Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-23.jpg?resize=750%2C375&ssl=

60 நாள் காசா போர் நிறுத்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புதல்!

தேவையான நிபந்தனைகளின் அடிப்படையில் காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார்.

மேலும், நிலைமைகள் மோசமடைவதற்கு முன்பு இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அடுத்த வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க தயாராகி வரும் நிலையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக இப்பகுதியை பேரழிவிற்கு உட்படுத்திய தற்போதைய மோதலில் ஒரு திருப்புமுனையாகும்.

இது குறித்து ட்ரூத் சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,

எனது பிரதிநிதிகள் இன்று (செவ்வாயன்று) காசா போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலியர்களுடன் நீண்ட மற்றும் பயனுள்ள சந்திப்பை நடத்தினர்.

இதன்போது 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

அந்த நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவோம்.

சமாதானத்தை ஏற்படுத்த கடுமையாக உழைத்த கட்டார் மற்றும் எகிப்தியர்கள் இந்த இறுதி திட்டத்தை நிறைவேற்றுவார்கள்.

இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஒப்பந்தம் இல்லையென்றால் நிலமை மோசமடையும் என்றார்.

டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு, ஜனவரி 19 அன்று தொடங்கிய முந்தைய போர் நிறுத்தம் மார்ச் வரை நீடித்தது.

ஹமாஸ் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டி, இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியபோது விரோதப் போக்கு மீண்டும் தொடங்கியது.

அப்போதிருந்து, பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலின் மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் உயர் மட்ட விவாதங்களுக்காக வொஷிங்டனில் உள்ளார்.

அவரது நிகழ்ச்சி நிரலில் காஸா போர் நிறுத்தம், ஈரான் மற்றும் பிற பிராந்திய பிரச்சினைகள் அடங்கும்.

டெர்மர், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

இதற்கிடையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக ட்ரம்ப் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்ரேலிய அறிக்கைகளின்படி, 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான போராளிகள் எல்லை தாண்டிய ஒரு கொடிய தாக்குதலை நடத்தியபோது போர் வெடித்தது.

அதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

அப்போதிருந்து, இஸ்ரேலின் இராணுவ பதில் காசாவிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437824

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் 60 நாள் யுத்தநிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது - டிரம்ப்

02 JUL, 2025 | 10:21 AM

image

இஸ்ரேல் 60 நாள் யுத்த நிறுத்தத்திற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உத்தேச யுத்த நிறுத்த காலத்தில் நாங்கள் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக மிகவும் கடுமையாக பாடுபட்ட எகிப்தும் கத்தாரும் இந்த யுத்த நிறுத்த யோசனையை ஹமாசிடம் கையளிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளும் என நான் எதிர்பார்க்கின்றேன் இல்லாவிட்டால்  நிலைமை மேலும் மோசமடையும் என டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் முற்றிலும் தயாராகவுள்ளது என ஐக்கியநாடுகளிற்கான இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இந்த யுத்தநிறுத்த யோசனையை ஏற்றுக்கொள்ளுமா என்பது தெளிவாக தெரியவில்லை.

இஸ்ரேலிய பிரதமர் காசாவில் மோதல்களை முடிவிற்கு கொண்டுவர முயல்கின்றார் என தெரிவித்துள்ள டிரம்ப் இது தொடர்பில் அடுத்த வாரம் உடன்பாடு ஏற்படலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/218991

  • கருத்துக்கள உறவுகள்

"காஸாவில் போர் நிறுத்தம்" - இஸ்ரேல் ஏற்றுக் கொண்டதாக டிரம்ப் அறிவிப்பு

காஸா, இஸ்ரேல், பாலத்தீன், டிரம்ப், போர்நிறுத்தம்

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்

  • ஜேம்ஸ் சேட்டர்

  • பிபிசி நியூஸ்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில் 60 நாள் போர்நிறுத்தம் செய்வதற்கான "அவசியமான நிபந்தனைகளுக்கு" இஸ்ரேல் ஒப்புக்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தின் போது, "போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் வேலை செய்வோம்", என ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் டிரம்ப் தெரிவித்தார்.

"அமைதியை கொண்டு வர மிகக் கடுமையாக பணியாற்றிய கத்தார் மற்றும் எகிப்தியர்கள் இறுதி முன்மொழிவை தருவார்கள். ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன், ஏனென்றால் இது இதைவிட சிறந்ததாக மாறாது, இதைவிட மோசமானதாகத்தான் மாறும்," என டிரம்ப் தனது பதிவில் கூறியிருக்கிறார்.

இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் உறுதி செய்யவில்லை, அதே நேரம் ஹமாஸிடமிருந்தும் எந்த உடனடியான கருத்தும் இல்லை.

காஸா, இஸ்ரேல், பாலத்தீன், டிரம்ப், போர்நிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பினருடனும் வேலை செய்வோம் என டிரம்ப் தெரிவித்தார்.

இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார் 'பணயக் கைதிகளை மீட்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கு' அரசாங்கத்தில் பெரும்பான்மை உள்ளது மற்றும் இந்த வாய்ப்பு தவறவிடப்படக்கூடாது என எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அடுத்த வாரம் சந்திக்கவிருக்கும் நிலையில் டிரம்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் "மிகவும் உறுதியாக நடந்துகொள்வேன்" என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

காஸாவில் போரை முடிவுக்கு கொண்டு வர நெத்தன்யாகு விரும்புகிறார் என தாம் நம்புவதாக டிரம்ப் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

"போரை நிறுத்த அவர் விரும்புகிறார் என என்னால் சொல்ல முடியும். அடுத்த வாரம் ஒரு ஒப்பந்தம் இருக்கும் என நான் நினைக்கிறேன், " என டிரம்ப் மேலும் கூறினார்.

