Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி: ஐபிஎல்-இல் கலக்கிவிட்டு சர்வதேச ஆட்டத்தில் சொதப்பிய இந்திய பேட்டர்கள்

IND vS ZIM 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு சந்தித்த முதல் போட்டி இவ்வளவு மோசமான முடிவாக இருக்கும் என இளம் இந்திய அணி எதிர்பார்த்திருக்காது.

அடுத்த தலைமுறைக்கான இந்திய அணி என்று மார்தட்டி சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே சென்ற அணி, 116 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஹராரே மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. 116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்களில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி

ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை இதே மைதானத்தில் வைத்து ஜிம்பாப்வே மீண்டும் வீழ்த்தியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியை ஜிம்பாப்வே தோற்கடித்திருந்தது.

டி20 உலக சாம்பியன் பட்டம் வென்றபின், சந்தித்த முதல் ஆட்டத்தில் தோற்ற 2வது அணியாக இந்திய அணி மாறியுள்ளது. இதற்கு முன் 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றபின், 2023 மார்ச் மாதம் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஹராரே மைதானத்தைப் பொறுத்தவரை, 116 ரன்கள் என்பதுதான் இதுவரை சேர்க்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர். ஐசிசியில் முழு உறுப்பினராக இருக்கும் இந்திய அணியால், அதைக்கூட சேஸ் செய்ய முடியாமல் போனது. இதற்கு முன்பு, 2016 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 127 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி தோற்றது.

 

தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி

IND vS ZIM 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணி இந்தத் தோல்விக்கு முன் அனைத்துவிதமான போட்டிகளிலும் சேர்த்து தொடர்ந்து 12 வெற்றிகளைப் பெற்றிருந்தது. கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தது. அதன் பிறகு தோற்கவில்லை.

அதேபோல இந்திய அணி 12 டி20 போட்டிகளாக எந்தத் தோல்வியையும் சந்திக்காமல் வந்தது. 2023, டிசம்பரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக கடைசியாக டி20 ஆட்டத்தில் இந்திய அணி தோற்றிருந்தது. இப்போது 6 மாதங்களுக்குப் பின் இந்திய அணி தோற்றுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி ஆட்டமிழந்த 102 ரன்கள் என்பது சேஸிங்கில் சேர்க்கப்பட்ட 2வது குறைந்தபட்ச ஸ்கோர். இதற்கு முன் 2016 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 127 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 76 ரன்களில் ஆட்டமிழந்தது. அதன் பிறகு 102 ரன்களில் இப்போது சுருண்டுள்ளது.

கோலிக்கு போட்டியாக சிக்கந்தர் ராசா

இந்திய அணியைத் தனது பந்துவீச்சு, பேட்டிங்கால் ஆட்டம் காண வைத்த கேப்டன் சிக்கந்தர் ராசா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது, டி20 போட்டிகளில் சிக்கந்தர் ராசா வாங்கிய 15வது ஆட்டநாயகன் விருது. இதற்கு முன் சூர்யகுமார் யாதவ் 15, கோலி 16 விருதுகளை வென்றுள்ளனர்.

சிக்கந்தர் ராசா வாங்கிய 6 ஆட்டநாயகன் விருதுகள், ஜிம்பாப்வே அணியை 20 ஆட்டங்களில் தலைமை ஏற்று நடத்தியபோது கிடைத்த விருதுகளாகும்.

 

ஏழு பேட்டர்கள் டக்-அவுட்

IND vS ZIM 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆட்டத்தில் மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 7 பேட்டர்கள் டக்-அவுட் ஆயினர். இந்திய அணி தரப்பில் 3 பேட்டர்களும், ஜிம்பாப்வே அணியில் 4 பேட்டர்களும் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தனர்.

உலகளவில் ஐசிசி முழுநேர உறுப்பு நாடுகளின் அணிகளில் அதிகபட்ச டக்-அவுட் ஆனது இது 2வது முறை. 2010ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடந்த நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 8 டக்-அவுட்கள் வந்திருந்தன.

ஜிம்பாப்வே வெற்றிக்கு என்ன காரணம்?

ஜிம்பாப்பே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் சதாராதான். இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதுதவிர பிரெயின் பெனட் ஒரு ஓவரை மெய்டனாக வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆடுகளத்தைச் சரியாகக் கணித்துப் பயன்படுத்தி ஜிம்பாப்வே அணி பந்து வீசியதுதான் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

அதிலும் ஜிம்பாப்வே வீரர்களுக்கு ஹராரே பழக்கப்பட்ட மைதானம் என்பதால், சரியான லைன் லென்த் நன்கு தெரிந்திருந்தது. இந்த லென்த்தில் இருந்து தவறி பந்துவீசாமல் துல்லியமாகப் பந்து வீசியதால், இந்திய அணியின் அனுபவற்ற பேட்டர்களால் தரமான பந்துவீச்சை எதிர்கொண்டு பேட் செய்ய முடியவில்லை.

சுழற்பந்துவீச்சிலும் சிக்கந்தர் ராசா கட்டுக்கோப்புடன் பந்துவீசினார். குறிப்பாக பவர்ப்ளே ஓவரிலேயே பெனட், மசகாட்சா என இரு சுழற்பந்துவீச்சாளர்களைக் களமிறக்கி கேப்டன் சிக்கந்தர் இந்திய அணியைத் திணறவிட்டார். அதற்கு ஏற்றார்போல் பெனட் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் எட்ஜ் எடுத்து கேட்சாகி ஆட்டமிழந்தார்.

IND vS ZIM 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

வேகப்பந்துவீச்சாளர் சதாரா வீசிய லென்த் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரியான் பராக் மிட்ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்தார், அடுத்த இரு பந்துகளில் ரிங்கு சிங் பவுன்ஸரை சமாளிக்க முடியாமல் ஃபைன் லெக்கில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சதாரா வீசிய 5வது ஓவரில் இரு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்தது. பவர்ப்ளேவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் சேர்த்திருந்தது.

விக்கெட்டுகள் சரிந்த நிலையில் அணியைச் சரிவிலிருந்து மீட்கும் பணியை துருவ் ஜூரெலுடன் சேர்ந்து கேப்டன் கில் ஈடுபட்டார். ஆனால், இந்திய அணி பேட்டர்களை நிலைத்து ஆடவிடாமல் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் பந்துவீச்சைத் தொடர்ந்து மாற்றி வீசச் செய்து ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடியளித்து சிறப்பாகச் செயல்பட்டார்.

ஆறாவது ஓவரிலிருந்து 10வது ஓவர் வரை இந்திய அணி 2 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது. அது மட்டுமல்லாமல் 10வது ஓவரில் ஜூரெல் 14 பந்துகளைச் சந்தித்து 6 ரன்னில் ஜாங்வீ வீசிய ஸ்லோவர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

கேப்டன் சிக்கந்தர் 11வது ஓவரை வீசினார். சாதாரண சுழற்பந்துவீச்சாளர் போல் இல்லாமல் தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை சிக்கந்தர் வெளிப்படுத்தி இந்திய பேட்டர்களை திணறடித்தார். கேரம் பால், ஸ்லோவர் பால், கூக்ளி என வித்தியாசங்களை சிக்கந்தர் தனது பந்துவீச்சில் வெளிப்படுத்தினார்.

