Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

4 மணி நேரங்களுக்கு முன்னர்

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான மாரீசன் திரைப்படம் இன்று (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வடிவேலு, ஃபகத் ஃபாசில், கோவை சரளா, லிவிங்ஸ்டன், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

'மாமன்னன்' படத்தில் எதிரும் புதிருமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில், இந்தப் படத்தில் இணக்கமாக இருப்பது போன்ற காட்சிகளைக் கண்ட ரசிகர்களுக்கு படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இருவரும் தங்களுக்குக் கிடைக்கும் கதாபாத்திரங்களை கச்சிதமாக கையாளக் கூடியவர்கள் என்பதும் எதிர்பார்ப்புக்கான மற்றொரு காரணம்.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள மாரீசன் திரைப்படம் அதைப் பூர்த்தி செய்துள்ளதா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?

மாரீசன் திரைப்படத்தின் கதை என்ன?

படத்தின் கதை கன்னியாகுமரியில் தொடங்குகிறது. பிரபல திருடன் தயா (ஃபகத் ஃபாசில்) கண்ணில் சிக்குவதை எல்லாம் கொள்ளையடிக்கிறார்.

ஒரு நாள் ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்கச் சென்றபோது கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த வேலாயுதத்தை (வடிவேலு) சந்திக்கிறார். தன்னை விடுவித்தால் பணம் தருவதாகக் கூறுகிறார் வேலாயுதம்.

வேலாயுதத்தை விடுவித்த பிறகு, அவர் ஞாபக மறதி நோயால் (Alzheimer) பாதிக்கப்பட்டு இருப்பதையும், அவரது வங்கிக் கணக்கில் 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பதையும் தயா தெரிந்துகொள்கிறார்.

அதைத் திருடுவதற்குத் திட்டமிட்டு, வேலாயுதத்திற்கு உதவுவது போல முன்வரும் தயா, தனது இருசக்கர வாகனத்திலேயே திருவண்ணாமலைக்கு அழைத்துச் செல்கிறார்.

இவர்களுடைய பயணத்தின்போது என்ன நடந்தது, இறுதியாக தயா பணத்தை திருடினாரா என்பதுதான் படத்தின் மீதி கதை.

மாரீசன் திரைப்படம் எப்படி இருக்கிறது?

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

"இயக்குநர் சுதிஷ் சங்கருக்கு காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும், கதாபாத்திரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற சினிமா உத்தி நன்றாகத் தெரிந்திருப்பதால் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை படம் எங்குமே சலிப்பின்றிச் செல்கிறது" என தினமணி தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது.

"ஏற்கெனவே பல படங்களில் அலசியிருந்தாலும், முக்கியமான சமூகப் பிரச்னையை புதிய பாணியில் சொல்லி கவனம் இயக்குநர் ஈர்த்துள்ளார்" எனவும் அந்த விமர்சனம் புகழாரம் சூட்டியுள்ளது.

ஆனால், "படத்தின் ப்ரோமோவை பார்த்துவிட்டு, இது 'மெய்யழகன்' படத்தைப் போல இருவருக்கு இடையே நடப்பவை குறித்த கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முதல் பாதியில் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தபோதிலும், இரண்டாம் பாதி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை," என தி இந்து ஆங்கில நாளிதழ் விமர்சித்துள்ளது.

இந்தியா டுடே விமர்சனத்தின்படி, காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள மாரீசன், நிச்சயம் சிரிக்க வைக்கும். அதோடு, "படத்தில் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு சுவாரஸ்யங்களும் இருக்கின்றன."

வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பு எப்படி?

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

"இந்திய அளவில் சிறந்த நடிகர்களாக விளங்கும் வடிவேலுவும், ஃபகத் ஃபாசிலும் இப்படத்தில் வழக்கமான தங்கள் பாணிகளைக் கடந்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர். தொண்டி முதலும் த்ரிக்ஷாஷியும், வேட்டையன் ஆகிய படங்களில் ஃபகத் திருடனாக நடித்திருந்தாலும் இதில் அந்தச் சாயல் எதுவுமே இல்லாமல் திருடனாக நடித்திருக்கிறார். அந்த வித்தியாசம்தான் ஃபகத் ஃபாசில்" என தினமணி தனது விமர்சனத்தில் பாராட்டியுள்ளது.

