Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
'என் தங்கை'
 
 
நான் பிறக்கும் பொழுது என் அம்மா, அப்பா இருவரும் மிகவும் மகிழ்வாக இருந்தார்கள். நான் அவர்களின் முதல் பிள்ளை. அவர்களுக்கு ஆண் பிள்ளை என்றால் கொள்ளை ஆசை. இரண்டு பையன்கள் வீட்டிற்கு வேண்டும் என்பது அவர்களின் கனவு. நான் ஐந்து வயது கடந்தபின், இரண்டாவது பிள்ளைக்கு முயற்சி செய்தார்கள்.
 
"யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’
யாமே, ...... "
[அகநானூறு 12]
 
எம் தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள் எம் தந்தையும் (இவள் எங்கேனும் செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, ஏடி! இளைய மகளே!, நின் சிறிய அடி சிவப்புற என் செயச் செல்கின்றாய் என்று கூறும் - இப்படித்தான் சங்க காலத்தில் பெண் பிள்ளையின் நிலை இருந்தது. ஆனால் இப்ப வீட்டில் ஆண் குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்து விட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. அப்படித்தான் என் பெற்றோர்களும் இருந்தார்கள்.
 
மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பெண் பிள்ளை பிறப்பையிட்டு பெற்றோர் புலம்புவதை காணக் கூடியதாக உள்ளது. அது என் பெற்றோருக்கும் பொருந்தும். கர்ப்பம் தரித்து 12 கிழமைக்கு பின் , கர்ப்பத்தில் இருப்பது ஆணா, பெண்ணா என்று இன்றைய நவீன பரிசோதனை மூலம் அறியலாம். எனவே என் அம்மா அந்த பரிசோதனைக்காக அப்பாவுடன் வைத்தியசாலைக்கு சென்று, வைத்தியரின் அறைக்கு சென்றார். என்னை அங்கு உள்ளுக்குள் போக விடவில்லை. நான் வெளியே அம்மம்மாவுடன் வாங்கில் அமர்ந்து இருந்தேன்.
 
கொஞ்ச நேரத்தின் பின் செவிலியர் ஒருவர் என் கையை பிடித்து, அம்மம்மாவுடன் அம்மா இருந்த அறைக்குள் கூட்டி சென்றனர்.
'வாழ்த்துக்கள்! இப்ப நீங்கள் இருவரும் ஒரு அழகான பெண் பிள்ளையின் பெற்றோர்கள்' என வாழ்த்துவது என் காதில் கேட்டது. என்னை கண்ட அந்த வைத்தியர், உனக்கு ஒரு தங்க தங்கச்சி வரப்போகிறார் என மகிழ்வாக கூறினார். நானும் உண்மையில் மகிழ்ச்சியாக சிரித்தேன். அப்பொழுது தான் என் பெற்றோரை பார்த்தேன். அவர்கள் இருவரின் முகத்திலும் எந்த மகிழ்வையும் சிரிப்பையும் காண முடியவில்லை.
 
தமிழர்கள் பெண்களுக்கு நன் மதிப்பு கொடுத்தார்கள். இதனால் தான் இன்னும் கிராமிய / நாட்டுப்புற மக்கள் அம்மன் வழிபாட்டில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள் என்கிறது வரலாறு. உலகளவில், எல்லா சமுதாயத்திலும் ஆண் பிள்ளைகளுக்கு ஓரளவு முன்னுரிமை காணப்படுகிறது, என்றாலும் கிழக்கு மற்றும் தெற்காசியாவில் இந்த முன்னுரிமை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற பகுதிகளில் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு முதலில் இருந்தே பெண் சிசுக்கொலை நடைபெற்று வருவதாக புள்ளி விபரங்கள் காட்டுகிறது. மேலும் இதற்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால், முக்கிய காரணம், பெண்பிள்ளைக்கு சீதனம் கொடுப்பது என வாதிடப்படுகிறது. இதற்கு முதல் காரணம் குடும்ப பெயரை காவிக்கொண்டு முன் செல்பவர்கள் ஆணாக இருப்பதும் ஒரு காரணம். அதே போல திருமண சந்தையில் இன்னும் ஆணுக்கு கூடிய வாய்ப்பு இருப்பதும் மற்றும் ஆண்கள் பொதுவாக எல்லா விதமான வேலைகளுக்கும் வேலை நேரங்களுக்கும் இலகுவாக சரி செய்யக்கூடியதாக இருப்பதும், ஆகவே வருமானத்தை பொறுத்த வரையில் முன்னணியில் இன்னும் இருப்பதும் மற்றும் ஒரு காரணமாகும்.
 
இன்னும் ஒரு காரணத்தையும் சொல்லியே ஆக வேண்டும், அதாவது ஆண் ஒரு வீட்டிற்கு காவலாக இன்னும் கருதப் படுவதுடன், எங்கும் எந்த நேரமும் போய்வரக்கூடியதாக இருப்பதும் ஆணின் முன்னுரிமையை அதிகரிக்கிறது எனலாம். பெண்ணில்லாமல் ஒரு சமுதாயம் வளரவும் பெருகவும் முடியாது. இன்பம் ஆணும் பெண்ணும் கூட்டிலேயே பொதுவாக உள்ளது. ஏன் என் அம்மா கூட ஒரு பெண் தானே?
 