சிக்கந்தர் பந்துவீச்சுக்குத் திணறிய கில் 31 ரன்னில் கேரம் பாலில் க்ளீன் போல்டாகினார். 10.2 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் சிக்கியது. 13வது ஓவரில் 7வது விக்கெட்டையும் இழந்து 67 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்தாலும், ஜிம்பாப்வே வீரர்களின் தரமான பந்துவீச்சை எதிர்த்து பேட் செய்வது கடினமாக இருந்தது.

கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. கலீல் அகமது, சுந்தர் இருவரும் களத்தில் இருந்தனர். முசாபர்பானி வீசிய கட்டுக்கோப்பான ஓவரில் ரன் சேர்க்கத் திணறிய சுந்தர், 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. சதாராவின் சுழற்பந்துவீச்சிலும் ரன் சேர்க்க முடியாமல் சுந்தர் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து, 5வது பந்தில் விக்கெட்டை இழக்கவே இந்திய அணி தோல்வி அடைந்தது.

கடந்த மாதத்தில் உலகின் டி20 சாம்பியனாக உருவெடுத்த இந்திய அணியை, 116 ரன்கள் சேர்க்கவிடாமல் 102 ரன்களில் சுருட்டி டிபெண்ட் செய்தது ஜிம்பாப்வே அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சைக் காட்டுகிறது.

 

'பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டோம்' - சுப்மன் கிகில்

IND vS ZIM 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், “நாங்கள் சிறப்பாகப் பந்துவீசினோம், ஆனால் பேட்டிங்கில் மோசமாகச் செயல்பட்டோம். பேட்டிங்கை ரசித்துச் செய்வதற்கு எங்களுக்குச் சிறிது அவகாசம் தேவையாக இருந்தது, ஆனால் அதற்கு வழியில்லை.

முதல் 10 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது பெரிய பின்னடைவாக இருந்தது. கடைசி வரை நான் பேட் செய்திருந்தால், சாதகமான முடிவு கிடைத்திருக்கும்.

பேட்டர்கள் ஆட்டமிழந்தவிதம் வேதனையாக இருந்தது. வாஷிங்டன் சிறப்பாக பேட் செய்தார், பந்துவீசினார். 115 ரன்களை சேஸ் செய்யும்போது, 10வது இடத்தில் இறங்கி பேட் செய்யும்போது, அணியை வெல்ல வைக்க முயல்வது சாத்தியமில்லை” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

இந்திய அணியில் ப்ளெயிங் லெவனில் இருந்த பெரும்பாலான வீரர்கள் சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள், இதில் அனுபவம் இருக்கும் வீரர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே. ஜிம்பாப்வே அணியின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் பவர்ப்ளே ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தபோதே தோல்வி அடைந்துவிட்டது.

ஜிம்பாப்வே அணியில்கூட ஓரளவுக்கு பேட்டர்கள் பாட்ர்னர்ஷிப் அமைத்து பேட் செய்தனர். குறிப்பாக 2வது விக்கெட்டுக்கு பெனெட்-வெஸ்லி 34 ரன்களும், கடைசி விக்கெட்டுக்கு சதாரா, மந்தான்டே இருவரும் 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதுபோன்ற எந்தப் பெரிய பார்ட்னர்ஷிப்பும் இந்திய அணி பேட்டர்களிடம் இருந்து வரவில்லை.

ஐபிஎல் டி20 தொடரில் பேட்டிங்கில் வலுவான அணிகளில் இடம் பெற்று கலக்கிய அபிஷேக் சர்மா(0), சிஎஸ்கே அணியின் கேப்டன் கெய்க்வாட்(7), ரியான் பராக்(2), ரிங்கு சிங்(0) ஆகிய 4 பேட்டர்களுமே பவர்பளே ஓவருக்குள் விக்கெட்டுகளை இழந்தனர்.

அதிலும் சதாரா வீசிய 5வது ஓவரில் ரியான் பராக், ரிங்கு இருவருமே பெவிலியின் திரும்பினர். இந்திய அணியில் 3 பேட்டர்கள் டக்-அவுட்டிலும், 4 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

IND vs ZIM: ஐபிஎல்-இல் கலக்கிய இந்திய பேட்டர்கள் சர்வதேச ஆட்டத்தில் சொதப்பியது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய பலரும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளனர். ஐபிஎல் நடத்தப் பயன்படும் இந்திய ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டதால் இந்த பேட்டர்களின் பேட்டிங்கும், ஸ்கோர் செய்வதும் பெரிதாகப் பேசப்பட்டது.

ஆனால், இதுபோன்ற சவாலான ஆடுகளங்களில்தான் இந்த பேட்டர்களின் உண்மையான திறமை வெளிப்படும். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் சாதித்த பேட்டர்கள் சர்வதேச களத்துக்கு வந்தபோது சொதப்பிவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன.

இந்திய அணியில் சுந்தர், கில் இருவரைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் களத்தில் 10 நிமிடங்கள்கூட தொடர்ந்து பேட் செய்யவில்லை. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில்(31), வாஷிங்டன் சுந்தர்(27), டெய்லண்டர் பேட்டர் ஆவேஷ்கான்(16) ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்டர்களும் பெரிதாக ரன்களை சேர்க்காமல் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தனர்.

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சையும், இந்திய அணியின் விக்கெட்டுகளையும் பார்த்த உள்நாட்டு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கி அந்த அணியை உற்சாகப்படுத்தினர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ரவி பிஸ்னோய் 4 ஓவர்கள் வீசி 2 மெய்டன்கள் எடுத்து 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்ற வகையில் கலீல் அகமது, ஆவேஷ் கான் இருவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

 

சிக்கந்தர் ராசாவை மாற்றிய சுனில் நரேன்

IND vS ZIM 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2016ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே வந்திருந்தபோது, இதேபோன்ற அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது. அப்போதேய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் வீரராக இடம் பெற்றிருந்தார், இப்போது கேப்டனாக வழிநடத்துகிறார்.

இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் சிக்கந்தர் தன்னைச் சாதாரண சுழற்பந்துவீச்சாளராக மட்டுமே வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், கரீபியன் லீக் டி20 தொடரில் விளையாடத் தொடங்கிய பிறகு சிக்கந்தரின் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஏராளமான மாற்றங்களும், முன்னேற்றங்களும் வந்தன.

கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற சிக்கந்தர் ராசாவை செதுக்கி, அவரைச் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக மாற்றியது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சுனில் நரைன்தான். சிக்கந்தரின் பந்துவீச்சில் கேரம்பால், ஸ்லோவர் பால், ரிஸ்ட் பால், கூக்ளி, லெக் ஸ்பின் எனப் பல்வேறு வேரியேஷன்களை புகுத்தி அவரின் பந்துவீச்சை ஒழுங்குபடுத்திய பெருமை நரேனுக்கே உரியது.

உகாண்டாவிடம் தோல்வி அடைந்ததால், 2024 ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதி பெறும் சுற்றில் ஜிம்பாப்வே வாய்ப்பை இழந்தது. ஆனால், மனம் தளராமல் போராடிய ஜிம்பாப்வே அணி உலக சாம்பயின் இந்திய அணியை முதல் ஆட்டத்திலேயே தோற்கடித்துள்ளது.