தி இந்து நாளிதழும் "மாமன்னன் படத்தில் இந்தக் கூட்டணி தொடங்கியது. இவர்களை திரையில் பார்ப்பது மனதிற்கு இதமாக உள்ளது. இந்தக் கூட்டணியை நிறைய படங்களில் இணைந்து பார்க்க மக்கள் விரும்புவார்கள்" என்று கூறியுள்ளது.

"மாமன்னன் படத்திற்குப் பிறகு இந்தப் படத்திலும் தனது நகைச்சுவை கதாபாத்திரத்தைப் புறந்தள்ளிவிட்டு இதுபோன்ற ஆழமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவை பாராட்டியாக வேண்டும்" என டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

"ஃபகத் ஃபாசில் எப்போதும் போலத் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்" என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியுள்ளது.

"நீண்ட நாட்களுக்குப் பின் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையுடன் காட்சிகளைப் பார்க்க உயிர்ப்பாக இருந்தது. முதல் பாதியில் ஃபகத், வடிவேலு இடையிலான நகைச்சுவைக் காட்சிகளுக்கு பின்னணி இசை கச்சிதமாகப் பொருந்தியிருந்தது" என தினமணி பாராட்டியுள்ளது.

மாரீசன் திரைப்படத்தின் குறைகள் என்ன?

மாரீசன், விமர்சனம், தமிழ், கோலிவுட் '

பட மூலாதாரம்,@SUPERGOODFILMS_

"முதல் பாகம் மற்றும் இடைவெளியில் எகிறிய எதிர்ப்பார்ப்புகள் மெல்ல மெல்லக் குறைவது போல் இரண்டாம் பாகம் அமைந்துவிட்டது. படத்தின் 'ஒன்லைன்' சரியாகக் கையாளப்படவில்லை. ஒரு கட்டத்தில் படம் கொலைகளை நியாயப்படுத்துவது சரியாக இல்லை" என்று தினமணி விமர்சித்துள்ளது.

அதே போல, "ஃப்ளாஷ்பேக் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். முன்னணி கதாபாத்திரங்கள் தவிர பிற கதாபாத்திரங்கள் பெரியளவில் கையாளப்படவில்லை" எனக் கூறுகிறது தி இந்து விமர்சனம்.

மேலும், "கிளைமேக்ஸ் காட்சி வரை உடைக்கப்படாத ரகசியம் படத்தின் பலம். ஆனால், சில காட்சிகளை எளிதில் ஊகிக்க முடிவது பலவீனம்" எனவும் விமர்சிக்கிறது.

தினமணி விமர்சனத்தின்படி, "மொத்தத்தில் மாரீசன் திரைப்படத்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றமின்றி பார்க்கலாம்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckg5gpxk3myo

  • கருத்துக்கள உறவுகள்

மாரீசன் : விமர்சனம்!

26 Jul 2025, 4:58 PM

vadivelu fafa maareesan review july 25

திரைக்கதை ‘ட்ரீட்மெண்டை’ மாற்றியமைத்திருக்கலாம்..!

‘சூப்பரா நடிக்குறாங்க’ என்று சொல்லக்கூடிய இரண்டு நடிப்புக்கலைஞர்கள் ஒரே பிரேமில் தோன்றினால் எப்படியிருக்கும்? அதற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பு எப்படிப்பட்டதாக அமையும்? அது போன்ற எதிர்பார்ப்பினை உருவாக்கியது ‘மாரீசன்’ படத்தில் வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர் என்ற தகவல். டீசர், ட்ரெய்லர் போன்றவற்றைத் தந்து அந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய அப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

ஆர்.பி.சௌத்ரி இதனைத் தயாரித்திருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தை அமைக்க, சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கிறார்.  யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சரி, எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்கிற வகையில் ‘மாரீசன்’ உள்ளதா?

image-509-1024x576.png

எதிர்பாராத சந்திப்பு!

