Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வெளிநாட்டுப் பெண் ஒரு காகிதத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை எழுதி கொடுத்தார்.
படக்குறிப்பு,போலீசார் சங்கிலியை உடைத்து அந்த பெண்ணை மீட்டனர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், முஷ்டாக் கான்
  • பதவி, பிபிசி மராத்தி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மகாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க வம்சாவளி பெண் ஒருவர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அந்த பெண்ணின் கணவரே அவரை கட்டி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பாதிக்கப்பட்ட அந்த பெண், ஒரு பேப்பரில் எழுதி காட்டியதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராக இருந்தாலும், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசித்துள்ளார். அவரது ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் சில நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் காட்டில் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக பேப்பரில் எழுதி காண்பித்துள்ளார். அந்த பெண் எவ்வளவு காலம் இந்த நிலையில் இருந்தார் என்னும் தகவல் வெளியாகவில்லை.

 

மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அது முடியும் வரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை கரடி மலை வனப் பகுதி வழியாகச் சென்ற விவசாயிகள் மற்றும் மாடு மேய்ப்பவர்கள் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது, பெண் ஒருவர் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.

அதன் பிறகு, அந்தப் பெண் மீட்கப்பட்டு சாவந்த்வாடியில் உள்ள உபாசிலா மருத்துவமனையில் முதன்மை சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்த சமயத்தில், உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்ததால் அப்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கால்நடை மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கேட்ட குரல்

மகாராஷ்டிரா கரடி மலை காட்டில் சங்கிலியால் கட்டிப்போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் - தமிழகத்தோடு என்ன தொடர்பு
படக்குறிப்பு,அந்த பெண் காட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

சிந்துதுர்க் மாவட்டத்தின் சாவந்த்வாடியில் உள்ள ரோனபால் சோனுர்லி (Ronapal Sonurli) கிராமத்தின் மையத்தில் கரடி மலை உள்ளது. இந்த மலைப்பாங்கான வனப் பகுதியில் மாடு மேய்ப்பவர்கள் மற்றும் விவசாயிகள் சிலர் சனிக்கிழமை காலை கால்நடைகளை மேய்க்கச் சென்றுள்ளனர்.

அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் வந்த திசையில் அனைவரும் தேடி சென்றனர். அப்போது, காட்டுக்குள் சிறிது தூரத்தில் ஒரு பெண்ணின் கால்கள் மரத்தடியில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.

அந்த பெண்ணின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரை பார்த்த விவசாயிகள் அச்சமடைந்தனர். உடனே அருகில் உள்ள கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் அந்த பெண்ணை சுற்றி பரிசோதித்து, அவரின் காலில் பிணைத்திருந்த சங்கிலியை உடைத்து அவரை விடுவித்து, சிகிச்சை அளிக்க அழைத்துச் சென்றனர்.

மீட்கப்பட்ட சமயத்தில் அந்த பெண்ணால் சரியாக பேச முடியவில்லை. போலீசார் அந்த பெண்ணை அங்கிருந்து சவந்த்வாடியில் உள்ள அப்ஜிலா மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இன்று காலை (ஜூலை 28) அவர் மேல் சிகிச்சைக்காக ஓரோஸில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் போது பெண்ணின் உடலில் அதிக காயங்கள் இல்லை. ஆனால், பல நாட்களாக எதையும் சாப்பிடாமலும், குடிக்காமலும் இருந்ததால் அவர் மிகவும் பலவீனமாகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

பெண்ணை சங்கிலியால் கட்டியது கணவரா?

மகாராஷ்டிரா கரடி மலை காட்டில் சங்கிலியால் கட்டிப்போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் - தமிழகத்தோடு என்ன தொடர்பு
படக்குறிப்பு,மீட்கப்பட்ட பெண்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சில முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்த பெண்ணால் சரியாக பேச முடியாததால் அதிகாரிகளிடம் எழுதி காண்பிக்க, பேனா மற்றும் பேப்பரை கேட்டு தனக்கு நேர்ந்ததை எழுதினார்.

