போரில் டிரம்புக்கு துணை நிற்க அமெரிக்க கூட்டாளிகள் ஏன் முன்வரவில்லை?
பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
பால் ஆடம்ஸ்
பிபிசி
2 மணி நேரங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தமது இரு பதவிக்காலத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளை விமர்சிப்பதற்கோ ஏன் தாக்குவதற்கோ கூட தயங்கியதில்லை.
ஆனால், ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் தோல்வியடைவது "நேட்டோவின் எதிர்காலத்திற்கு மிகவும் மோசமானதாக இருக்கும்" என்ற அவரது சமீபத்திய கருத்து, அந்த கூட்டணியின் நோக்கம் குறித்து அவர் கொண்டுள்ள புரிதல் ஏற்கெனவே பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
"நேட்டோ ஒரு... தற்காப்புக் கூட்டணியாக உருவாக்கப்பட்டது," என்று பிரிட்டன் ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் திங்களன்று பிபிசியிடம் தெரிவித்தார்.
"ஒரு கூட்டாளி நாடு தனது விருப்பப்படி ஒரு போருக்குச் சென்றுவிட்டு, மற்ற அனைவரும் அதைப் பின்தொடர வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் வகையில் இந்தக் கூட்டணி வடிவமைக்கப்படவில்லை," என்று அவர் கூறினார்.
"நாம் சேர விரும்பிய நேட்டோ இதுதானா என்பதில் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை".
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நேட்டோ உறுப்பினரான ஒரு நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட கிரீன்லாந்து பகுதிக்கு உரிமை கோரிய ஓர் அதிபரிடமிருந்து வந்துள்ள இந்த சமீபத்திய கருத்துக்களில் ஒரு சிறிய முரண் இருக்கிறது.
பட மூலாதாரம்,Getty Images
டிரம்புக்கு நேரடி மறுப்பு
சில பதில்கள் மிகவும் நேரடியாக இருந்ததற்கு இது ஒருவேளை காரணமாக இருக்கலாம்.
ஜெர்மனியில், அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர், இரான் உடனான போருக்கும் "நேட்டோவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.
அதே நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், ஐரோப்பாவின் கடற்படைகள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தை ஏளனம் செய்வது போலத் தெரிந்தது.
"வலிமைமிக்க அமெரிக்கக் கடற்படையால் செய்ய முடியாத எதை ஒரு சில ஐரோப்பியப் போர்க்கப்பல்களிடமிருந்து டிரம்ப் எதிர்பார்க்கிறார்?" என்று அவர் கேட்டார்.
"இது எங்களது போர் அல்ல. இதை நாங்கள் தொடங்கவில்லை".
ஆனால், இவை எதுவும் வளைகுடா நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண வேண்டிய அவசரமான மற்றும் வளர்ந்து வரும் தேவையை மறைக்கக்கூடாது.
இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளுக்கு செல்லும் ஒரு சில கப்பல்களைத் தவிர, ஹோர்மூஸ் நீரிணையை இரான் திறம்பட தடுத்து நிறுத்தியுள்ளது.
இது மேற்கத்திய நாடுகளின் அரசுகளை ஒரு தீர்வைத் தேட வைத்துள்ளது.
இது டிரம்ப் போருக்குச் செல்ல எடுத்த முடிவால் தூண்டப்பட்ட நெருக்கடியாக இருக்கலாம், ஆனால் உலகப் பொருளாதாரத்தின் மீதான பாதிப்புகள் மோசமடைவதற்கு முன்பு இதை விரைவாகச் சரிசெய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
ஆனால் இதற்கு விரைவான தீர்வு இல்லை என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது.
திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் வளைகுடா கூட்டாளிகளுடன் ஒரு "நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டத்தை" உருவாக்குவதற்கான உரையாடல்கள் நடந்து வருகின்றன என்றும், ஆனால் நாம் இன்னும் "முடிவெடுக்கும் கட்டத்தை எட்டவில்லை" என்றும் கூறினார்.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, நேட்டோ கூட்டாளிகளுடனான அமெரிக்காவின் உறவுகள் அதிகம் விரிசலடைந்துள்ளன.
தானியங்கி கண்ணி வெடி கண்டுபிடிக்கும் அமைப்புகள் ஏற்கனவே அந்தப் பகுதியில் இருப்பதாக பிரதமர் கியர் ஸ்டார்மர் குறிப்பிட்டார்.
