Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்பாப்வே, யானைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜிம்பாப்வேயில் 84,000-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிரியா சிப்பி

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

யானைகளின் எண்ணிக்கை அதீதமாக உயர்ந்துவிட்டது என்று சொல்ல முடியுமா? ஜிம்பாப்வே அரசை பொருத்தவரை யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக யானைகளை கொல்ல அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.

விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நடைமுறை, அவற்றின் ஒரு பகுதியைக் 'கொல்லுதல்' ஆகும். அதாவது அதிகளவில் இருக்கும் விலங்குகளை, ஒரு குறிப்பிட்ட அளவில் அழிப்பதன் மூலம் அந்த விலங்கினத்தின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டில் (2024), இருநூறுக்கும் மேற்பட்ட யானைகளை கொல்ல அனுமதி கொடுத்ததற்காக ஜிம்பாப்வே அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது.

இப்படிப்பட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில், தெற்கு ஜிம்பாப்வேயில் உள்ள சேவ் பள்ளத்தாக்கு பாதுகாப்புப் பகுதியில் வசிக்கும் யானைகளில் குறைந்தது 50 யானைகளை கொல்லும் திட்டத்தை அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்தது.

யானைகளை கொல்லும் திட்டங்கள் ஏற்கனவே அமலில் இருப்பதாக தேசிய வனவிலங்கு ஆணையமான ஜிம்பார்க்ஸின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ கூறுகிறார்.

தேசிய பூங்காவில் தற்போது 2,550 யானைகள் உள்ளன, ஆனால் அங்கு 800 யானைகளை 'பராமரிக்கும் திறன்' மட்டுமே உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

யானைகளை கொன்று அதிலிருந்து கிடைக்கும் மாமிசம், உள்ளூர் மக்களின் உணவுக்காக கொடுக்கப்படும் என்றும், யானைத் தந்தங்கள் தேசிய பூங்காவின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"நமது வாழ்விடத்தைப் பாதுகாக்க, விலங்கு அதிகரிப்புப் பிரச்னையை நாம் சமாளிக்க வேண்டும்." என்று ஃபராவோ பிபிசியிடம் தெரிவித்தார்.

"அதீத அளவிலான யானைகள், தாங்கள் வாழும் வாழ்விடத்தையே அழித்துவிடுகின்றன. அது, யானைகளுக்கே ஆபத்தாக மாறி வருகிறது. இப்போது இருக்கும் பெருமளவிலான யானைகளின் எண்ணிக்கையை நமது சுற்றுச்சூழல் அமைப்பால் சமாளிக்க முடியாது," என்று அவர் கூறுகிறார்.

வடக்கு ஜிம்பாப்வேயின் ஹ்வாங்கேயில் உள்ள ஹ்வாங்கே தேசிய பூங்காவில் ஒரு யானை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜிம்பாப்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, யானைகளின் எண்ணிக்கையை குறைக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வருகிறது

'பாதுகாக்கும் அணுகுமுறையால் அரசு எதிர்கொள்ளும் விமர்சனம்'

ஜிம்பாப்வேயில் 1980களின் பிற்பகுதி வரை அமலில் இருந்த யானை அழிப்பு திட்டம் அதன்பிறகு 2024ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படவில்லை.

ஜிம்பாப்வேயில் அதிக அளவிலான யானைகள் உள்ளன. உலகில் அதிகளவிலான யானைகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே இரண்டாம் இடம் வகிக்கிறது. 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வான்வழி கணக்கெடுப்பின் அடிப்படையில், நாட்டில் 84,000க்கும் மேற்பட்ட யானைகள் இருந்ததாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

KAZA அமைப்பு 2022இல் நடத்திய யானை கணக்கெடுப்பு மற்றொரு எண்ணிக்கையை காட்டியது. அதன்படி, ஜிம்பாப்வேயில் சுமார் 65,000 யானைகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1,31,000-க்கும் அதிகமான யானைகளைக் கொண்ட போட்ஸ்வானா, உலகில் அதிகளவிலான யானைகள் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

யானையின் எண்ணிக்கையை குறைக்கும் புதிய திட்டங்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

"இது பாதுகாப்பிற்கான மிகவும் மோசமான அணுகுமுறை," என்று ஜிம்பாப்வேயை தளமாகக் கொண்ட இயற்கை வள நிர்வாக மையத்தின் இயக்குனர் ஃபராய் மகுவு கூறுகிறார்.

"யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வனவிலங்கு வழித்தடங்களை உருவாக்கி, அவை இயல்பான முறையில் வாழ்வதற்கான பிற பகுதிகளில் சுதந்திரமாக வாழவிடலாம்," என்று அவர் கூறுகிறார்.

"அதேபோல, யானைகள் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அவற்றை இடமாற்றம் செய்யலாம்."

