Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பத்தூர்: சாதாரண பல் அறுவை சிகிச்சையில் 8 பேர் பலியானது எப்படி? லான்செட் ஆய்வில் தெரிய வந்த உண்மை

பல் மருத்துவ சிகிச்சைப் பெற்ற எட்டு பேர் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 57 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் பல் மருத்துவ கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்ற 8 பேர், சுகாதாரமற்ற கருவியைப் பயன்படுத்தியதால் உயிரிழந்ததாக லான்செட் மருத்துவ ஆய்விதழில் வெளிவந்துள்ள ஓர் ஆய்வு கூறுகிறது.

சிகிச்சையின்போது தேவைப்படும் சலைன் பாட்டிலை திறக்க சுகாதரமற்ற ஒரு கருவியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வந்ததால், புர்கோல்டெரியா சூடோமலெய் (Burkholderia pseudomallei) எனும் பாக்டீரியா நரம்பு மண்டலத்தை பாதித்து நியூரோமெலியோய்டோசிஸ் (neuromelioidosis) என்ற தீவிர மூளைத் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.

பாட்டிலை திறக்கப் பயன்படுத்தப்பட்ட, பெரியோஸ்டீல் எலிவேட்டர் (periosteal elevator) என்ற அந்தக் கருவி பல் அறுவை சிகிச்சையின்போது, எலும்புகளின் மீதுள்ள மெல்லிய திசுக்களை தூக்கிப் பிடிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

முறையாகச் சுத்தம் செய்யாத அந்தக் கருவி சலைன் பாட்டிலை திறக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. லேசாக மூடப்பட்ட சலைன் பாட்டிலை தேவைப்படும் போதெல்லாம் திறக்க அந்தக் கருவி அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலமாகவே திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெற்ற பத்து பேருக்கு பாக்டீரியா தொற்று பரவியுள்ளதாக ஆய்வு கூறுகிறது. இதில் 8 பேர் நோய் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டனர்.

எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

பல் மருத்துவ சிகிச்சைப் பெற்ற எட்டு பேர் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், 10 பேர் ஒரே வகையான பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக ஒரு பல் மருத்துவ கிளினிக்குக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்தது தெரிய வந்தது.

அனைவருக்குமே வாயின் ஒரு பகுதியில் மயக்க மருந்து கொடுத்து செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் அவசியப்பட்டுள்ளன. அந்த சிகிச்சைகளின்போது அவர்கள் அனைவருக்கும் அடிக்கடி சலைன் ஊற்ற வேண்டிய அவசியம் இருந்ததாக லான்செட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவ சிகிச்சைக்கும் பாக்டீரியா தொற்றின் அறிகுறிகள் தென்படுவதற்கும் இடையில் சராசரியாக எட்டு நாட்கள் இருந்துள்ளன.

உயிரிழப்புகள் ஏற்பட்டு மக்கள் போராட்டம் காரணமாக அந்த கிளினிக் சுத்திகரிக்கப்பட்டு, அதன் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டு, மூடப்பட்டு விட்டது. இதனால் கிளினிக்கில் சோதனை நடத்தி பல்வேறு மாதிரிகளைச் சேகரிப்பது சிரமமானது.

இருப்பினும் கிளினிக்கில் திறக்கப்பட்டிருந்த சலைன் பாட்டிலில் இருந்து கிடைத்த மாதிரியில் புர்கோல்டெரியா சூடோமலெய் எனும் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. திறக்கப்படாத சலைன் பாட்டில்கள் உள்பட மேலும் பல மாதிரிகள் அங்கிருந்து சோதனைக்காகச் சேகரிக்கப்பட்டன. அதில் திறக்கப்பட்ட பாட்டில்களில் மட்டும் இந்த பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது.

ஆய்வுக்கான காரணம் என்ன?

பல் மருத்துவ சிகிச்சைப் பெற்ற எட்டு பேர் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சித்தரிப்புப் படம்

திருமணமான ஒரு தம்பதி தீவிர காய்ச்சல் மற்றும் அதைத் தொடர்ந்து மூளைத்தண்டு (மூளையின் அடிப்பகுதியைக் குறிக்கும்) பாதிப்புகளுடன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நோய் தாக்குவதற்கு முன்பாக இருவருமே திருப்பத்தூரில் உள்ள ஒரு பல் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை பெற்றிருந்தது தெரிய வந்தது.