தன்னை சங்கிலியால் கட்டிப்போட்டது தன் கணவர் தான் என்று அவர் எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார். ஆனால் அவர் எதற்காக இதை செய்தார் என்பது பற்றி எந்த தகவலும் இன்னும் தெளிவாக வெளிப்படுத்தப்படவில்லை.

பேச முடியாததால் எழுதிக் காட்டினார்

மகாராஷ்டிரா கரடி மலை காட்டில் சங்கிலியால் கட்டிப்போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் - தமிழகத்தோடு என்ன தொடர்பு
படக்குறிப்பு,மீட்கப்பட்ட பெண் ஒரு காகிதத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை எழுதி கொடுத்தார்.

மீட்கப்பட்ட அந்த பெண் பேசும் நிலையில் இல்லாததால், என்ன நடந்தது என்று இப்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண் ஒரு காகிதத்தில் எழுதி தனக்கு நடந்ததை ஓரளவுக்கு கூறியுள்ளார்.

அதன்படி, அவருக்கு ஒருவித ஊசி போடப்பட்டுள்ளது. இதனால் தாடை பகுதியை அவரால் அசைக்க முடியவில்லை. அவரால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை.

40 நாட்களாக வனப்பகுதியில் உணவு, தண்ணீர் இல்லாமல் இந்த நிலையில் இருந்ததாக பேப்பரில் இந்த பெண் ஒரு கோரிக்கையை எழுதி வைத்துள்ளார். ஆனால் அவர் எப்படி இவ்வளவு நேரம் உணவும் தண்ணீரும் இல்லாமல் இருந்தார்? போன்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

அவர் இறுதியாக எழுதி காண்பித்தது, "என் கணவர் என்னை மரத்தில் கட்டிவைத்து விட்டு என் வாழ்க்கை இங்கே முடிந்துவிடும் என்று ஓடிவிட்டார். நான் பாதிக்கப்பட்ட பெண். தற்போது உயிர் பிழைத்திருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

உறுதியான தகவலுக்குப் பிறகுதான் போலீசார் பேசுவார்கள்.

இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், தீவிர விசாரணைக்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் மீட்கப்பட்ட சமயத்தில் மனநிலை சரியில்லாத நிலையில் இருப்பது போன்று தெரிந்தது. ஆனால் இதுகுறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என காவல்துறை கண்காணிப்பாளர் சவுரப் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் இதற்கு முன்பு டெல்லி, மும்பை, கோவா போன்ற இடங்களில் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற்றுள்ளார். அதற்கான ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இருந்துள்ளது.

தனது கணவர் தமிழ்நாட்டில் இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார். அவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஒரு குழுவையும் தமிழ்நாட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் அவருடைய வார்த்தைகளில் முரண்பாடு இருக்கிறது. எனவே, போலீசார் அனுப்பியுள்ள குழுக்களின் விசாரணையில் உறுதியான விஷயம் தெரியவந்த பின்னரே தகவல்களை வழங்க முடியும் எனவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்போர்ட்டில் அமெரிக்கா, ஆதாரில் தமிழ்நாடு - மகாராஷ்டிர காட்டில் மீட்கப்பட்ட பெண் யார்? தொடரும் மர்மம்

தமிழ்நாட்டில் விசாரணை : காட்டில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட அமெரிக்க பெண்ணின் மர்ம பின்னணி
படக்குறிப்பு, போலீசார் சங்கிலியை உடைத்து அந்த பெண்ணை மீட்டனர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், முஷ்டாக் கான், கீதா பாண்டே & செரிலன் மொல்லன்
  • பதவி, பிபிசி
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மகாராஷ்டிராவில் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடி தாலுகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க பெண் ஒருவர் சில நாட்கள் முன்னர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் பெரும் மர்மம் இருப்பது தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் லலிதா கயி. அவருக்கு வயது 50. ஒரு வாரத்திற்கு முன்பு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் உதவி கோரி அவர் எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு கால்நடை மேய்ப்பவர்கள் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, பின்னர் போலிஸுக்கும் தகவல் கொடுத்தனர்.