கண்ணிவெடி எதிர்ப்பு நடவடிக்கைக் கப்பலான ஹெச்எம்எஸ் மிடில்டன் பெரிய அளவிலான பராமரிப்புக்காக பிரிட்டன் திரும்பிய நிலையில், பல தசாப்தங்களில் முதல் முறையாக அந்தப் பகுதியில் பிரிட்டிஷ் கண்ணிவெடி அகற்றும் கப்பல் எதுவும் இல்லை.
அதற்கு பதிலாக, ராயல் நேவி (பிரிட்டன் கடற்படை) புதிதாக உருவாக்கப்பட்ட டிரோன்களை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இவை ஊழியர்களை ஆபத்தில் சிக்க வைக்காமல் கண்ணிவெடிகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து கடற்படைகளின் முக்கியப் பணியாக இருந்த கண்ணிவெடிகளை அகற்றுவது, நீண்ட காலத்திற்கு முன்பே முன்னுரிமைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.
ராயல் நேவி முன்னாள் கமாண்டர் டாம் ஷார்ப், சமீபத்திய பிரிட்டிஷ் தொழில்நுட்பங்கள் இன்னும் போர்க்களத்தில் சோதிக்கப்படவில்லை என்றார்.
"அது வேலை செய்கிறதா இல்லையா என்பது அடுத்த சில வாரங்களில் நமக்குத் தெரிந்துவிடும்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
மேற்கத்திய நாடுகள் கடைசியாக ஒரு பெரிய கடல்வழி கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது 1991-இல் என்று ஜெனரல் கார்ட்டர் கூறினார். முதல் வளைகுடா போரின்போது இராக் குவைத் கடற்கரை அருகே கண்ணிவெடிகளை வைத்திருந்தது.
"அந்த கண்ணிவெடிகளை அகற்ற எங்களுக்கு ஐம்பத்தொரு நாட்கள் ஆனது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
"எந்தவொரு கடற்படையும் இதற்குத் தேவையான அளவில் முதலீடு செய்யவில்லை, குறிப்பாக அமெரிக்கர்கள் இதில் மிகவும் பின்தங்கியுள்ளனர்".
அமெரிக்கக் கடற்படையின் சொந்த அவெஞ்சர்-கிளாஸ் சிறப்பு கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் அனைத்தும் சேவையிலிருந்து விலக்கப்படுகின்றன. இவற்றுக்குப் பதிலாக, பல்வேறு ஆளில்லா அமைப்புகளைப் பயன்படுத்தும் இண்டிபெண்டன்ஸ்-கிளாஸ் கப்பல்களை பயன்படுத்தப்படுகின்றன
பட மூலாதாரம்,Getty Images
இரானுக்கு உள்ள வேறு வழிகள்
ஆனால் இது கண்ணிவெடிகளை அகற்றுவது பற்றியது மட்டுமல்ல. இரான் புரட்சிகர காவல் படை ஆயுதம் ஏந்திய வேகப்படகுகள், கடற்படை "தற்கொலை" டிரோன்கள் மற்றும் கடற்கரை ஏவுகணைகள் மூலம் கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் திறன் கொண்டது.
இரான் செய்தி நிறுவனமான 'ஃபார்ஸ்' வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள், நிலத்தடி சுரங்கங்களில் அதிக எண்ணிக்கையிலான படகுகள் மற்றும் டிரோன்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டின.
இது இரான் நீண்டகாலமாக இத்தகைய ஒரு தருணத்திற்காகத் தயாராகி வருவதைப் காட்டுகிறது.
ஹோர்மூஸ் நீரிணை திறப்பது சிறிய வேலை என கூறும் டிரம்ப், அதை செய்வதற்கு இரான் கடற்கரைகளில் தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும் என கூறினார்.
"கடற்கரையில் இருக்கும் சில மோசமான நபர்களைத் தட்டி வைப்பவர்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்," என்று அவர் கூறினார்.
அமெரிக்கா ஏற்கனவே இரான் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை இலக்கு வைத்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் கூட்டாளிகள் பலர் இதைப் பின்பற்றுவதற்கு குறிப்பாக இது தரைப்படையை ஈடுபடுத்துவதை உள்ளடக்கியதாக இருந்தால் தயாராக இருப்பார்களா என்பது கடினம்.
