Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Questen.png?resize=750%2C375&ssl=1

உள்ளூராட்சி சபைகள் யாருக்கு? நிலாந்தன்.

நீண்ட இடைவெளிக்கு பின் தலதா மாளிகையின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சிங்கள மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் விளைவாக கண்டிமா நகரை நோக்கி லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் குவிந்தார்கள். சன நெரிசலில் சிக்கி ஓர் இருதய நோயாளி இறக்க நேரிட்டது. பொருளாதார நெருக்கடியின் போது எரிபொருளுக்காக நின்ற மிக நீண்ட வரிசைகளுக்குப் பின் புனித தந்த தாதுவை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் வந்தார்கள். எதிர்பாராத இந்த ஜனத்தொகையினால் கண்டி மாநகரம் குப்பை மேடாகியது. நகரத்துக்குள் புதிதாக நுழையும் ஜாத்திரிகர்களை வரவேண்டாம் என்று கூறித் தடுத்து நிறுத்த வேண்டி ஏற்பட்டது. கண்டி மாநகரின் புவியியல் கொள்ளளவை மீறி யாத்திரிகர்கள் குவிந்தார்கள். அவர்களுக்கு தேவையான வசதிகளையும் சுகாதார ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க மாநகர நிர்வாகத்தால் முடியவில்லை. இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் குப்பைகளை முழுமையாக அகற்ற முடியவில்லை.

எனது நண்பர் ஒருவர் சொன்னார், புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு சாதாரண சிங்கள மக்களை அனுமதித்ததன்மூலம் சிங்கள பௌத்த கூட்டுணர்வை தன்னோடு வைத்துக் கொண்டிருக்க தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது என்று. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இம்மாதம் நடக்கவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் உழைக்கின்றார்கள்.புனித தந்த தாதுவை தரிசிப்பதற்கு மக்களை அனுமதித்தமை தேர்தல் உள்நோக்கங்களைக் கொண்டது என்று ஊகிக்கக்கூடியதாக உள்ளது என்றும் நண்பர் சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தியானது ஓர் ஆளுங்கட்சி என்ற அனுகூலங்களைப் பயன்படுத்தி, அரச வளங்களைப் பயன்படுத்தி அரச வைபவங்களை,பண்பாட்டு நிகழ்வுகளை தனது தேர்தல் பிரச்சாரக் களங்களாக திட்டமிட்டு மறைமுகமாகப் பயன்படுத்தி வருகிறது.

தென்னிலங்கையில் சிங்கள பௌத்த உணர்வுகளை ஒன்றுகுவித்து அதன் மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு தேசிய மக்கள் சக்தி முயற்சிக்கின்றது. அதேசமயம் தமிழ்ப் பகுதிகளில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மையை அவர்கள் தங்களுக்குரிய பிரகாசமான வெற்றி வாய்ப்பாகக் கருதுகிறார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கியும் தமிழ் கட்சிகள் ஐக்கியப்படாத ஒரு பின்னணியில், தேசிய மக்கள் சக்தியானது தமிழ்ப் பகுதிகளில் உற்சாகமாக வேலை செய்கின்றது.பெரும் கூட்டங்களை ஒழுங்குப்படுத்தி தமிழ் மக்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் பெரிய கூட்டங்களை நடத்துவதற்கு நிதி இல்லையாம்.அதனால் அவர்கள் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்களை மட்டும்தான் ஒழுங்குபடுத்தி வருகிறார்கள்.இது கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் காணப்பட்ட ஒரு தோற்றப்பாடாகும். பெரும் கூட்டங்களை ஒழுங்குபடுத்தாவிட்டால் மக்கள் மத்தியில் நொதிப்பை ஏற்படுத்த முடியாது. அது தேசிய மக்கள் சக்திக்குத் தெரிந்திருக்கின்றது.

ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியில் தங்கி இருப்பவை.புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி பெரிய அளவில் கிடைக்கவில்லை என்றால் அவர்களால் பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்த முடியாதா? புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதிப் பங்களிப்பு இல்லை என்றால் தாயகத்தில் கட்சிகளால் ஒரு கட்டத்துக்கு மேல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்பதைத்தான் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலும் பொது தேர்தலும் நடக்கவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் நமக்கு உணர்த்துகின்றனவா?

தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கிடையே ஒற்றுமைப்படா விட்டால் அல்லது குறைந்தபட்சம் பகை தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்றையாவது செய்திருந்திருந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் வாக்குகள் நான்குக்கு மேற்பட்ட தரப்புகளால் சிதறடிக்கப்படும் வாய்ப்புக்களைக் குறைத்திருக்கலாம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த பாடத்தின் அடிப்படையில் கற்றுக்கொண்டு தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு இடையே ஏதாவது ஒருங்கிணைப்புக்குப் போக வேண்டும் என்று பல்வேறு தரப்புகளும் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வலியுறுத்தியும் வந்தன. கடந்த பெப்ரவரி மாதம் ஐநா அதனுடைய 70ஆவது ஆண்டு நிறைவு வைபவத்தை யாழ். திண்ணை விடுதியில் கொண்டாடிய பொழுது அதில் சுமந்திரனும் வந்திருந்தார். அவர் என்னிடம் கேட்டார், அனுர அலை இப்பொழுது ஓய்ந்து விட்டதா? இல்லையா? என்று. நான் சொன்னேன், அது இப்பொழுது அனுர அலை மட்டும் அல்ல, ஆளுங்கட்சி அலை, அரசாங்க அலை. அரசாங்கம் என்ற அடிப்படையில் அரச வளங்களைப் பயன்படுத்தி அந்த அலையை அவர்கள் தட்டி எழுப்பலாம். எனவே அதை எதிர்கொள்வதற்கு தமிழ் தரப்பு ஏதாவது பகை தவிர்ப்பு உடன்படிக்கைக்கு போவதுதான் புத்திசாலித்தனமானது என்று. அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை. அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதே வைபவத்தில் மணிவண்ணனைக் கண்ட போதும் இந்த விடயத்தை நான் சொன்னேன். பகை தவிர்ப்பு உடன்படிக்கை தொடர்பாக அவர் அதிகமாகக் கேட்டறிந்தார்.அது அவசியம் என்பதனை அவர் உணர்ந்திருப்பதாகத் தெரிந்தது.ஆனால் துரதிஷ்டவசமாக அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. இதனால் யாழ்.மாநகர சபையில் ஏனைய கட்சிகளுக்கு ஒரு பெரிய போட்டியாளர் அகற்றப்பட்டிருக்கிறார்.

இவ்வாறு ஏதாவது ஒரு போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைக்கு போகுமாறு தமிழ்க் கட்சிகளுக்கு உரிய காலத்திலேயே கூறப்பட்டிருந்த போதிலும்,பெரும்பாலான தமிழ்த் தேசியக் கட்சிகள் அதனைக் கவனத்தில் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. அல்லது அதனை அவர்கள் தமது கட்சி நோக்கு நிலையில் இருந்தே அணுகினார்கள் என்று தெரிகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நோக்கி முதலில் ஒரு கூட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது சங்குக் கூட்டணிதான். ஆனால் சந்திரகுமாரை உள்ளீர்த்த காரணத்தாலும் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து ரெலோ இயக்கம் வாக்களித்த காரணத்தினாலும் சங்குக் கூட்டணிக்குள் உடைவு ஏற்பட்டது. விளைவாக, இப்பொழுது சங்குக் கூட்டணி முன்னம் இருந்ததை விடவும் மெலிந்து போய் இருக்கிறது. எனினும் கிளிநொச்சியில் சந்திரகுமாருக்கு உள்ள வாக்குப் பலத்தை அவர்கள் அதிகம் நம்புவதாகத் தெரிகிறது.

