Jump to content

ஸ்ரீவாணி மேடம் 


nunavilan

Recommended Posts

ஸ்ரீவாணி மேடம் 

மூலம் : பொத்தூரி விஜயலட்சுமி

தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்

பத்மாவும் சாவித்திரியும் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒரு கவர்ன்மென்ட் அண்டர்டேக்கிங் கம்பெனியில் பணி புரிகிறார்கள். கம்பெனி பேருந்துக்காகக் காத்திருந்தார்கள். பொழுது போவதற்காக ஏதேதோ கதை பேசிக் கொண்டிருந்தார்கள். 

பத்மா திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, “அதோ அங்கே வருவது ஸ்ரீவாணி மேடம் தானே?” என்றாள்.

“எங்கே?” என்று கேட்டாள் சாவித்திரி. 

“அதோ, நடந்து வர்றாங்க பார்” என்றாள் பத்மா. 

12.jpg?resize=600%2C400&ssl=1

“சீ சீ அவுங்களாக இருக்காது. ஸ்ரீவாணி மேடம் ஏன் நடந்து வரப் போறாங்க? காரில் தான் வருவாங்க. யாரையோ பார்த்து யாரோ என்று நினைக்கிறீங்க நீங்க” என்றாள் சாவித்திரி. 

“இல்லை சாவித்திரி. வருவது அவுங்கதான்” என்றாள் பத்மா. 

அதற்குள் ஸ்ரீவாணி அருகில் வந்துவிடவே, பத்மா கைகளைக் குவித்து, “வணக்கம், மேடம்” என்றாள்.

புன்னகையுடன் பதில் வணக்கம் தெரிவித்துவிட்டு அவர்களைக் கடந்து சென்றாள்   ஸ்ரீவாணி. 

“என்ன ஆச்சு இவுங்களுக்கு? இன்று ஏன் இப்படி இருக்காங்க?” என்று கேட்டாள் பத்மா.

“உண்மைதான். என்ன ஆயிற்றோ தெரியவில்லை” என்றாள் சாவித்திரி. 

வியப்போடு அவள் சென்ற வழியையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.   பேருந்து வந்து  ஹாரன் ஒலி எழுப்பியவுடன் திடுக்கிட்டு பஸ்ஸில் ஏறினார்கள். பஸ்ஸில் அமர்ந்த பின்னும் ஸ்ரீவாணியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தர்கள். 

ஸ்ரீவாணி நல்ல வழக்கறிஞராகப் பெயரெடுத்த பெண்மணி. அவளுடைய கணவன் ரங்கசாயி, இஞ்சினியரிங் படித்த பின் இரட்டை பிஹெச்.டி. செய்தான். அமெரிக்காவுக்குச் சென்று பதினைந்து ஆண்டுகள் இருந்துவிட்டுத் திரும்ப வந்து சொந்தமாக ஒரு தொழிற்சாலை அமைத்தான். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஸ்ரீவாணி தன் கம்பெனியின் லீகல் விவகாரங்களைப் பார்த்துக் கொள்வாள். அதோடு சமூக சேவைகளிலும் ஈடுபடுவாள். 

பத்மா தான் வேலை செய்யும் கம்பெனியின் பெண்கள் தின விழாவுக்காக ஸ்ரீவாணியைத் தலைமை தாங்க  அழைத்தாள். அவள் வந்தாள். நல்ல உயரமும் உடல் வாகுமாக பார்ப்பதற்கு அழகான வடிவம். கழுத்தில் இரட்டை வட தாலிச் சங்கிலி. கருகமணி. கை நிறையத் தங்க வளையல்கள், காதுகளில் வைரத்தோடு. காஞ்சீபுரம் பட்டுப் புடவை. இவை எலலாவற்றையும் விட அதிகமாக மனதைப் பறிக்கும் புன்னகையோடு விளங்கிய அந்த உருவத்தைப் பார்த்து மெய் மறந்த சபையினர், அவளுடைய உரையைக் கேட்டு மேலும் பரவசமடைந்தனர். 

“தற்போதைய சமுதாயத்தில் பல பெண்கள் மன உளைச்சலால் அவதிக்குள்ளாகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் டாக்டர்களைச் சுற்றி அலையாமல் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியை தேடிக் கொள்ள வேண்டும். தினமும் சிறிது நேரம் பிறரைப் பற்றி யோசித்து அவர்களுக்கு நன்மை செய்ய முன் வரவேண்டும். அவர்கள் நம் உறவினர்களாகவோ  நண்பர்களாகவோதான் இருக்க வேண்டும் என்று தேவையில்லை. கண்ணுக்கு எதிரில் தெரியும் யாராயிருந்தாலும் சரி, அவர்களின் கஷ்டங்களை நம் கஷ்டங்களாக எண்ணி அவர்களுக்கு உதவி புரிய வேண்டும்.  

