Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பொன்னுக்கு வீங்கி நோய் தமிழ்நாட்டில் அதிகரிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பொன்னுக்கு வீங்கி நோயின் பரவல் அதிகரித்து வருகிறது. அரசு தடுப்பூசி திட்டத்தின் கீழ் பொன்னுக்கு வீங்கி சேர்க்கப்படாதது இந்த அதிகரிப்புக்கான முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் வரும் காலங்களிலும் இந்த நோயின் பரவல் அதிகமாக இருக்கலாம் என்று மூத்த மருத்துவர்களும், துறை சார்ந்த நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

அரசு திட்டத்தில் புதிய தடுப்பூசிகளைச் சேர்ப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த நோய்ப் பரவலைக் கண்டறிய, இந்த நோயை 'தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக' மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் வலியுறுத்துகின்றனர்.

பொன்னுக்கு வீங்கி வெகு காலமாக சமூகத்தில் இருந்து வரும் நோயாகும். பொதுவாக குழந்தைகளிடம் இந்த நோய் காணப்பட்டாலும் பெரியவர்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இந்த நோய் மலட்டுத் தன்மையை, குறிப்பாக ஆண்களிடையே அதிகம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால், இதன் பரவலை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2021-2022ஆம் ஆண்டில் 61 பேருக்கும் 2022-2023ஆம் ஆண்டில் 129 பேருக்கும் பொன்னுக்கு வீங்கி இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் கடந்த 2023-2024-ஆம் ஆண்டில் சுமார் 8 மடங்கு அதிகமாக சுமார் 1,091 பேருக்கு தமிழ்நாட்டில் பொன்னுக்கு வீங்கி இருப்பது கண்டறியப்பட்டது.

 

இந்தத் தரவுகளைக் குறிப்பிடும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆய்விதழில் வெளிவந்துள்ள கட்டுரை, மேலும் சில தரவுகளையும் கூறுகிறது.

"ஒரு லட்சத்தில் எத்தனை பேருக்கு நோய் ஏற்படும் என்ற விகிதம் 2021இல் 0.07 ஆக இருந்தது. அந்த விகிதம் 2024இல் 1.3 ஆக அதிகரித்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் தெரிவிக்கப்பட்ட நோய் பாதிப்புகளில் 31% சென்னையில் பதிவாகியுள்ளது."

இதனால் பொன்னுக்கு வீங்கியை 'தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக' அறிவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நர்மதா, அபிநயா உள்ளிட்டோர் எழுதிய அந்த ஆய்வுக் கட்டுரை வலியுறுத்கிறது.

பொன்னுக்கு வீங்கி நோய் அறிகுறிகள் என்ன?

பொன்னுக்கு வீங்கி நோய் தமிழ்நாட்டில் அதிகரிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆங்கிலத்தில் மம்ஸ் (mumps) என்றழைக்கப்படும் பொன்னுக்கு வீங்கி நோய், பாராமிக்சோவைரஸ் எனும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸால் ஏற்படும் நோயாகும். இது காற்றில் எளிதாகவும் வேகமாகவும் பரவக்கூடியது.

காதுகளுக்கு முன்பாக இருபுறமும் இருக்கும் உமிழ்நீர் சுரப்பியின் (parotid gland) வீக்கம் இந்த நோயின் பிரத்யேக அறிகுறி. இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்கு இடது அல்லது வலது அல்லது இருபுறமும் காதுகளுக்கு கீழே பெரிய வீக்கம் தென்படும். காதுகளுக்குக் கீழே மிகுந்த வலி ஏற்படும். மேலும் காய்ச்சல், உடல் சோர்வு ஏற்படும்.

"ஒருவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு இரண்டு வாரங்கள் வரைகூட அறிகுறிகள் தென்படாமல் இருக்கலாம். அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பாக அவர் மற்றவருக்கு அந்த நோயைப் பரப்பியிருக்க முடியும். எனவே குழந்தைகளிடம் குறிப்பாக பள்ளிக் குழந்தைகளிடம் மிக வேகமாக இந்த நோய் பரவும்" என்று தொற்றுநோய் நிபுணரும் மூத்த மருத்துவருமான சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறுகிறார்.

இதைக் குணப்படுத்த குறிப்பிட்ட மருந்து கிடையாது. இது தானாகவே சீராகும் நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோய் ஏற்பட்ட காலத்தில் அதிகமான நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வீக்கத்தால் ஏற்படும் வலிக்கு மட்டுமே மருந்து கொடுக்க முடியும்.

"சில குழந்தைகளிடம் இந்த நோய் மிக லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். நோய் வந்ததேகூட தெரியாமல் இருக்கலாம். ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பொருத்தே இது அமையும்" என்று மாநில பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி தெரிவிக்கிறார்.

பாதிப்புகள் என்ன?

இந்த நோய் நான்கு அல்லது ஐந்து நாட்களில் தானாகவே குணமாகக் கூடியது என்றாலும், இது தீவிரமாக தாக்கினால், உடலில் வேறு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.