எதிரும்புதிருமான இரண்டு மனிதர்கள். இருவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், இருவரும் ஒன்றாகச் சில மணி நேரங்கள், நாட்கள் பயணிக்க நேர்கிறது.

அந்தப் பயணத்தின்போது இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்களா? அவர்களது எதிர்பாராத சந்திப்பு நடக்கக் காரணமானது எது? இதற்கான பதில்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதே ‘மாரீசன்’ படத்தின் கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, சிலரது மனங்களில் விரிந்திருக்கும்.

கிட்டத்தட்ட அப்படியொரு புள்ளியில் தொடங்கி மேற்சொன்னவாறே திரையில் கதை விரிகிறது. ஆனால், அது உண்மையல்ல என்று சொல்கிறது இடைவேளைப் பகுதி.

‘மாயமான்’ போன்று தோற்றமளிக்கிற மேற்சொன்ன கதைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? ஒன்றாகப் பயணிக்கிற அந்த இருவரில் யார் உண்மையைச் சொல்கிறார்? யார் உண்மையை மறைக்கிறார்? இருவரில் யார் நல்லவர் என்று பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இரண்டாம் பாதி.

இந்தக் கதையில் அல்சைமர்ஸ் எனும் மறதி நோயில் அவதிப்படுகிற வேலாயுதம் பிள்ளை எனும் நபராக நமக்கு அறிமுகமாகிறார் வடிவேலு. அவரைத் தற்செயலாகச் சந்திக்கிற ஒரு திருடனாக, தயாளன் எனும் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் பகத் பாசில்.

இப்போது, ‘மாரீசன்’ படம் குறித்த ஒரு சித்திரம் மனதுக்குள் தானாக மேலெழும். ஏதோ ஒரு விஷயம் இதில் மறைந்திருப்பதாக அல்லது சொல்லாமல் தவிர்க்கப்பட்டதாக உணர வைக்கும். அது, இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் ஆகச் சொல்லப்பட்டிருக்கிறது.

முழுமையாகப் படத்தைக் கண்டபிறகு, முதல் பாதியுடன் இரண்டாம் பாதியைப் பொருத்திப் பார்க்க முடிந்தவர்களுக்கு இப்படைப்பு பிடித்துப் போகும்.

‘மாரீசன்’னின் பலமாகவும் பலவீனமாகவும் அதுவே இருக்கிறது.

image-510-1024x512.png

’கொஞ்சம்’ வித்தியாசமான அனுபவம்!

‘மாரீசன்’ படம் குறித்துச் சிலாகித்தாலும், இகழ்ந்தாலும் அதில் இருக்கிற சில அம்சங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கும். அவற்றில் சில ‘ஸ்பாய்லர்’களாகவும் இருக்கக்கூடும்.

அது வேண்டாமே என்பவர்கள் இந்த இடத்தில் நின்றுகொள்ளலாம்.

அல்சைமர்ஸ் நோயால் அவதிப்படுகிற ஒரு பாத்திரம், அதனை ஏமாற்ற முனைகிற இன்னொரு பாத்திரம். இவற்றைக் கொண்டு நகைச்சுவையையும் செண்டிமெண்ட்டையும் வாரி இறைத்திருக்க முடியும். ஆனால், எழுத்தாக்கம் செய்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி இரண்டையுமே மிகக் குறைந்த அளவில் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

வெள்ளைத்தாளில் ஆங்காங்கே எழுதுகோலை நகர்த்திச் சில புள்ளிகளை இட்டு, அந்த புள்ளிகளைக் கூர்ந்து கவனித்தால் ஒரு வரைபடம் தென்படுவதாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார்.

அப்படியொரு உத்தியைச் செயல்படுத்தும்போது, திரைக்கதையில் அப்புள்ளிகளை அழுத்தமாகத் தெரியுமாறு பதிக்க வேண்டும். இரண்டாம் பாதியை முதல் பாதியோடு சரியாகப் பொருந்துகிற வகையில் திரைக்கதை ட்ரீட்மெண்டை அமைத்திருக்க வேண்டும். அந்த மாற்றத்தைச் செய்யத் தவறியிருக்கிறது கிருஷ்ணமூர்த்தி மற்றும் இயக்குனர் சுதீஷ் சங்கர் கூட்டணி.

