைத்துள்ளவர் எ.வ.வேலு. 1984ல் அதிமுக சார்பாக திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

தனது அரசியல் வாழ்வை அதிமுகவில் தொடங்கியிருந்தாலும், அதிமுகவில் ஜானகி, ஜெயலலிதா அணியாக கட்சி பிரிந்தபோது, ஜானகி அணியில் இருந்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 2000ல் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு, தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறார். தற்போது அவர் ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டுவருகிறார்.

திமுக அமைச்சர் எ வ வேலு மீது வருமானவரித்துறை சோதனை
 

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் ஐந்து வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றவர் எ.வ.வேலு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இவருக்கு சொந்தமான சுமார் 50 இடங்களில், சோதனை தற்போது நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வேலுவின் துறையான பொதுப்பணித்துறையில் இதுவரை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரியவந்துள்ளது. 2021ல் ஏற்கனவே வேலுவுக்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை குறித்து திமுக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதையும் வெளியிடவில்லை.

எ.வ. வேலு

பட மூலாதாரம்,EV VELU

சோதனைகள் குறித்து எந்த பதற்றமுமில்லை- திமுக

திமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை சோதனை தொடரந்து நடைபெறுவது குறித்து பிபிசிதமிழிடம் பேசிய திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், எதிர்க்கட்சியான பாஜக திமுக மீது என்ன குற்றம் சுமத்தலாம் என இரவு பகலாக யோசித்துவருவதாக சொல்கிறார்.

திமுக அமைச்சர் எ வ வேலு மீது வருமானவரித்துறை சோதனை

பட மூலாதாரம்,FACEBOOK

''பலமுயற்சிகள் எடுத்துப்பார்க்கிறார்கள், அவை அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. முதலில் அமலாகக்துறை தற்போது வருமானவரித்துறை சோதனை. இதுபோல பல சோதனைகளில் அவர்களால் எதையும் நிறுவமுடியவில்லை. திமுக ஊழல் கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்த பலவகையில் முயற்சி செய்கிறார்கள். இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதுபோன்ற சோதனைகளை செய்கிறார்கள். மக்கள் இதில் இருந்து பாஜகவின் செயல்பாடு பற்றி தெரிந்துகொள்கிறார்கள். எங்களுக்கு பலம் சேர்க்கும் வகையில்தான் இந்த சோதனைகள் அமைகின்றன,''என்கிறார் சரவணன்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் அறிவித்ததும், அந்த மாநில முதல்வரின் மகன் வீட்டில் சோதனை செய்தார்கள். அதேபோல டெல்லி, தமிழ்நாடு என எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் சோதனை செய்கிறார்கள் என்று பட்டியலிடுகிறார் சரவணன். அதனால், வருமானவரித்துறை சோதனை குறித்து எந்த பதற்றமும் கட்சியில் ஏற்படவில்லை என்கிறார் அவர்.

திமுக அமைச்சர் எ வ வேலு மீது வருமானவரித்துறை சோதனை

பட மூலாதாரம்,FACEBOOK

 

சோதனை நடைபெறும் இடங்கள்

திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் வேலுவின் இல்லம், அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள், கம்பன் மகளிர் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், அருணை கிரானைட், ஜீவா வேலு இன்டர்நேஷனல் பள்ளி ஆகிய இடங்களில் சோதனை தொடங்கியுள்ளது. கல்வி நிறுவங்களில் வருமானவரி துறையின் சோதனை தொடர்வதால், அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னையில் உள்ள இரண்டு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் அமைச்சர் வேலுவுக்கு உள்ள பங்குகள் குறித்தும் சோதனை நடைபெறுகிறது. இந்த நிறுவனங்களின் கோவை அலுவலகங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

விழுப்புரத்தில் அமைச்சர் வேலுவிற்கு நெருக்கமானவரின் கோல்டன் கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர் பிரேம்குமார் வீடு, கடை, கெஸ்ட் ஹவுஸ் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக அமைச்சர் எ வ வேலு மீது வருமானவரித்துறை சோதனை
 

விழுப்புரத்தில் வேலுவிற்கு ஆதரவாக உள்ள, ஆளவந்தார் மோட்டார்ஸ் மற்றும் கோல்டன் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் கோல்டன் மார்பிள்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் பிரேம்குமாரின் வீடு மற்றும் கடை ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

கோவையில் அமைச்சர் எ வ வேலுவுக்கு சொந்தமான ஐந்து இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில்

திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபகுதியில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீ ராமின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல் சிங்காநல்லூர் பகுதியில் திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி இல்லத்தில் 4 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடந்தி வருகின்றனர்.