இவ்வளவு சாத்தியமான ஆபத்துகள் நிறைந்த சூழலில், நாடுகள் இதில் ஈடுபடத் தயங்குவதில் ஆச்சரியமில்லை. அதற்குப் பதிலாக பிரிட்டன் அரசு கூறுவது போல, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கான உறுதியான வழியாக 'பதற்றத்தைக் குறைப்பதை' அவர்கள் விரும்புகின்றனர்.
ஆனால் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னும் சில வாரங்களுக்கு இந்த நடவடிக்கை நீடிக்கக்கூடும் என்று கூறி வருவதால், அது உடனடியாக நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
திட்டம் இல்லை
இதற்கிடையில், இந்த முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க கூட்டாளிகளைச் சம்மதிக்க வைக்க முடியுமா?
"ஹோர்மூஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் ஜெர்மனி தனது ராணுவத்துடன் பங்கேற்காது," என்று பிஸ்டோரியஸ் திங்களன்று கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில், மத்திய கிழக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை நடவடிக்கைகளை விரிவுபடுத்த "தெளிவான விருப்பம்" உள்ளது என்று கூறினார்.
ஆனால் செங்கடலில் தற்போதுள்ள கடற்படைப் பணியை விரிவுபடுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் மறுத்துவிட்டனர். "இது ஐரோப்பாவின் போர் அல்ல," என்று அவர் மேலும் கூறினார்.
ஏமனில் இரான் ஆதரவு ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க 2024-இல் 'ஆப்பரேஷன் அஸ்பைடெஸ்' தொடங்கப்பட்டது. ஆனால் இது வெறும் மூன்று போர்க்கப்பல்களை மட்டுமே கொண்ட மிகச்சிறிய முயற்சியாகும்.
பட மூலாதாரம்,Getty Images
ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வேடேபுல், புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கு முன், "இரான் மீதான தங்கள் ராணுவ இலக்குகளை எப்போது அடைவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்பதை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
முக்கிய ஐரோப்பிய கூட்டாளிகளில், பிரான்ஸ் அதிபர் மக்ரோங் இதில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாக அவர் ஒரு வாரத்திற்கு முன்பு கூறினார்.
ஆனால் மோதலின் "மிகவும் தீவிரமான கட்டம்" முடிந்த பின்னரே இது சாத்தியமாகும் என்று அவர் கூறினார். சில நாட்களுக்குப் பிறகு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கேத்தரின் வௌட்ரின், ஹோர்மூஸ் நீரிணைக்கு கப்பல்களை அனுப்பும் உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை என்றார்.
ஒரு பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது ஆப்ரேஷன் அஸ்பைடெஸை விட மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று ஷார்ப் கூறினார். ஏனெனில் அச்சுறுத்தல்கள் வான்வழி, மேற்பரப்பு மற்றும் நீருக்கடியில் என மூன்று திசைகளிலிருந்தும் வருகின்றன.
"ஹூத்திகளைப் போல வான்வழி அச்சுறுத்தல் மட்டுமே இங்கில்லை. இரான் விஷயத்தில் மூன்று அச்சுறுத்தல்களும் உள்ளன, அவை ஏவப்படுவதற்கு முன்பே நீங்கள் அவற்றைச் சுட வேண்டும். அது எப்போதும் சாத்தியமில்லை," என்று அவர் கூறினார்.
தற்போது, டிரம்ப்பின் சற்றே அதிர்ச்சியடைந்த கூட்டாளிகள் "இரானில் ஈடுபாடு" என்று பெயரிடப்பட்ட கதவுக்கு வெளியே தயக்கத்துடன் நின்று ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஒரு தீர்வாகாது என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.
இந்தத் தீர்வு "முடிந்தவரை பல கூட்டாளிகளை" உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கூறினார். ஆனால் ஆபத்தான பணியில் ஈடுபடுவதற்கு முன்பு பிரிட்டன் ராணுவ வீரர்களுக்கு முக்கியமான உறுதிமொழிகள் தேவைப்படுகின்றன.
"குறைந்தபட்சம், ஒரு சட்டபூர்வமான அடிப்படையிலும், சரியான முறையில் சிந்தித்து வகுக்கப்பட்ட திட்டத்துடன்தான் செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது ".
தற்போதைய நிலையில், அத்தகைய ஒரு திட்டம் நடைமுறையில் இல்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/czx49znzgrdo
By
ஏராளன் ·