சங்கிலியால் மரத்துடன் சேர்த்து அவர் கட்டப்பட்டிருந்தார். சங்கிலியை அறுத்து அவரை மீட்ட காவல்துறையினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உணவு, தண்ணீரின்றி பல நாட்கள் இருந்ததால் முற்றிலும் மெலிந்து காணப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரது உடல்நிலை சற்றி தேறி வருகிறார் என்று காவல்துறை தரப்பு தெரிவித்தது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2), அவர் மேல் சிகிச்சைக்காக மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவரை தமிழ்நாட்டில் தேடி வரும் போலீஸ்

பேச முடியாத நிலையில் இருந்த லலிதா கயி காவல்துறைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்தில், தனது கணவர் தன்னைச் சங்கிலியால் கட்டிப் போட்டு, உணவு, தண்ணீர் இல்லாமல் இறந்துவிட வேண்டும் என்பதற்காக காட்டில் விட்டுச் சென்றதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அவரது கணவரை தமிழ்நாட்டில் தேடி வருகிறோம் என்று மகாராஷ்டிர போலீசார் கூறுகின்றனர்.

ஆனால் லலிதா கயி மீட்கப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகும், அவர் யார், அவர் எப்படி காட்டுக்குள் வந்தார், அவரை மரத்தில் கட்டிவைத்தது யார், எதற்காக அப்படி செய்தார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவு கிடைக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை அவரைக் கண்டுபிடித்த கால்நடை மேய்ப்பவரான பாண்டுரங் கவ்கர், பிபிசி மராத்தியிடம், " காட்டுக்குள் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது, ஒரு பெண் அலறுவதைக் கேட்டேன்" என கூறினார்.

"மலையின் அடிவாரத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குள் சத்தம் கேட்டது. நான் அங்கு சென்றபோது, அவருடைய ஒரு கால் மரத்தில் கட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். அவர் ஒரு மிருகம் போல கத்தினார். மற்ற கிராமவாசிகளையும் உள்ளூர் காவல்துறையையும் அங்கு வரவழைத்தேன். " என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விசாரணை : காட்டில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட அமெரிக்க பெண்ணின் மர்ம பின்னணி
படக்குறிப்பு,காட்டில் இருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்

திருட்டுக்கான வாய்ப்பு இல்லை

அமெரிக்க குடியுரிமை இருப்பதற்கான பாஸ்போர்ட் நகலும், தமிழ்நாட்டில் வீட்டு முகவரியுடன் இந்தியர்களுக்கான பிரத்யேக அடையாள அட்டையான ஆதார் அட்டையும் அவரிடம் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த பெண்ணிடம் ஒரு மொபைல் போன், ஒரு டேப்லெட் கணினி (Tab) மற்றும் 31,000 ரூபாய் இருந்ததாக அவர்கள் கூறினர். எனவே பணத்தை திருடுவதற்காக அவரை யரும் கட்டிப் போடவில்லை என்பது தெளிவாக புரிந்தது.

கால்நடை மேய்ப்பவர் அன்றைய தினம் தன் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அந்த காட்டு பகுதிக்குள் ஓட்டி சென்றதால் தான் அந்த பெண்ணின் சத்தம் கேட்டு மீட்க முடிந்தது. அது பெரிய அளவில் மனித நடமாட்டம் ஏதும் இல்லாத பகுதி. பாண்டுரங் கவ்கர் அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது அந்தப் பெண்ணின் அதிர்ஷ்டம் என்று உள்ளூர்வாசிகள் கூறினர்.

அவர் கட்டி போடப்பட்டிருந்த அந்த காடு மிகப் பெரியது, அவர் உதவிக்காக கத்தியது யாருக்கும் கேட்காது. அன்று மட்டும் மீட்கப்படாமல் இருந்திருந்தால் அப்படியே பல நாட்கள் இருக்க வேண்டிய நிலை வந்திருக்கலாம்.

காவல்துறையினர் முதலில் அவரை ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரை அண்டை மாநிலமான கோவாவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

மருத்துவர்கள் கூறுவது என்ன?

கோவா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சிவானந்த் பந்தேகர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், அவரது காலில் சில காயங்கள் இருப்பதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலத் தெரிவதாகவும் கூறினர்.