திமுக அமைச்சர் எ வ வேலு மீது வருமானவரித்துறை சோதனை
 

மீனா ஜெயக்குமார் மற்றும் எஸ்.எம்.சாமி ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலுவின் ஆதரவாளர்கள் என்பதுடன், ரியல்எஸ்டேட் தொழிலிலும் தொடர்புயவர்களாக இருந்து வருகின்றனர். மீனா ஜெயக்குமாரின் கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் உட்பட வேறு சில தொழில்களிலும் தொடர்புடையவர்கள் என்பதால் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

இதேபோல சவுரிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள காசாகிராண்ட் கட்டுமான அலுவலகத்திலும் பீளமேடு பகுதியில் உள்ள Sheffield tower என்ற இயற்கை உணவு மற்றும் கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தினர்.

திமுக பிரமுகர் மீனா ஜெயகுமாரின் மகன் ஸ்ரீராம் Sheffield tower நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள நிலையில் இந்த நிறுவனத்திலும் காலை முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

ஏற்கனவே, திமுகவில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் வைத்துள்ளது. அடுத்ததாக, சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் இரண்டு நாட்கள் விடியவிடிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அடுத்ததாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த மாதம் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் இந்த சோதனைகள் நாடாளுமன்றதேர்தல் நெருங்கிவருவதால் நடத்தப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

திமுக அமைச்சர் எ வ வேலு மீது வருமானவரித்துறை சோதனை
 

திமுகவில் எ.வ.வேலுவின் பங்கு என்ன?

திமுக அமைச்சர் எ வ வேலு மீது வருமானவரித்துறை சோதனை

பட மூலாதாரம்,X/DMK

அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனைகள் குறித்தும், தேர்தலில் அவரின் பங்கு குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பிரியனிடம் கேட்டோம்.

கடந்த மாதம் திருவண்ணாமலையில், பூத் ஏஜென்ட்கள் மற்றும் கடைநிலை உறுப்பினர்களை இணைத்து பெரிய சந்திப்பு ஒன்றை வேலு நடத்தியதாகவும் அந்த நிகழ்வு அனைத்து கட்சியினர் மத்தியிலும் கவனம் பெற்றது என்கிறார் பிரியன். கல்லூரி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் என பல நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திவருவதால், திமுகவின் தேர்தல் நிதிக்கான பங்கில் இவரது பங்கும் முக்கியம் பெறுகிறது என்கிறார்.

''வேலு தொடக்கத்தில் அதிமுகவில் இருந்தாலும், 2000ல் இருந்து திமுகவில் தொடர்ந்து நீடித்துவருகிறார். திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் நல்ல உறவை பேணுபவர். கடந்த மாதம் சுமார் 15,000 உறுப்பினர்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை அவர் நடத்தியிருந்தார். உற்சாகமான வரவேற்பு அளித்து, தொண்டர்களிடம் தேர்தல் வெற்றி குறித்து பேசி, மேலும் கட்சிக்கு பலத்தை சேர்த்திருக்கிறார். கட்சி மேலிடத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமான நபராக இருப்பவர். அதனால் வேலுவின் இருப்பு கட்சிக்கு தேர்தல் சமயத்தில் பெரிய பலமாக இருக்கும்,''என்கிறார் பிரியன்.

திமுக அமைச்சர் எ வ வேலு மீது வருமானவரித்துறை சோதனை

பட மூலாதாரம்,X/E V VELU

 

செந்தில் பாலாஜி தொடங்கி, திமுகவில் சோதனையை சந்திக்கும் மூத்த அமைச்சர்கள் பட்டியலில் சேர்ந்துள்ள வேலு, தற்போது நடைபெறும் சோதனை வலையில் சிக்காமல் இருந்தால், அவருக்கான பலம் மேலும் அதிகரிக்கும் என்றும் கணிக்கிறார் பிரியன்.

''கருணாநிதியை காட்டிலும், ஸ்டாலின் பொறுப்புக்கு வந்தபின்னர்தான் வேலுவின் கை கட்சியில் ஓங்கியுள்ளது என்று சொல்லலாம். தற்போது கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் கூட்டங்களில், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியவர்களோடு, வேலுவும் அழைக்கப்படுகிறார் என்பதால் இவரின் முக்கியத்துவம் கூடியிருக்கிறது என்பதுதான் அர்த்தம். அதனால், அமைச்சர் வேலுவின் இடங்களில் நடைபெறும் சோதனைகளை திமுக கவனத்துடன் பார்த்துவருகிறது,''என்கிறார் அவர்.

