Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலை நேரக் குளிர் ஊசியாய்க் குத்த எழும்பவே மனமின்றி தடித்த போர்வையால் முகம் தவிர்ந்த அனைத்துப் பாகங்களையும் குளிர் புகா வண்ணம் போர்த்து மூடியபடி படுத்துக் கிடக்கிறேன் நான். லண்டனில் சினோ விழுவதில்லை. குளிர் குறைவு என்ற பேர்தான். ஐந்து பாகை குளிர்கூட மைனஸ் பத்துப்பாகை போல் குளிரும். அத்துடன் ஊசிக்காற்றும் சேர்ந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். வெளியே செல்லக்கூட மனமின்றிப் போகும்.

முன்னர் பதினெட்டு ஆண்டுகள் ஜெர்மனியில் இருந்தபோது நான்கு மாதங்களாவது பனி கொட்டும். பார்க்குமிடமெல்லாம் வெண்பனித்துகள்கள் வந்து அள்ளி  விளையாடு என்று அழைக்கும். வெளியே சென்றால் கூட லண்டனில் குளிர்வதுபோல் குளிர் இருக்காது. ஆனால் இங்கு.............நினைத்துப் பார்த்தவளுக்குச் சிரிப்பும் வந்தது.

அங்கு இளமைக் காலத்தில் வசித்தாய். முப்பத்தைந்து கடந்தபின் இந்த நாட்டுக்கு வந்தாய். வயது போகப் போக உடலும் மனமும் சேர்ந்து வலிமை இழக்கும் என்பது தெரியாதா” என யாரோ கேட்பதுபோல் இருக்க, தூக்கக் கலக்கத்திலும் முகம் சிரிப்பில் விரிகிறது.

ஐம்பத்தைந்து கடந்துவிட்டதா எனக்கு? திருமணமாகிப் பிள்ளைகள் பெற்று அவர்களை வளர்த்து திருமணமும் செய்துகொடுத்தபின்னும் மனமும் உடலும் அப்படியே இருக்குமா என்ன? மனதில் வலுவும் பதினெட்டு வயதேயான நினைப்பும் இன்னமும் இருக்கிறதுதான். ஆனாலும் இடைகிடை ஒன்றிரண்டு நோய்களும் வந்து உனக்கு வயது கூடிக்கொண்டே போகிறது என்பதை நினைவுபடுத்தியும் விடுகிறது.

 நாமென்ன ஆண்களைப்போல் வேலைக்கு மட்டுமா போய் வருகிறோம். சமையல் வேலை, வீடு துப்பரவாக்கும் வேலை, உடுப்பு வோசிங்கிங் மெசினில்போட்டு எடுத்துக் காயவிட்டு அயண் செய்து மடித்து வைத்து........... இன்னும் எத்தனை எத்தனை இருக்கு. என் அயலில் வாழும் பல தமிழ்ப் பெண்கள் வேலைக்கே போகாமல் வீட்டில் தொடர்ந்தும் இருக்கிறார்கள்தான். அவர்கள் அதிட்டசாலிக்கள்தான் என மனம் எண்ணினாலும் எப்படித்தான் அவர்களால் வீட்டில் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு இருக்க முடிகிறது எனவும் எண்ணியவுடனேயே அவர்கள்மேல் ஒருவித இரக்கமும் ஏற்படுகிறது. உடனேயே உன்னில இரக்கப்பட யாருமே இருந்ததில்லை. இப்ப நீ யாருக்கோ இரக்கப்படுகிறாயா என்கிறது மனம்.

வெளிநாடு வந்த நாளில் இருந்து கணவர் குடும்பத்துக்கு மாதாமாதம் பணம் அனுப்புவது தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. நான் அதை ஒருநாளும் தடுத்ததும் இல்லை. நான் வேலை செய்ய ஆரம்பித்ததும் எனது சம்பளம் முழுவதுமே கணவனிடம் போய்விடும். எனக்கு எதுவும் தேவை என்றால் கூட அவரிடம் கேட்டுத்தான் வாங்கவேண்டும். என் குடும்பமும் ஊரில இருக்கு. ஒரு கொஞ்சக் காசு அனுப்புவம் என்று நினைத்தால் கூட கையில் காசு இருக்காது.