யானைகளை இடமாற்றம் செய்வது செலவு அதிகம் பிடிக்கும் செயல்முறை என்றும், அது அதீத எண்ணிக்கை என்ற பிரச்னையை தீர்க்காது என்றும் ஜிம்பாப்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

"இடமாற்றம் என்பது அதிக செலவு பிடிக்கும் செயல்முறை. நம்மிடம் வளங்கள் குறைவாகவே உள்ளன. அத்துடன், ஜிம்பாப்வே ஒரு நாடாக பெரிய அளவில் வளராவிட்டாலும், விலங்குகள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கை மட்டும் மட்டற்ற அளவில் அதிகரித்து வருகிறது, இது வாழ்விடத்திற்கான போட்டியை உருவாக்குகிறது," என்று ஃபராவோ கூறுகிறார்.

ஆனால், யானைகளை இடமாற்றுவதும் வழக்கத்தில் இல்லாதது அல்ல.

பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் இடமாற்ற முயற்சிகளில் மிகப்பெரிய ஒன்றில், அண்மையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 70 வெள்ளை காண்டாமிருகங்கள் ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டன.

இந்த முயற்சி வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும், இனப்பெருக்கம் செய்ய புதிய இடம் ஒன்றை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

விலங்குகளின் அதிக எண்ணிக்கை, நீர் மற்றும் உணவு போன்ற வளங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், யானைகளை கொல்வது என்பது மனிதர்கள்-வனவிலங்கு மோதலை மோசமாக்கும் என்று மகுவு எச்சரிக்கிறார்.

தென்னாப்பிரிக்கா, வெள்ளை காண்டாமிருகங்கள், ருவாண்டா,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அண்மையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து 70 வெள்ளை காண்டாமிருகங்கள் ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டன

"யானைகள் மிகவும் புத்திசாலியானவை மற்றும் உணர்ச்சிபூர்வமான உயிரினம்," என்று அவர் கூறுகிறார்.

"ஒரு யானையைக் கொன்றால், பிற யானைகள் வழக்கமாக தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடரும் என்று நினைக்காதீர்கள், தங்களுடன் இருந்த சக உயிரினங்களின் இழப்பால் அவை பெரும் துக்கத்திற்கு ஆளாகின்றன. யானைகளின் துக்கத்தின் எதிரொலியை அருகிலுள்ள சமூகங்கள் மூர்க்கமாக எதிர்கொள்ள நேரிடும்" என அவர் எச்சரிக்கிறார்.

அண்டை நாடான நமீபியாவிலும் யானைகளை கொல்லும் நடைமுறை வழக்கில் உள்ளது.

மேய்ச்சல் நிலங்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் தாக்கங்களை குறைக்கவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கவும், யானைகள் உட்பட 700க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை கடந்த ஆண்டில் நமீபியா அரசாங்கம் கொன்றது.

யானைகளை கொல்வது என்பது "வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத 'யானை தந்தங்களின்' வர்த்தகத்தை மீண்டும் தூண்டும்" என்று வோர்ல்ட் அனிமல் ப்ரொடெக்‌ஷன் போன்ற விலங்கு உரிமை அமைப்புகள் முன்னெச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

அதே நேரத்தில் விலங்குகளை துன்புறுத்துவதை எதிர்க்கும் பீட்டா (PETA) அமைப்பு, இத்தகைய நடைமுறைகளை "கொடூரமானது" மற்றும் "ஆபத்தான, குறுகிய பார்வை கொண்டது" என்று விவரித்துள்ளது.

வேறு எங்கு யானைகளை கொல்லும் போக்கு இருக்கிறது?

நோய்கள் பரவுவதைத் தடுக்க விலங்குகள் கொல்லப்படும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

பிரிட்டனில் போவைன் காசநோயின் பரவலைத் தடுக்கும் வகையில், ஒரு தசாப்தத்தில் 230,000க்கும் மேற்பட்ட வளைக்கரடிகள் (badgers), 278,000 க்கும் மேற்பட்ட பல்வேறு கால்நடைகள் கொல்லப்பட்டன.

இருப்பினும் இந்த விலங்குகள் கொல்லப்படுவது, 2029ஆம் ஆண்டில் நிறுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்தது. இதற்கு பதிலாக வளைக்கரடிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.

2020ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில், ஸ்பெயினில் ஒரு பண்ணையில் இருந்த பல விலங்குகளுக்கு தொற்று பாதித்ததை அடுத்து, கிட்டத்தட்ட 1,00,000 மிங்க் எனும் கீரிகளைக் கொல்ல ஸ்பெயின் உத்தரவிட்டது.

இதற்கிடையில், டென்மார்க்கில், கொரோனா வைரஸ் பாதித்த லட்சக்கணக்கான மிங்க் கீரிகளைக் கொல்லும் திட்டத்திற்கு அரசியல் ரீதியிலும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன.

ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு மாகாணமும் எவ்வளவு கங்காருக்களை கொல்லலாம் என்பதற்கான 'எண்ணிக்கை' அளவு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நிலத்தைப் பாதுகாக்கவும் வறட்சியின் போது வெகுஜன இறப்பு அபாயத்தைக் குறைக்கவும் விலங்குகளை அழித்தல் அவசியம் என்று அரசாங்கம் கூறுகிறது.