மேலும் திருவண்ணாமலை தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேலுக்கு எதிராக போட்டியிட்ட வேலு, அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். அந்த வெற்றி என்பது, இதுவரை திருவண்ணாமலை தொகுதியில் நடைபெற்ற தேர்தல்களில், பதிவான வாக்கு வித்தியாசங்களில், அதிக பட்ச வாக்குவித்தியாசத்தை பெற்ற தேர்தலாக அமைந்தது.

https://www.bbc.com/tamil/articles/cerkvrj93y0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் எ.வ. வேலுவின் வீட்டில் நடந்த சோதனையில் என்ன கிடைத்தது? முழு விவரம்

எ.வ. வேலு

பட மூலாதாரம்,EV VELU

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழகப் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நவம்பர் 3-ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்த வருமான வரித்துறையினரின் சோதனைகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

எ.வ. வேலு தொடர்பான மொத்தம் 80 இடங்களில் 240 அதிகாரிகள் இந்தச் சோதனைகளை நடத்தினர். சென்னையில் ஆழ்வார்ப்பேட்டை, கோட்டூர்புரம், தி.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, அவரது மகன் கம்பன், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள், அருணை கல்விக் குழும நிறுவனங்கள், எ.வ. வேலுவின் மகன் கம்பன் நடத்திவரும் தொழில்நிறுவனங்கள், கோயம்புத்தூர், கரூர் மாவட்டங்களில் சில தி.மு.க. நிர்வாகிகளின் வீடுகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன.

 
அமைச்சர் எ.வ. வேலு, வருமான வரித்துறை சோதனை, தி.மு.க
படக்குறிப்பு,

எ.வ. வேலு தொடர்பான மொத்தம் 80 இடங்களில் 240 அதிகாரிகள் இந்தச் சோதனைகளை நடத்தினர்

எங்கெல்லாம் சோதனைகள் நடந்தன?

தண்டராம்பட்டுக்கு அருகில் உள்ள தானிப்பாடியில் வசிக்கும் கம்பி வியாபாரி ஜமால், நெல் - அரிசி வியாபாரி முருகேசன் ஆகியோரது வீடு, அலுவலகம், கிடங்கு ஆகியவற்றிலும் சோதனைகள் நடந்தன.

திருவண்ணாமலையைச் சேர்ந்த 'அருணை கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கட் என்பவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

எ.வ. வேலுவின் மகன்கள் கம்பன், குமரன் ஆகியோரது வங்கி லாக்கர்களும் வருமானவரித் துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதேபோல, சென்னை தியாகராய நகரில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளர் வீடு, அந்நிறுவனம் தொடர்புடைய பிற இடங்கள், திருவான்மியூரில் உள்ள காஸா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகங்கள், ஊழியர்களின் வீடுகள் ஆகியவற்றிலும் சோதனைகள் நடந்தன.

மற்றொரு பக்கம், அண்ணா நகர், செனாய்நகர், வேப்பேரி, புரசைவாக்கத்தில் உள்ள பொதுப்பணிகள் துறை ஒப்பந்ததாரர்கள், அவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன.

இந்தச் சோதனைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை இரவில் முடிவுக்கு வந்தன.

 
அமைச்சர் எ.வ. வேலு, வருமான வரித்துறை சோதனை, தி.மு.க

பட மூலாதாரம்,FACEBOOK/E V VELU

படக்குறிப்பு,

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது பல இடங்களில் கண்ணீர் மல்கப் பேசினார் எ.வ.வேலு

எ.வ.வேலு கண்கலங்கியது ஏன்?

இந்தச் சோதனைகள் முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் எ.வ. வேலு. அப்போது பேசிய அவர், தனக்குச் சொந்தமான இடங்களில் இருந்து சல்லடை போட்டுச் சலித்தும் ஒரு பைசாவைக்கூட எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

"என்னுடைய நேர்முக உதவியாளர் சுப்பிரமணியனை தனிமையில் வைத்து என்னோடு சம்பந்தப்படுத்தி பல்வேறு கேள்விகளை கேட்டு வருமான வரித்துறையினர் தொந்தரவு செய்திருக்கிறார்கள். அவர் கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு துன்புறுத்தியிருக்கிறார்கள். அதேபோல எனது ஓட்டுநரையும் தனிமைப்படுத்தி விசாரித்திருக்கிறார்கள். விழுப்புரம், கரூர் வந்தவாசி, கோவை, திருவண்ணாமலையிலும் பல்வேறு நபர்களுக்கு என்னைத் தொடர்பு படுத்தி தொந்தரவு கொடுத்துள்ளனர். வருமான வரித்துறையினர் மீது எனக்கு எவ்வித கோபமும் இல்லை. இவர்கள் அம்புதான். எய்தவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள்" என்று கூறினார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது பல இடங்களில் கண்ணீர் மல்கப் பேசிய அவர், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் பொழுது தி.மு.க. தலைவர் திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், தனது வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை செய்ததாகவும் இதனால் இரண்டு நாட்களுக்கு தனது தேர்தல் பணிகளை மட்டுமே முடக்க முடிந்ததாகவும் கூறினார்.