அதே நேரம் அந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்ற மேலும் சிலர் உயிரிழந்தது குறித்த செய்தி உள்ளூர் ஊடகங்களில் வெளியானது. அந்த கிளினிக்கில் பணியாற்றும் ஒரு மருத்துவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் காரணமாகவே உயிரிழந்ததாகக் கூறி எட்டு பேரின் பெயர்கள் அடங்கிய போஸ்டர்கள் உள்ளூரில் ஒட்டப்பட்டிருந்தன. திருப்பத்தூர் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் கே. மாரிமுத்து இந்த விவகாரம் குறித்து ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, 2023 மே 9ஆம் தேதி நியூரோமெலியோய்டோசிஸ் நோய் பாதிப்பு அதிகரிப்பது குறித்து சிஎம்சி மருத்துவமனை மாவட்ட சுகாதாரத் துறைக்கு தெரியப்படுத்தியது. இந்த நோய்ப் பரவலுக்கு முன்பாக சிஎம்சி மருத்துவமனையில் 2008 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 18 பேருக்கு மட்டுமே நியூரோமெலியோய்டோசிஸ் கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மே 13ஆம் தேதி மாவட்ட சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, இந்த நோய்ப் பரவல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து மருத்துவர்கள், பொது சுகாதார அதிகாரிகள் உள்படப் பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு தனது ஆய்வை தொடங்கியது. இதில் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), சிஎம்சி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து நிபுணர்கள் பங்கேற்றிருந்தனர்.

21 பேருக்கு பாதிப்பு

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 21 பேருக்கு நியூரோமெலியோய்டோசிஸ் பாதிக்கப்பட்டிருந்ததை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். அதில் பத்து பேர் குறிப்பிட்ட பல் மருத்துவ கிளினிக்கில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள். மீதமுள்ள 11 பேருக்கு தங்கள் சுற்றுபுறத்தில் இருந்து இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களிடையே உயிரிழப்பு 9 சதவிகிதமாக (11 பேரில் ஒருவர் உயிரிழப்பு) இருக்க, பல் மருத்துவ கிளினிக் சென்றவர்களில் உயிரிழப்பு 80 சதவிகிதமாக இருந்தது.

"சிகிச்சைகளின்போது வாயைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் சலைனில் பாக்டீரியா இருந்ததால் அது, ரத்தத்தில் கலக்காமல் நேரடியாக நரம்பு மண்டலத்தில் நுழைந்துள்ளதே" பத்தில் எட்டு பேர் உயிரிழந்ததற்கான காரணமாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 21 பேரில், 17 பேர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருவரும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் அதில் அடக்கம்.

பல் மருத்துவ கிளினிக் செல்லாதவர்களைவிட, அங்கு சென்றவர்களின் இறப்புகள் நோய்த் தொற்று ஏற்பட்டுக் குறைந்த நாட்களில் நடந்துள்ளன என்று ஆய்வு கூறுகிறது.

பல் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு அறிகுறிகள் தோன்றியது முதல் 16 நாட்களுக்குள் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. அதேநேரம், நோய் பாதிக்கப்பட்ட, பல் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களில் உயிரிழந்த ஒருவர் அறிகுறிகள் தென்பட்டு 56 நாட்கள் கழித்து மரணமடைந்துள்ளார்.

சுற்றுபுறத்தில் இருந்து பாக்டீரியா தொற்றுக்கு ஆளானவர்களில் தலை மற்றும் கழுத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவர்களுக்கு உமிழ்நீர் சுரப்பி, வாயின் உள் கன்னத்தில் உள்ள படலம், வெள்ளை அணு திசுக்களைக் கொண்ட நிணநீர் கணுக்கள் ஆகியவற்றில் வீக்கம் மற்றும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் பல் மருத்துவ கிளினிக் சென்றவர்களுக்கு நோய் வேகமாகப் பரவியதால் முகத்தின் தோல் மற்றும் திசுக்களில் பாதிப்பு, திசுக்களில் சீழ்கட்டி ஆகியவை ஏற்பட்டன.

