Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடியான ஒவ்வொரு கட்டத்திலும் ஆட்டத்தை மும்பை பக்கம் திருப்பிய 3 இந்திய வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஷார்துல் தாக்கூர், ரோஹித் ஷர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரின் செயல்பாடுகள் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தன (கோப்புப் படங்கள்)

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

2013 முதல் 2025 வரை தொடர்ந்து 13 ஐபிஎல் சீசன்களாக தங்களின் முதல் போட்டியைத் தோற்றிருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அந்த சோக சாதனைக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

வான்கெடேவில் நடந்த இந்தப் போட்டியில் நைட் ரைடர்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹர்திக் பாண்டியாவின் அணி.

முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. அஜிங்க்யா ரஹானே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் அரைசதம் அடித்தனர். மும்பைக்காக ஷார்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த இலக்கை 19.1 ஓவர்களில் சேஸ் செய்தது மும்பை இந்தியன்ஸ். ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் மிகப் பெரிய சேஸ் இதுதான்.

இந்தப் போட்டியில் அந்த அணியை வெற்றி பெறவைத்த 3 வீரர்கள் யார்?

ஷார்துல் தாக்கூர்: கேகேஆர் பிடியைத் தளர்த்தினார்

நைட் ரைடர்ஸ் இன்னிங்ஸின் ஆறாவது ஓவரின்போது தான் முதல் முறையாகப் பந்துவீச வந்தார் ஷார்துல் தாக்கூர். மும்பைக்காரரான அவர் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அதுவும் முதல் போட்டியே சொந்த மண்ணில். இதுவே அவருக்கு நெருக்கடியான தருணமாக இருந்திருக்கும்.

சொல்லப்போனால், அப்போது ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் அணியும் நெருக்கடியில் இருந்தது. ஏனெனில், முதல் 5 ஓவர்களின் முடிவில் 68/0 என்ற நிலையில் இருந்தது கேகேஆர். அந்த அணியின் முன்னணி பௌலர்களான ஜஸ்ப்ரித் பும்ரா, டிரென்ட் போல்ட் ஆகியோராலும் விக்கெட்டுகள் வீழ்த்த முடியவில்லை.

அதுமட்டுமல்லாமல் ஒரு டி20 போட்டியின் ஆறாவது ஓவரை வீசுவது எப்போதுமே சற்று சிக்கலானது. ஏனெனில், பவர்பிளேவின் கடைசி ஓவர் என்பதால் பேட்டிங் செய்யும் அணிகள் அதை முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ள நினைப்பார்கள்.

இப்படி ஷார்துல் பந்துவீச வந்த தருணத்தில் பல்வேறு நெருக்கடிகள் இருந்தன. ஆனால், தான் வீசிய இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார் ஷார்துல்.

புற்கள் அதிகம் இருந்த வான்கெடே மைதானத்தில் போட்டியின் தொடக்கத்தில் 'ஸ்விங் & சீம் மூவ்மென்ட்' இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி பெரிய அளவில் இல்லாததால், பேட்டர்கள் எளிதாக ரன் சேர்த்தனர். இந்நிலையில், மும்பை பௌலர்கள் 'ஸ்லோ பால்கள்' வீசத் தொடங்கினார்கள்.

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கடந்த சீசன் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஷார்துல் தாக்கூர் டிரேட் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் (கோப்புப் படம்)

ஷார்துல் தன்னுடைய முதல் பந்தை வீசியபிறகு, வர்ணனையில் இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன், "மும்பை இந்தியன்ஸ் பௌலர்கள் ஸ்லோயர் பால்கள் வீசுவதுதான் சரியாக இருக்குமென்று முடிவு செய்திருக்கிறார்கள். முந்தைய ஓவரில் (ஆட்டத்தின் 5வது ஓவர்) பும்ரா சுமார் 4 ஸ்லோயர் பால்கள் வீசினார். இப்போது ஷார்துலும் அதையே செய்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ஷார்துல் அதையே அடுத்த பந்திலும் செய்து ஆலன் விக்கெட்டைக் கைப்பற்றி கொல்கத்தாவின் அதிரடிக்கு முதல் வேகத்தடையைப் போட்டார்.

ஸ்லோ பால்களை அதிகளவு பயன்படுத்திய ஷார்துல் அதிலும் பல வேரியேஷன்கள் செய்தார். பெரும்பாலும் ஃபுல் லென்த்தில் ஸ்டம்ப் லைனில் வீசிய அவர், அவ்வப்போது ஷார்ட் லென்த்திலும் வீசினார். லைன்களையும் மாற்றினார். ஷார்துலின் இரண்டாவது ஓவரில் அப்படி வீசப்பட்ட ஒரு பந்து தான் கேமரூன் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றியது.

9வது ஓவரில் கிரீன் விக்கெட்டைக் கைப்பற்றிய ஷார்துல், அதன்பிறகு 14வது ஓவர் மீண்டும் பந்துவீச வந்தார். இம்முறை ஃபுல் லென்த்தில் 'கிராஸ் சீம்' பந்தை வீசினார். சற்று திரும்பிய பந்தை அடிக்க முயற்சித்த ரஹானே அதை சரியாக அடிக்காததால் கேட்சாகி ஆட்டமிழந்தார்.

ஆலன், கிரீன், ரஹானே என்று மூன்று பெரிய விக்கெட்டுகளை முக்கியமான தருணங்களில் வீழ்த்தி ஆட்டத்தில் நைட் ரைடர்ஸின் பிடியைத் தளர்த்தினார் ஷார்துல். இல்லாவிட்டால் கேகேஆர் இன்னும் பெரிய ஸ்கோரைப் பதிவு செய்திருக்கும். அது மும்பைக்கு ஆபத்தாக அமைந்திருக்கும்.

இப்படி அவர் ஏற்படுத்திய தாக்கத்தால் தான் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் கொடுக்கப்பட்டது.

ஜஸ்ப்ரித் பும்ரா: வழக்கம்போல் நெருக்கடியை ஏற்படுத்தினார்

ரன்மழை பொழியும் பெரும்பாலான டி20 போட்டிகளில் தன் சிக்கனமான ஸ்பெல்களால் மாற்றத்தை ஏற்படுத்துவது ஜஸ்ப்ரித் பும்ராவின் வழக்கம். உதாரணம், இதே வான்கெடே மைதானத்தில் மார்ச் 5ம் தேதி நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டி.