ஒருதடவை மனிசன் மகிழ்வாக இருந்த நேரம் பார்த்து அம்மாவுக்கு ஒரு இருபதாயிரம் அனுப்பட்டே என்று கேட்டதுதான். ஏன் கொப்பா வேலை செய்யிறார் தானே. அவைக்கு எதுக்குக் காசு என்று முகத்தில அடிச்சதுபோல சொல்ல, ஏன் உங்கடை அப்பாவும் வேலை செய்யிறார்தானே. நீங்கள் ஏன் அனுப்புறியள் எண்டதுக்கு கன்னத்தில விரல் அடையாளம் வந்ததுதான் மிச்சம். அதுமட்டுமில்லாமல் ஒருகிழமை மனிசன் என்னோடை கதைக்காமல் திரிய அதுக்குப் பிறகு நான் கேட்டதுதான் தப்போ என்று எனக்கே யோசினை வந்திட்டிது.

 லண்டன் வந்த பிறகுதான் எனக்கு கொஞ்சம் துணிவு வந்தது. அதுக்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

ஐந்து நாளும் மனிசன் பதிஞ்சு வேலை. எனக்கு ஓரிடத்தில களவாய் வேலை. கையில காசு தருவினம். இவர் காலையில போனால் பின்னேரம்தான் வீட்டை வருவார். இவருக்குச் சொல்லாமல் இரண்டு மணிநேரம் அதிக வேலைசெய்து சேர்த்து வச்சு அம்மாவுக்கு அனுப்பியதை இப்ப நினைக்க கோவம்தான் வருது. எப்பிடி ஒரு துணிவில்லாத ஆளாய் இருந்திருக்கிறன்.

பிள்ளையள் எல்லாம் வளர வளர எனக்கும் கொஞ்சம் துணிவு வந்தது. என் உள்ளக் கிடக்கையை பிள்ளையளுக்கு சொல்லி அழ, அவைதான் “அம்மா இரண்டு பேருக்கும் சமமான உரிமை இருக்கு. நீங்களும் கஷ்ரப்பட்டுத்தானே வேலை செய்யிறியள். அப்பாவுக்குச் சொல்லிப்போட்டே அம்மம்மாவுக்கு காசை  அனுப்புங்கோ” என்று சொன்ன துணிவில பிள்ளையளுக்கு முன்பாக கணவரிடம் கேட்க, வழமைபோல் மறுத்த கணவரை எதிர்த்து பிள்ளையள் நியாயம் கதைக்க, ஒண்டும் சொல்லாமல் போன மனிசன் வழமைபோல் என்னோடை கதைக்காமல் திரிய, நானும் அவரைக் கண்டுகொள்ளாமல் காசை அனுப்பியது மட்டுமல்லாமல் எனக்கு அவரோட கதைக்காமல் இருக்க ஏலும் எண்டு காட்டிய பிறகுதான் மலையேறின சாமி இறங்கினது.

இப்போதெல்லாம் வெளிநாட்டில் வசிக்கும் ஆண்கள் பலரும் மனைவியருக்கு உதவி செய்கின்றனர் தான். ஆனாலும் மனமிருக்கும் எல்லோருக்கும் உதவி செய்ய நேரம் இருக்கவேண்டுமே.

மனிசன் கூட என்னிலும் நன்றாகப் புரியாணி செய்வார். பிள்ளைகள் கூட அப்பாவின் புரியாணி சுவையாக இருக்கு என்று என் முன்னாலேயே கூறும்போது சிறிது கோபம் எட்டிப்பார்க்கும். இத்தனைகாலம் மூன்று நேரமும் சமைத்துக் கொடுக்கிறேன். ஒருநாள்க் கூட இப்படிக் கணவரோ பிள்ளைகளோ புகழ்ந்ததில்லை. நன்றி கெட்டவர்கள் என்று அவர்களைத் திட்டவேண்டும் என்று மனதில் சிறிது கோபம் கூட எழும். சரி போகட்டும் என அடக்கிக் கொள்வேன்.

