Jump to content

"ஆதிக்க சாதி வெறி"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"ஆதிக்க சாதி வெறி"
 
கர்மா கொள்கையின் படி கீழ் சாதியில் பிறந்தவன் அந்த நரக வாழ்க்கையிலேயே வாழவேண்டும். அடுத்த பிறவியிலேயே ஒரு நல்ல உயர் சாதியில் நல்ல வாழ்க்கையை அமைக்கலாம் என்கிறது . கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறப்படுகிற “மனு ஸ்மிருதி” என்கிற மனு நீதி [மனுதர்மம் / பிராமண மனு சாத்திர நூல்] என்ன கூறுகின்றது என்று பாருங்கள்:
 
அதிகாரம்-8 ,சுலோகம்-4,14 ,
அடிமைத்தனம் சூத்திரருடன் பிறந்தது. அதில் இருந்து எவராலும் அவர்களை விடுவிக்க முடியாது.
 
அதிகாரம்-19 ,சுலோகம்-413 ,
பிரமா தீர்மானித்தபடி சூத்திரர்கள் அடிமையாகவே பிறக்கவேண்டும். அடிமையாகவே வாழவேண்டும். அடிமையாகவே சாகவேண்டும் .
 
"சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி". அ.8. சு.22.
 
இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்கு வந்ததுதான் ‘மனு தர்மம்’. சமுதாயத்தை ‘பிராமணன்’, சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாக பிரிச்சு, ஒவ்வொரு பிரிவினரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உத்தரவிடுகிறது இந்த ‘மனுதர்மம்’.
 
"இந்த உலகம் முழுதும் கடவுளுக்கு கட்டுப் பட்டது. கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர். மந்திரம் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது” என்று ரிக்வேதம் கூறுகிறது.
 
எந்த ஒரு மனிதனும் பிறப்பால் ஒரு வகுப்பைச் சேர்ந்தவன் ஆகிவிடுவதில்லை. அவனின் குணமும் நடத்தையும், வாழ்கை முறையையும் வைத்தே அவன் எப்படி பட்டவன் என்று கூற இயலும். மனுநீதி - ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று பெரியார் சொன்னதும், சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி என்று பாரதியார் சொன்னதும் இதைத்தானே.?
 
வடமொழியாளராகிய மனு, தமது சாத்திரத்தில் கூறுகின்ற ‘தருமம்’’ என்பது வேறு, வள்ளுவப் பெருந்கையார் திருக்குறளில் கூறுகின்ற ‘அறம்’ என்பது வேறு, எல்லாம் மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையதாகத்தான் அமையும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட.
 
``பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’’ (குறள் 972) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும். கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும், தாழ்ந்த குடியில் பிறந்திருந்து கற்றவர்களைப் போல பெருமை யுடையவராகக் கருதப்பட மாட்டார்கள் என்னும் கருத்துப்பட....
 
“மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும், கற்றார் அனைத்திலர் பாடு’’ (குறள் - 409)
 
என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.
 
சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று. சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும். சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது.
 
"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்
மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே."
-திருநாவுக்கரசர் (தேவாரம்)
 
உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, ஏழை, பணக்காரன் என்பதெல்லாம் மனித வர்க்கம் வகுத்துக் கொண்டது தான். பக்திக்கு அப்படியில்லை என்பதே நந்தனாரீன் வாழ்க்கை சரித்திரம். இவரது இனத்தை புலையர் என்பார்கள். அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை கோயிலுக்குள் அனுப்பதில்லை. எனவே, மனதிலேயே சிவனை வணங்கிக் கொண்டிருந்தார் நந்தனார். கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது. யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது என திருப்பணிகளைச் செய்வார். தங்கள் ஊர் அருகிலுள்ள திருப்புன்கூர் சிவபெருமான தரிசிக்க நந்தனாருக்கு நீண்ட நாள் ஆசை, ஒரு நாள் திருப்புன்கூர் கிளம்பி விட்டார். கோயிலுக்குள் செல்ல முடியாது என்பதால், வெளியே நின்றபடியே மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தெரிகிறதா என எட்டி பார்த்தார். நந்தி சிலை மறைத்தது. எதுவும் தெரியவில்லை. வெளியே நின்றபடி சிவனைப் புகழ்ந்து பாடி வணங்கினார். உருகிப் போனார் சிவபெருமான். நந்தி தேவரிடம், நந்தி! நீ சற்று விலகிக் கொள். என் பக்தன் நந்தன் வெளியே நிற்கிறான். அவன் என்னைப் பார்க்கட்டும், என்றார். நந்தி விலகிக் கொண்டார். வந்திருந்த பக்தர்கள் நந்தி சிலை நகர்வதைக் கண்டு பயமும், பரவசமும் கொண்டனர். சிலர் வாதம் செய்வார்கள். நந்தியை விலகச் சொன்ன சிவன், அவரை உள்ளேயே அழைத்திருக்கலாம் அல்லவா என்று! தானாக அழைப்பதை விட, பிறரால் சகல மரியாதைகளுடன் எந்த ஒரு தீவிர பக்தனும், தனது இடத்துக்குள் வர வேண்டும் என சிவன் நினைத்தாரோ ?யார் அறிவார் ?
 