40 ஓவர்களில் 499 ரன்கள் அடிக்கப்பட்ட அந்தப் போட்டியில் 8.25 என்ற எகானமியில் பந்துவீசினார் பும்ரா. அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வாங்கிய சஞ்சு சாம்சன், "பும்ரா இல்லாவிட்டால் நான் இந்த இடத்தில் நின்று இவ்விருதை வாங்கியிருக்கமாட்டேன்" என்று கூறினார்.

காரணம், அவர் வீசிய சிக்கனமான ஓவர்கள். 16வது ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர், 18வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அது இங்கிலாந்துக்கு முட்டுக்கட்டை போட்டிருந்தது.

அப்படியொரு செயல்பாட்டைத் தான் நைட் ரைடர்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியிலும் பும்ரா கொடுத்தார்.

11 ஓவர்கள் முடிவில் 131/2 என்ற நிலையில் இருந்தது கேகேஆர். அப்போது தன்னுடைய இரண்டாவது ஓவரைப் பந்துவீச வந்த பும்ரா அந்த 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். முதலிரு பந்துகளையும் ஸ்லோயர் பால்களாக வீசிய அவர், அதன்பிறகு வேகத்தை அதிகப்படுத்தினார். ஆனால், முதல் பந்தைத் தவிர்த்து அனைத்து பந்துகளையுமே யார்க்கர்களாக வீச முயற்சி செய்தார். அதை சிறப்பாகவும் அரங்கேற்றினார்.

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தப் போட்டியில் 9க்கும் குறைவான எகானமியில் பந்துவீசிய ஒரே பௌலர் பும்ரா தான் (கோப்புப் படம்)

கேகேஆர் அணியின் ரன் விகிதம் அப்போதுதான் குறையத் தொடங்கியது. அடுத்த ஓவரில் போல்ட்டும் 8 ரன்கள் மட்டுமே கொடுக்க, கேகேஆர் பேட்டர்களுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தியது. இதுதான் ரஹானே ஆட்டமிழக்க காரணமாக அமைந்தது.

இதன் பிறகு 18வது ஓவர் பந்துவீச வந்தார் பும்ரா. ரகுவன்ஷி - ரிங்கு சிங் இணை அதற்கு முந்தைய 3 ஓவர்களில் மட்டும் 41 ரன்கள் எடுத்திருந்தனர். அப்படி அவர்கள் இருவரும் நன்றாக ஆடிக் கொண்டிருந்த போது அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அவர். முதல் பந்தில் பவுண்டரி கொடுத்திருந்தாலும், அடுத்த 5 பந்தையும் சவால் தரும் வகையில் வீசினார். பின்னர் 20வது ஓவரிலும் அவர் 11 ரன்கள் மட்டும் கொடுக்க, ஒருவழியாக கேகேஆர் இன்னிங்ஸ் 220 ரன்களுக்குள் முடிவுக்கு வந்தது.

இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பும்ரா. இந்தப் போட்டியில் 9க்கும் குறைவான எகானமியில் பந்துவீசிய ஒரே பௌலர் இவர் மட்டுமே.

ரோஹித் ஷர்மா: பவர்பிளேவிலேயே ஆட்டத்தை மாற்றினார்

221 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது ரோஹித் ஷர்மா - ரியான் ரிக்கில்டன் கூட்டணி. இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸை பின்தங்கவைத்தார்கள். இதில் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார்.

இதில் ரோஹித் ஷர்மாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அவர், கடினமான பௌலர்களுள் ஒருவராகக் கருதப்படும் வருண் சக்கர்வர்த்தியைக் கூட அநாயசமாகக் கையாண்டார். பவர்பிளே முடியும்போதே அரைசதம் கடந்திருந்தார் அவர்.

வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என அனைவரையும் பதம் பார்த்த ரோஹித், புல், டிரைவ், ஸ்கூப் என பலவகையான ஷாட்களையும் ஆடினார். அவருடைய முதல் பவுண்டரி ஒரு எட்ஜ் மூலம் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு ஒவ்வொரு ஷாட்டும் மிகத் துல்லியமாக, அவரது பேட்டின் நடுப்பகுதியில் பட்டே பவுண்டரிகளாகவும் சிக்ஸர்களாகவும் மாறியது.

இந்த இன்னிங்ஸ் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான், "ரோஹித் சர்மா தனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில் தன்னைத்தானே மறுவரையறை செய்துகொள்வது மற்ற வீரர்களுக்கு உண்மையிலேயே ஒரு உத்வேகம் அளிக்கும் விஷயமாகும். தனது உடல் தகுதிக்காக கடினமாக உழைத்து, 38 வயதில் தனது அதிவேக ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்திருப்பது, அவரது மனதில் என்ன ஓடுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. இது ஒரு மிகச்சிறந்த செயல்பாடு." என்று கூறியிருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ஐபிஎல் 2026, ரோஹித் சர்மா

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கேகேஆர் அணிக்கெதிரான இந்தப் போட்டியில் 38 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார் ரோஹித் ஷர்மா (கோப்புப் படம்)

வர்ணனையில் இருந்த கெவின் பீட்டர்சனும் இதே கருத்தை முன்வைத்து, நீண்ட காலம் ஆடுவது எப்படி என்பதற்கு ரோஹித் பாடம் எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

இன்னிங்ஸ் தொடக்கத்தில் 11ஆக இருந்த மும்பையின் தேவைப்படும் ரன்ரேட், ரோஹித் அவுட் ஆகும்போது 9க்கு குறைவாக ஆனது. அந்த அளவுக்கு அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றிருந்தார் ரோஹித்.