உலகக்கோப்பைக்குத் தகுதி பெற முடியாத நிலையில் பயிற்சியாளர் பதவியிலிருந்து டேவ் காட்டன் விலகிய நிலையில், தென் ஆப்ரிக்காவின் ஜஸ்டின் சாமன்ஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், டியான் இப்ராஹிம் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சாமன்ஸ் தனது முதல் தொடரிலேயே இந்திய அணியை வெல்ல வைத்து ஜிம்பாப்வே அணியை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/cnd040317j2o

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அடைஞ்ச‌ தோல்விக்கு 

சிம்பாவே அணி வீர‌ர்க‌ள் நினைத்து கூட‌ பார்க்காத‌ அள‌வுக்கு இந்தியா அணி வீர‌ர்க‌ள் பெரிய‌ இஸ்கோர் அடிச்சு விட்டின‌ம்..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா vs ஜிம்பாப்வே: டக் அவுட் ஆன மைதானத்தில் அதிரடிக்கு மாறிய தருணம் பற்றி அபிஷேக் சர்மா கூறியது என்ன?

இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

அறிமுக போட்டியில் 4 பந்துகளில் டக்அவுட் ஆனார். 2-ஆவது ஆட்டத்தில் முதல் 20 பந்துகளில் 8 டாட் பந்துகளை விட்டார். ஆனால் இறுதியில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அற்புதமான முதல் சதத்தை நிறைவு செய்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அபிஷேக் சர்மா.

டி20 சாம்பியன் பட்டம் வென்றபின், அடுத்த தலைமுறைக்கான இந்திய அணி முதல் டி20 ஆட்டத்தில் சனிக்கிழமை ஆடி மோசமான தோல்வியைச் சந்தித்தது. 2-ஆவது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

அதிலும் இளம் வீரர் அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் கலக்கிய நிலையில் தனது 2-ஆவது ஆட்டத்திலேயே 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளார்.

ஹராரே மைதானத்தில் நேற்று நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்தது.

235 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 18.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்து100 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆட்டநாயகன் அபிஷேக்

இந்திய அணியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது அபிஷேக் ஷர்மாவின் சதமாகும். அறிமுகப் போட்டியில் டக்அவுட்டாகி, அடுத்த போட்டியிலேயே அபிஷேக் ஷர்மா 33பந்துகளில் அரைசதமும் அடுத்த 13 பந்துகளில் 50 ரன்கள் என 46 பந்துகளில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

இந்திய அணி இமாலய ரன் குவிப்புக்கு முக்கியக் காரணம் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டமும், ரிங்கு சிங் (22பந்துகளில் 48) கேமியோவும், கெய்க்வாட் (77) நிதான ஆட்டமும் காரணமாகும். இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் குவித்த 2-ஆவது அதிகபட்ச ஸ்கோராக இது மாறியது.

10-ஓவர்களுக்குப்பின் விஸ்வரூபம்

நிதானமாகத் தொடங்கிய இந்திய அணி பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் கில் விக்கெட்டை இழந்து 36 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. 7 ஓவர்கள் முதல் 10 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி 34 ரன்களை இந்திய அணி சேர்த்தது.

ஆனால், அபிஷேக் ஷர்மா அதிரடிக்கு மாறி, ரிங்கு சிங் களத்துக்கு வந்தபின் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 161 ரன்கள் குவித்தது, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்தது. இந்த 10 ஓவர்களில் மட்டும் 12 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. கடைசி 30 பந்துகளில் மட்டும் 82 ரன்களை இந்திய பேட்டர்கள் குவித்தனர்.

ஹராரே மைதானத்தில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி 229 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் மட்டும் 161 ரன்கள் குவித்தது, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்தது

அபிஷேக் சர்மா கூறியது என்ன?

ஆட்டநாயகன் விருது வென்ற அபிஷேக் சர்மா கூறுகையில் “ தோல்விக்குப்பின் இது மிகச்சிறந்த ஆட்டமாக உணர்கிறேன். எங்களை நாங்கள் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அதிக அவகாசம் இல்லை. என்னைப் பொருத்தவரை டி20 ஆட்டம் என்பது தருணங்களை அடிப்படையாகக் கொண்டது. இன்று என்னுடைய நாள். அடுத்தது யாருடையதோ. பயிற்சியாளர், கேப்டனுக்கு நன்றி. எனக்கு கேட்சை நழுவவிட்டபின் என்னுடைய நாள் என உணர்ந்து அதன்பின் அதிரடிக்கு மாறினேன். எனக்கு ஸ்ட்ரைக்கை வழங்குவதில் ருது நன்கு உதவி செய்தார். என்னுடைய பவர் ஹிட்டிங் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

3-ஆவது அதிவேக சதம்

ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற அபிஷேக் சர்மா 204 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி கடந்த சீசனில் 484 ரன்கள் குவித்தார், இதில் 237 பந்துகளில் 42 சிக்ஸர்கள், 78 பவுண்டரிகளை அபிஷேக் விளாசி இருந்தார்.

இதே ஃபார்ம் இந்திய அணிக்குள் வந்ததும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் முதல் ஆட்டத்தில் டக்அவுட் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. ஆனால், 2-ஆவது ஆட்டத்தில் அபிஷேக் தனது ஆட்டத்தை நிரூபித்துள்ளார். கடந்த முதல் ஆட்டத்தில் பென்னட் சுழற்பந்து வீச்சில்தான் அபிஷேக் ஆட்டமிழந்ததால் 2-ஆவது ஆட்டத்திலும் பெனட் முதல் ஓவரை வீசினார்.

ஆனால், இந்த முறை அபிஷேக் தகுந்த பதிலடி கொடுத்து, தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசி தன்னுடைய ஆட்டத்தின் போக்கை அறிமுகம் செய்தார். 33 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் ஷர்மா அடுத்த 13 பந்துகளில் 50 ரன்களைக் குவித்து 46 பந்துகளில் 2வது அதிவேக அரைசதத்தை விளாசியுள்ளார்.

அபிஷேக் ஷர்மா முதல் 24 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இதில் 3 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். ஆனால், அடுத்த 23 பந்துகளில் மட்டும்72 ரன்களைக் அபிஷேக் குவித்தார்.

இதற்கு முன் ரோஹித் சர்மா 35 பந்துகளிலும், சூர்ய குமார் யாதவ் 45 பந்துகளிலும், கே.எல்.ராகுல் 46 பந்துகளிலும் சதம் அடித்திருந்தனர். அவர்கள் வரிசையில் அபிஷேக்கும் இணைந்தார்.

அதிலும் சதம் அடித்தபோது, அபிஷேக் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் எனும் பெருமையை அபிஷேக் பெற்றார். 2023ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக சுப்மான் கில் இரட்டை சதம் அடித்தபோது இதுபோன்று தொடர்ந்து 2 சிக்ஸர்களை விளாசி சதம் கண்டார்.

 
இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் கலக்கிய நிலையில் தனது 2-ஆவது ஆட்டத்திலேயே 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளார்.

சுழற்பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய வீரர்கள்

ஜிம்பாப்வே சுழற்பந்துவீச்சில் முதல் ஆட்டத்தில் ஆட்டமிழந்த அபிஷேக், நேற்று சுழற்பந்துவீச்சை வெளுத்துவிட்டார். தனது சதத்தில் 63 ரன்களை 28 பந்துகளில் சுழற்பந்துவீச்சில்தான் அபிஷேக் பெற்றார். 238 ஸ்ட்ரைட் ரேட்டில் ஆடிய அபிஷேக், 6 சிக்ஸர்களையும், 4பவுண்டரிகளையும் சுழற்பந்துவீச்சில் அடித்தார்.