நான் எழுந்து பல் தீட்டிவிட்டு வந்து மீண்டும் கட்டிலில் முடங்கிக் கொள்கிறேன். இன்று வேலை இல்லை. இன்னும் சிறிது நேரம் படுத்திருப்போம் என்று எண்ணிக்கொண்டு அதையும் இதையும் நினைத்தபடி படுத்திருக்க கணவரின் போனில் அலாரம் அடிக்கிறது. நான் கேட்காததுபோல் கண்களை மூடியபடி கிடக்கிறேன்.

எழுந்த கணவர் பல் தீட்டிவிட்டு வந்தவர், அறையின் திரைச் சேலைகளை இழுத்து ஒதுக்க வெளிச்சம் கண்களைக் கூசச் செய்கிறது.

“இன்னும் நீ எழும்பேல்லையே. நான் தேத்தண்ணி ஊத்தியிருப்பாய் எண்டு நினைச்சன்” 

“இண்டைக்கு எனக்கு வேலை இல்லை. நீங்கள் ஊத்த ஏலாதே”

“நீ ஊத்துறமாதிரி வராது. உன்ர கையால குடிச்சாத்தான் குடிச்சமாதிரி இருக்கும்.......எழும்பு. சுடுதண்ணிப் போத்தலிலும் போட்டு வை. நான் வெளிக்கிட்டு வாறன். சாப்பாடுப் பெட்டியும் என்ர பாக்கில கிடக்கு. கழுவிப்போட்டு சாப்பாட்டையும் போட்டு வை”

ஒரு நாளைக்கு எண்டாலும் கொஞ்ச நேரம் படுக்க விடாயினம். ஏன் அவர் ஊத்தினால் தேத்தண்ணி கோப்பியாய் மாறீடுமோ?  வேலைக்குப் போக இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கு. நீங்களே  போட்டுக்கொண்டு போக ஏலாதா என்று கேட்போம் என்று எண்ணியும் வார்த்தைகள் மனதுள்ளேயே சிக்கிக்கொள்கின்றன. எனக்கும் யாராவது தேத்தண்ணியோ கோப்பியோ ஊத்திக்கொண்டுவந்து ஒருநாளாவது தராயினமோ என்ற ஆசை அப்பப்ப எழுவதுதான். எனக்கு கொண்டுவந்து தாங்கோ என்று வாய்விட்டுக் கேட்கவும் என் தன்மானம் இடம்கொடுத்ததில்லை.

கணவர் என்று இருக்கிறீர்கள். இத்தனைகாலத்தில ஒருக்காத்தன்னும் நீங்களாகத் தேநீரோ கோப்பியோ போட்டுத் தந்திருக்கிறியளா? இல்லை சும்மாதன்னும் கேட்டாவது இருக்கிறியளா? என எண்ணும்போதே அம்மாவின் முகமும் அப்பாவின் முகமும் கண்முன்னே வருகிறது.

இருவருமே ஆசிரியர்கள். காலையில் அம்மா எழுந்து காலை உணவு, மதிய உணவு இரண்டையும் தயார் செய்ய வேணும். அதற்குள்ளும் எனக்கும் தம்பிக்கும் கட்டிலில் தேநீரைக் கொண்டுவந்து எழுப்புவார். எனக்கு ஒரு பன்னிரண்டு வயதுவரை இது தொடர்ந்தது. அப்பா அம்மாவுக்குத் தேங்காய் துருவிக் கொடுப்பது முதல் பல உதவிகளைச் செய்து கொடுப்பார். ஆரம்பத்தில் துலாவில் தண்ணீர் அள்ளித் தொட்டிக்குள் நிறைத்து எங்களைக் குளிப்பாட்டுவதுகூட அப்பாதான். அவர்கள் நினைவில் என் கண்கள் நிறைகிறது.