ரிக்கில்டன் கூட இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்தார். ஆனால், பவர்பிளேவிலேயே அரைசதம் அடித்து அதிரடி தொடக்கம் கிடைக்கக் காரணமாக அமைந்தது, வருண் சக்கர்வர்த்தி போன்ற கேகேஆர் அணியின் முன்னணி பௌலருக்கு எதிராக பெரிய ஷாட்கள் அடித்து அந்த அணியை அப்போதே கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது போன்றவை ஏற்படுத்திய தாக்கம் மிகவும் பெரியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjd8xlnknjdo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'பேட்டிங் வரிசை பிரமிப்பு தந்தாலும் கவலை தரும் ஒரு பலவீனம்' - சிஎஸ்கே ஒரு பார்வை

இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கிறது? பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • வித்யுத் சிவராமகிருஷ்ணன்

  • சிஎஸ்கே முன்னாள் வீரர்

  • 30 மார்ச் 2026, 07:45 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்த ஆண்டுக்கான டிரேட், ஏலம் எல்லாமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக அமைந்தது என்று நினைக்கிறேன். இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையைத் தனி ஆளாக வென்று கொடுத்த சஞ்சு சாம்சன் அணியில் இணைந்திருப்பது பெரும் பலம். சாம்சன், ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ் என சூப்பர் கிங்ஸின் பேட்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது. பந்துவீச்சும் ஓரளவு நன்றாகவே இருக்கிறது.

2025 சீசனுக்கான ஏலத்தில் எமோஷனலாக பல முடிவுகள் எடுக்கப்பட்டன. ஒரே மாதிரியான பல வீரர்களை அவர்கள் வாங்கியிருந்தார்கள். தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, விஜய் ஷங்கர் என அவர்கள் அனைவருமே ஒரேபோல் ஆடுபவர்கள். அங்கு வெரைட்டியே இல்லாமல் இருந்தது.

அதன்பிறகு வந்த மாத்ரே, உர்வில் பட்டேல், பிரெவிஸ் போன்ற மாற்றுவீரர்களாக சிறப்பாக அணியில் இணைத்தனர். அதுபோக இம்முறை இரு இளம் நட்சத்திரங்கள் கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர் ஆகியோரை வாங்கியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது கடந்த சீசன் இருந்த அணியை விட இந்த சீசன் அணி பலமானதாக இருக்கிறது.

ரவீந்திர ஜடேஜா இல்லாதது நிச்சயம் பெரிய பின்னடைவு தான். ஆனால், அகீல் ஹொசைன் அந்த இடத்துக்கு சிறந்த மாற்றாக இருப்பார். அவரால் பவர்பிளேவில் சிறப்பாகப் பந்துவீச முடியும். கடினமான ஓவர்களை அவரால் சிறப்பாக வீசமுடியும். திறமையான வீரர் அவர். அதனால் அவரை குறைத்து மதிப்பிட்டுவிடவே கூடாது.

ஒட்டுமொத்தமாக கடந்த சீசனை விட இந்த முறை நல்லதொரு அணியை சிஎஸ்கே கட்டமைத்திருக்கிறது.

பலமான பேட்டிங்

இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கிறது? பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார் (கோப்புப் படம்)

சூப்பர் கிங்ஸின் மிகப் பெரிய பலம் அவர்களின் பேட்டிங் தான். சஞ்சு சாம்சன், ஷிவம் துபே என இந்தியாவின் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றிய இரு பேட்டர்கள் இருக்கிறார்கள். ஐபிஎல் தொடங்கும்போது இருவருமே சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். சாம்சன் வந்திருப்பது சீரான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைய வழிவகுக்கும்.

துபேவின் சமீபத்திய ஃபார்ம் சிறப்பாக இருக்கிறது. இந்த உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இந்த டி20 உலகக் கோப்பையில் ஃபினிஷராகவும் அவர் நன்கு விளையாடினார். வேகப்பந்துவீச்சுக்கு எதிராகவும் தன்னால் அடித்து ஆட முடியும் என்று காட்டினார். அதனால் அவர் சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்குவார்.

அடுத்ததாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சீரான செயல்பாட்டைக் கொடுப்பார். தற்போது ஓப்பனராக விளையாட போவதாக அவர் அறிவித்திருக்கிறார். சூப்பர் கிங்ஸ் தங்களுடைய அனுபவ ஓப்பனர்கள் அணுகுமுறையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. நிலையான ஒரு வீரர் ஆடுவது மறுபக்கம் சாம்சனுக்கும் நெருக்கடியைக் குறைக்கும்.

டெவால் பிரெவிஸ் மிடில் ஓவர்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவர். சுழல், வேகம் இரண்டுக்கு எதிராகவும் அதிரடி காட்டக்கூடியவர். சாம்சன், கெய்க்வாட், மாத்ரே, பிரெவிஸ், துபே என இந்த டாப் 5-ஐ பார்க்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது.

சிலபல ஆண்டுகளாக சூப்பர் கிங்ஸ் அணி 180+ ஸ்கோர்களை சேஸ் செய்ய தடுமாறியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒரு போட்டியில் 180 ரன்களை சேஸ் செய்தது. முழுமையான அதிரடி அணுகுமுறைக்கு ஏற்ற அணியாக சூப்பர் கிங்ஸ் இருக்கவில்லை. ஆனால், இம்முறை இந்த பேட்டிங் படை அதையெல்லாம் மாற்றும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில் கிடைக்காத பெரும் நம்பிக்கையை அது கொடுக்கிறது.

முதல் போட்டியில் பிரெவிஸ் ஆடமாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

பலவீனமான பந்துவீச்சு

இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கிறது? பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம்,Getty Images

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பல ஏரியாக்கள் சரியாக சிறப்பாகவே இருக்கின்றன. பலவீனம் என்று குறிப்பிட வேண்டுமெனில் அவர்களின் டெத் ஓவர் பந்துவீச்சை குறிப்பிடலாம். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லும்படியான பௌலர் இந்த அணியில் இல்லை.

கலீல் அஹமது எப்படியும் நிச்சயம் டெத் ஓவரில் பந்துவீசுவார். ஆனால், வேறு யார் அங்கு பந்துவீசுவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. மேட் ஹென்றி, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ் என யார் பந்துவீசப் போகிறார்கள் என்பதே கேள்விக்குறி. அவர்கள் எப்படி செயல்படுவார்கள் என்றும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இது ஒருவகையில் அந்த அணியைப் பாதிக்கலாம்.

இந்நிலையில் பெரிதும் நம்பப்பட்ட பௌலரான நாதன் எல்லிஸ் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறியிருக்கிறார். இது பந்துவீச்சை இன்னும் பலவீனமாக்கியிருக்கிறது. அவருடைய இடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் ஸ்பென்சர் ஜான்சனும் முழு ஃபிட்னஸோடு இல்லை என்று தெரிகிறது.