விலங்குகளை அழித்தல் திட்டத்தை தேர்ந்தெடுப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்று சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

"கொலை செய்வது என்பது மிகவும் வெறுப்பூட்டும் விஷயமாக தோன்றினாலும், அதனை முற்றிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளும் ஏற்படுவதை நாங்கள் அறிவோம்," என்று சூழலியல் நிபுணரும் எழுத்தாளருமான ஹக் வார்விக் கூறுகிறார்.

"தற்செயலாகவோ அல்லது வேண்டுமென்றோ விலங்குகளை தீவுகளில் மனிதர்கள் விட்டுவிட்டதால், இது அந்த இடத்தின் சூழலை மிக அதிகமாக மாற்றி, அங்குள்ள உள்ளூர் விலங்குகள் வாழ முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.''

தெற்கு ஜார்ஜியாவின் தொலைதூர தீவில் எலிகளை ஒழிக்கும் ஒரு திட்டத்தை வார்விக் மேற்கோள் காட்டுகிறார், அங்கு விடப்பட்ட எலிகள் உள்ளூர் விலங்குகளை அழித்துவிட்டன.

"இந்த முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது, இது தார்மீக ரீதியாக நியாயமானது என்றும் தோன்றுகிறது," என்று அவர் கூறுகிறார்.

எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு விலங்குகளின் பாதுகாப்பை அளவிடுவதைவிட, ஒரு சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் அவை செழித்து வளரும் திறனால் அளவிட வேண்டும் என்று வார்விக் கருதுகிறார்.

"ஜிம்பாப்வேயில், 'விலங்கு அழிப்பு' திட்டம் வெற்றி பெறலாம், ஆனால் போதுமான வாழ்விடங்கள் இல்லாததால் யானைகள் தங்கள் வாழ்க்கைப் போரில் தோற்றுப் போகின்றன."

இங்கிலாந்து, வனவிலங்கு உரிமைகள், வனவிலங்கு அதிகாரிகள் பேட்ஜர்கள் அழிப்பு, விலங்குகளுக்குத் தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரிட்டனின் சில பகுதிகளில், வனவிலங்கு அதிகாரிகள் வளைக்கரடிகளை அழிப்பதற்குப் பதிலாக தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளனர்

வேறு ஏதேனும் விருப்பத்தெரிவுகள் உள்ளனவா?

யானைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, தென்னாப்பிரிக்கா பிறப்பு கட்டுப்பாட்டு திட்டம் ஒன்றை ஒரு தசாப்தத்திற்கு முன்பு தொடங்கியது. கருத்தடை மருந்துகளை காற்றின் மூலமாக யானைகளின் மீது பாய்ச்சும் முறையாகும்.

தாய்லாந்தில் மனிதர்கள்-யானைகள் மோதல் அதிகரித்து இருக்கும் நிலையில், காட்டுப் யானைகளில் பெண் யானைகளுக்கு பிறப்பு கட்டுப்பாட்டைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்த ஆண்டு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நோயுற்ற விலங்குகள், மனிதர்கள் அல்லது பிற விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக மாறும் நிலையில், இதே போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் வார்விக் சுட்டிக்காட்டுகிறார்.

"பிரிட்டனில் பூர்வீக சிவப்பு அணில்கள் மற்றும் இடம்பெயர்ந்து வந்த சாம்பல் அணில்களுக்கும் இடையிலான பிரச்னையை, விலங்கு பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களில் ஒன்றாக சொல்லலாம். சிவப்பு அணில்களைக் கொல்லும் ஒரு நோய், சாம்பல் அணில்களிடம் உள்ளது," என்று அவர் கூறுகிறார்.

"சிவப்பு அணில்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது அல்லது சாம்பல் அணில்களுக்கு கருத்தடை முறைகளைக் கண்டுபிடிப்பது ஒரு உத்தியாக இருக்கலாம்" என்று அவர் கூறுகிறார்.

பாதுகாப்புப் பிரச்னைகள் மிகவும் சிக்கலானவை என்றும், கொலை செய்வது பெரும்பாலும் விரைவான மற்றும் எளிமையான தீர்வாகக் கருதப்படுகிறது என்றும் வார்விக் கூறுகிறார்.

"இந்த சிக்கலுக்கு மாற்று வழிகளைக் காண்பதே முதல் தெரிவாக இருக்கவேண்டும். இடமாற்றம் அல்லது சமூக மேலாண்மை தொடர்பானதாக இருந்தாலும் மாற்று வழிகள்தான் சிறந்தது, விலங்குகளை அழிப்பது கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்."

யானைகளுக்கு பிறப்பு கட்டுப்பாட்டு செய்வது குறித்து ஜிம்பாப்வே அரசின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம்.

"ஒரு பூங்காவிலோ சிறிய இடத்திலோ பிறப்புக் கட்டுப்பாடு முயற்சிகள் சாத்தியப்படலாம், ஆனால் பல்லாயிரக்கணக்கான யானைகளைக் கொண்ட மாபெரும் இடத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அங்கு பிறப்பு கட்டுப்பாடு முறைகளை நிர்வகிப்பது கடினம்" என்று ஃபராவோ பதிலளிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2len1pyr11o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.