Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"நிலவே முகம் காட்டு .. "
 
 
ஞாயிறு, செப்டம்பர் 23, 2018, நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக சென்னை நகரம் இரண்டு மணித்தியாலத்துக்கு ஆர்வமும், அதிர்ச்சியும் அடைந்தது. பலர் கைகளில் டெலஸ்கோப் இருந்தது. நிலாவையே பார்த்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் பிரத்தியேக கண்ணாடி அணிந்தும் இருந்தனர். அப்போது அவர்களில் சிலர், "ஆமாம்.. பாபா முகம் தெரிகிறது" எனக் கூறி பரவசப்பட்டனர். ஒருசிலர் நிலாவை பார்த்து வணங்கவே ஆரம்பித்து விட்டனர்.
 
எனக்கு இவர்களை பார்க்க வேடிக்கையாக இருந்தது, நான் உயர் வகுப்பு படிக்கும் கூலித் தொழிலாளியின் மகன். எங்கள் குடிசைக்கு கொஞ்சம் அருகில் தான், ஒரு மாட மாளிகையில் ஒரு கோடீஸ்வரர் வாழ்ந்து வாரார். அவர் குடும்பமும் தமது மொட்டை மாடியில் இருந்து அந்த நிலாவை உற்று நோக்கிக் கொண்டு இருந்தனர். ஆனால் அவரின் இளம் மகள் மட்டும் தன் மாடி அறையில் இருந்த சாளரத்தினூடாக நிலாவைப் பார்த்துக்கொண்டு இருந்தார். அன்று தான் அவள் முகத்தை முழுமையாக பார்த்தேன்!
 
பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, முழுமையான சிவந்த உதடுகள் என அளவான முக அங்கங்கள் கொண்ட பொலிவான வெள்ளை முகம் என்னை அப்படியே திகைப்பில் ஆழ்த்திவிட்டது. இவள் முகத்தில் தோன்றிய வெண்ணிலவின் ஒளி வெள்ளம் என் நெஞ்சம் எல்லாம் பரவி நின்றது. பாபா முகம் எனக்கு முக்கியம் இல்லை. அவளையே பார்த்துக்கொண்டு ஓலைக் குடிசையின் முற்றத்தில் நின்றேன். தங்கள் மனசுக்கு பிடிச்ச உருவத்தை மனதில் நினைத்து கொண்டு பார்த்தால் அதன் முகம் நிலாவில் இருப்பது போல் தோன்றும் என்று யாரோ இதற்கு விளக்கமும் கொடுப்பது காதில் விழுந்தது. நானும் திரும்பி நிலாவை பார்த்தேன், அங்கு பாபா இல்லை, அவள் முகமே இருந்துது! 'நிலவே முகம் காட்டு' என என் வாயும் முணுமுணுத்தது.
 
சோலை பறவைகளும் வண்ணாத்திப் பூச்சியும் அவளின் தலை மேல் படபடத்து, யார் முதலில் அவளின் மூங்கீலென திரண்ட தோளில், மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போல தோளில் விழும் கருங் கூந்தலில், அமருவது என போட்டி போடுகின்றன. மாலைப் பொழுது மறையும் கதிரவன் கூட, உடனடியாக ஒரு கணம், மீண்டும் அவளை எட்டிப்பார்த்து மறைகிறது. அப்படி என்றால் நான் எங்கே?
 
அப்படி ஒரு அழகு! நான் திரும்பவும் அவளை அண்ணாந்து பார்த்தேன். அவள் இன்னும் அந்த நிலவையே பார்த்துக் கொண்டு இருந்தாள். என்றாலும் நான் மனம் உடைந்து வாடியதை கண்டாலோ என்னவோ, திடீரென எனக்கு கையால் சைகை காட்டினாள். அது சரியாக விளங்கவில்லை என்றாலும், ஒரு நட்பின் அடையாளம் என்று மட்டும் விளங்கியது. அந்தக் கணமே, நாம் யார் யாராக இதுவரை இருந்தாலும், செம்புலத்தில் விழுந்த நீரைப்போல, எம் அன்புடை நெஞ்சம் இன்று கலந்தது போல் உணர்ந்தேன்! அந்த நிலாவுக்கு, பாபா என பொய் பரப்பியவனுக்கு, பொய்களிலேயே வாழும் ஏமாறும் கும்பலுக்கு நன்றி சொன்னேன்.
 
 
"யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர்போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே!"
 
 
இன்னும் ஒரு முக்கிய கேள்வி என் மனதில் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்தது, அவள் என்னை திருமணம் செய்வாளோ ?, இல்லை இது வாலிப வயதின் பொழுதுபோக்கு உணர்வோ? அது எனக்குப் புரியவில்லை?. என்றாலும், இப்ப தினம் தினம் அவள் கையால் கண்ணால் ஏதேதோ பேசுகிறாள். நானும் 'நிலவே முகம் காட்டு' என்று அதைப் பார்த்து ரசிக்கிறேன்.
 