சொல்லப்போனால், சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சன்ரைசர்ஸ் பாணியைக் கடைபிடித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. 'பந்துவீச்சு அதிக ரன் போய்விடலாம். பேட்டிங்கில் 20-30 ரன்கள் அதிகமாக எடுத்துவிடலாம்' என்று நினைத்துவிட்டார்களோ என்று நினைக்கிறேன்.

அதேசமயம் சிஎஸ்கே-வின் பேட்டிங் பலப்பட்டிருக்கும் விதம், அந்த பந்துவீச்சில் இருக்கும் குறை பெரிதாகத் தெரியாமல் பார்த்துக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். பிளெமிங் மற்றும் அவரது பயிற்சியாளர் குழு இதை சரியாகக் கையாண்டுவிடுவார்கள் என நம்பலாம்.

கேப்டன் ருதுராஜுக்கு முக்கியமான சீசன்

இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கிறது? பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம்,Getty Images

இந்த சீசன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மிகவும் முக்கியமானது. தற்போது இரண்டாவது முழுமையான சீசன் என்பதால் நிச்சயம் எதிர்பார்ப்புகள் இருக்கும். அவரது முடிவுகள் அதிகம் கவனிக்கப்படும்.

அவர் தலைமைப் பண்பில் முன்னேற்றம் காண நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவர் தன் தவறுகளில் இருந்து நிச்சயம் பாடம் கற்றுக்கொள்வார். தோனியே, "அவராகவே கற்றுக்கொள்ள விட்டுவிட வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். அது நிச்சயம் இந்த சீசனில் நடக்கும்.

என்ன, கடந்த ஆண்டு அவருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது. காயமடைந்து பாதியில் வெளியேறிவிட்டார். இந்த முறை அந்த அதிர்ஷ்டம் அவர் வசம் இருக்கும் என்று நம்புகிறேன்.

கடந்த ஆண்டு அவருக்கு ஒரு தரமான அணியும் கிடைக்கவில்லை. ஒரு அணி எவ்வளவு நன்றாக இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் கேப்டனின் செயல்பாடும் இருக்கும். அது அவருக்கு கடந்த சீசனில் அமையவில்லை. ஆனால், இப்போது நல்லதொரு அணி அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதனால், நிச்சயம் அவர் மீது எதிர்பார்ப்பு இருக்கும். அதை அவரால் பூர்த்தி செய்ய முடியும் என்றும் நான் நம்புகிறேன்.

தோனியின் பங்கு

இந்த சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்படி இருக்கிறது? பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

பட மூலாதாரம்,Getty Images

மஹேந்திர சிங் தோனி காயம் காரணமாக முதல் இரு வாரங்கள் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது துரதிருஷ்டவசமான விஷயம். அதேசமயம் இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

இந்த புதிய சீசன் மஹேந்திர சிங் தோனியின் பங்கு அவ்வளவுதானா என்ற விவாதங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அவருடைய பங்களிப்பு நிச்சயமாக முடிந்துவிடவில்லை.

என்னைப் பொறுத்தவரை, காயத்திலிருந்து திரும்பியதும் தோனி நிச்சயம் விளையாடுவார். ஆனால், எல்லா போட்டிகளிலும் ஆடுவாரா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சாம்சனும் இருப்பதால் அவரும் கீப்பிங் செய்யக்கூடும். இங்குதான், தோனியை கீப்பராகப் பயன்படுத்தப் போகிறார்களா இல்லை அவரை இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்தப் போகிறார்களா என்று பார்க்க வேண்டும்.

ஆனால், ஒரு விஷயம் நிச்சயம் - அவர் கண்டிப்பாக விளையாடுவார். இங்கு 'சிஎஸ்கே ஹை பெர்ஃபாமன்ஸ் மையத்தில்' நடந்த பயிற்சி முகாமுக்கு முன்னதாக அவர் ராஞ்சியிலேயே பயிற்சியில் ஈடுபட்டார். அங்கு அவர் தீவிரமாகப் பயிற்சி செய்தார். விளையாடப் போவதில்லை என்றால், அவர் அப்படி பயிற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லையே! அவர் இந்த சீசன் களமிறங்குவது நிச்சயம்.

அதேசமயம், களத்துக்குள் இருப்பதை விட தோனியின் தாக்கம் களத்துக்கு வெளியே தான் இம்முறை அதிகமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் வீரர்கள் தோனியோடு விளையாடும்போது அது அவர்களுக்கு பெரிய வகையில் உதவும். அவர்களால் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

தோனியின் தலைமையில் ஐபிஎல் ஆடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அவரைப் போல் இந்த ஆட்டத்தை புரிந்துகொள்ளக்கூடிய, கணிக்கக்கூடிய வீரர் கிடையாது. அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால், பேசினால் அதில் நிறைய அர்த்தம் இருக்கும். அதனால்தான், ஒரு 'வழிகாட்டியாக' இந்த அணியில் தோனி பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன்.

இந்த சீசனுக்கான கணிப்பு

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்ட சூப்பர் கிங்ஸ், இம்முறை அதை உடைத்து நிச்சயமாக டாப் 4 இடத்தை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.

இந்த ஆண்டு நிறைய இளம் வீரர்களில் அந்த அணி நிர்வாகம் முதலீடு செய்திருக்கிறது. கடந்த சீசனின் கடைசி கட்டத்தில் இப்படியான இளம் வீரர்கள் தான் நம்பிக்கை கொடுத்தார்கள். அப்படி தரமான வீரர்களை நிறைய அணிக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். அது நிச்சயம் அணிக்குப் புதிய ரத்தம் பாய்ச்சியிருக்கிறது. மாத்ரே, பிரெவிஸ், பிரஷாந்த் வீர், கார்த்திக் ஷர்மா, உர்வில் போன்ற இளம் வீரர்கள் அணியின் 'ஹிட்டிங்கை' பன்மடங்கு பலப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேசமயம் பல அனுபவ வீரர்களையும் அணிக்குள் புதிதாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதிகம் கவனம் ஈர்க்காத ராகுல் சஹார், முகேஷ் சௌத்ரி போன்றவர்கள் ஐபிஎல் அனுபவம் கொண்டவர்கள். அகீல் ஹொசைன் அப்படித்தான். அவர் உலகின் பல்வேறு டி20 லீக்குகளில் சோபித்திருக்கிறார். அதனால் அவர் நிச்சயம் இந்த சீசன் சென்னை அணியின் மிகமுக்கிய வீரர்களுள் ஒருவராக விளங்குவார்.