ஆனால் எனக்கு அந்த வயதில் இவைகளை பற்றி ஒன்றும் தெரியாது. எனக்கு தம்பியை விட என் அம்மா போல், என் அம்மம்மா போல் ஒரு தங்கை வேண்டும் என்ற எண்ணமே ஓங்கி இருந்தது. வைத்தியர் கொடுத்த ஊடு கதிர்களால் [ஸ்கேன்] எடுக்கப் பட்ட புகைப்படத்தை பார்த்து கற்பனையில் மூழ்கிவிட்டேன். என்றாலும் ஏன் என் பெற்றோர்கள் கவலையாக இருக்கிறார்கள் என்பது புரியவே இல்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து எதோ வேண்டா வெறுப்பாக கதைப்பது மட்டும் எனக்கு புரிந்தது.
 
அன்று இரவு முழுவதும் என் தங்கையின் ஞாபகமே , மனதில் பல பல கற்பனைகள், பெயர் கூட தெரிவு செய்து விட்டேன். எப்படி அழகாக இருப்பாள் என்று வேறு கற்பனை. எப்படி இருவரும் விளையாடுவது, அம்மாவுக்கு செல்லக் குழப்படி செய்வது இப்படி நீண்டு கொண்டே போனது. என் தங்கை என்ற எண்ணம் சுற்றி சுற்றி என்னை வந்து கொண்டே இருந்தது. என்றாலும் அம்மா, அப்பாவின் முகத்தில் உள்ள மாற்றம் புரியவே இல்லை.
 
அன்று இரவு என் அம்மாவும் அப்பாவும் கதைப்பது, நான் தங்கையை பற்றிய கற்பனையில் முழித்து இருந்ததால், தற்செயலாக கேட்கக் கூடியதாக இருந்தது. நான் அதிர்ந்தே விட்டேன். அவர்கள் இருவருக்கும் என் சின்ன தங்கை வேண்டாம் என்பது தெரிய வந்தது. என் கண்களில் இருந்து ஒரே கண்ணீர். நான் என் தங்கையின் படத்தை தடவி தடவி கொஞ்சிய படி அயர்ந்து தூங்கி விட்டேன்.
 
விடிய நேரத்துடன் எழும்பினேன். அம்மம்மா மட்டுமே வீட்டில் இருந்தார். அம்மா அப்பா வெளியே போய்விட்டார்கள் , கொஞ்ச நேரத்தால் வருவார்கள் என்று மட்டும் சொன்னார். ஏன் அம்மாவும் அப்பாவும் என் தங்கையை விரும்பவில்லை, அவர் என்ன தவறு செய்தார்? இன்னும் என் மனதை துளைத்துக்கொண்டே இருந்தது.
 
அம்மா அன்று மாலை வீடு திரும்பும் பொழுது அவரின் முகத்திலும் வயிற்றிலும் மாற்றம் இருந்தது. அவர் முன்பு போல கலகலப்பாக இருந்தார். வந்ததும் வராததுமாக என்னை கட்டி பிடித்து கொஞ்சினார். எனக்கு உண்மையில் அருவருப்பாக இருந்தது. எனக்கு என் தங்கையின் முத்தமே வேண்டும். ஒ .. என்று சத்தம் போட்டு அழ தொடங்கிவிட்டேன்.
 
அம்மா அப்பா இருவரும் என்னை கொஞ்சி கொண்டு, அவருக்கு வருத்தம் வந்துவிட்டது. அதுதான் எம்மைவிட்டு பிரிந்துவிட்டார், உனக்கு அடுத்த ஆண்டு தம்பி பாப்பா வாங்கி வருவோம் என்றனர். நான் சத்தம் போட்டு எனக்கு தங்கை வேண்டும். இந்த என் தங்கைதான் வேண்டும் என்று அவர்களை உதறி தள்ளிவிட்டு ஒரு ஓரமாக வெறுத்து பார்த்துக்கொண்டு நின்றேன்! அவர்கள் மாறவே இல்லை, எரிச்சலாக எனக்கு வந்தது.
 
அம்மம்மா அது எல்லாம் கொஞ்ச நாளைக்கு , பிறகு மறந்திடுவான், நீங்க போய் உங்க வேலையை பாருங்க என்று கூறி . என்னை தூக்கி சென்றார்
நான் இப்ப திருமணம் செய்துவிட்டேன் . என் ஒரே ஆசை . இந்த உலகத்தை எட்டி பார்க்காமல் சாக்கடிக்கப் பட்ட என் தங்கை என் மகளாக பிறக்கவேண்டும். என் பெற்றோர்கள் இவள் என் பேத்தி என்று தலையில் வைத்து கூத்தாட வேண்டும்! கட்டாயம் நடக்கும். உங்கள் எல்லோருக்கும் இனிப்பு பண்டங்கள் அவள் கையால் தருவேன் !!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.