உதவி புரிவதற்கு ஆயிரமோ லட்சமோ செலவு செய்யத் தேவையில்லை. நமக்கு எந்த ஒரு நஷ்டமும் எற்படாமல் நமக்கு மன நிம்மதியை அளிக்கக் கூடிய சாதனங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு, அண்மையில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். பழைய துணிகளுக்கு பாத்திரங்கள் விற்பது அவளுடைய தொழில். கையில் பிறந்து சில மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தையை வைத்திருந்தாள். அவனுக்கு ஒரு நைலான் சட்டையை அணிவித்திருந்தாள். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. அவன் விக்கி விக்கி அழுதான். எனக்குப் பரிதாபமாக இருந்தது. அந்தப் பெண்ணை அழைத்தேன். 

“ஏதாவது புடவைத் துணி இருந்தால் எடுத்து வாருங்கள், அம்மா. பாத்திரம் தருகிறேன்” என்றாள் வந்தவுடன். 

“துணி போடுவதற்காக உன்னை அழைக்கவில்லை. முதலில் அங்கே உட்கார்” என்று சொல்லி விட்டு, சமையலறையில் இருந்த சாதத்தில் சிறிது தயிர் ஊற்றிப் பிசைந்து எடுத்து வந்து அவளைச் சாப்பிடச் சொன்னேன். அவள் சாப்பிடுவதற்குள் வீட்டிலிருந்த ஒரு வேஷ்டியைக் கத்தரித்து தையல் மிஷினில் குழந்தைக்கு நான்கு சட்டைகள்  தைத்தேன். நைலான் சட்டையைக் கழற்றிவிட்டு மெத்தென்ற கைத்தறி சட்டையை அணிவித்தவுடன் அந்த பச்சைக் குழந்தை ஆசுவாசமடைந்தது. அதைப் பார்த்து அந்தத் தாய் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. அவர்கள் இருவரின் மகிழ்ச்சியைப் பார்த்து நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 

இதுபோன்ற ஆனந்தத்தை அவ்வப்போது அனுபவித்து வந்தால் டிப்ரெஷன் நம் அருகில் கூட வராது” என்று அவள் உரையாற்றியபோது கைத்தட்டல் விண்ணை எட்டியது. விழா முடிந்தபின் பலர் அவளிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டார்கள். அவர்களுள் பத்மாவும் சாவித்திரும் இருந்தார்கள்.  

அப்படிப்பட்ட பெண்மணி இன்று அள்ளி முடிந்த தலை, பழைய புடவை, கழுத்தில் சாதாரண கருகமணி, கைக்குக் கண்ணாடி வளையல் என்று ஒரு ஏழையைப் போல ஏன் தோற்றமளிக்கிறாள்?

அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையிலும் அதே டாபிக். அவர்களுக்குச் சற்று தூரத்தில் அமர்ந்திருந்த சுஜாதா இவர்களுடைய பேச்சு காதில் விழவே டக்கென்று எழுந்து இவர்களின் அருகில் வந்தாள். அவள் அதே ஆபீசில் வேறு டிபார்ட்மென்ட். வெறும் முகப் பரிச்சயம் மட்டுமே. 

“நீங்கள் யாரைப் பற்றி பேசுகிறீர்கள்?” என்று ஆரவத்தோடு கேட்டாள். 

“சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் நம்முடைய விமென்ஸ் டே மீட்டிங்கிற்கு வந்தார்களே அந்த ஸ்ரீவாணி மேடத்தைப் பற்றி” என்றாள் பத்மா.

“ஒரு நிமிடம்” என்று கூறிச் சென்று தன் டிபன் பாக்சை எடுத்து வந்து இவர்களோடு  அம்ர்ந்த சுஜாதா, “இப்போது சொல்லுங்கள் என்ன விஷயம்?” என்று கேட்டாள். 

“அன்று ஃபங்ஷனில் பார்த்தபோது எத்தனை கிரேஸ்ஃபுலாக இருந்தார்கள்? அதன் பிறகு ஒருமுறை டிவியில் கூட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பார்த்தேன். எப்போது பார்த்தாலும் மகாலட்சுமி போல இருக்கும் மேடம், இன்று மிகவும் ஏழை போல காட்சியளித்தாங்க” என்றாள் சாவித்திரி. 