"அவர் எவ்வளவு நாட்கள் சாப்பிடவில்லை என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் தற்போது உடல் நலம் தேறி உள்ளது" என்று டாக்டர் பாண்டேகர் கூறினார். உடல் நலம் மேம்பட்டதால் வெள்ளிக்கிழமை, மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

"தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சங்கமித்ரா ஃபுலே பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.

"அவர் மருந்து சாப்பிடுகிறார், உணவு உட்கொள்கிறார். இங்கிருக்கும் மக்களுடன் பழகுகிறார். ஏதாவது தேவை என்றால் கேட்கிறார். அவருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும்." என்று விவரித்தார்.

காவல்துறையின் கூற்றுப்படி, லலிதா கயி அமெரிக்காவில் ஒரு பாலே நடனக் கலைஞராகவும் யோகா பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் - அவரிடம் உள்ல சில ஆவணங்களில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் யோகா மற்றும் தியானம் படிக்க சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்தார்.

இந்தியாவில் தான் அவர் தனது கணவரைச் சந்தித்தார். சில ஊடகங்களில், போலீசார் அவரின் பெயரை `சதீஷ்’ என்று குறிப்பிட்டனர். கணவருடன் அவருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக போலீசார் நம்புகின்றனர்.

அவர் கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகவும், பின்னர் மும்பை நகருக்குச் சென்றதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்நாட்டில் விசாரணை : காட்டில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட அமெரிக்க பெண்ணின் மர்ம பின்னணி
படக்குறிப்பு,மீட்கப்பட்ட பெண் ஒரு காகிதத்தில் தன்னைப் பற்றிய தகவல்களை எழுதி கொடுத்தார்.

ஆனால் கடந்த வாரம் அவர் கண்டுபிடிக்கப்பட்ட அந்த காட்டு பகுதிக்குள் அவர் எப்போது அல்லது எப்படி வந்தார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.

ஆரம்பத்தில் பேச முடியாத நிலையில் இருந்த கயி, ஒரு பேப்பரில் தான் சொல்ல நினைக்கும் குறிப்புகளை எழுதி காண்பித்து, காவல்துறை மற்றும் மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டார்.

பேப்பரில் எழுதியதில் முக்கிய தகவலாக பார்க்கப்பட்டது, தன்னை மரத்தில் கட்டி வைத்தது கணவர் தான் என்று கூறியதுடன், 40 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்ததாக கூறியுள்ளார்.

மேலும், தனக்கு "அதிகப்படியான மன நோய்க்கான ஊசிகள்" போடப்பட்டதாகவும், அதன் விளைவாக தனது தாடை பகுதி பாதிக்கப்பட்டது, தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார். தாடை பகுதி பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு நரம்பு வழியாக ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டிய சூழல் உருவானது.

"நான் துன்பத்தை அனுபவித்து உயிர் பிழைத்திருக்கிறேன். ஆனால் அவர் இங்கிருந்து ஓடிவிட்டார்" என்று லலிதா குற்றம் சாட்டினார்.

 

உண்மை வெளிவருமா?

லலிதா கயி கொடுத்த வாக்குமூலத்தை தங்களால் சரிபார்க்க முடியவில்லை என்றும், உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் ஒருவர் இவ்வளவு காலம் உயிர் வாழ வாய்ப்பில்லை என்றும் காவல்துறை கூறுகிறது.

அவரது கணவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள மகாராஷ்டிர காவல்துறையினர், மேலும் விசாரணை நடத்த தமிழ்நாடு, கோவா ஆகிய மாநிலங்களுக்கு குழுக்களை அனுப்பி உள்ளனர். அவரது கணவர் இதுவரை காவல்துறையால் கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் ஊடகங்களுக்கு எந்த தகவலும் அளிக்கவில்லை.

மேலும் அந்த பெண்ணிடம் இருந்து கிடைத்த மொபைல் போன் மற்றும் டேப்லெட்டில் உள்ள தகவல்களை வைத்து தடயங்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் - "விசாரணையை விரைவுபடுத்த காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது" என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன - இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஒரு செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம், "அமெரிக்க தனியுரிமைச் சட்டம் காரணமாக" தனிப்பட்ட தகவல்களைப் பரப்புவதை நிர்வகிக்கும் விசாரணைகளுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறினார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.