என் கணவர் கூட உதவியே செய்யாதவர் அல்ல. எத்தினையோ உதவிகள் நான் கேட்காமலே செய்திருக்கிறார். ஆனாலும் உணவு விடயத்தில்த் தான் அதிகம் தலையீடு செய்வார். அதுதான் எனக்கு அதிக சினத்தைக் கொடுக்கும். நான் ஒரு சமையலைத் திட்டமிடும்போது அவர் வேறொரு விதமாய் சமையல் குறிப்புச் சொல்லுவார். என் சமையலை என் நண்பர்கள் உறவினர்கள் பாராட்டுவதோடு மட்டுமில்லாது மிச்சம் இருந்தால் தாடி என்று வீட்டுக்கும் எடுத்துச் செல்வதும் என் சமையலின் சுவையினால்தானே. பிறகு எதற்கு இவர் திருத்தம் சொல்கிறார் என்று கடுப்பாக இருக்கும்.

அதுவும் இப்ப கொஞ்ச நாட்கள் என் போனுக்கு சமையல் குறிப்புகளும் யூடியூப் லிங்குகளும் கணவர் போனில் இருந்து என்  வற்சப், மெசெஞ்சர் என்று வந்து விழும்போது கடுப்பு அதிகரிக்கும். இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருக்கலாம். அதோடை இதைச் சேர்த்துக் கறி வைத்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லும்போது ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் வெளிக்காட்டாது நீங்களும் நல்லாச் சமைக்கிறீங்கள் தானே. நீங்களே இவற்றைச் சமைத்துத் தாருங்கள். என்றதுடன் மனிசனும் பேசாமல் இருப்பதும் அடிக்கடி நடப்பதுதான்.   

அம்மா முன்னரெல்லாம் உப்புமா செய்வார். நெய்யில் வறுத்து உதிரி உதிரியாய் குழைந்து வராமல்...... எமக்கு மட்டுமல்ல அப்பாவுக்கும் அந்த உப்புமா மிகவும் பிடிக்கும். உப்புமாவோடு முட்டைப் பொரியாலோ அல்லது அவித்த முட்டையோ இருக்கும். பள்ளி முடிந்து வந்து உடுப்பை மாற்றி முகம் கழுவியவுடன் சமையலறைக்குச் சென்று மிகுதி உப்புமா இருக்கா என்றுதான் தேடுவேன்.

ஆனால் அம்மா எப்படித்தான் எல்லோருக்கும் அளவாக மிகுதியே வாராததுபோல் சமைப்பார் என்பது இன்றுவரை எனக்கு விளங்கக்கவே இல்லை. என்னடா இவள் தேவையில்லாமல் உப்புமாவைப் பற்றிக் கதைக்கிறாளே என்று உப்புமாவைப் பிடிக்காத உங்களுக்கு எரிச்சல் வரும்தான். ஆனாலும் அதிலும் ஒரு பெரிய விடயம் இருக்கு.

திருமாணமான பின் நானும் உப்புமா செய்து பழகினேன் என்று கூறுவது தவறு. அம்மாவிடம் கேட்டுச் செய்தேன். கண்பார்த்தால் கை செய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது எனக்குக் கை வந்த கலை. நானே உண்டு பார்த்துவிட்டு என்னை மெச்சிக்கொண்டேன்.

