Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு

பட மூலாதாரம்,X/S. JAGATHRAKSHAKAN

படக்குறிப்பு, அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 16 நிமிடங்களுக்கு முன்னர்

அரக்கோணம் தொகுதியின் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு திங்கள்கிழமைன்று (ஆகஸ்ட் 26) 908 கோடி ரூபாய் அபராதத்தை அமலாக்கத்துறை விதித்துள்ளது.

வெளிநாடு முதலீடு தொடர்பாக, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த அனைத்து தவறுகளுக்கும் சேர்த்து இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தனது வீட்டில் 2020 ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சுமார் 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கிய நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத்துறையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 

அமலாக்கத்துறை சொல்வது என்ன?

புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 28) அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் தொழிலதிபரும் எம்.பியுமான ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய இடங்களில் 11.9.2020 அன்று சோதனை நடத்தப்பட்டதாகவும், ஃபெமா சட்டம் 37ஏ பிரிவின்படி, 89.19 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஷேல் நிறுவனம் ஒன்றில் 42 கோடி ரூபாயும் இலங்கையில் 9 கோடி ரூபாயும் ஜெகத்ரட்சகன் தரப்பினரால் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது.

அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக ஜெகத்ரட்சகன் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் ஜெகத்ரட்சகன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெகத்ரட்சகனின் ரிட் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார்.

இதனை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ள அமலாக்கத்துறை, ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர் செய்த அனைத்து விதி மீறல்களுக்கும் சேர்த்து ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் பங்குகளை ஜெகத்ரட்சகன் வாங்கியதாகவும் இந்த பங்குகளை தனது மனைவி மற்றும் மகன், மகள் பெயரில் மாற்றியதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

இந்த பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. மேலும், இதுகுறித்து ஜெகத்ரட்சனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு சொத்துகள் முடக்கப்பட்டன.

அமலாக்கத்துறையின் அறிக்கை
படக்குறிப்பு, அமலாக்கத்துறையின் அறிக்கை

அபராதம் எவ்வாறு விதிக்கப்படுகிறது?

குற்றம் செய்ததாக கூறப்படும் தொகைக்கும் அபராதத்துக்கும் அதிக அளவு வித்தியசம் இருப்பது ஏன்? என பிபிசி தமிழிடம் விளக்கினார் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி.

" சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் அவர்கள் முதலீடு செய்த தொகையின் அளவைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படுகிறது. பணப் பரிமாற்றத்தில் சொல்லப்படும் தொகையில் இருந்து பத்து மடங்கு வரையில் அபராதம் விதிக்கப்படும். அந்தவகையில், 908 கோடி ரூபாய் அபராதத்தை அமலாக்கத்துறை விதித்துள்ளது" என்றார்.

இந்த விவகாரத்தில் ஜெகத்ரட்சகனுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்துப் பேசும் ராமமூர்த்தி, "அமலாக்கத்துறையின் அபராதத்தை எதிர்த்து தீர்ப்பாயத்தில் ஜெகத்ரட்சகன் முறையிடலாம் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இந்த அபராதத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கையை வைக்கலாம். ஒருவேளை இந்த அபராதத்தை செலுத்த தவறினால் அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்" என்கிறார்.

எம்.பி ஜெகத்ரட்சகன்

பட மூலாதாரம்,FB/JAGATHRAKSHAKAN

படக்குறிப்பு, எம்.பி ஜெகத்ரட்சகன்

யார் இந்த ஜெகத்ரட்சகன்?

ஜெகத்ரட்சகன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் 1950 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தார். வழுதாவூரில் பள்ளிக் கல்வியை முடித்த ஜெகத்ரட்சகன், ரயில்வேயில் ஊழியராக பணிக்குச் சேர்ந்தார். ஆனால், விரைவிலேயே அரசியல்தான் தனக்குச் சரியாக இருக்கும் எனக் கருதிய ஜெகத்ரட்சகன் எம்.ஜி.ஆர். துவங்கியிருந்த அ.தி.மு.கவில் இணைந்தார்.

1980ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அவருக்குப் போட்டியிடும் வாய்ப்பை அளித்தார் எம்.ஜி.ஆர். வெறும் 30 வயதில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், வெற்றிபெற்றார். இதற்கடுத்து 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, அவருக்கு செங்கல்பட்டு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதிலும் அவர் வெற்றிபெற்றார்

அ.தி.மு.கவுக்குள் அவருக்கு பின்பலமாக அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் இருந்தார்.

எம்.ஜி.ஆர். இறந்தவுடன் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டபோது, ஜானகி அணியின் பக்கம் சென்றார் ஜெகத்ரட்சகன். 1989ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், படுதோல்வியடைந்தார்.

இதன்பிறகு, அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த அவர், அ.தி.மு.கவில் இருந்து ஆர்.எம்.வீரப்பனும் நீக்கப்பட்டு, எம்.ஜி.ஆர். கழகத்தைத் துவங்கியபோது அதன் பொதுச் செயலாளர் ஆனார்.