முன்பே சொன்னதுதான், இந்த சீசனின் மிகச் சிறந்த பேட்டிங் யூனிட்களுள் ஒன்றை சிஎஸ்கே கொண்டிருக்கிறது. ஆனால், பந்துவீச்சு தான் சற்று பிரச்னையாக இருக்கிறது. குறிப்பாக டெத் பௌலிங். அதை சரியாகக் கையாள முடிந்தால் சிஎஸ்கே இந்த சீசனில் வெகுதூரம் செல்லலாம்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே நிச்சயம் முன்னேறும். அதற்கு மேல் அந்தந்த நாளில் அவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது அவர்கள் முடிவைத் தீர்மானிக்கும்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgldx2kk1dro

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15 வயது சூர்யவன்ஷி அதிரடி காட்டிய ஆடுகளத்தில் சிஎஸ்கே குறைந்த ரன்களில் சுருண்டது ஏன்?

CSK vs RR, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2026 சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுடன் தொடங்கியிருக்கிறது (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • வித்யுத் சிவராமகிருஷ்ணன்

  • சிஎஸ்கே முன்னாள் வீரர்

  • 31 மார்ச் 2026, 02:43 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2026 சீசன் மிகவும் மோசமாகத் தொடங்கியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. 2025-ஆம் ஆண்டு அவர்களின் பேட்டிங் எப்படி ஏமாற்றமளித்ததோ, அதுபோலத்தான் இந்தப் போட்டியும் தொடங்கியிருக்கிறது.

எந்தவொரு தொடராக இருந்தாலும் அதன் முதல் போட்டியில் தங்களின் மிகச் சிறந்த, பலமான அணியை விளையாட வைக்க வேண்டும் என்றுதான் எந்த அணியுமே விரும்பும். ஆனால், சூப்பர் கிங்ஸால் அப்படியொரு லெவனைக் களமிறக்க முடியவில்லை.

காயம் காரணமாக மஹேந்திர சிங் தோனி 2 வாரங்களுக்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் டெவால் பிரெவிஸும் காயம் காரணமாக விளையாடாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் தடுமாறிக் கொண்டிருந்த போது பிரெவிஸ் வந்துதான் அந்த நிலைமையை மாற்றினார். இப்படி இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாதது ஆரம்பம் முதலே சிஎஸ்கே-வை பின்தங்க வைத்திருந்தது.

அதன்பிறகு ஆடுகளத்தின் தன்மையையும் சூழலையும் புரிந்துகொள்ளாமல் பேட்டிங் செய்து பெரும் சரிவை சந்தித்தது சூப்பர் கிங்ஸ். ஏமாற்றம் தரும் ஒரு பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தியது சிஎஸ்கே அணி.

CSK vs RR, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தோனி & பிரெவிஸ் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை (கோப்புப் படம்)

பேட்டிங் & ஃபீல்டிங் ஏமாற்றம்

இந்தப் போட்டியில் டாஸ் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது. போட்டிக்கு முந்தைய நாள்களில் மழை பெய்திருந்தது. ஆடுகளம் மூடப்பட்டிருந்தது. அதனால் ஆடுகளத்தில் நல்ல ஈரப்பதம் இருந்தது. அதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு 'சீம், மூவ்மென்ட், ஸ்விங்' அனைத்தும் நன்றாகக் கிடைத்தது. அதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஜோஃப்ரா ஆர்ச்சர், நாந்த்ரே பர்கர் இருவருமே மிகச் சிறப்பாக பந்துவீசினார்கள். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டர்களால் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை. அந்த இரு வீரர்களையும் எப்படி எதிர்கொள்வது என்ற திட்டமே சிஎஸ்கே டாப் ஆர்டர் பேட்டர்களுக்கு இருக்கவில்லை.

மோசமான பேட்டிங் என்று சொல்லிவிட மாட்டேன். ஆனால், அதே சமயம் 'இன்டென்ட்' இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. புதிய அணிக்கு முதல் போட்டியில் சாம்சன் நல்ல பங்களிப்பைக் கொடுப்பார் என்றும், கடந்த ஆண்டு காயத்தால் அவதிப்பட்ட ருதுராஜ் மீண்டும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

இன்னொரு பக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா தன் புதிய அணிக்கு சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார். சர்ஃபராஸ் கான் மற்றும் ஷிவம் துபே என ஸ்பின்னை சிறப்பாக விளையாடும் இரண்டு வீரர்களின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். எப்போதும் ஸ்பின்னை சிறப்பாக விளையாடும் துபே ஏன் அந்த நேரத்தில் அப்படியொரு ஷாட் ஆடினார் என்று தெரியவில்லை. ஏற்கெனவே அந்த ஓவரில் ஒரு சிக்ஸர் வந்துவிட்டதால் அவர் அதைத் தவிர்த்திருக்கலாம். இது, ஒட்டுமொத்த அணியும் நெருக்கடியில் இருந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

பேட்டிங் மட்டுமல்ல இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங்குமே ஏமாற்றமளிப்பதாக இருந்தது. முதல் ஓவரிலேயே சர்ஃபராஸ் கான் ஒரு பந்தைத் தவறவிட்டார். வைபவ் சூர்யவன்ஷி சந்தித்த முதல் பந்திலேயே அவர் கொடுத்த கேட்சை கார்த்திக் ஷர்மா பிடிக்கத் தவறினார். இதுபோக மேலும் சில தவறுகளும் ஃபீல்டிங்கில் நடந்தது.

எதிரணிக்கு இலக்கு எளிதானதாக இருக்கும்போதுதான் ஃபீல்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும். சூப்பர் கிங்ஸ் இந்த இடத்தில் உடனடியாக முன்னேற்றம் காணவேண்டியது மிகவும் முக்கியம். அவர்கள் ஒரு மிகச் சிறந்த ஃபீல்டிங் யூனிட்டாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஒரு புத்திசாலித்தனமான ஃபீல்டிங் யூனிட்டாகத் திகழவேண்டும். இந்த சீசனின் முதல் போட்டியில் ஆர்சிபி வீரர் ஃபில் சால்ட் தன் ஃபீல்டிங்கால் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதைப் பார்த்தோம். ஃபீல்டிங் அந்த அளவுக்கு அணியில் செயல்பாட்டில் முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

இதற்காக உடனே 500 கேட்ச்கள் பிடித்து பயிற்சி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனை சரிசெய்ய ஒரு உளவியல் மாற்றம் தான் தேவை. உளவியல் ரீதியாக அடுத்த 2 தினங்களில் மாற்றம் நிகழ வேண்டும்.