அதேநேரத்தில், வழக்கமானதொரு கதை சொல்லலைத் தவிர்த்திருக்கின்றனர்.

கொஞ்சம் முயன்றிருந்தால், இதனைப் பரபரப்புமிக்க ‘காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர்’ ஆகவும் மாற்றியிருக்க முடியும். அவ்வாறு ஆக்கியிருந்தால், இப்படம் டாம்க்ரூஸ், ஜேமி பாக்ஸ் நடித்த ஆங்கிலப் படமான ‘கொலேட்டரல்’ போன்றதொரு அனுபவத்தைத் தந்திருக்கும்.

ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி, தயாரிப்பு வடிவமைப்பாளர் பங்கலான், படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்க் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைத்து தான் விரும்பியவாறு திரையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுதீஷ் சங்கர்.

image-511-1024x576.png

’ஃபா ஃபா’ மற்றும் ‘மாரீசா சும்மா கிடைக்குமா சுகுமாரி’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன. அதைவிடப் பல மடங்கு உழைப்பைப் பின்னணி இசையில் கொட்டியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இந்தப் படத்தில் பகத் பாசில் ’மிக இயல்பாக’த் தோன்றியிருக்கிறார். அதுவே வடிவேலுவின் பாத்திரம் ‘புதிரானது’ என்ற எண்ணத்தை மனதின் அடியாழத்தில் ஏற்படுத்தும். அதற்கேற்ப, அவரும் ‘மிகச்சரியாக’ நடித்திருக்கிறார்.

இவர்களது நடிப்பு ‘அபாரமாக’ இருப்பதாலேயே முதல் பாதி மெதுவாக நகர்வது நமக்கு அயர்ச்சியைத் தருவதில்லை.

இரண்டாம் பாதியில் அவர்களது நடிப்பு ‘வழக்கமான தமிழ் சினிமா நாயர்களையே’ முன்னிறுத்துகிறது. அது மட்டுமே நமக்கு ஏமாற்றம் தருகிறது.

இதர பாத்திரங்களில் நடித்திருக்கிற சித்தாரா, கோவை சரளா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, டெலிபோன் ராஜா ஆகியோருக்குச் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை. அதனைக் கொஞ்சம் உற்றுநோக்கியிருக்கலாம்.

இந்தக் கதையில் பகத் பாசிலும் வடிவேலுவும் சேர்ந்து பயணிக்காவிட்டால்தான் என்ன என்ற கேள்விக்கான பதிலாக விவேக் பிரசன்னா பாத்திரம் நுழைக்கப்பட்டிருக்கிறது. அவர் அதனைக் கவனமாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி – சுதீஷ் சங்கர் கூட்டணியானது ‘மாரீசன்’னில் பகத் பாசிலையும் வடிவேலுவையும் ஒரே பிரேமில் காட்டி, அவர்களது செம்மையான நடிப்புத் திறமையைக் காட்ட முனைந்திருக்கிறது. அதில் வெற்றி கண்டிருக்கிறது.

அதேநேரத்தில், தமிழ் திரை வரலாற்றில் இடம்பெறுகிற ஒரு ‘காம்போ’வாக, அதற்கேற்ற நேர்த்தியான கதை சொல்லல் கொண்டதாக ஆக்கியிருந்தால் ‘மாரீசன்’ படத்தின் உயரம் பல மடங்கு மேலேறியிருக்கும்.

அதனைச் செய்யாமல் விட்டதனால், ‘கொஞ்சம் வித்தியாசமான திரையனுபவம்’ என்ற எல்லையோடு நின்றிருக்கிறது ‘மாரீசன்’. வடிவேலு, பகத் பாசில் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கத்தான் செய்யும்..!

https://minnambalam.com/vadivelu-fafa-maareesan-review-july-25/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.