இதற்கு முன் 2012ல் ஆமதாபாத்தில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 57 ரன்களை யுவராஜ் சிங் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை அபிஷேக் முறியடித்தார்.

பவர்ப்ளேயில் கட்டுப்பாடு

இந்திய அணியை முதல் போட்டியில் சுருட்டியிருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன்தான் ஜிம்பாப்பே பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இதனால் பவர்ப்ளே ஓவருக்குள் சுப்மான் கில் விக்கெட்டை எடுத்ததால், இந்திய அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. அபிஷேக் ஷர்மாவும், கெய்க்வாட்டும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். அபிஷேக்23 பந்துகளில் 27 ரன்கள் என பொறுமையாக பேட் செய்தார்.

11ஆவது ஓவரிலிருந்து ருத்ரதாண்டவம்

10 ஓவர்கள்வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்று இயல்பான ஸ்கோரை நோக்கித்தான் சென்றது. ஆனால், மேயர்ஸ் வீசிய 11-ஆவது ஓவரிலிருந்து இந்திய அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் பறந்தது. அபிஷேக் ஷர்மா ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்து பவுண்டரி, சிக்ஸர்கள் என பறக்கவிட்டார்.

மேயர்ஸ் வீசிய 11-ஆவது ஓவரில் மட்டும் அபிஷேக் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்களும், சிக்கந்தர் வீசிய 13-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி என 16 ரன்களைக் குவித்தார். மஸகட்சா வீசிய 14-ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி சதம் அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் மட்டும் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிங்குசிங் அதிரடி ஆட்டம்

அடுத்துவந்த ரிங்கு சிங், தான் சந்தித்த 2-ஆவது பந்திலேயே சிக்ஸர் விளாசி அதிரடியாகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் இந்திய பேட்டர்களுக்கு எப்படி பந்துவீசுவது என்று ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் திணறினர். ஓவருக்கு 15 ரன்களுக்கு குறையாமல் சென்றதால், பந்துவீச்சை மாற்றியும் ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 7 பந்து வீச்சாளர்கள் பந்துவீசியும் இந்திய பேட்டர்களின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாதிக்க முடியாத வேட்கையை இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்திய ரிங்கு சிங், அதிரடியாக பேட் செய்தார். சதாரா வீசிய 18-ஆவது ஓவரில் கெய்க்வாட் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசினார்.முசாபர்பானி வீசிய 19வது ஓவரில் ரிங்கு சிங் 2 சிக்ஸர்களையும், ஜாங்வி வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியையும், கெய்க்வாட் ஒரு பவுண்டரியையும் விளாசினர்.

கெய்க்வாட் 77 ரன்களிலும், ரிங்கு 48 ரன்களிலும் (2பவுண்டரி, 5சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முசாரபர்பானி தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் சராசரியாக 15 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.

விக்கெட் சரிவு

234 ரன்களை சேஸ் செய்வது என்பது கடின இலக்கு என்பது ஜிம்பாப்வே அணிக்குத் தெரியும் இருப்பினும் போராடிப் பார்த்தது. ஜிம்பாப்வே பேட்டர் பெனட் அதிரடியாகத் தொடங்கி, சிக்ஸர், பவுண்டரி அடித்தார். ஆனால், முகேஷ் குமார் ஓவரில் க்ளீன் போல்டாகி 26ரன்களில் பென்னட் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் ஜிம்பாப்வே 4 விக்கெட்டுகளை இழந்தது, 58 ரன்கள் சேர்த்தது.

ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர் மதவரே(43), டெய்லண்டர் லூக் ஜாங்வி(33) ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். நடுவரிசை பேட்டர்கள், கீழ் வரிசை பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஆவேஷ்கான், முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகளையும், ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 
இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

பீல்டிங் மோசம்

இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் பீல்டிங்கும், கேட்ச் பிடிக்கும் திறனும் படுமோசமாக இருந்தது. அதிலும் ஆவேஷ் கான் நேற்று ஒரு கேட்ச், சில பவுண்டரிகளையும் கோட்டைவிட்டார். அதேபோல கெய்க்வாட்டுக்கு ஒரு கேட்சையும், அபிஷேக்கிற்கு இரு கேட்சுகளையும் ஜிம்பாப்வே வீரர்கள் தவறவிட்டு அதற்கான விலையையும் கொடுத்தனர்.

தோல்வி அடைந்த ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா கூறுகையில் “உலக சாம்பியன் உலக சாம்பியன் போல் விளையாடினர். எங்களின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன், 4 முக்கியமான கேட்சுகளை நாங்கள் தவறவிட்டோம். 200 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என நினைத்தேன், ஆனால் 20 ரன்கள் கூடுதலாக சென்றது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதமானது என்பதால், இலக்கை விரட்டுவோம் என்று நினைத்தேன் ஆனால், பேட்டர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எங்களின் டாப்ஆர்டர் பேட்டர்கள் ரன்கள் குவிக்கவில்லை. அதிகமான அனுபவமின்மைதான் எங்களுக்கு தோல்வியைக் கொடுத்தது. அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டுவருவோம்” எனத் தெரிவித்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபிஷேக் சர்மா: யுவராஜ் சிங் உருவாக்கிய வீரர் சிக்சர்களை பறக்கவிடும் ரகசியம்

அபிஷேக் சர்மா
கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

“ரோம் நகரம் ஓர் இரவில் எழுப்பப்பட்டது அல்ல. அபிஷேக் சர்மா அறிமுகப் போட்டியிலேயே டக் அவுட் ஆனது எனக்கு மகிழ்ச்சிதான். அதனால்தான் அவரால் 2-ஆவது ஆட்டத்தில் சதம் அடிக்க முடிந்தது. இந்த சதம் எனக்குப் பெருமையாக இருக்கிறது, இதைவிட சிறந்த இன்னிங்ஸ் காத்திருக்கிறது”

அபிஷேக் சர்மாவின் சதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சிலாகித்துக் கூறியது இது.

அபிஷேக் சர்மா குறித்து பெருமையாக யுவராஜ் சிங் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கலாம். உண்மையில் அபிஷேக் சர்மாவை கடந்த சில ஆண்டுகளாக செதுக்கி, அவரின் பேட்டிங்கை முறைப்படுத்தி, ஆட்டத்தை செம்மைப்படுத்தி வழிகாட்டியாக இருந்தது யுவராஜ் சிங்தான்.

கொரோனா பரவல் காலத்திலிருந்து அபிஷேக் சர்மாவுக்கு துணையாக இருந்து பேட்டிங்கில் பயிற்சி அளித்து, அவரின் பேட்டிங்கை செம்மைப்படுத்தி, குடும்பத்தாரில் ஒருவராக யுவராஜ் இருந்து வருகிறார்.

அபிஷேக் சர்மாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சி அளித்தது அவரின் தந்தைதான் என்றாலும், ஒரு கட்டத்துக்கு மேல் அவரின் பேட்டிங்கை செதுக்கி, பவர் ஹிட்டராக மாற்றி, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது யுவராஜ் சிங்தான்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டக் அவுட் அறிமுகம்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகமாகிய அபிஷேக் சர்மா 4 பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆகினார். 2-ஆவது டி20 போட்டியில் தான்சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசி தனது ஆட்டத்தின் பாணியை அறிமுகம் செய்தார்.

அபிஷேக் சர்மா முதல் 24 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் அடுத்த 23 பந்துகளில் 72 ரன்களைக் குவித்தார். 33 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா அடுத்த 13 பந்துகளில் 50 ரன்களைக் குவித்து 46 பந்துகளில் அதிவேக அரைசதத்தை விளாசினார்.