CSK vs RR, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ராயல்ஸுக்கு எதிராக 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் ருதுராஜ் கெய்க்வாட் (கோப்புப் படம்)

முடிவு மாறக்கூடியதுதான்

என்னதான் இதுவொரு மோசமான தோல்வியாக அமைந்தாலும், நான் இதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட மாட்டேன். இது ஒரு மோசமான போட்டி என்று நினைத்து மறந்துவிட வேண்டும்.

திறமையான, அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவார்கள். இப்படியொரு தோல்வி தொடரின் கடைசி கட்டத்தில் ஏற்படாமல் ஆரம்ப கட்டத்திலேயே வந்துவிட்டதே என்று நேர்மறையாக நினைத்துக்கொள்ளலாம்.

இந்தத் தோல்வியிலிருந்து சூப்பர் கிங்ஸ் நிச்சயம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம்.

சூப்பர் கிங்ஸ் தங்கள் அடுத்த போட்டியை (பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக) சேப்பாக்கத்தில் விளையாடப்போகிறார்கள். அங்கு ஆடுகளம் எப்படியும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அது சூப்பர் கிங்ஸுக்கு உகந்தது தான். என்னதான் இந்தப் போட்டியில் அவர்களின் பேட்டிங் சொதப்பியிருந்தாலும், அவர்களுடைய மிகப் பெரிய பலமும் அதுதான். அது நிச்சயம் சிஎஸ்கேவின் சொந்த மண்ணில் அவர்களுக்கு சாதகமான முடிவைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால், அதற்கு சிஎஸ்கே அந்த தோல்வியில் இருந்து நகர்ந்து செல்லவேண்டும்.

வைபவ் சூர்யவன்ஷி - இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம்

CSK vs RR, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்தப் போட்டியில் 15 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார் வைபவ் சூர்யவன்ஷி (கோப்புப் படம்)

15 வயது இளம் வீரர் எப்படியான ஒரு ஆட்டத்தை ஆடினார். 15 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார் சூர்யவன்ஷி. அவரது ஆட்டத்தை இன்னும் நம்பமுடியவில்லை. அவர் கோடியில் ஒருவர். நம்பர் ஒன் டி20 பேட்டரான அபிஷேக் ஷர்மாவின் பேட் வேகம், பேட் ஸ்விங் பற்றியெல்லாம் நிறைய பேசியிருக்கிறோம். அதுபோல் இவருடைய பேட் வேகம், பேட் ஸ்விங் இரண்டும் மிகச் சிறப்பாக இருக்கிறது.

இன்னொரு ஒப்பீட்டை நிறையப் பேர் செய்திருக்கிறார்கள். அதைச் செய்வது சரியா என்றும் தெரியவில்லை; வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் கிரிக்கெட்டின் ஆகச் சிறந்த ஆல்ரவுண்டரான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸின் பேட் ஸ்விங்கைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. நான் அவர்களை ஒப்பிடவில்லை. ஆனால், சோபர்ஸ் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த வீடியோவையெல்லாம் பார்த்துவிட்டு சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங்கைப் பார்த்தால் பல ஒற்றுமைகள் தெரிகின்றன. திரும்பவும் சொல்கிறேன், 0.1% கூட நான் அவர்கள் இருவரையும் ஒப்பீடு செய்யவில்லை. ஆனால், இந்த சிறு வயதில் வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் அசாத்தியமாக இருந்தது.

அவரால் எல்லாப் பக்கமும் அடிக்க முடிகிறது. அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு வேகப்பந்துவீச்சாளரின் பந்தை பாயிண்ட் திசையில் சிக்ஸர் அடிப்பதே கடினம். அப்படியிருக்கையில் மேட் ஹென்றி வீசிய ஸ்லோயர் பாலை பாயிண்ட் திசையில் சூர்யவன்ஷி சிக்ஸர் ஆக்கினார். அப்படியொரு ஷாட்டை உருவாக்குவதெல்லாம் அசாத்திய திறமை இருந்தால் மட்டுமே முடியும்.

அதையெல்லாம் விட முக்கியமாக அவருடைய தைரியம்! எந்த பௌலர், என்ன சூழ்நிலை என்பதைப் பற்றியெல்லாம் பயப்படாமல் விளையாடுகிறார். சொல்லப்போனால், சிஎஸ்கே சூர்யவன்ஷியின் அந்த குணத்தை அவர்களும் சற்று வெளிக்கொண்டுவரலாம்

ராஜஸ்தான் ராயல்ஸ் முழுமையான செயல்பாடு

ஒட்டுமொத்தமாக ராயல்ஸ் அணி ஒரு முழுமையான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறது. பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட் வீழ்த்தி அசத்த, சூர்யவன்ஷி தனது அசாத்திய திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.

ஏலத்திற்கு பின்பு ராயல்ஸ் மீது பல கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்திருந்த நிலையில், தற்போது அந்த அணியின் செயல்பாட்டைப் பார்க்கும்போது அந்த அணி தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்றே தோன்றுகிறது. புதிய இளம் கேப்டன் ரியான் பராக்கும் இந்தப் போட்டியில் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அதனால், ராயல்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் நல்ல முன்னேற்றம் காண்பதைப் பார்க்க முடியும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62jxj1395qo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கானலி தனி ஆவர்த்தனம்: 'த்ரில்' ஆட்டத்தில் குஜராத் சவாலை பஞ்சாப் முறியடித்தது எப்படி?

PBKSvsGT

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப்படம்

கட்டுரை தகவல்

  • என்.எஸ்

  • பிபிசி தமிழுக்காக

  • 1 ஏப்ரல் 2026, 02:26 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஒருபக்கம் 200க்கும் அதிகமான ரன்கள் இலக்கு என்றாலும் தளராமல் 15 ஓவர்களில் விரட்டி ஜெயித்த அணிகள், மறுபக்கம் அதிக எதிர்பார்ப்புகளோடு களமிறங்கி கோட்டைவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் என இந்த ஐ.பி.எல் சீசனின் முதல் சில ஆட்டங்கள் ரசிகர்களை பெரிதும் ஏமாற்ற, இரு சமபலம் பொருந்திய அணிகள் மோதும் போட்டிக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.