கணவருக்கு ஆசையுடன் போட்டுக்கொண்டு போய்க் கொடுத்தவுடன் இரண்டு வாய் உண்டவர் “என்ன இது அவியாமல் இருக்கு. தண்ணீர் கூட விட்டு கிண்டினால்த்தான். சாப்பிடலாம். அம்மா அப்பிடித்தான் செய்து தாறவ” என்றவுடன் என் உற்சாகம் வடிந்து போக “அம்மா இப்பிடித்தான் செய்யிறவ. நல்லாய் இருக்குத் தானே என்றவுடன். “எனக்கு வேண்டாம். தொண்டைக்குள்ள சிக்குது. இடியப்பம் அவி” என்றுவிட்டு திரும்பிக்கொள்ள நான் உப்புமாவை கொண்டுபோகிறேன். இப்போதென்றால் என் பதில் வேறாக இருந்திருக்கும். திருமணமான புதிதில் புது மாப்பிளை சொன்னால்  கேட்கத்தானே வேண்டும் என்று எண்ணி இடியப்பம் அவித்துக் கொடுத்தது மட்டுமின்றி. பின்னர் எப்போதும் அம்மா செய்வதுபோல் செய்ய எண்ணியது கூட இல்லை.

தண்ணீர் அதிகம் விட்டு அவருக்காக அவரின் அம்மா செய்வதுபோல் செய்து குடுத்துக் குடுத்து அதையே நானும் உண்டு பழகி உப்புமா என்றாலே அதுதான் என்று எனக்கும் பழகிப் போச்சு.

 அது மட்டும்தான் என்று நினைக்காதேங்கோ. அம்மா நிறையத் தேங்காய்ப்பூப் போட்டு அவிக்கும் பிட்டுக் கூட என் ஆசைக்கு அவிக்கேலாமல் போச்சு. அம்மா கொஞ்சம் கொஞ்சமாத் தண்ணீர் விட்டு சிறிதாகக் குற்றி அவிக்கும் பிட்டின் வாசனை இன்றும் மனதை நிறைக்கிறது.

நான் கணவருக்கு முதல்முதல் அவித்தபோது “என்ன புட்டு அவிக்கிறாய். அம்மா தண்ணீர் அதிகம் விட்டு கையால உதிர்த்துத்தான் புட்டு அவிப்பா. உப்பிடி சில்வர் கப்பால குத்துறேல்லை என்றபோது“ உங்கட வீட்டில சிவர் கப் இல்லையாக்கும்” என்று கூறி முடியமுதலே “தேவை இல்லாமல் வாய்க்கு வாய் காட்டாதை” என்றதோடை நில்லாமல் “இண்டைக்கு ஓகே. இனிமேல் அம்மா அவிக்கிற புட்டுமாதிரி அவிச்சுப் பழகு” என்று முடித்ததுதான். முப்பத்தெட்டு ஆண்டாய்த் தொடருது.

இன்று மாலை என்ன சமைக்கலாம் என்று யோசித்தபோது அம்மா அவிக்கும் பிட்டுப்போல் வெள்ளைமாப் பிட்டு அவித்தால் என்ன என்று எண்ணியவுடனேயே வாயில் எச்சில் ஊற ஆரம்பிக்கிறது. கணவருக்கு தனியாகவும் எனக்குத் தனியாகவும் அவித்தால் என்ன என்ற யோசனைவர அதுவும் நல்லது என்ற எண்ணம் எழுகிறது.

கணவர் ஆறு மணிக்கு வேலையால் வந்தாலும் எட்டு மணிக்குத்தான் இரவு உணவை உண்பார். நானோ ஆறு மணிக்குள் உண்டுவிடுவேன். பிட்டை எனக்கு மட்டும் அவித்து மதியம் வைத்த மீன் குழம்புடன் கடையில் வாங்கிய மாம்பழத்தையும் சீவி வைத்தபடி உணவு மேசையில் அமர்ந்து உலிர் பிட்டை ஆற அமர உண்டபோது மனதே நிறைந்துபோகிறது. 

கணவர் உணவு மேசைக்கு வருவதாகக் கட்டியங் கூறியவுடன் மளமளவென்று பிட்டை அவித்து மீன்குழம்பு மாம்பழத்துடன் பரிமாற, அரை வயிறு நிறைந்தபின்தான் “என்ன கொம்மான்ர புட்டு அவிச்சிருக்கிறாய்” என்கிறார். இத்தனை காலம் உங்கள் விருப்பத்துக்கு அவிச்சாச்சு. இனிமேல் இந்தப் பிட்டுத்தான் என்று கூறியபடி அப்பால் நகர்கிறேன் நான்.