இஸ்ரேலின் மூலோபாய விவகாரங்கள் அமைச்சர் ரான் டெர்மர் மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோரை வாஷிங்டனில் சந்திக்கவிருக்கிறார்.

காஸா, இஸ்ரேல், பாலத்தீன், டிரம்ப், போர்நிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனான் போர்நிறுத்தம் செய்ய இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

முன்னதாக ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனி டேனான் போர்நிறுத்தம் செய்ய இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

பிபிசி செய்தி சேனலில் பேசிய டேனான், ஹமாஸ் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக கூறினார்.

"நாங்கள் ஹமாஸ் மீது அழுத்தம் தருகிறோம், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், பணயக்கைதிகளை திரும்ப கொண்டுவர எங்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு கூடுதலாக ராணுவ அழுத்தத்தை தருவதுதான்," என்றார் டேனன்.

"பணயக்கைதிகள் வீடு திரும்பியதும் போர் முடிவுக்கு வரும்," என அவர் மேலும் கூறினார்.

காஸாவில் இன்னமும் சுமார் 50 பணயக்கைதிகள் இருக்கின்றனர், இவர்களில் குறைந்தது 20 பேர் உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது.

காஸாவில் புதிய போர்நிறுத்தம் ஏற்படுத்தவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் மத்தியஸ்தர்கள் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனஎர். ஆனால் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையாக இருப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கடந்த வாரம் தெரிவித்தார்.

ஹமாஸ் முழுமையாக அழிக்கப்பட்ட பின்னர்தான் போர் முடிவுக்கு வரமுடியும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நிரந்தர போர்நிறுத்தமும், காஸாவிலிருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேறவேண்டும் என்பதையும் ஹமாஸ் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க வடக்கு காஸாவில் மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவிட்ட பின்னர் டிரம்பின் கருத்துகள் வெளிவந்துள்ளன. திங்கட்கிழமை காஸா நகரில் கடற்கரையை நோக்கி அமைந்துள்ள ஒரு உணவகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், நேரடிச் சாட்சிகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கூற்றுப்படி குறைந்தது 20 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் 2023 அக்டோபர் 7ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுமார் 1200 பேர் கொல்லப்பட்ட பின்னர் இஸ்ரேல் காஸா மீதான தாக்குதலைத் தொடங்கியது. அந்த பகுதியில் ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி அப்போதிலிருந்து காஸாவில் குறைந்தது 56,647 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸா, இஸ்ரேல், பாலத்தீன், டிரம்ப், போர்நிறுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நிவாரண முகாமில் உணவு பெற காத்திருக்கும் மக்கள்

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற காஸா மனிதாபிமான அறக்கட்டளை (Gaza Humanitarian Foundation - GHF) காஸாவில் நடத்தும் உதவி விநியோக மையங்களை அணுகும் பொதுமக்கள் "பாதிக்கப்பட்டதாக" வெளியான தகவல்களை ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் இந்த வாரம் தெரிவித்தது.

ஜூன் 28 வரை ஜிஹச்எஃப் முகாம்களுக்கு நிவாரணம் பெறச் செல்ல முயன்று 408 போர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

170-க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளும் பிற அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் சர்ச்சைக்குரிய இந்தக் குழு மூடப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன. உதவி தேடி வரும் பாலத்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் "வழக்கமாக" துப்பாக்கிச்சூடு நடத்துவதாக ஆக்ஸ்ஃபேம் (Oxfam), சேவ் த சில்ரன் (Save the Children) போன்ற அமைப்புகள் சொல்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் இஸ்ரேல், உதவி விநியோகத்தில் ஹமாஸின் தலையீட்டை தவிர்க்க இந்த அமைப்பு தேவையானது எனக் கூறுகிறது.

மார்ச் மாதத்தில், இஸ்ரேல் காஸாவின் மீது புதிய தாக்குதல்களை தொடுத்தபோது முந்தைய போர்நிறுத்தம் தோல்வியடைந்தது. " பயங்கரவாத தாக்குதல்களை நிறைவேற்றவும், படைகளை திரட்டவும், மீண்டும் ஆயுதமேந்தவும் ஹமாஸின் தயார்நிலையை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட முன்கூட்டிய தாக்குதல்கள்" என்று இந்த நடவடிக்கையை இஸ்ரேலிய ராணுவம் விவரித்தது.

ஜனவரி 19ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட முந்தைய சண்டைநிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டமாக செயல்படுத்தப்படவிருந்தது, ஆனால் முதல் கட்டத்தைக் கூட தாண்டவில்லை.

நிரந்தர போர்நிறுத்தம், காஸாவில் உயிரோடு இருக்கும் பணயக்கைதிகளை, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீனர்களுக்கு மாற்றிக்கொள்வது, இஸ்ரேல் படைகள் காஸாவில் இருந்து முழுமையாக வெளியேறுவது ஆகிய சண்டை நிறுத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் இடம் பெற்றிருந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg5dyjgdx6o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.