தனது சதத்தில் 63 ரன்களை 28 பந்துகளில் சுழற்பந்துவீச்சில்தான் அபிஷேக் பெற்றார். 238 ஸ்ட்ரைட் ரேட்டில் ஆடிய அபிஷேக், 6 சிக்ஸர்களையும், 4பவுண்டரிகளையும் சுழற்பந்துவீச்சில் வெளுத்தார்.

இதற்கு முன் 2012ல் ஆமதாபாத்தில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 57 ரன்களை யுவராஜ் சிங் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அபிஷேக் தனது அதிரடியால் தனது குருநாதர் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார்.

 
அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் தொடரிலும் அதிரடி

அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணியில் 2-ஆவது போட்டியிலேயே ஆகச்சிறந்த அறிமுகம் கிடைத்துள்ளது. ஐபிஎல் டி20 தொடரிலும் 2018-ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ரூ.55 லட்சத்துக்கு அபிஷேக் வாங்கப்பட்டார். ஒரு போட்டியில் மட்டும் ஆடிய அபிஷேக் 19 பந்துகளில் 45 ரன்களை ஆர்சிபிக்கு எதிராக விளாசினார். அதன்பின் 2022ம் ஆண்டு ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

கடந்த ஐபிஎல் டி20 சீசனில் வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா 204 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி 484 ரன்கள் குவித்தார், இதில் 237 பந்துகளில் 42 சிக்ஸர்கள், 78 பவுண்டரிகளை அபிஷேக் விளாசி இருந்தார்.

23 வயதான அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் சிறந்த அறிமுகம் கிடைத்து, தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.

அபிஷேக் சர்மாவின் குடும்பம்

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, இந்து குடும்பத்தில் பிறந்தவர் அபிஷேக் சர்மா. இவரின் தந்தை ராஜ் குமார் சர்மா முன்னாள் கிரிக்கெட் வீரர், வங்கி ஊழியராக இருந்தார். தாய் மஞ்சு சர்மா. அபிஷேக் சர்மாவுடன் பிறந்தவர்கள் இரு சகோதரிகள், 3வதாக அபிஷேக் சர்மா பிறந்தார்.

அபிஷேக் சர்மா தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்தார். தனது 12வயதிலிருந்தே சுப்மான் கில்லுடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பஞ்சாப் அணிக்காக 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சுப்மான் கில், அபிஷேக் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

 
யுவராஜ் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அறிமுகப் போட்டியில் சதம்

16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்சன்ட் கோப்பை 2015-16ம் ஆண்டு நடந்தது. இதில் அபிஷேக் சர்மா தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து, அந்தத் தொடரில் 1,200 ரன்களைக் குவித்து, 109 சராசரி வைத்திருந்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.

2016-17ம் ஆண்டு வினு மன்கட் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா பஞ்சாப் அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அறிமுகமாகினார். 2017ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் பஞ்சாப் அணிக்காக முதல் முறையாக அபிஷேக் சர்மா அறிமுகமாகினார். ரஞ்சிக் கோப்பை அறிமுகப் போட்டியில் பஞ்சாப் அணியில் 8-வது வீரராக அபிஷேக் களமிறங்கி 94 ரன்களை விளாசி தனது பேட்டிங்கை நிரூபித்தார்.

2023ம் ஆண்டில் நடந்த சயத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த அபிஷேக் சர்மா சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார். இந்தத் தொடரில் 10 இன்னிங்ஸில் அபிஷேக் 485 ரன்கள் குவித்தார். இதில் 3 சதங்கள், 2 அரைசதங்களை அபிஷேக் விளாசினார்.

அது மட்டுமல்லாமல் முதல்தரப் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக 53 போட்டிகளில் அபிஷேக் சர்மா விளையாடியுள்ளார். இதில் 2021ம் ஆண்டு மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக 42 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதத்தை அபிஷேக் பதிவு செய்தார். 2022ம் ஆண்டு முதல் தரப்போட்டியில் சண்டிகர் அணிக்கு எதிராக தனது முதல் சதத்தையும் அபிஷேக் பதிவு செய்தார்.

அது மட்டுமல்லாமல் 2016-இல் நடந்த ஆசியக் கோப்பையின்போது, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு கேப்டனாகவும் அபிஷேக் செயல்பட்டு சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்தார். 2017ம் ஆண்டு உள்நாட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் அபிஷேக் தலைமையிலான இந்திய அணி 3-1 என்று கைப்பற்றியது. 2018ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் அபிஷேக் சர்மா இடம் பெற்றிருந்தார். காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக அரைசதம் அடித்தும், 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

 
யுவராஜ் சிங் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

யுவராஜ் சிங்கின் பங்களிப்பு என்ன?

கொரோனா காலத்துக்கு முன்புவரை அபிஷேக் சர்மாவின் பேட்டிங் நடுவரிசை வீரராகவே அடையாளப்படுத்தும் விதத்தில் இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் இருந்து யுவராஜ் சிங்கின் வழிகாட்டலில்தீவிரமாக அபிஷேக் சர்மா பயிற்சி எடுத்தார்.

இதன் விளைவாக டாப்-3 பேட்டராக அபிஷேக் சர்மா தன்னை உயர்த்தி, எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் வீரராக மாறினார். அபிஷேக் சர்மாவை கடந்த 4 ஆண்டுகளில் செதுக்கி, தேர்ந்த பேட்டராகவும், ஆல்ரவுண்டராகவும் ஒளிரச் செய்ததில் யுவராஜ் சிங்கிற்கும் பங்குண்டு.

“என்னுடைய பேட்டிங் திறமையை, சிக்ஸர் அடிக்கும் திறனை மேம்படுத்தியது யுவராஜ் சிங்தான். எனக்கு சிறுவயதிலிருந்து கிரிக்கெட் பயிற்சி அளித்த என் தந்தை என்னை சுதந்திரமாக விளையாடவே அனுமதித்தார். எனக்கு பயிற்சியாளராக இருந்த என் தந்தை பெரிய ஷாட்களை அடிக்க ஊக்கப்படுத்தினார், பொதுவாக பயிற்சியாளர்கள் பெரிய ஷாட்களை ஆட அறிவுறுத்தமாட்டார்கள் ஆனால், என் தந்தை வேறுபட்டு நின்று என்னை ஊக்கப்படுத்தினார். அதையே களத்திலும் பிரதிபலித்தேன். நான் அச்சமில்லாமல் அழுத்தமின்றி பேட் செய்ய என் தந்தையும், யுவராஜ் சிங்கும் முக்கியக் காரணம் ” என அபிஷேக் கூறியிருக்கிறார்.

 
அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அபிஷேக் சர்மாவின் சதத்தின் ரகசியம்

அபிஷேக் சர்மா 2-ஆவது போட்டியில் சதம் அடித்தில் சுப்மான் கில்லின் பங்களிப்பும் இருக்கிறது. சுப்மான் கில் பேட்டை கடனாக பெற்று விளையாடித்தான் அபிஷேக் 2வது ஆட்டத்தில் களமிறங்கி ஜிம்பாப்வேவுக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.