ஏளனமாகச் சிரித்தாள் சுஜாதா. “அவள் எங்களுக்கு தூரத்துச் சொந்தம். என் வீட்டுக்காரருக்கு ஒன்று விட்ட அத்தை மகள். அவர்கள் ஒரு மாதிரியான மனிதர்கள். இங்கு வேலையை விட்டு விட்டு அமெரிக்கா சென்றார்கள். அங்கு இருக்க முடியாமல்  மீண்டும் இங்கே திரும்பி வந்தார்கள். ஏதாவது வேலையில் சேரலாம் அல்லவா? அதுவுமில்லை. தாமே பத்து பேருக்கு வேலை கொடுப்போம் என்று ஒரு இண்டஸ்ட்ரி தொடங்கினார்கள். குழந்தைகள் பிறக்கவில்லை. ஏதாவது குழந்தையைத் தத்து எடுத்து வளருங்கள் என்று சொன்னாலும் கேட்கவில்லை. “தெய்வம் எங்களுக்கு குழந்தைகளைக் கொடுக்காத போது மீண்டும் இந்த வளர்ப்புகள் எல்லாம் எதற்கு? எங்கள் ஃபாக்டரியில் பணிபுரிபவர்களே எங்கள் பிள்ளைகள்” என்று டயலாக் பேசினார்கள். 

நூறு ரூபாய் சம்பாதித்தால் அதில் தொண்ணூற்று ஒன்பது ரூபாய் செலவு செய்தால் ஒழிய அவர்களுக்குத் திருப்தி இருக்காது. ஆடம்பரத்திற்கும் தானத்திற்கும் குறைவு கிடையாது. நாளை என்று ஒன்று இருக்கிறது என்ற நினைவே கிடையாது. அதி புத்திசாலித்தனமோ அல்லது அறிவீனமோ தெரியவில்லை. யாரோடும் சேர மாட்டார்கள். அவர்களுடைய உலகம் அவர்களுக்கு. என்ன எதிரடி விழுந்ததோ தெரியவில்லை. எந்த விஷயமும் இன்னும் எங்கள் வரை வரவில்லை” என்று பேச்சும் சாப்பாடும் ஒரே தடவையாக முடித்துக் கொண்டு எழுந்து சென்றாள் சுஜாதா. கிடுகிடுவென்று கையைக் கழுவிக் கொண்டு மொபைலை எடுத்து கணவனுக்கு அந்தச் செய்தியை பரபரப்பாகப் பகிர்ந்தாள். 

மனைவி கூறியதைக் கேட்டு கணவன் சூரியம் மகிழ்ச்சியடைந்தான். அவர்களுக்கு  நன்றாக வேண்டும் என்று நினைத்தான். அவன் அத்தனை மகிழ்ச்சியடைந்ததற்குக் காரணம் இருந்தது. 

எப்போதோ ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சூரியத்திற்கு பண உதவி தேவைப்பட்ட போது ரங்கசாயியிடம் சென்று கேட்டான். அவன் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கொடுத்து உதவினான். அதுவரை எல்லாம் நன்றாகவே இருந்தது. ரங்கசாயி ஒரு தெய்வம் என்று புகழ்ந்தான் சூரியம். அதன் பின் சூரியம் குடும்பத்தினர் கொஞ்சம் செட்டில் ஆனபின் கடனைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டபோது சூரியத்திற்குக் கோபம் வந்தது. 

தன்னைப் போல ரங்கசாயி கூட அந்தக் கடன் பாக்கி விஷயத்தை மறந்து போயிருப்பான் என்று நினைத்தான் சூரியம். இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று காலம் கடத்திப் பார்த்தான். அவ்வாறு வாயிதா போட்டால், எரிச்சலடைந்து கேட்பதை விட்டு விடுவார் என்று எதிர்பார்த்தான். 

ஆனால் ரங்கசாயி கெட்டிமனிதன். “நீ மனிதனா? மிருகமா? வயிற்றுக்கு சோறு தின்கிறாயா? புல்லைத் தின்கிறாயா?” என்று திட்டித் தீர்த்து, விரட்டி விரட்டி கொடுத்த கடனை வசூல் செய்துவிட்டான். சூரியத்திற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. 

“அந்த ரங்கசாயிக்கு என்ன கேடு? குழந்தையா, குட்டியா? போகும்போது பணத்தை மூட்டை கட்டி எடுத்துச் செல்வானா? வேண்டியவர்களுக்கு ஆபத்தில் உதவினால், அந்தப்  பணத்தை அணா, பைசவோடு வசூல் செய்ய வேண்டுமா?” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திரிந்தான். அவ்விதம் தன் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டான். 

இப்போது அந்த ரங்கசாயிக்கு ஏதோ கஷ்டம் வந்தது என்றும் அவன் மனைவி  ஏழைபோல நடந்து செல்கிறாள் என்றும் தன் மனைவியின் மூலம் தெரிந்து கொண்ட சூரியத்திற்குச் சொல்ல முடியாத ஆனந்தம் தொற்றிக் கொண்டது. அதனைத் தன்  மனிதர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். உடனே போன் செய்து நான்கைந்து உறவினர்களுக்குக் கூறினான். அவர்கள் மூலம் இன்னும் பலருக்கும் அந்தச் செய்தி பரவி விவாதத்திற்கு உரியதானது. 