ஆனால் ஒரு மாதம் கழிய, எங்கள் குடிசையை பார்த்துக்கொண்டு இருந்த அவளின் அந்த சாளரம், அதிகமாக பூட்டியே கிடந்தது. சிலவேளை திறந்தாலும், அதனால் எட்டிப்பார்ப்பது அவள் இல்லை. ஒரு நாள் கல்லில் ஒரு கடிதம் சுருட்டிக் கட்டி எங்கள் முற்றத்தில் விழுந்து இருந்தது. அதை நான் குடிசைக்குள் கொண்டு போய் திறந்து பார்த்தேன். என் கண்களில் மகிழ்வும் கண்ணீரும் வந்தன. யாரோ அவளின் வேலைக்காரி ஒருவள், நாம் இருவரும் ஒருவரை ஒருவர் ரசிப்பதை பெற்றோரிடம் சொல்லிவிட்டார்கள், அதனால் அவளுக்கு வேறு அறை கொடுத்துவிட்டார்கள் என்பதை அறிந்தேன். அது மட்டும் அல்ல, என்னுடைய முன்னைய சந்தேகத்துக்கு அதில் பதிலும் இருந்தது. அதை அவள் நேரடியாக, 'ஒரு நாள் சந்திப்போம் அப்ப நானே உங்க மணவாட்டி, நினைவில் கொள்ளுங்க!' என்று அந்தக்கடிதம் சுருக்கமாக இருந்தது.
 
‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்ற பாரதியின் வழியில், ’அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ என்ற பாரதிதாசனின் கர்ச்சனையை அதில் கண்டேன்!
 
அதன் பிறகு நான் அவளைப் பார்க்கவே இல்லை. ஆனால் 'நிலவே முகம் காட்டு' என்று அதில் அவள் அழகு முகத்தை காண்கிறேன். அங்கு பாட்டி வடை சுடவும் இல்லை, சாய்பாபாவை காணவும் இல்லை.
 
நானும், அதன் பிறகு உயர் வகுப்பில் திறமை சித்தி பெற்று, பல்கலைக்கழகம் புகுந்துவிட்டேன். அது முந்நூறுக்கு மேல் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த படியால், ஆக விடுதலைக்கு மட்டும் தான் வந்துபோவேன். அப்படி ஒருமுறை வரும்பொழுது அவள் என்னை ஒரு சில நிமிடம் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இப்ப அவள் உயர் வகுப்பு மாணவி. தன் உள்ளங்கையில், தன்னுடைய கைத்தொலைபேசி இலக்கத்தை, முகநூல் தொடர்பை எனக்கு காட்டினாள். அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. "கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை, நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை, பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவ தில்லை" என்பது உண்மை என்றாலும், உண்மையில் இது ஆறுதலாக இருந்தது.
 
ஒன்று மட்டும் உண்மை, முக நூலில் காதலன் காதலியை இயல்பாகப் பார்க்கவும் முடியாது ? காதலியை காதலனை மெய் தொட்டுப் பேசவும் முடியாது? அவளின் கூந்தல் மணமும் தெரியாது? ஆமாம் "பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல், செறியெயிற் றரிவை கூந்தலின், நறியவும் உளவோ நீயறியும் பூவே" என்பது போல, இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..? என்ற இந்த கேள்விக்கு அங்கு இடமில்லை? முகநூல் ஊடாக நறு மணம் வராது? என்பது எனக்குத் தெரியும். என்றாலும், நிலவே முகம் காட்டு என்ற கற்பனையை விட இது எவ்வளவோ மேல்? ஆன்லைனில் கதைத்தல் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் நேரடியாக கதைத்தல் [online chats or Face timing] என்பவை அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு வழி வகுக்கும் என்பதால், இப்ப ' முகநூலே முகம் காட்டு' என்று அவள் முகத்தை மீண்டும் ரசிக்கிறேன்!
 
எப்படியானாலும் நிலவு ஒரு பெண்ணாக, என் காதலியாக, கற்பனையில் எழுதுவதில் கட்டாயம் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. நிலவுக்கும் பெண்ணுக்கும் எப்போதும் ஓர் ஈர்ப்பு சக்தி உண்டு. நிலவைப் பெண்ணாக உருவகிப்பது அழகின் ஆராதனை என்பதைவிட 'நிலவே அவள், அவளே நிலவு' என்பதே பொருந்தும். அதுதான் 'நிலவே முகம் காட்டு' என்பதை மட்டும் நான் மறக்கவில்லை. ஏன் நிலவைக்காட்டித் தான் அம்மா எனக்கு உணவூட்டினாள் அன்று. 'வெண்ணிலவே வெண்ணிலவே விளையாட ஜோடி தேவை' என்று நான் 'நிலவே அவள் முகம் காட்டு' என்கிறேன் இன்று!
 
 
"கண்கள் இரண்டும் மகிழ்ந்து மயங்க
வண்ண உடையில் துள்ளி வந்தாய்
விண்ணில் உலாவும் மதியும் தோற்று
கண்ணீர் சிந்தித் தேய்ந்து மறைந்தது!"
 
"வெண்மை கொண்ட என் உள்ளத்தில்
பூண் போல் உன்னை அணிந்துள்ளேன்
ஆண்டுகள் போனாலும் உன்னை மறவேன்
எண்ணம் எல்லாம் நீயே பெண்ணிலாவே!"
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
342992626_959992818681980_6951262202436341658_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=WWTCLmGMifoQ7kNvgFp9K47&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBJz-TQNns8oghi-BA3I02RZCIwRtG_qP_4ZT0oobO_xw&oe=66AD7A4F 342997750_1195828584410267_7210901620878489062_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=N0-3FKq-8IAQ7kNvgFgX1s3&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYC5dD0HOtoro37VTgTnFPJl-VNQDVqUWSHZ7y8ab8qaBw&oe=66AD58F1 336047018_741090250835468_1867048517593250168_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=pS8jYTapYjMQ7kNvgHiYXVj&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYA8RXKwRi3MfuEuUx9rK54QO9Ih3sAVXk1-t0j7ufD7HQ&oe=66AD5979
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.