சுப்மான் கில் பேட்டில் விளையாடியது குறித்து அபிஷேக் சர்மா தனது பேட்டியில் கூறுகையில் “ ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் சுப்மான் கில்லின் பேட்டை கடனாக வாங்கித்தான் விளையாடினேன். எனக்கு எப்போதெல்லாம் நெருக்கடியான, அழுத்தமான சூழல் வருகிறதோ அப்போது கில் பேட்டை எடுத்து விளையாடுவேன். நான் இந்திய அணியில் தேர்வானதும் எனக்கு தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தது சுப்மான் கில்தான்.”

“சுப்மான் கில் பேட்டை வாங்கி விளையாடுவது இப்போது வந்த பழக்கம் அல்ல. நான் 12வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஆடும்போதிலிருந்து வந்தது. எப்போதெல்லாம் அழுத்தமான சூழல் வருகிறதோ அப்போது சுப்மான் கில் பேட்டை எடுத்து விளையாடுவேன். ஐபிஎல் தொடரிலும் இதுபோல்தான் நடந்துள்ளது, ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் அப்படித்தான் சுப்மான் கில் பேட்டில் விளையாடினேன்” எனத் தெரிவித்தார்.

அழுத்தத்தை தாங்கி விளையாடும் போக்கு குறித்து அபிஷேக் கூறுகையில் “அழுத்தத்தை தாங்கி விளையாட எனக்குக் கற்றுக்கொடுத்தது ஐபிஎல் தொடர்தான். முதல் போட்டி என்றபோதிலும்கூட பெரிதாக அழுத்தத்தோடு விளையாடவில்லை. ஆனால், டக்அவுட் ஆகியது எனக்கு நெருக்கடியளித்தது. ஆனால் என் மனநிலை, பேட்டிங் ஆகியவை சரியான நிலையில்தான் இருந்தது.” என்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா vs ஜிம்பாப்வே: வெற்றிக்கு வித்திட்ட இளம் இந்திய அணியின் 'புதிய பாணி'

India vs Zimbabwe T20 series 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இளம் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகு, பும்ரா, சிராஜ், சஹல், குல்தீப், ஹர்திக், ரிஷப் பந்த், ஆகிய அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் இளம் இந்திய அணி முதல் தோல்விக்குப் பிறகு வென்ற டி20 தொடர் இது.

அடுத்த தலைமுறை மாற்றத்துக்கு இந்திய அணியை மாற்றும் விதத்தில் இந்தத் தொடருக்கு வீரர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டனர். இதில் பெரும்பாலான வீரர்கள் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்படும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஏராளமான வீரர்கள்

குறிப்பாக தொடக்க ஆட்டத்துக்கு மட்டும் ஜெய்ஸ்வால், கெய்க்வாட், கில், அபிஷேக் என 4 வீரர்கள் இருப்பதால் இதில் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சுழற்பந்துவீச்சில் ரிங்கு சிங், வாஷிங்டன், குல்தீப், சஹல், வேகப்பந்துவீச்சில் பும்ரா, சிராஜ், தேஷ்பாண்டே, கலீல் அகமது, முகேஷ் குமார் என ஏராளமான வீரர்கள் இருப்பதால் அடுத்தடுத்து வரும் தொடர்களில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது என்பது புதிய பயிற்சியாளர் கம்பீருக்கு சவாலான பணியாக இருக்கும்.

 
India vs Zimbabwe T20 series 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹராரேவில் நேற்று நடந்த 4வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் சேர்த்தது. 153 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 28 பந்துகள் மீதமிருக்கையில் 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.

ஜிம்பாப்வே பேட்டர்கள் கடினமாகச் சேர்த்த இந்த 152 ரன்கள்கூட இந்திய பேட்டர்களுக்கு பெரிய சவாலாக இருக்கவில்லை. ஜிம்பாப்வே அணி வீரர்கள் மொத்தமாகவே 10 பவுண்டரிகள்தான் அடித்திருந்தனர்.

ஆனால் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மட்டுமே 13 பவுண்டரிகள், கேப்டன் கில் 6 பவுண்டரிகள் என 19 பவுண்டரிகளை விளாசியிருந்தனர்.

சேஸிங் மட்டும் குறி

வெற்றிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், “சேஸிங்கை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று மட்டும் ஆலோசித்தோம். முதல் போட்டியைப் போல் அல்லாமல் சிறப்பாக முடித்திருக்கிறோம்.

சிறந்த வீரர்களைக் கொண்ட ஆகச் சிறந்த அணியாக இது இருக்கிறது. அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று முன்னோக்கி நகர்வோம். வீரர்களை மாற்றுவது குறித்து இதுவரை ஆலோசிக்கவில்லை, டாஸ் போட்ட பிறகு வீரர்கள் மாற்றம் குறித்து தெரிவிப்பேன்,” எனத் தெரிவித்தார்.

 

ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன்

India vs Zimbabwe T20 series 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிரடியாக பேட் செய்த ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களுடனும்(13 பவுண்டரி, 3 சிக்ஸர்), கேப்டன் கில் 39 பந்துகளில் 58 ரன்களுடனும் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை ஜெய்ஸ்வால் வென்றார்.

தொடக்கம் முதலே ஜெய்ஸ்வால், கில் ஜிம்பாப்வே பந்துவீச்சை வெளுத்தனர். ரிச்சர்ட் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 3 பவுண்டரிகளை விளாசினார். சதாரா வீசிய முதல் ஓவரிலும் 4 பவுண்டரிகளை ஜெய்ஸ்வால் வெளுத்தார்.

நான்கு ஓவர்களுக்குள் இருவரும் பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். இந்திய அணி 3.5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியதில், ஜெய்ஸ்வாலின் ஸ்கோர் மட்டும் 39 ரன்களாக இருந்தது. பவர்ப்ளே ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்து ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்டை உயர்த்தியது. அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 29 பந்துகளில் அரை சதம் அடித்தார். 10 ஓவர்களுக்குள் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

இருவரையும் பிரிக்க கேப்டன் சிக்கந்தர் ராசா பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பந்துவீசச் செய்தும் எந்தப் பலனும் இல்லை. கில், ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து ஜிம்பாப்வே பந்துவீச்சை துவம்சம் செய்தனர். கில் 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். 14.5 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது. 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 156 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற்றது.

இளம் இந்திய அணியின் புதிய பாணி

ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரிகளை விளாசியுள்ளார். ஜெய்ஸ்வால் தான் எதிர்கொண்ட 53 பந்துகளில் 2 பந்துகளை மட்டுமே தற்காப்பு ஆட்டத்தில் விளையாடியுள்ளார். மற்ற பந்துகளில் எல்லாம் ரன்களை சேர்த்து, பெரிய ஷாட்களையும் அடித்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன் இருந்த இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் முதலில் தங்கள் விக்கெட்டை பாதுகாத்துக் கொண்டு, நிலைப்படுத்தி அதன் பிறகுதான் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுப்பார்கள்.

ஆனால், ஜெய்ஸ்வால் தொடக்கமே அதிரடியாக இருக்கிறது, புதிய இளம் இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

India vs Zimbabwe T20 series 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெறாத நிலையில் அபிஷேக் 2வது டி20 போட்டியில் 46 பந்துகளில் சதம் அடித்து இளம் இந்திய அணி ஆக்ரோஷமானது என்பதை வெளிப்படுத்தினார். ஜெய்ஸ்வால் 3வது மற்றும் 4வது டி20 போட்டிகளில் பங்கேற்று ஆடியதும், அவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய பாணியைக் கையில் எடுத்துள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு அடுத்தார்போல் பவர்ப்ளே ஓவர்களுக்குள் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் பேட்டர் ஜெய்ஸ்வால்தான்.கடந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் குவித்தது. இதில் ஜெய்ஸ்வால் பவர்ப்ளே ஓவர்களுக்குள் 25 பந்துகளில் 53 ரன்களை சேர்த்திருந்தார்.

டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருருந்தாலும், ஜெய்ஸ்வாலுக்கு கடைசி வரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல் சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு ஜெய்ஸ்வால் விளையாடாத நிலையில் அவரின் ஃபார்ம் குறித்த கேள்விகள் எழுந்தன. ஆனால், அனைத்தும் கடந்த 2 போட்டிகளில் ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்துள்ளார்.

தவறைத் திருத்திய ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே பேட்டர்கள் இந்திய அணிக்குப் பெரிய இலக்கை நிர்ணயித்துவிட வேண்டும் என்ற நோக்கில் ரன் சேர்க்கப் போராடினர்.

ஆனால், கடந்த 3 டி20 போட்டிகளிலும் பவர்ப்ளே ஓவர்களுக்குள் குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளை ஜிம்பாப்வே இழந்து வந்தது. ஆனால், இந்த முறை அந்தத் தவறை ஜிம்பாப்பே பேட்டர்கள் செய்யவில்லை. மாறாக பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்தனர். மருமனி, வெஸ்லே இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்து 8.4 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

மூன்றாவது ஓவரிலேயே மருமனி ஆட்டமிழந்திருக்க வேண்டியது. ஆனால் ஷிவம் துபே கேட்சை கோட்டைவிட்டாதால், 32 ரன்கள் சேர்க்க முடிந்தது. இருவரின் விக்கெட்டுகளையும் எடுக்க முடியாமல் இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர் என்றுதான் கூற வேண்டும்.

பிரதான பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம்

இதையடுத்து, பகுதிநேரப் பந்துவீச்சாளர்களான ஷிவம் துபே, அபிஷேக் ஷர்மாவை பந்துவீச கேப்டன் கில் அழைத்தார். அதற்கு பலன் கிடைத்து, மருமனி 32 ரன்களில் அபிஷேக் பந்துவீச்சிலும், மாதவரே 25 ரன்களில் துபே பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ஜிம்பாப்பே இழந்தது. 33 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை விரைவாக ஜிம்பாப்வே அணி இழந்தது.

 

சிக்கந்தர் விளாசல்

India vs Zimbabwe T20 series 2024

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணியை மீட்க வேண்டிய நிலையில் கேப்டன் சிக்கந்தர் ராசா களமிறங்கி, கேமியோ ஆடினார். 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 28 பந்துளில் 46 ரன்களை சிக்கந்தர் ராசா சேர்த்தார். கலீல் அகமது வீசிய கடைசி ஓவரில் மேயர்ஸ் 12 ரன்களில் கலீலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மதன்டே 4 ரன்களில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

ஜிம்பாப்வே தொடக்க ஆட்டக்காரர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நடுவரிசை பேட்டர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர். கேப்டன் சிக்கந்தர் ராசாவுக்கு ஈடு கொடுத்து பேட் செய்யவும் பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை. ஒருவேளை சிக்கந்தருக்கு இணையாக ஒரு பேட்டர் விளையாடியிருந்தால் கூடுதலாக 20 ரன்களை சேர்த்திருக்கும்.

சவாலாக வருவோம்

ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா கூறுகையில், “நாங்கள் 160 ரன்களை எதிர்பார்த்தோம். ஆனால் இந்த விக்கெட்டில் 180 ரன்கள் சேர்த்தாலும் போதாது என்ற அளவில் விக்கெட் மெதுவாக இருந்தது.

நாங்கள் இந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்தோம் என்பது கௌரவமாக இருக்கிறது. விரைவில் நாங்கள் அனைத்து அணிகளுக்கும் சவாலாக வருவோம். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 55 ரன்கள் சேர்த்தோம். இந்த டி20 தொடரை இந்திய அணி வென்றாலும் கடைசி ஆட்டத்தில் வென்று 2-3 என்ற கணக்கில் வெல்ல முயல்வோம்” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சு மோசம்

இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பந்துவீச்சு இந்த ஆட்டத்தில் சிறப்புக்குரியதாக இல்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

குறிப்பாக தேஷ்பாண்டே தனது முதல் 2 ஓவர்களில் 21 ரன்களை வாரி வழங்கி 3 ஓவர்களில் 30 ரன்களை கொடுத்தார். கலீல் அகமது 4 ஓவர்களை வீசி ஓவருக்கு 8 என்ற ரன்ரேட் வீதம் வழங்கினார்.

சுழற்பந்துவீச்சில் பிஸ்னோய் ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசினாலும், வாஷிங்டனும் ஓவருக்கு 8 ரன்களை வாரி வழங்கினார். 6 பந்துவீச்சாளர்கள் நேற்று பந்துவீசியும் ஒரு பந்துவீச்சாளர்கூட ஓவருக்கு 5 ரன்களுக்குள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தொட‌ரை 4-1 வென்று விட்ட‌து

 

சிம்பாவே அணியில் அனுப‌வ‌ம் இல்லாத‌ வீர‌ர்க‌ள் அதிக‌ம்

 

திற‌மையான‌ வீர‌ர்க‌ள் சில‌ருக்கு இந்தியாவுட‌ன் விளையாட‌ தெரிவு செய்ய‌ வில்லை..........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா vs ஜிம்பாப்வே: எந்த இந்திய கேப்டனாலும் முடியாத சாதனையை படைத்த சுப்மான் கில்

இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சுப்மான் கில் தலைமையில் முதல்முறையாக வெளிநாட்டில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.

இதுவரை எந்த இந்தியக் கேப்டன் தலைமையிலும் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லாத நிலையில் முதல்முறையாக கில் தலைமையில் இந்த சாதனையை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது.

ஹராரேவில் நடந்த கடைசி மற்றும் 5-ஆவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 42ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்த டி20 தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேட்டிங்கில் கேமியோ ஆடி 26 ரன்களும், 2 விக்கெட்டுகளையும் சாய்த்த ஷிவம் துபே ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 
வாட்ஸ்ஆப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சரிவிலிருந்து மீட்ட சாம்ஸன்

இந்திய அணி பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியநிலையில் அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டது சஞ்சு சாம்ஸனின் பொறுப்பான பேட்டிங். சாம்ஸன் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தாலும், கடைசி நேரத்தில் 4 சிக்ஸர்களை வெளுத்து அரைசதத்துடன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்ஸனின் முக்கியமான பங்களிப்புதான் இந்திய அணி வெல்ல காரணமாக அமைந்தது. சாம்ஸனின் பங்களிப்பை ஒதுக்கி வைத்துப் பார்த்தால் இந்திய அணி முதல் ஆட்டத்தைப்போன்று 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

அதேபோல பந்துவீச்சில் முகேஷ் குமார், சுந்தர், துபே ஆகியோரும் 13வது ஓவருக்குப்பின் சீராக விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாப்வே அணிக்கு நெருக்கடி அளித்து வீழ்த்த உதவினர்.