“உலகம் என்றால் இப்படித்தான்.. ஏதோ பெரிய பாக்டரி இருக்கிறதென்று பெருமையடித்துக் கொண்டார்களே என்று சமீபத்தில் என் மகனை ரங்கசாயிடம் அனுப்பினேன். அவன் போக மாட்டேன் என்று சொன்னாலும் உறவினர் மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தர மாட்டானா என்று நப்பாசையில் அவனை பலவந்தமாக அனுப்பினேன். என் பிள்ளை பத்தரை மாற்றுத் தங்கம். பரீட்சைக்கு முன்னால் ஏதோ  ஜுரம் வந்ததால் பத்தாவது பெயில் ஆகி விட்டானே தவிர ஒரு கலக்டரோ ஒரு கவர்னரோ ஆக வேண்டிய புத்திசாலி என் மகன். அப்படிப்பட்ட இளைஞனை அழைத்துச் சென்று லாரியிலிருந்து சரக்குகளை இறக்கும் உத்தியோகத்தில் வைத்தானாம். என் மகனுக்கு ஏற்கெனவே டஸ்ட் அலேர்ஜி. அந்த வேலை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதோடு சம்பளமும் ரொம்ப கம்மி. ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்றானாம். இந்த நாட்களில் பிச்சைக்காரன் கூட அதைவிட அதிகம் சம்பாதிக்கிறான். என் மகனுக்கு ரோஷம் அதிகம். வேலையும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று வந்துவிட்டான். வேண்டியவர்கள் வீட்டுப் பிள்ளை ஆயிற்றே, பக்கத்தில் இருத்தி   வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை கற்றுத் தந்து அதில் ஒரு பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வோம் என்று இல்லை. நாளைக்கு அவர்களுக்குப் பிறகு அவனே பொறுப்பாக பார்த்துக் கொள்ளப் போகிறான். அந்த அளவு கூட அவர்களுக்கு இங்கித ஞானம் இல்லாமல் போய் விட்டது. இப்போது நன்றாக ஆனது. நன்றாக வேண்டும் அவர்களுக்கு”  என்று புலம்பினாள் ஒரு இல்லத்தரசி. 

“உண்மைதான் அண்ணி. என் பெண் கல்யாணம் நிச்சயம் ஆன உடனே சென்று அவர்களிடம் கூறினோம். கல்யாணத்திற்கு வர இயலாது, தில்லிக்குப் போகிறோம் என்று சொல்லி இருநூறு ரூபாய் பெறுமான ஒரு புடவையும் ஒரு அகல் விளக்கு அளவுக்கு வெள்ளியில் ஒரு குங்குமச்சிமிழும் வைத்துக் கொடுத்தாள் அந்த மகராசி. ஒரு ஐநூறு ரூபாயை என் வீட்டுக்காரரின் கையில் வைத்து மாப்பிளைக்கு கொடுங்கள் என்றாள். இருக்கிற சொத்தையெல்லாம் போகும்போது கூட எடுத்துச் செல்லப் போகிறார்களா, என்ன? ஒரு பத்தாயிரமோ, பதினைந்தாயிரமோ கையில் வைத்து செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல அவளுக்கு மனசு வரவில்லை. என்ன செய்வது? கருமித்தனம். போனால் போகிறது. எங்கள் கவலை என்னவென்றால், யார் மூலமாகவோ எங்களுக்குத் தெரிந்தது. அதன் பின் பத்து நாட்களில் அவர்களுடைய பாக்டரியில் வேலை செய்யும் பெண்ணை அங்கேயே பணி புரியும் ஒரு பையனுக்கு திருமணம் செய்வித்தார்களாம். குடும்பத்திற்குத் தேவையான பாத்திரங்கள், கட்டில் மெத்தை எல்லாம் வாங்கித் தந்தார்களாம்.  குறைந்தபட்சம் கல்யாணச் சாப்பாட்டோடு சேர்ந்து இருபதாயிரம் வரை செலவாகியிருக்கும். வேண்டியவர்களுக்கு இலையிலும் வேண்டாதவர்களுக்குத் தட்டிலும் என்று சொல்வார்களே, அது சரியாகத் தான் இருக்கிறது. வேண்டுமென்றால் வேலியில் கூடக் காய்க்கும். வேண்டாம் என்றால் மரத்தில் கூட காய்க்காது” என்று தோளில் இடித்துக் கொண்டாள் மற்றொரு இல்லத்தரசி. 