பாதிக்கப்பட்ட 21 பேரில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள 12 பேர் ஆறு மாத காலம் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் எட்டு பேருக்குத் தீவிர உடல் ஊனம் உட்பட தீவிர நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்பட்டன.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டிஎஸ் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, "இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இப்போது கவலைப்பட ஒன்றுமில்லை. சுகாதாரத்துறை துரிதமாகப் பணியாற்றி நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்திவிட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அத்தகைய நோய்ப் பரவல் வேறு எங்கும் இதுவரை ஏற்படவில்லை" என்று தெரிவித்தார்.

நியூரோமெலியோய்டோசிஸ் என்பது என்ன?

பல் மருத்துவ சிகிச்சைப் பெற்ற எட்டு பேர் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூரோமெலியோய்டோசிஸ் என்பது மூளை, முதுகுத் தண்டு உள்ளிட்ட நரம்பு மண்டலத்தை பாதிக்கும் புர்கோல்டெரியா சூடோமலெய் எனும் பாக்டீரியாவால் ஏற்படும் தீவிர நோய்த்தொற்று. இந்த பாக்டீரியா பொதுவாக ரத்த ஓட்டத்தில் கலந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சில நேரங்களில் நரம்பு மண்டலத்தில் நுழைந்தும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், சர்க்கரை நோய், கல்லீரல், சிறுநீரக பாதிப்பு கொண்டவர்களுக்கு எளிதில் இந்தத் தொற்று ஏற்படலாம் என்றாலும் ஆரோக்கியமாக இருப்பவர்களையும் இந்த பாக்டீரியா பாதிக்கும்.

தலைவலி, காய்ச்சல் ஆகியவை ஆரம்பத்தில் தோன்றக்கூடிய அறிகுறிகள். உடலின் ஒருபுறம் தசை அயற்சி ஏற்படலாம், உடலின் சமநிலையை இழக்கக்கூடும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் அதைத் தொடர்ந்து பேச்சுக் குளறலும் முக நரம்புகள் பாதிப்பும், மூளைத் திசுக்கள் பாதிப்பும் உண்டாகும். சிலருக்கு உயிரிழப்பு ஏற்படலாம், சிலருக்கு நிரந்தர நரம்பு பாதிப்புகள் அது தொடர்பான உடல் ஊனம் அல்லது இயலாமை ஏற்படலாம்.

வாணியம்பாடி கிளினிக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆரம்பத்தில் முகத்தில் வலி ஏற்பட்டுள்ளது. அத்துடன் கிரேனியல் நரம்பு (மூளையை முகம், தலை, உடலுடன் இணைக்கும் நரம்புகள்) பாதிப்பு மற்றும் மூட்டு பலவீனம் கொண்டிருந்தனர்.

புர்கோல்டெரியா சூடோமலெய் எப்படிப் பரவும்?

பல் மருத்துவ சிகிச்சைப் பெற்ற எட்டு பேர் மூளை பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

புர்கோல்டெரியா சூடோமலெய் பொதுவாக மாசுபட்ட மண் மற்றும் தண்ணீரில் காணப்படும்.

காயங்கள், வெட்டுகளைக் கொண்ட மனித உடல் தோல் பாக்டீரியா கொண்ட மண் அல்லது தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது இந்த பாக்டீரியா உடலுக்குள் செல்லக் கூடும்.

பாக்டீரியா இருக்கும் தூசு அல்லது நீர்த் துளிகளைச் சுவாசிக்க நேரிட்டாலும் இந்த பாக்டீரியா உடலுக்குள் சென்றுவிடும்.

ஏதேனும் சூழலில் பாக்டீரியா கொண்ட நீரை அருந்தும்போதும் இது உடலுக்குள் செல்லும்.

மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பாக்டீரியா தொற்று பரவுவதற்கான வாயுப்பு மிகக் குறைவு.

சில நேரங்களில் தொற்றால் பாதிக்கப்பட்ட பாலூட்டும் தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய்ப் பாதிப்பு பரவலாம். இது மிக அரிதாகவே நிகழக்கூடியதுதான் என்றாலும், இந்த பாக்டீரியா பல ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. இது பல ஆண்டுகளுக்கு தண்ணீரில் உயிர் வாழும் திறனைக் கொண்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cp859646ljeo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.