நம்பிக்கைகள் வெறும் நம்பிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும், ஏழை ஏழையாக இருப்பதற்கும், ஒருவன் பள்ளனாக பிறப்பதற்கும், பார்பனாக பிறப்பதற்கும் விதிப்பயன் என்று துணிந்து சொல்கிறார்கள். அதாவது தான் பள்ளனாக பிறந்தது விதிப்பயன் என்று நினைத்து நன்கு முயற்சித்து பார்பனராக அடுத்த பிறவியில் பிறக்கவேண்டுமாம். அத்துடன் பிறவி சுழல் முடிவுக்கு வருகிறதாம். என்ன மடத்தனமான ஒரு கருத்து பாருங்கள்.
 
இனங்கள் என்பவை அந்தந்த நாட்டு சூழலுக்கு ஏற்ப உருவான நிறம் தோற்றம் குறித்ததே, ஆப்ரிக்க இனத்தினர் கருப்பாக இருப்பர், ஐரோப்பியர் வெள்ளையாக இருப்பர், சீனர்கள், ஜப்பானியர்கள் மஞ்சளாக இருப்பர். இது இயற்கை. இதில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது ? இதில் ஏன் ஒருவன் பள்ளனாக ( சூத்திரனாக) பிறப்பது இழிந்தது போன்றும் அவர் தம் இழிந்த நிலையில் இருப்பதை உணர்ந்து முயற்சித்து பார்பனாக பிறக்க வேண்டும் என்று சொல்வது பித்தலாட்டம் அன்றி வேறென்ன ?
 
பார்பன் உயர்ந்த பிறவி என்பதை மனுதர்மத்தை [மனுஸ்ம்ருதி] நம்புவதால் தானே ஏற்கவேண்டி இருக்கிறது ? இந்த அறிவற்ற மனுதர்மத்தை ஒதுக்கித்தள்ள மதத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் முன்வரவேண்டும். இல்லை என்றால் விதி தத்துவங்களை சொல்லி சொல்லி 'நீ தாழ்ந்தவனாக பிறந்தது கடவுள் செயல், விதிப்பயன் என்று சொல்லி சிந்திக்க விடாமல் செய்துவிடுவர். உழைத்தால் சோறு, இதில் உயர்ந்தவன் என்ன ? தாழ்ந்தவர் என்ன ? கோவில் பிராசதத்தை உண்டவர் எத்தகையை தெய்வீக பிறவி என்றாலும் அடுத்த நாள் கோவில் பிராசதம் அவரிடமிருந்து மலமாகத்தான் வெளியேறும்.
 
ஒரு சூத்திரன் சூத்திரருக்கு என வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளுக்குள், அந்த வர்ண சாத்திர எல்லைக்குள், நல்லவனாக செயல் பட்டால், அவன் அடுத்த பிறவியில் பிராமணனாக பிறக்கலாம். ஆனால் இந்த பிறவியில் ஒரு போதும் இல்லை. இதன் பொருள் என்ன ? இது ஒரு மிகவும் புத்திசாலித்தனமான சமயத்தின் பெயரில் தீட்டப்பட்ட திட்டம் . இன்னும் ஒரு "பிரெஞ்சுப் புரட்சி (French Revolution,]" நடை பெறாமல் தடுக்க ?
 
நன்றி
462473322_10226482820119555_3680088936408361500_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=G1CAYlnkAQIQ7kNvgE4YefA&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Aph8d2d1_oEOo9Hi6Sa1Dxe&oh=00_AYB-ZZS6K-pb7-PQBiHHvZSs4-15XBv4BZzI7nw3RnLbAw&oe=670B358E  462468028_10226482821159581_5924283814733050858_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=nZc93o3rxWsQ7kNvgFVsrRy&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Aph8d2d1_oEOo9Hi6Sa1Dxe&oh=00_AYBuP7U58PsTN7A6c05cZRIz9SjO4D_dikHV8O6PlWWb6Q&oe=670B3A98
 
 
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.