மற்றொரு இடத்தில் மற்றொரு விவாதம் நடந்தது. “இந்த ரங்கசாயி செய்யும் வேலையெல்லாம் தலைகீழ் வேலைகளே. ஒரு முறை அவர்கள் வீட்டில் ஏதோ சுப நிகழ்ச்சி என்று அழைத்தார்கள். உறவினர்களுக்கு விருந்து போட்டதோடு ஏழைகளுக்கு அன்னாதானமும் செய்தார்கள். சொந்தக்காரர்களுக்கு புளியோதரை, பூரணம் போளி,  சர்க்கரைப் பொங்கல், வடை எல்லாம் போட்டு அனுப்பிவிட்டு ஏழைகளுக்கு பூரி, குருமா, புலாவ், ஜாங்கிரி, ஐஸ்க்ரீம் எல்லாம் பரிமாறினான். இது என்னடா என்று கேட்டபோது ஏழைகளுக்குப் பாவம் இதெல்லாம் யார் கொடுப்பார்கள் என்று விதண்டவாதம் செய்தான்.  அவனுக்கு ஆமாஞ்சாமி போடுவதற்கு அவன் மனைவியும் கூடவே இருக்கிறாள். இரண்டும் இரண்டு ஆப்பை. இரண்டும் கழண்ட ஆப்பை என்பார்களே, அது சரியாகத் தான் இருக்கிறது” என்றாள் ஒரு பெரிய மனிஷி. 

“கோடிக்கணக்கில் சொத்து இருந்தால் எத்தனை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். அதில் பெருமைப் பட எதுவுமில்லை. ஆனால் இவர்களுக்கு இருப்பதோ ஒரு பாக்டரி, ஒரு சொந்த வீடு, அவ்வளவுதான். வங்கியில் பணம் தங்காது. இருந்தால் கணவன் மனைவி இருவருக்கும் கை சும்மா இருக்காது. ஏதாவது செலவு செய்து விடுவார்கள். புத்தி கெட்ட விதமாக ஏதாவது செய்திருப்பார்கள். அதனால்தான் இந்த நிலைமை. தனக்காகத் தெரியாவிட்டால் யாரையாவது கேட்டாவது தெரிந்து கொள்ளவேண்டும். நான் பல தடவை சொல்லிவிட்டேன். கேட்கவில்லை” என்று குமுறினார் ஒரு மேதாவி. 

அதையெல்லாம் கேட்டு வருந்திய மனிதன் சேகரம் ஒருவனே. அவனுக்கும் ரங்கசாயிக்கும் தூரத்து உறவுமுறை உண்டு. நான்கைந்து முறை ரங்கசாயி, சேகரத்திற்கு உதவியுள்ளான். ரங்கசாயிக்கு போன் செய்து என்ன பிரச்சினை என்று கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் அப்படிச் செய்வதற்குத் தயக்கமாக இருந்தது. ஏனென்றால் ரங்கசாயியிடம் வாங்கிய கடன் ஒன்று பாக்கியிருந்தது. அவனுக்கு வலியச் சென்று போன் செய்தால் அவன் பணத்தைக் கொடு என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது? தன்னிடம் பணம் இல்லையே, என்ற சங்கோஜம் அவனைத் தடுத்தது. அதனால் எதுவும் தெரியாததுபோல் இருந்துவிட முடிவு செய்தான். அதுவுமின்றி, ரங்கசாயி தன்  ஒருவனுக்கு மட்டுமல்ல. நிறைய பேருக்கு உதவியுள்ளான். யாரோ ஒருவர் அவனுடைய கஷ்டகாலத்தில் உதவ முன்வராமல் போகமாட்டார் என்று நினைத்துச் சும்மா இருந்தான் சேகரம். 

மொத்தத்தில் ரங்கசாயி பற்றியும் ஸ்ரீவாணி பற்றியும் அன்று நிறைய பேர் விவாதித்துக்  கொண்டார்கள். சுஜாதா ஒவ்வொரு நாளும் அதே வேலையாக பத்மாவிடமும் சாவித்திரியிடமும், “என்ன ஆச்சு? மேற்கொண்டு ஏதாவது தெரிந்ததா? ஸ்ரீவாணியைப் பார்த்தீர்களா?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.   

“இன்று கூட பார்த்தோம் அதே அவதாரம்தான். பாவம். நடக்க முடியாமல் அவங்களுக்குப்  பெருமூச்சு வாங்கியது” என்றாள் சாவித்திரி. அந்தச் செய்தியை முடித்தவரை உடனுக்குடன் உறவுகளிடம் பரப்பி மகிழ்ந்தாள் சுஜாதா. 

சூரியம் பொறுக்கமுடியாமல் ஒருமுறை ரங்கசாயியின் பாக்டரிக்கு போன் செய்தான். “சார் ஊரில் இல்லை. திரும்பிவர நீண்ட நாட்கள் ஆகும். எங்கே சென்றாரோ எங்களுக்குத் தெரியாது” என்று பொதுப்படையாக கூறினார்கள். விவரம் கேட்டபோது எங்களுக்குத் தெரியாது என்றார்கள். 