அன்று இரவு எல்லா வேலையும் முடித்துக் களைத்து நாளை காலை வெள்ளண வேலைக்குப் போக எழுவதற்காக ஆறுமணிக்கு அலாமை வைத்துவிட்டு அக்கடா என்று கட்டிலில் சாய்கிறேன்.   கட்டிலுக்கு வந்த மனிசன் நித்திரை கொண்டிட்டீரோ என்றபடி கைகளால் துழாவ, நான் நித்திரை கொள்ளப்போறன், இண்டைக்கு ஏலாது என்றபடி திரும்பிப் படுக்கிறேன் நான்.             

  

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கின்றது சுமே ஆன்ரி😀

“தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி” என்ற கண்ணதாசன் பாட்டுக்கேட்டு வளர்ந்த ஆண்களின் சிந்தனை முன்னேறிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தால் மாறாதுதானே!

  • கருத்துக்கள உறவுகள்

சமையல் என்பது ஒரு அருமையான கலைதான் ஆயினும் ஒரு குடும்பத்துக்குள் அனைவரும் திருப்திப் படுமாப் போல சமைக்க யாராலுமே முடியாது ......... இன்றைய நேரம் கிடைக்காத (பிசியாக ) வேலைகள் இருக்கும்போது வீட்டிற்கு வந்து சமைத்து சாப்பிடுவதே பெரிய விஷயம் .........! 😁

கதை நல்லாயிருக்கு . ......... எப்போதும் இப்படியே ஊடலும் கூடலுமாய் நீடூழி வாழுங்கோ .........!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஜெர்மனியில் இருந்தபோது நான்கு மாதங்களாவது பனி கொட்டும். பார்க்குமிடமெல்லாம் வெண்பனித்துகள்கள் வந்து அள்ளி  விளையாடு என்று அழைக்கும்

அது ஒரு காலம். இப்பொழுதெல்லாம் வருடத்துக்கு நான்கு முறையாவது பனி பெய்கிறதா என்பதுதான் நிலமை.

இன்று மகளிர் தினம். நல்ல நேரம் பார்த்து கதை சொல்லியிருக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2025 at 09:46, கிருபன் said:

கதை நன்றாக இருக்கின்றது சுமே ஆன்ரி😀

“தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி” என்ற கண்ணதாசன் பாட்டுக்கேட்டு வளர்ந்த ஆண்களின் சிந்தனை முன்னேறிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தால் மாறாதுதானே!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கிருபன்

On 8/3/2025 at 11:57, suvy said:

சமையல் என்பது ஒரு அருமையான கலைதான் ஆயினும் ஒரு குடும்பத்துக்குள் அனைவரும் திருப்திப் படுமாப் போல சமைக்க யாராலுமே முடியாது ......... இன்றைய நேரம் கிடைக்காத (பிசியாக ) வேலைகள் இருக்கும்போது வீட்டிற்கு வந்து சமைத்து சாப்பிடுவதே பெரிய விஷயம் .........! 😁

கதை நல்லாயிருக்கு . ......... எப்போதும் இப்படியே ஊடலும் கூடலுமாய் நீடூழி வாழுங்கோ .........!

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா. இது முழுக்கமுழுக்க என் கதை இல்லை. காதில் கேட்கும் விடயங்கள் எழுத்தாய் வரும்தானே அண்ணா.

21 hours ago, Kavi arunasalam said:

அது ஒரு காலம். இப்பொழுதெல்லாம் வருடத்துக்கு நான்கு முறையாவது பனி பெய்கிறதா என்பதுதான் நிலமை.

இன்று மகளிர் தினம். நல்ல நேரம் பார்த்து கதை சொல்லியிருக்கிறீர்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா. எங்குமே இப்ப நிறைய காலநிலை மாற்றங்கள் தானே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.