அது ஒருவழியாக நேற்று (மார்ச் 31) நிகழ்ந்தது. குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ். இந்த இரு அணிகளுமே கடந்த முறை ப்ளே ஆஃபுக்கு தகுதி பெற்றிருந்தவை. இந்த தொடருக்கு முந்தைய ஏலத்திலும் இந்த இரண்டு அணிகளுக்கும் வீரர்களை வாங்க பெரிதாக எந்த தேவையும் இருந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட போன சீசனில் ஆடிய அதே டீமோடு தான் இந்த முறையும் களமிறங்கி இருக்கிறார்கள். சமபலம் எனச் சொல்லப்படுவது இதனால்தான்.

ஆட்டம் நடப்பது பஞ்சாப் அணியின் ஹோம் கிரவுண்டான முல்லன்பூரில். ஐ.பி.எல் நடக்கும் பிற மைதானங்களை ஒப்பிடுகையில் இந்த மைதானம் மிகவும் புதிது. இதுவரை இங்கு ஆடப்பட்டிருக்கும் 11 டி20 போட்டிகளில் ஆறில் முதலில் பேட் செய்த அணிகளும் ஐந்தில் இரண்டாவது பேட் செய்த அணிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்த தரவுகள் எல்லாம் மழை மைதானத்தை தொடும்வரையில்தான். கருமேகம் தென்பட்டாலே இரண்டாவது பேட்டிங் தேர்ந்தெடுப்பது கேப்டன்களின் வழக்கம். முல்லன்பூரிலும் மழை எதிர்பார்ப்புகளால் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நினைத்தது போலவே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியில், ரிக்கி பான்டிங்கின் நம்பிக்கைக்கு உரிய ஆல்ரவுண்டர் கூப்பர் கானலிக்கு வாய்ப்பு தரப்பட்டிருந்தது. கூடவே மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான ஜேவியர் பார்ட்லெட்டுக்கும். குஜராத் அணியில் பலகோடி ரூபாய் கொட்டி ஏலத்தில் எடுக்கப்பட்ட ஜேசன் ஹோல்டருக்கு இடமில்லை. அவருக்கு பதில் அனுபவம் வாய்ந்த ரபாடாவே களமிறக்கப்பட்டார்.

குஜராத் அணியை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த முடிவு பெரிய ஆச்சர்யம் எல்லாம் இல்லை. அந்த அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா, 'பேட்ஸ்மேன்களால் அந்தந்த போட்டிகளை மட்டும்தான் வெல்ல முடியும். ஆனால் பவுலர்களால் தான் ஒட்டுமொத்தத் தொடரையும் வெல்ல முடியும்' என்கிற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் ரபாடா, சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, ரஷித் கான் என சர்வதேச பவுலர்கள் அத்தனை பேர் இருந்தாலும் கூடவே ராஜஸ்தானை சேர்ந்த இளம் பவுலரான அசோக் ஷர்மாவுக்கும் ப்ளேயிங் லெவனில் இடம் கொடுத்திருந்தார்.

குஜராத் அணிக்கு ஓப்பனிங் இறங்கியது சுப்மன் கில்லும் சாய் சுதர்ஷனும். 'ஒன் டவுன்' கடந்த முறை போலவே பட்லர். குஜராத் அணி கடந்த சீசனில் மொத்தம் எடுத்த ரன்களில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் ரன்கள் இவர்கள் மூவரும் அடித்தவையே. இந்த முறையும் இவர்கள் மூவரின் பேட்டிங்கைத்தான் மலை போல நம்பியிருக்கிறது இந்த அணி.

அணியின் வெற்றியை தாண்டி இந்த மூவருக்கும் தனிப்பட்ட முறையிலும் இந்த சீசனில் பெருவெற்றி தேவையாய் இருக்கிறது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான கில்லுக்கு இந்திய டி20 அணியில் இடமில்லை. காயமடைந்து ஒரு இடைவெளிக்குப் பின் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியிருக்கிறார் சாய் சுதர்ஷன். பட்லரோ சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் மிக மோசமாக ஆடியிருந்தார். எனவே, இந்த தொடரில் இவர்கள் மூவருக்குமே ஏதோவொரு வகையில் தங்களை நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

ஷ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஷ்ரேயாஸ் ஐயர் (கோப்புப்படம்)

முதல் ஓவர் தொடங்கும்போதே மழை தூறத் தொடங்கியிருந்தது. கூடவே தீவிரக் காற்றும். எனவே, மிக நிதானமாகவே ஆடத் தொடங்கினார்கள் குஜராத் பேட்ஸ்மேன்கள். முடிந்த அளவுக்கு சிங்கிள் தட்டுவது, வசதியான பந்துகளை மட்டும் கவனமாய் பவுண்டரிக்கு அனுப்புவது என்கிற அவர்களின் திட்டத்திற்கு ஓரளவு பயனும் கிடைத்தது. முதல் மூன்று ஓவர்களில் 35 ரன்கள்.

யான்சன் வீசிய நான்காவது ஓவரில் பந்தை தவறாக கணித்து ஸ்ரேயாஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சாய் சுதர்ஷன். இப்போது ஜாஸ் பட்லரின் முறை. யானை, ரயில், குழந்தையின் சிரிப்பு என பார்க்கச் சலிக்காதவை பட்டியலில் கவர் ட்ரைவ் ஆடும் பேட்ஸ்மேன்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அப்படியொரு அழகான கவர் ட்ரைவ் ஆடி தன் கணக்கைத் தொடங்கினார் பட்லர். ஆறு ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 54/1. பவர்ப்ளேயில் குஜராத் பேட்ஸ்மேன்கள் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை என்பதே அவர்கள் எவ்வளவு கவனமாக ஆடினார்கள் என்பதற்கான சான்று.

ஏழாவது ஓவரில் விஜயகுமார் வைஷாக் வீசிய ஃபுல் லென்த் பாலில் சிக்ஸர் அடித்து அந்தக் குறையையும் போக்கினார் பட்லர். எட்டாவது ஓவருக்கு சஹல் வந்ததும், தூறல் காரணமாக பிட்ச் ஸ்லோவாகவும் சரியாக இருந்தது. அதைப் பயன்படுத்தி முடிந்தவரை ரன்களை கட்டுப்படுத்தி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்தார் சஹல். விளைவு, தூக்கி அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டைப் பறிகொடுத்தார் கில்.