ரங்கசாயியின் வீட்டுக்கு போன் செய்து பார்த்தான். அந்த நம்பர் வேலை செய்ய வில்லை என்று பதில் வந்தது. போனைக்கூட பிடுங்கி விட்டார்கள் போலிருக்கிறது. அவன் முகம் காட்ட முடியாமல் தலைமறைவாகி விட்டான் என்று தீர்மானித்து மனைவி சுஜாதாவிடம் கூறினான். 

“ஸ்ரீவாணி வேலையில் இருந்தாலாவது பிழைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட ஆபத்து நேரங்களில் கைகொடுக்கும். அதையும் விட்டு விட்டு வீட்டில் உட்கார்ந்திருந்தாள். தனக்கு மிஞ்சித்தானே தானமும் தருமமும்? சொந்த வியாபாரம், சொந்த கம்பெனி என்று பெருமை பேசி சமூக சேவையில் இறங்கினாள். நாமெல்லாம் வியாபாரம் செய்ய முடியாமல்தான் உத்தியோகம் செய்கிறோமா? இப்போது பாருங்கள். பாவம். இருவரும் சாலைக்கு வந்து விட்டார்கள்” என்றாள் சுஜாதா. 

பிறர் கூறித் தெரிந்து கொண்டதையும் தானாக யூகித்ததையும் ஊராரிடம் வலியச் சென்று பரப்பி மகிழ்ந்தாள் சுஜாதா. அதன் காரணமாக உறவினர்களுள் சுஜாதாவுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. காலையில் எழுந்தது முதல் யாராவது ஒருவர் போன் செய்து, “என்னா ஆச்சு சுஜாதா? ஏதாவது தெரிந்ததா? புதிய செய்தி உண்டா?” என்று கேட்கத் தொடங்கினார்கள். 

அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்று இருப்பது இல்லாதது எல்லாவற்றையும் கலந்து கதை கட்டி பொழுது போக்கிக் கொண்டிருந்தாள் சுஜாதா. வரவர சுஜாதாவால் சஸ்பென்சைத் தாங்க இயலவில்லை. எப்படியாவது ஸ்ரீவாணியைப் பிடித்து விவரங்கள் எல்லாம் வரவழைத்து சுற்றத்தாருடன் பகிந்து கொள்ள வேண்டும் என்று துடித்தாள். அதை எப்படிச் செய்வது என்று யோசித்து ஒரு திட்டம் தீட்டினாள். 

ஒரு நாள் காலையிலேயே எழுந்து ஆட்டோ ஏறி அரை கிமீ பயணம் செய்து பத்மாவும் சாவித்திரியும் பஸ் ஏறும் ஸ்டாப்பிற்குச் சென்றாள். யாருக்கும் சந்தேகம் வராமால் முன்பாகவே அங்கு சென்று அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். 

பத்மாவும் சாவித்திரியும் வந்தார்கள். சுஜாதாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு, “நீங்கள் எப்படி இங்கே?” என்று கேட்டார்கள்.

“நேற்று இந்த ஏரியாவில் என் தோழியின் வீட்டில் பங்ஷன் நடந்தது. இரவு வெகு நேரமாகிவிட்டது. அதனால் இங்கேயே தங்கி விட்டேன். அதுதான் காலையில் பஸ்  பிடித்துப் போகலாம் என்று வந்தேன்” என்று சுவர் எழுப்பினாற்போல் பொய் சொன்ன சுஜாதா, “எங்க ஸ்ரீவாணி வந்துட்டாளா?” என்று சாதாரணமாகக் கேட்பது போலக் கேட்டாள்.  

“இன்னும் இல்லை. இனிமேல்தான் வருவார்கள். சில நாட்கள் அவர்கள் முன்னால் வருவார்கள். வேறு சில நாட்கள் எங்கள் பஸ் முன்னால் வந்து விடும்” என்றாள்  சாவித்திரி. 

“கடவுளே இன்று ஸ்ரீவாணி முன்னால் வர வேண்டும்” என்று மனதிற்குள் இறைவனை வேண்டிக் கொண்டாள் சுஜாதா. அவளுடைய வேண்டுதல் பலித்தது. 

“அதோ ஸ்ரீவாணி மேடம்” என்றாள் பத்மா.

பத்மாவும் சாவித்திரியும் வியந்து போய் எத்தனை சொல்லியிருந்தாலும் எதிரில் ஸ்ரீவாணியைப் பார்த்த சுஜாதா வாயடைத்துப் போனாள். சாதாரண புடவை, வெறும் காது, கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு, கைகளில் இரண்டு கண்ணாடி வளையல்கள், ரொம்ப இளைத்துப் போய் பெருமூச்சு வாங்க நடந்து வந்து கொண்டிருந்தாள் ஸ்ரீவாணி. 

