அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலரின் கொழும்பு விஜயம் – இருநாட்டு ஒத்துழைப்பில் புதிய கட்டம்
Published By: Vishnu
20 Feb, 2026 | 10:02 PM
(வீ.பிரியதர்சன்)
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய கடல் வழித்தட சந்திப்பில் அமைந்துள்ள இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான நீடித்த பாதுகாப்புப் பங்காண்மை மேலும் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் மேற்கொண்டுள்ள கொழும்பு விஜயம், இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு வெறும் பாதுகாப்பு தொடர்பானதாக மட்டுமன்றி, பொருளாதாரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகிய பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக விரிவடைந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.
உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி கடல் வழியாக நடைபெறும் நிலையில், முக்கிய கடல் வழித்தடங்களின் பாதுகாப்பு இருநாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கடல் வழித்தடங்களைப் பாதுகாப்பதன் மூலம், தடையற்ற வர்த்தகம், முதலீட்டு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இது இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக அமைகிறது.
இந்த கூட்டாண்மை, தனது கடற்பரப்பையும் தேசிய எல்லைகளையும் பாதுகாப்பதற்கான இலங்கையின் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
இலங்கை தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த அமெரிக்கா தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இராணுவ துறையை மட்டுமன்றி, பேரிடர் மேலாண்மை மற்றும் அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாகும்.
அமெரிக்காவின் மொன்டானா தேசிய காவற் படை வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவு, இலங்கையின் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்த உதவியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் தாக்கம் செலுத்திய ‘டிட்வா’ சூறாவளி காலத்தில் இருநாடுகளும் இணைந்து மேற்கொண்ட பதிலளிப்பு நடவடிக்கைகள், இந்த ஒத்துழைப்பின் பலத்தைக் காட்டியதாக கூறப்படுகிறது.
இருநாடுகளும் இணைந்து, ஸ்திரமான, அமைதியான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளன.
கடல் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் பேரிடர் எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றில் வலுவான கூட்டாண்மை, பிராந்திய அமைதிக்கும் நீடித்த வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.virakesari.lk/article/239191
By
ஏராளன் ·