அடுத்ததாக களமிறங்கிய க்ளென் ஃ ப்லிப்ஸும், கில் ஆடிய அதே முறையில் நிதானமாக ஆடினார். அவரும் ஒரு கட்டத்தில் வெளியேற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களம் கண்டார். ஆனால் அவராலும் விரைவாக ரன் குவிக்கமுடியவில்லை. ஸ்லோ பிட்ச் என தெரிந்தபின் ஸ்லோ பவுன்சர்களாக போட்டு குஜராத் பேட்ஸ்மேன்களை தடுமாறவிட்டார்கள் பஞ்சாப் பவுலர்கள். இதனால் அழுத்தம் அதிகமாகி ஒவ்வொருவராக தங்கள் விக்கெட்டை சீரான இடைவெளியில் பறிகொடுத்து பெவிலியன் திரும்பத் தொடங்கினார்கள்.

கடைசி ஐந்து ஓவர்களில் குஜராத் அணியால் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 162/6. பஞ்சாப் சார்பில் விஜயகுமார் வைஷாக் மூன்று விக்கெட்களும் சஹல் இரண்டு விக்கெட்களும் வீழ்த்தியிருந்தார்கள்.

சாய் சுதர்ஷன்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சாய் சுதர்ஷன் (கோப்புப்படம்)

ஐ.பி.எல் தொடரை அணி நிர்வாகங்கள் மிகத் தீவிரமாக அணுகத் தொடங்கியபின் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றங்கள் இரண்டு. ஒன்று தேசிய அணியில் இடம்பெற ஒரு நுழைவுத் தேர்வு போல மாறியது இந்தத் தொடர். இரண்டாவது 'டேலன்ட் ஸ்கெளட்டிங்'. இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் அணி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் பயணித்து தகுதியான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கத் தொடங்கினார்கள்.

அப்படி கடந்த ஆண்டு பஞ்சாப் நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்ட வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டியில் பந்தை நாலாபுறமும் சிதறடித்து சதம் போட்டவர். அதனால் இந்தமுறை அவர் எப்படி ஆடுவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு இருந்தது. முதல் ஓவரிலேயே சீனியரான சிராஜ் பந்தில் சிக்ஸ் அடித்து நம்பிக்கை கூட்டினார். ஆனால் அடுத்த ஓவரே ரபாடா வீசிய ஷார்ட் பாலில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மூன்றாவதாக ஷ்ரேயாஸ் களமிறங்குவாரா இல்லையா என்பதுதான் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்புவரை விவாதப்பொருளாக இருந்தது. ஐ.பி.எல்லில் மூன்றாவது இடத்தில்தான் பெரும்பாலும் ஆடியிருக்கிறார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் வழக்கமாக நான்காவது வீரராக களமிறங்குபவர். இப்போது இந்திய டி20 அணியில் நான்காவது இடத்தில் ஆடிவரும் சூர்யகுமார் யாதவ் ஓய்வு பெற்றால் அவரின் இடத்தில் தேசிய அணிக்கு ஆடலாம். அதுமட்டும்தான் இந்திய டி20 அணியில் இடம்பெற ஒரே வழி என அவர் யோசிப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அதை மெய்யாக்குவது போலவே கூப்பர் கானலியை களமிறங்கினார் பாண்டிங். மறுபக்கம் பிரப்சிம்ரன் சிங். இருவரும் சீனியர், ஜூனியர் என்றெல்லாம் பார்க்காமல் ரபாடா, ரஷித் கான், அசோக் ஷர்மா என எல்லாரையும் பந்தாடினார்கள். 9 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 81/1. ஒருவழியாக பத்தாவது ஓவரில் ப்ரப்சிம்ரனை வெளியேற்றினார் ரஷித் கான்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

மழை இப்போது கொஞ்சம் தீவிரமடைந்திருந்தது. அதனால் ஆட்டத்தை சீக்கிரம் முடித்துவிடவேண்டும் என அவசரம் காட்டினார்கள் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள். இதனால் வந்த வேகத்தில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார் ஸ்ரேயாஸ். ஆனால் அடுத்த ஓவரில் கானலி ஓங்கி அடித்த பந்து ஸ்ரேயாஸ் கையில் சீறிவந்து பட, தடுமாறிப் போனார் ஷ்ரேயாஸ். அந்த தாக்கத்தில் அவரால் பிரஷித் கிருஷ்ணாவின் பந்தை சரியாக அடிக்கமுடியாமல் போனது. டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பின் வந்த நேஹால் வதேரா, சஷாங்க் சிங், ஸ்டாய்னிஸ் என அனைவரும் அதே அவசரகதியில் ஆடி அவுட்டாக, முதல்முறையாக ஆட்டத்தில் குஜராத் வெற்றி பெற ஒரு வாய்ப்பு தூரத்தில் தெரிந்தது. ஸ்கோர் 15 ஓவர்கள் முடிவில் 121/6.

இனிமேல் விக்கெட்கள் விழுந்தால் மீள்வது கஷ்டம் என உணர்ந்த கானலியும் யான்சனும் கவனமாக அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்கள். 34 பந்துகளில் அரைசதம் கடந்தார் கானலி. ஐபிஎல்லில் அறிமுகப் போட்டியிலேயே ஐம்பதிற்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த 25வது வீரர் இவர். இறுதியாக 20வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அணியின் வெற்றியையும் அவரே உறுதி செய்தார். ஆட்ட நாயகனும் அவரே.

பலவீனங்களே இல்லை என மெச்சப்பட்ட பஞ்சாப் அணி ஹோம் கிரவுண்டிலேயே தட்டுத் தடுமாறித்தான் வெற்றி பெற்றிருக்கிறது. மறுபக்கம் கடந்த சீசனில் சொல்லப்பட்ட 'பலவீனமான மிடில் ஆர்டர்' எனும் குறைபாடு இந்த சீசனிலும் குஜராத் அணியை துரத்துகிறது. இது முதல் வாரம்தான். தவறுகளை சரிசெய்துகொள்ளவும் சரியான பிளேயிங் லெவனை தீர்மானிக்கவும் இந்த தடுமாற்றங்கள் நிச்சயம் உதவியாய் இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdxkvlg6q9go

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.