சுஜாதா வியப்பிலிருந்து மீள்வதற்குள் அருகில் வந்த ஸ்ரீவாணி அவளிடம் பேசினாள். . “சுஜாதா, நீ என்ன இங்கே நிற்கிறாய்?” என்று கேட்டாள். 

“நான் ஏதோ வேலையாக வந்தேன். அதிருக்கட்டும். அக்கா, நீ என்னக்கா, இப்படி ஆகிவிட்டாய்? உனக்கு உடம்பு சரியில்லையா?” என்று கேட்டாள் சுஜாதா. 

“நன்றாகத் தான் இருக்கிறேன் சுஜாதா. சரி நான் கிளம்புகிறேன். எனக்கு நேரமாகிறது”   என்றாள் ஸ்ரீவாணி. 

கிடைத்தாற்போல் கிடைத்து நழுவ இருந்த ஸ்ரீவாணியைப் பார்த்து சுஜாதாவுக்கு பரபரப்பு ஏற்பட்டது. “எனக்கும் புத்திசாலித்தனம் உள்ளது. இந்த வாய்ப்பை நழுவ விடுவேனா?” என்று நினைத்துக் கொண்டாள். 

“வா அக்கா. நானும் உன்னோடு வருகிறேன்” என்றாள்.

“பஸ் வந்துவிடும் சுஜாதா” என்று நினைவூட்டினாள் பத்மா. 

“நான் ஆட்டோவில் வருகிறேன், பத்மா. ரொம்ப நாள் கழித்து அக்காவைப் பார்க்கிறேன் அல்லவா? கொஞ்சம் நல்லது கெட்டது பேசி விட்டு மெதுவாகக் கிளம்புவேன்” என்று கூறிவிட்டு ஸ்ரீவாணியோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினாள் சுஜாதா. 

“எப்படி இருக்கிறாய் சுஜாதா? உன் கணவர் குழந்தைகள் நலமா?” என்று அன்போடு விசாரித்தாள் ஸ்ரீவாணி. 

“நாங்கள் நன்றாக இருக்கிறோம். அக்கா, நீ சொல். என்ன செய்தி? நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் சுஜாதா. 

“நாங்கள் நன்றாக இருக்கிறோம், சுஜாதா. ஒரு குறைவுமில்லை. அண்மையில் நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல பணியில் ஈடுபட்டுள்ளோம். கர்நாடாகா பார்டரில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் தேவதாசி வழக்கத்திற்கு பலியான ஒரு பெண்ணை அந்தச் சிறையிலிருந்து விடுவித்து கைவேலைகளில் பயிற்சி கொடுத்தோம். புடவையின் மேல் வொர்க் செய்து ஒரு நாளைக்கு ஒரு நூறு ரூபாயாவது அவள் சம்பாதிக்கும்படி செய்தோம். அவள் தாய்மையை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினாள். ஒரு குழந்தையை வளர்ப்பேன் என்று கூறினாள். தாயும் தந்தையும் எயிட்ஸ் நோயால் இறந்து போய் அனாதையாக மாறிய ஒரு ஐந்து வயது சிறுமியை அந்தப் பெண் தத்து எடுக்கும்படிச் செய்துள்ளோம். ஒரு குழந்தைக்காக தவமிருந்த தாய்க்கும் குழந்தை கிடைத்தது. அனாதையான சிறுமிக்கும் தாய் கிடைத்தாள். அவரகளைப் பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது. இது போன்ற அனுபவங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும், சுஜாதா” என்றாள் ஸ்ரீவாணி. 

சுஜாதாவுக்கு எரிச்சலாக இருந்தது. இந்த தற்பெருமைக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று நினைத்துக் கொண்டாள். அதை மறைத்துக் கொண்டு, “அன்றொருநாள் உன் வீட்டுக்கு போன் செய்தோம் அக்கா. அந்த நம்பரில் போன் எதுவும் இல்லை என்று பதில் வந்த்து. பாக்டரிக்கு போன் செய்தால் அங்கே மாமா இல்லை என்றார்கள். எங்கே போயிருக்கிறார்? உங்கள் போனுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள் சுஜாதா. 

“எங்களுக்கு அமெரிக்கன் கம்பெனியில் இருந்து நல்ல ஆர்டர் கிடைத்திருக்கிறது, சுஜாதா. எப்போதும்போல் லாபம் கிடைக்கும்தான். ஆனால் மேலும் ஒரு பத்து பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். அதை நினைத்து எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.   அவர் அந்த வேலையாகத்தான் அமெரிக்கா சென்றுள்ளார். இன்னும் ஒரு மாதம் அங்கேயே தங்க வேண்டி இருக்கும். போனைப் பற்றி கேட்கிறாயா? பழைய போனை எடுத்து விட்டு சமீபத்தில் ரிலையன்ஸ் போன் வாங்கியுள்ளோம்” என்றாள் ஸ்ரீவாணி. 