  • இதனால் மூளைக் காய்ச்சல் (Meningitis) ஏற்பட வாய்ப்புண்டு. இதன் விளைவாக மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகள் பாதிக்கப்படும்.
  • அதோடு, கணைய அழற்சி (Pancreatitis) ஏற்படும். இதனால் கணைய செயல்பாடுகள் நாளடைவில் பாதிக்கப்படும்.
  • ஆர்கைடிஸ் (Orchitis) எனப்படும் ஆண் விரைப்பைகளில் உண்டாகும் பாதிப்பு ஏற்படும். விரைப்பைகளில் வலியும் வீக்கமும் ஏற்படும். இதே போன்று பெண்களின் கருப்பைகளையும் பாதிக்கக்கூடும்.
பொன்னுக்கு வீங்கி நோய் தமிழ்நாட்டில் அதிகரிக்குமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நோய் மலட்டுத் தன்மையை, குறிப்பாக ஆண்களில், ஏற்படுத்தக் கூடியது என்பதால் இதை அரசுத் திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளதாக முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி தெரிவித்தார்.

"உயிருக்கு ஆபத்தான பெரும்பாலான நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் அரசுத் திட்டத்தின் கீழ் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. அடுத்து, மலட்டுத் தன்மையை உருவாக்க வாய்ப்பு இருப்பதால் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசியை வழங்க வேண்டிய அவசியம் மிகவும் உள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களில் பிறப்புறுப்புகள் பாதிக்கப்படும். குறிப்பாக ஆண்களின் பிறப்புறுப்பைப் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதற்கான குறிப்பிடும்படியான தரவுகள் இல்லை என்றாலும், இது மருத்துவ ரீதியாக ஆவணப்படுத்தப்பட்ட தகவல்," என்றார் அவர்.

மேலும், "தனியார் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருப்பவர்களுக்கு இந்த நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. ஆனால், அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ள மக்கள் இடையேதான் இந்த நோய்ப் பரவல் அதிகமாக இருக்கும். அவர்களுக்கும் இந்தப் பாதுகாப்பு தேவை" என்றார்.

பொன்னுக்கு வீங்கி நோயின் நோய் பரவும் விகிதம் (R0- ஆங்கிலத்தில் 'ஆர் நாட்' என்று சொல்லப்படும் விகிதம்) -10 முதல் 12 ஆக உள்ளது.

"அதாவது நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பத்து முதல் 12 பேருக்கு இந்த நோயைப் பரப்பக்கூடும். இது எந்த வயதினருக்கும் ஏற்படக் கூடும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களிடம் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது" என்கிறார் மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன்.

பொன்னுக்கு வீங்கி நோய் பரவலுக்கான காரணம் என்ன?

பொன்னுக்கு வீங்கி நோய் தமிழ்நாட்டில் அதிகரிக்குமா?

பட மூலாதாரம்,SUBRAMANIAN SWAMINATHAN

படக்குறிப்பு, தொற்றுநோய் நிபுணர் சுப்ரமணியன் சுவாமிநாதன்

தமிழ்நாடு சுகாதாரத்துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு திட்டத்தின் கீழ் பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசி வழங்கப்படாததே இந்த நோய் பரவலுக்கான முக்கியக் காரணம் என்றார்.

"தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்த வேண்டிய வயதில் இருப்பவர்களில் கிட்டத்தட்ட 85% பேர் அரசு மருத்துவமனைகளில் இருந்து தங்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அப்படி இருக்கையில், 85% மக்களுக்கு இந்த தடுப்பூசி சென்று சேரவில்லை. சமூகத்தின் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி கிடைக்காதபோது நோய்ப் பரவல் அதிகரிக்கும். இனி வரும் ஆண்டுகளிலும் இந்த நோய்ப் பரவல் அதிகமாகவே இருக்கும்" என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி.

பொன்னுக்கு வீங்கி நோய்க்கான தடுப்பூசி பொதுவாக தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களுக்கான தடுப்பூசிகளுடன் சேர்த்து ஒரே தடுப்பூசியாக வழங்கப்படும். அரசுத் திட்டத்தின் கீழ் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. தட்டம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு இடையில் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

"இரண்டும் சகோதரர்கள் போலத்தான். ஒரு நோயைக் கட்டுப்படுத்தும்போது, கட்டுப்படுத்தப்படாத மற்றொரு நோய் அதிகரிப்பது இயல்பே" என்றும் அந்த மூத்த அதிகாரி தெரிவித்தார்.

பொன்னுக்கு வீங்கி நோய் தமிழ்நாட்டில் அதிகரிக்குமா?

பட மூலாதாரம்,TNDPH

படக்குறிப்பு, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.செல்வவிநாயகம்.

மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநர் டி.செல்வ விநாயகம், "இந்த நோய்க்கான தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கான அவசியம் உள்ளது. ஆனால், புதிய தடுப்பூசிகளை அரசுத் திட்டத்தின் கீழ் சேர்ப்பது மத்திய அரசின் கொள்கை முடிவு" என்றார்.

இந்த நோய் தமிழ்நாட்டில் மட்டும் அதிகரிக்கவில்லை, பிற எல்லா மாநிலங்களிலும், உலக அளவிலும்கூட பரவல் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நோயை தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்க திட்டம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, அனைத்து காய்ச்சல்களும் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்று பதிலளித்தார்.

பொன்னுக்கு வீங்கி நோய்க்கு எதிரான தடுப்பூசியை ஒன்பது மாதங்களில், 15 மாதங்களில், பின்பு ஐந்து வயதில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வயதில் எடுத்துக் கொள்ளத் தவறிய 18 வயதுக்கு உட்பட்டவர்கள், 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசியை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.