தமிழரசுக் கட்சி கூட்டுக்குப் போகத் தயார் இல்லை.அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் சரியானவைகள் போல தோன்றலாம். ஆனால் யதார்த்தத்தில் ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டி எழுப்ப அவர்கள் இதய சுத்தியுடன் செயற்படவில்லை என்பதுதான் உண்மை. தாங்கள் தனித்து நின்று வெல்லலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை காரணமாகத்தான் அவர்கள் ஐக்கிய முன்னணிகளை குறித்து அல்லது குறைந்தபட்சம் போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைகளைக் குறித்து தீவிரமாகச் சிந்திக்கவில்லை.

மூன்றாவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. கடந்த காலத்தில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் கற்றுக் கொண்டு அவர்கள் ஒரு கூட்டை உருவாக்கியிருக்கிறார்கள். அது நம்பிக்கையூட்டும் ஒரு விடயம். எனினும் தமிழ் வாக்காளர்களுக்கு அது நம்பிக்கையூட்டுமா இல்லையா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் இந்தக் கூட்டு ஏனைய மூன்று தமிழ்த் தேசியத் தரப்புகளோடு பகை தவிர்ப்பு உடன்படிக்கை ஒன்றுக்குப் போவதற்கு தயாரில்லை என்று தெரிகிறது. ஏனென்றால் அவர்களுடைய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டங்களில், கட்சிப் பிரமுகர்கள் பேசும் பேச்சுக்களைப் பார்த்தால் அவ்வாறு பகை தவிர்ப்புக்கான வாய்ப்புகள் அதிகமாக இல்லை என்றே தெரிகிறது.

நான்காவது, விக்னேஸ்வரனின் மான் கட்சி. மணிவண்ணன் போட்டிக் களத்தில் இருந்து அகற்றப்பட்டமை அக்கட்சியைப் பொறுத்தவரை பெரிய வீழ்ச்சி.

இவ்வாறாக, தமிழ்த் தேசியத் தரப்பு இப்பொழுது நான்காக நிற்கின்றது. தேசிய மக்கள் சக்தி என்ற பொது எதிரிக்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்தில் மட்டும்தான் அவர்கள் ஒன்றாக நிற்கின்றார்கள். ஏனைய விடையங்களில் அவர்கள் தனித்தனியாகவே நிற்கிறார்கள்.என்.பி.பியை எதிர்ப்பதால் மட்டும் அதைத் தோற்கடித்துவிட முடியாது என்பிபிக்கு எதிராக ஒரே அணியில் நின்றால்தான் அதைத் தோற்கடிக்கலாம். அதுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கற்ற பாடம்.

தனித்தனியாக நின்றதன் விளைவாகத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்களால் தேசத் திரட்சியைப் பாதுகாக்க முடியவில்லை.அதன் விளைவாகக் கிடைத்த வெற்றிகளின் அடிப்படையில்தான் அண்மையில் அமைச்சர் பிமல் ரட்டநாயக்க “நாங்கள் தான் இலங்கைத் தீவில் உள்ள மிகப்பெரிய தமிழ்க் கட்சி” என்று கூறியிருக்கிறார். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தங்களுக்குக் கிடைத்த ஆசனங்களின் அடிப்படையில் அங்கெல்லாம் தாங்கள்தான் பெரிய தமிழ்க் கட்சி என்று அவர் கூறுகிறார். இந்த அடிப்படையில் முழு இலங்கையிலும் தேசிய மக்கள் சக்திதான் மிகப்பெரிய தமிழ்க் கட்சி என்று அவர்கள் கூறத் தொடங்கி விட்டார்கள்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அவர்கள் தமது வெற்றி வாய்ப்புகளைப் பாதுகாத்துக் கொள்வார்களாக இருந்தால், தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகக் கருதவில்லை, ஒரு தேசிய இனம் என்று கருதவில்லை, ஒரு தேசிய இனம் என்ற காரணத்தால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வை அவர்கள் கேட்கவில்லை,என்று கூறக்கூடும். அதை எப்படித் தமிழ்த் தேசியக் கட்சிகள் தடுக்கப் போகின்றன?

https://athavannews.com/2025/1429675

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.