எச்சில் விழுங்கினாள் சுஜாதா. “அப்படியா அக்கா? ரொம்ப சந்தோசம். அது சரி, அக்கா, நீ ஏன் நடந்து செல்கிறாய்? உன் கார் எங்கே? நகையெல்லாம் ஏன் கழற்றி விட்டாய்?” பொறுமையிழந்த சுஜாதா நேரடியாக பாயிண்டுக்கு வந்தாள். 

“அதுவா? அண்மையில் எனக்குக் கொஞ்சம் ஆரோக்கியம் சரியில்லை, சுஜாதா. மெனோபாஸ் நேரம் அல்லவா? இடுப்பு வலி. அதோடு, இருந்தாற்போல் இருந்து இடது காலில் வலி. கேரள மருத்துவம் பார்க்கலாம் என்று யாரோ சொன்னார்கள். சரி என்று ஆரம்பித்தேன். பஞ்ச கர்மா சிகிச்சை. ஐந்தாறு வாரங்கள் செய்து கொள்ளவேண்டும். நன்றாக இருக்கிறது. எண்ணெய் மசாஜ் செய்வார்கள் அல்லவா? அதனால், கால் மெட்டியோடு எல்லாவற்றையும் எடுத்துவிடச் சொன்னார்கள். அங்கு சென்று எடுப்பானேன் என்று வீட்டிலேயே கழற்றி வைத்து விட்டு தினமும் செல்கிறேன். அதோடு வாக்கிங் செய்வது நல்லது என்று சொன்னார்கள். சரி உடம்பு குறையுமே என்று நடந்து செல்கிறேன். ஆங், சொல்ல மறந்து விட்டேன். என் தங்கை ராதாவின் மகளுக்கு பிரசவ நேரம். “தனியாக இருக்கிறாள் கொஞ்சம் உதவியாக இரு” என்று கேட்டாள். சரி என்றேன். என் ட்ரீட்மென்ட் சென்ட்டரும் இங்கே அருகில்தான் இருக்கிறது. அவரும் ஊரில் இல்லை. இங்கேயே இருந்து ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்கிறேன். இது முடிந்ததும்  வீட்டுக்குச் செல்வேன்” என்று எல்லாம் விவரித்து விட்டு, “நீ எங்கே போகவேண்டும்? எதிர்பாராமல் உன்னை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. முடிந்தபோது ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வா” என்று கூறிக் கொண்டே ஒரு சந்திற்குள் திரும்பினாள் ஸ்ரீவாணி.

வாயடைத்துப் போன சுஜாதா, மெதுவாக இயல்பு நிலைக்கு வந்தாள். நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பஸ் பிடித்துச் செல்ல வேண்டும். ஓட்டமாக ஓடி பஸ் ஸ்டாண்டை அடைந்தாள். ஆனால் அதற்குள் பஸ்கள் சென்று விட்டன. வேறு வழியில்லை.  ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். 

அத்தனை தூரம் வருவதற்கு எந்த ஆட்டோகாரரும் சம்மதிக்கவில்லை. ரிடர்ன் தொகையும் கொடுக்க வேண்டும் என்றார்கள். சற்று நேரம் அங்குமிங்கும் அலைந்து விட்டு, வேறு வழியின்றி இருநூறு ரூபாய் கொடுத்து ஆட்டோவில் சென்றாள். ஆபீஸுக்குச் சென்று பார்த்தால் கேட் மூடியிருந்தது. பார்மாலிடி எல்லாம் முடித்துவிட்டு உள்ளே சென்றால் லஞ்ச டைம் ஆகியிருந்தது. பாஸிடம் திட்டு வாங்கினாள். 

ஒடிந்துபோன மனதோடு லஞ்ச பாக்சை எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றால் அங்கு பதமாவும் சாவித்திரியும் எதிரில் வந்தார்கள். 

“ஸ்ரீவாணி மேடத்திற்கு என்ன ஆச்சாம்?” இருவரும் ஒரே குரலில் கேட்டார்கள். 

“ஒரு மண்ணாங்கட்டியும் ஆகவில்லை” என்று எரிந்து விழுந்து விட்டு ஒரு நாற்காலியில் சாய்ந்தாள். “அதிர்ஷ்டக்காரர்களுக்கு யாரும் தீங்கிழைக்க முடியாது. தரித்திரத்தை யாராலும் தீர்க்கவும் முடியாது” என்று நினைத்தபடி கண்களைச் சோர்வோடு மூடினாள்   சுஜாதா. அவள் கண்கள் கண்ணீரைப் பெருக்கின.   

https://solvanam.com/2024/09/08/ஸ்ரீவாணி-மேடம்/

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி நுணாவிலான் அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.