 
இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு பந்தில் 13 ரன்கள்

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் நேற்று ஒரே பந்தில் 13 ரன்கள் சேர்த்தார். சிக்கந்தர் ராசா வீசிய முதல் ஓவர் முதல்பந்தில் ஜெய்ஸ்வால் சிக்ஸர் விளாசினார். அந்த பந்து நோபாலாக மாறவே 7 ரன்கள் கிடைத்தது, அடுத்த ப்ரீஹிட் பந்திலும் ஜெய்ஸ்வால் சிக்ஸர் விளாசவே ஒரு லீகல் பந்தில் 13 ரன்களை விளாசி, ஒரே பந்தில் அதிக ரன் விளாசிய பேட்டர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். ஆனால், அதே ஓவரின் 4வது பந்தில் ஜெய்ஸ்வால் க்ளீன் போல்டாகி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த அபிஷேக் ஷர்மா 14 ரன்கள் சேர்த்தநிலையில் முசாராபானி வீசிய 4வது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து நகரவா வீசிய 5வது ஓவரில் ஷார்ட் பாலில் கேப்டன் கில் 13 ரன்கள் சேர்த்தநிலையில் கேப்டன் சிக்கந்தரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 
இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாம்ஸன் அரைசதம்

40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. 4வது விக்கெட்டுக்கு சாம்ஸன், ரியான் பராக் ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

ரியான் பராக், சாம்ஸன் ஜோடி 56 பந்துகளைச் சந்தித்து 65 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இருவரின் ஆட்டத்தால், இந்திய அணி பெரிய சரிவுக்குச் செல்வது தவிர்க்கப்பட்டது. ரியான் பராக் 22 பந்துகளில் 24 ரன்களில் பிரன்டன் சுழற்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில்நிதானமாக ஆடிய சாம்ஸன் 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். அதன்பின் 4 சிக்ஸர்களை விளாசி 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். 18-வது ஓவரில் முசாராபானி ஓவரில் பெரிய ஷாட்டுக்கு முயன்று சாம்ஸன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி இரு ஓவர்களில் ஷிவம் துபே கேமியோ ஆடிய இந்திய அணியின் ஸ்கோரை 150 ரன்களுக்கு மேல் உயர்த்த உதவினார். காரவா சுழற்பந்துவீச்சில் 2 பவுண்டரி, 2 சிக்ஸரும் விளாசி 12 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆகினார். ரிங்கு சிங் கடைசி ஓவரில் அடித்த சிக்ஸரும் இந்திய அணி 160 ரன்களைக் கடக்க உதவியது. ரிங்கு சிங் 11 ரன்களிலும், சுந்தர் ஒரு ரன்னிலும்இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் முசாராபானி மட்டும் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.

 
இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

தடுமாறிய ஜிம்பாப்வே

168 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. பவர்ப்ளே ஓவருக்குள் விக்கெட் வீழ்த்தி வரும் முகேஷ்குமார் இந்த முறையும் அதை சரியாகச் செய்தார். முதல் ஓவரின் 3-ஆவது பந்திலேயே வெஸ்லேவை க்ளீன் போல்டாக்கி டக்அவுட்டில் முகேஷ் வெளியேற்றினார்.

அடுத்துவந்த பென்னட் 10 ரன்களில் முகேஷ் குமார் வீசிய 3வது ஓவரில் துபேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் ஜிம்பாப்வே அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. டியான் மேயர்ஸ், மருமனி இருவரும் சேர்ந்து சரிவிலிருந்து அணியை மீட்க முயன்றனர்.

தேஷ்பாண்டே, பிஷ்னாய் ஓவர்களில் பவுண்டரிகளாக வெளுத்த மேயர்ஸ், மருமனி ஸ்கோரை உயர்த்தினர். வாஷிங்டன் வீசிய 9-வது ஓவரில் மருமனி கால்காப்பில் வாங்கி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் விக்கெட் வீழ்த்தி ஜிம்பாப்வே சரிவைத் தொடங்கி வைத்தார்.

இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

விக்கெட் சரிவு

அதன்பின் சீரான இடைவெளியில் ஜிம்பாப்பே பேட்டர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். ஷிவம்துபே தான் வீசிய 13வது ஓவரில் மேயர்ஸ்(34) விக்கெட்டையும், 15-வது ஓவரில் கேம்பெல்(4) விக்கெட்டையும் வீழ்த்தினார். சிக்கந்தர் ராசா 4 ரன்னில் துபேயால் ரன் அவுட் செய்யப்பட, ஜிம்பாப்வே அணி 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.

கடைசி நேரத்தில் பராஸ் அக்ரம், 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகளை அடித்து உள்நாட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி, 27 ரன்களில் முகேஷ் வீசிய 19-வது ஓவரில் சாம்ஸனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் நகரவா டக்அவுட்டில் ஆட்டமிழக்கவே ஜிம்பாப்வே அணி 125 ரன்களில் ஆட்டமிழந்தது.

இந்தியத் தரப்பில் முகேஷ் குமார் 3.3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், துபே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 
இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாதித்த இளம் இந்திய அணி

டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் சீனியர் வீரர்கள் கோலி, ரோஹித், ஜடேஜா ஆகியோர் ஓய்வு அறிவித்த நிலையில், பல வீரர்களுக்கு இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இந்தத் தொடரில் முற்றிலும் சர்வதேச அனுபவம் இல்லாத வீரர்கள் கொண்ட இந்திய அணியை களமிறங்கியது. கேப்டன் கில் 14 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே விளையாடினார். இந்திய அணியில் 2 வீரர்கள் மட்டுமே 30 வயதைக் கடந்தவர்கள் மற்ற அனைத்து வீரர்களும் 30 வயதுக்குள்ளாக இருக்கும் இளம் வீரர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல் ஆட்டத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தபின் கடும் விமர்சனங்களை இந்திய அணி எதிர்கொண்டது. ஆனால் அதிலிருந்து விரைவாக மீண்டு தங்களை தயார் செய்து தொடர்ந்து 4 வெற்றிகளைப் பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

 
இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறந்த திறமையை வெளிப்படுத்த உதவியது

டி20 தொடரை வென்றது குறித்து கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “இந்த கேப்டன் பொறுப்பு என்னிடம் இருக்கும் சிறந்த திறமையை வெளிக்கொணர்ந்தது. இந்த கேப்டன் பதவியை ரசித்துச் செய்தேன். முதல் போட்டியில் தோற்றவுடன் எனக்கு அழுத்தம் இருந்தது. அந்த ஆட்டத்தில் ஆடுகளத்தை கணிக்காமல் விளையாடிவிட்டோம். ஆனால், அதன்பின் அந்த அழுத்தத்தில் இருந்து வெளியேறிய அடுத்தடுத்த வெற்றிகள் உதவியது.” என்றார்.

மேலும், “இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அவர்களுடன் நான் விளையாடியிருக்கிறேன். இதனால் அவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு எளிதாக அவர்களை அணுக எனக்கு பெரிதும் உதவியது. இதுபோன்ற பலதிறமையைான வீரர்களுடன் சேர்ந்து விளையாடும் அனுபவம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ரோஹித், பாண்டியா, கோலி ஆகியோர் திறமையானவர்கள். இவர்களிடம் இருந்து ஏராளமான திறமைகளை, அனுபவங்களைப் நான் பெற்றுள்ளேன். குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையில் அதிக போட்டிகளை விளையாடிய அனுபவம் எனக்கு உதவியது” எனத் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் Bரீம் இல‌ங்கைக்கு சென்று இல‌ங்கை ம‌ண்ணில் கோப்பைய‌ வெல்ல‌ போகின‌ம்😁........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.