 
அமைச்சர் எ.வ. வேலு, வருமான வரித்துறை சோதனை, தி.மு.க
படக்குறிப்பு,

1991-ஆம் ஆண்டு சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளை என்ற ஒன்றைத் துவங்கி, கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்

மீனா ஜெயக்குமார் குறித்த கேள்விக்கு என்ன சொன்னார் எ.வ.வேலு?

காசா கிராண்ட் நிறுவனத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்த அமைச்சரிடம், கோவையைச் சேர்ந்த மீனா ஜெயக்குமாருக்கும் தங்களுக்கும் தொடர்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த எ.வ. வேலு, "ஜெயக்குமார் என்பவர் திருவண்ணாமலை சேர்ந்தவர். அவரது சகோதரர் முருகன் கட்சி நிர்வாகியாக இருக்கிறார். சிறுவயதிலேயே ஜெயக்குமார் கோவைக்குச் சென்று பல்வேறு தொழில்களை செய்து தொழிலதிபராக இருக்கிறார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிதான் தனக்கு முதன் முதலில் ஜெயக்குமாரை உள்ளூர்காரர் என அறிமுகம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில்தான் நான் கோவை செல்லும்போதெல்லாம் அவர் என்னைச் சந்திப்பார். இது கொலை குற்றமா? இப்படியிருக்கும்போது அவர்கள் குடும்பத்தையும் தனது குடும்பத்தையும் தொடர்பு படுத்தி பேசுவது எவ்விதத்தில் நியாயம்?" என்றார் எ.வ. வேலு.

சோதனையில் என்ன சிக்கியது?

எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் இருந்து எவ்வளவு தொகையும் ஆவணங்களும் எடுக்கப்பட்டன என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரபூர்வமாக இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

அமைச்சர் எ.வ. வேலு, வருமான வரித்துறை சோதனை, தி.மு.க

பட மூலாதாரம்,E V VELU

படக்குறிப்பு,

2011, 2016, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் எ.வ. வேலு

யார் இந்த எ.வ.வேலு?

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டுக்கு அருகில் உள்ள குடலூர் கிராமத்தில் 1951-ஆம் ஆண்டு, மார்ச் 15-ஆம் தேதி பிறந்தவர் எ.வ.வேலு. முதலில் திருவண்ணாமலையில் அச்சகம் ஒன்றை நடத்திய அவர், பிறகு சொந்தமாக லாரி ஒன்றை வாங்கி இயக்கிக் கொண்டிருந்தார்.

இதற்குப் பிறகு, திரைப்பட விநியோகத்தில் இறங்கினார். பிறகு சில படங்களைத் தயாரிக்கவும் செய்தார். இதற்குப் பிறகு, 1991-ஆம் ஆண்டு சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளை என்ற ஒன்றைத் துவங்கி, கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்.

அ.தி.மு.க.வின் ஆரம்ப காலத்தில் இருந்து அந்தக் கட்சியில் இருந்துவந்த எ.வ.வேலு முதன்முறையாக 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

எம்.ஜி.ஆர். இறந்த பிறகு ஜானகி அணிக்குச் சென்றார். அதற்குப் பிறகு நடிகர் பாக்யராஜ் ஆரம்பித்த எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அதன் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவிவகித்தார்.

 

தொடர் தேர்தல் வெற்றிகள்

அதற்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் செயல்பட்டாலும் பதவிகள் ஏதும் கிடைக்காத நிலையில், 1997-இல் தி.மு.கவில் இணைந்தார். 2001-ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் தண்டராம்பட்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதிலும் வெற்றிபெற்றார். பிறகு,2006-இல் நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார்.

2006-இல் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அதில் உணவுத் துறை அமைச்சராக்கப்பட்டார். 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் என்ற வலுவான துறை இவருக்கு வழங்கப்பட்டது.

கடந்த சில மாதங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியிருக்கிறது. இதில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c2v2g95777vo

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

sj.jpg

மத்திய அரசு அலுவலகத்தில் மாநில அரசு ரெய்டு..

இந்த பிரெக்கிங் நியுஸ் சவுண்டுக்கு மட்டும் குறைச்சல் கிடையாது..

டிஸ்கி :
இவயளின்ற அதிகார போட்டியில் 5 சதம் கூட கொள்ளை அடிக்க பட்ட பணம் மக்களுக்கு கிடைக்காது.. தண்டனையும் கிடைக்காது..வேடிக்கை மட்டும் பார்ப்பம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.