அந்தக் கட்சி, 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைத்தது. அந்தக் கூட்டணியின் சார்பில் தி.மு.க. சின்னத்தில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கினார் ஜெகத்ரட்சகன். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர், 2004ஆம் ஆண்டு 'வீர வன்னியர் பேரவை' என்ற அமைப்பைத் துவங்கினார்.

2004 ஆம் ஆண்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை ஜெகத்ரட்சகன் ஆதரித்தார். ஆனால், போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது 'வீர வன்னியர் பேரவை', 'ஜனநாயக முன்னேற்றக் கழகம்' என்ற கட்சியாக உருமாறியது.

2009ல் இந்தக் கட்சி தி.மு.கவுடன் இணைந்தது. மீண்டும் அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பா.ம.கவின் வேட்பாளரான ஆர்.வேலுவை தோற்கடித்தார் ஜெகத்ரட்சகன்.

இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் இணையமைச்சரான ஜெகத்ரட்சகன், 2012ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் இணை அமைச்சராக்கப்பட்டார். அவர் அந்தப் பதவியை ஏற்பதற்கு முன்பாகவே, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் இணை அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.

2014ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற அவர், 2019 மற்றும் 2024-ல் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பல தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டபோது, இவரும் ஒரு அனுமதியைப் பெற்றார். 1984ல் பாரத் பொறியியல் கல்லூரியைத் துவங்கிய அவர், வெகு சீக்கிரமே அதனை வளர்த்தெடுத்தார். 2002ஆம் ஆண்டில் அந்தக் கல்லூரி நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக உயர்த்தப்பட்டது.

இதற்குப் பிறகு 2004ஆம் ஆண்டில் ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஸ்ரீ பாலாஜி செவிலியர் கல்லூரி, 2007ஆம் ஆண்டில் புதுச்சேரியில் ஸ்ரீ இலட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் கழகம், 2002ல் ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 2007ல் ஸ்ரீ பாலாஜி இயன்முறை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைத் துவங்கினார்.

இது தவிர, வேறு நான்கு பொறியியல் கல்லூரிகளும் ஒரு மருத்துவக் கல்லூரியும் அவராலோ அவருக்கு நெருக்கமானவர்களாலோ நடத்தப்பட்டு வருகின்றன.

1999ல் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு, ஒரு மதுபான ஆலையையும் துவங்கினார் ஜெகத்ரட்சகன். இதற்குப் பிறகு நட்சத்திர ஹோட்டல்கள், மருந்து நிறுவனங்கள் என அவரது சாம்ராஜ்ஜியம் விரிந்தது.

ஜெகத்ரட்சகன்

பட மூலாதாரம்,X/S. JAGATHRAKSHAKAN

படக்குறிப்பு, ஜெகத்ரட்சகன்

ஜெகத்ரட்சகனைத் தொடரும் சர்ச்சைகள்

1999ல் இவர் நாடாளுமன்ற உறுப்பினரான பிறகுதான், மதுபான ஆலைக்கு உரிமத்தைப் பெற்றார் என்பதால், அது ஒரு விவாதமானது.

2009ஆம் ஆண்டில் இவரால் நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரி ஒன்றில், எம்பிபிஎஸ் இடத்திற்கு உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி கூடுதல் கட்டணம் வசூலித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று, ரகசிய நடவடிக்கை மேற்கொண்டு செய்தி வெளியிட்டது.

2012ஆம் ஆண்டில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்திலும் இவரது பெயர் அடிபட்டது. இவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான ஜே.ஆர் பவர் ஜெனரேஷன் பி. லிட் என்ற நிறுவனத்திற்கு 2007ல் ஒரு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டது.

சிறிது நாட்களுக்குப் பிறகு ஜே.ஆர் பவர் நிறுவன பங்குகள் கே.எஸ்.கே எனர்ஜி வெஞ்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டன. சுரங்கமும் அந்த நிறுவனத்திற்குச் சென்றது. 2012ல் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தபோது பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

2019ஆம் ஆண்டில் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் 3.85 பில்லியன் டாலர்கள் தனியார் முதலீட்டில் கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்று நிறுப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட சில்வர்பார்க் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம்தான் அந்தத் திட்டத்தில் முதலீடுசெய்யும் என்ற தகவல்கள் விரைவில் வெளியாயின.

இந்த நிறுவனத்தில், ஜெகத்ரட்சகனின் உறவினர்களே இயக்குநர்களாக இருந்த நிலையில், இவ்வளவு பணம் அவருக்குக் கிடைத்தது எப்படி என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்பிறகு அமலாக்கத் துறையின் பார்வை அவர் மீது பட்டது. 2020ஆம் ஆண்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. ஃபெமா சட்டத்தின் கீழ் அவர் தொடர்புடைய ரூ. 89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த வழக்கில் தற்போது 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர், அரசியல்வாதி என்ற அடையாளங்களைத் தாண்டி ஜெகத்ரட்சகன் தீவிர கடவுள் நம்பிக்கையாளர். சென்னை தியாகராய நகரில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் என்ற பெயரில் ஆய்வு நிலையத்தை நடத்தி வருகிறார். இந்த மையம், ஆன்மீகம் தொடர்பான நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டுள்ளது. ஜெகத்ரட்சகன் எழுதியதாக 30க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.