Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை ; பிறப்புறுப்பு சிதைப்பினால்  230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு - பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் அதிர்ச்சித் தகவல்

25 Nov, 2025 | 11:23 AM

image

லகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர், அல்லது 736 மில்லியன் பெண்கள், பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். உலகில் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அவர், 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களில் அர்த்தபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தொடர்பில் மேலும் கூறுகையில்,

cfcd29a8-6d20-412c-addd-d5956cf14f89.jpg

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளினால் பொதுவாக மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாதிப்படைகின்றனர்.

பால்நிலை  அடிப்படையிலான வன்முறை (GBV) தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும், பேரழிவு தரும் மற்றும்  நீண்ட கால பாதகமான  விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த விளைவுகள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம். மேலும், கடுமையான சந்தர்ப்பங்களில் மரணத்துக்கும் வழிவகுக்கும்.

பொதுவாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள், அதிகார கட்டமைப்பாட்டுக்கள், சமய சம்பிரதாய நம்பிக்கைகள் மற்றும் பாரபட்சங்கள் இவ்வாறானவை வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.

சமூகத்தில் பாதிப்புறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில்  பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

உலகளவில் பால்நிலை  அடிப்படையிலான வன்முறை தொடர்பான சில முக்கிய தரவுகள் குறிப்பிடவேண்டும்.

உலகளவில்  அண்ணளவாக மூன்று பெண்களில் ஒருவர், அல்லது உலகளவில் 736 மில்லியன் பேர் நெருங்கிய துணைவர், துணைவர் அல்லாத  நபரால் அல்லது இருவராலும் உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளனர். இந்த புள்ளிவிபரம் இரண்டு தசாப்தங்களாக பெரும்பாலும் மாறாமல் உள்ளது.

பெண் கொலை : 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். இது சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 5க்கும் மேற்பட்ட பெண்கள் அல்லது சிறுமிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரால் கொல்லப்படுவதற்கு சமமான தரவாகிறது.

குழந்தை திருமணம்: ஒவ்வோர் ஆண்டும் 18 வயதுக்கு முன்பே 12 மில்லியன் பெண்கள் அல்லது நிமிடத்துக்கு சுமார் 23 பெண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். மேலும், இந்த பெண்கள்  வீட்டு வன்முறைக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) : இன்று உயிருடன் இருக்கும் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர். இது 31 நாடுகளில்  அதிகமாக செய்யப்படுகிறது.

வன்முறையை அனுபவிக்கும் பெண்களில் 40% க்கும் குறைவானவர்களே ஏதாவது சில  வகையான உதவிகளை நாடுகிறார்கள். மிகக் குறைவானவர்களே காவல்துறை அல்லது சுகாதார சேவைகள் போன்ற முறையான நிறுவனங்களை அணுகுகிறார்கள். பெரும்பாலும் பயம் மற்றும் களங்கம் காரணமாக இவர்கள் இதனை யாரிடமும் கூறுவதில்லை.

மோதல், மனிதாபிமான நெருக்கடிகள், காலநிலை மாற்றம் மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் அபாயத்தையும் பரவலையும் அதிகப்படுத்தியுள்ளன. இந்த சூழ்நிலைகளில் பெண்கள் அதிக விகிதாசாரத்தில்  பாதிக்கப்படுகின்றனர்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறை தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க செலவுகளை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் ஆண்டு செலவு EUR 366 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய பெண்கள், பழங்குடி பெண்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள்  அதிகமாக இத்தகைய வன்முறைக்கு முகங்கொடுக்கின்றனர்.

60%க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்னும் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் பலாத்கார  சட்டங்கள் இல்லை. மேலும், உலகின் பெண் சனத்தொகையில் பாதிக்கும் குறைவானவர்கள் சைபர் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள்.

சமூகத்தின் எல்லா பிரிவினரும் இந்த பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிர்வினை ஆற்றவேண்டியது கட்டாயமாக உள்ளது. விசேடமாக  ஆண்களும் சிறுவர்களும் தீங்கு விளைவிக்கும் ஆணாதிக்க விதிமுறைகள் மற்றும் அமைப்புகளுக்கு சவால்விடுவதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதிலும் முடிவுக்குக் கொண்டுவருவதிலும் சுறுசுறுப்பான மற்றும் பொறுப்புணர்வுள்ள பங்காளிகளாக மாற வேண்டும் என்று நான் எல்லா அன்னைகளுக்கும் சிறுவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

வன்முறை என்பது மனித உரிமைகளை மீறுவதாகும்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) என்பது ஒரு பரவலான மனித உரிமைகள் பிரச்சினை என்றும் அது வாழ்க்கையின் இயற்கையான, இயல்பான அல்லது தவிர்க்க முடியாத பகுதி அல்ல என்றும்; அதை நிறுத்த முடியும், நிறுத்தவேண்டும் என்றும் நாம் நமது நண்பர்கள், சமூக வட்டங்களில், நமது முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நாம் பிரச்சாரம் செய்வோம் என அழைப்பு விடுக்கின்றேன்.

ஆண்கள் ஒரு அடி முன்வைக்க வேண்டும் : "எல்லா ஆண்களும்" வன்முறையில் ஈடுபடுவதில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை  இயல்பாக்கப்பட்ட  நிலையிலேயே உலகில் அனைத்து ஆண்களும் வாழ்கிறார்கள் என்றும், இதனால் இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க நம் அனைத்து ஆண்களுக்கும் பொறுப்பு உள்ளது.

நாம் நமக்கும் சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும் ஆண்மைத்துவ சிந்தனைகள், எண்ணக்கருக்கள், நம்பிக்கைகளுக்கு சவால் செய்வோம் : ஆண்மைத்துவம் என்பதே  வன்முறை, ஆதிக்கம் செலுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் வரையறைகளை  கொண்டிருப்பதுதான்  என்ற விடயங்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து நிராகரித்து, அதற்கு பதிலாக கவனிப்பு, இரக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற மதிப்புகளைத் தழுவ (உள்வாங்க)வேண்டியதன் அவசியம்  நமது செய்தியின் மையக்கூறு ஆகும்.

பெண்ணிய இயக்கங்களை, சிந்தனைகளை  ஆதரிப்போம் : ஆண்களும் சிறுவர்களும் பாலியல் அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தை வழிநடத்தும் பெண்ணிய அமைப்புகள் மற்றும் பெண்ணிய இயக்கங்களின் பொறுப்புள்ள பங்காளியாக இருக்க நாம் நமது ஆண் நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடனான  உரையாடலை  ஊக்குவிப்போம்.

அனைத்து மட்டங்களிலும் செயற்படுவோம் : நாம் எம்முடன் தொடர்புபட்ட  தனிநபர், சமூகம் மற்றும் அமைப்பு ரீதியான எல்லா மட்டங்களிலும்  நடவடிக்கை எடுக்க முன்வருவோம்.  இதில்  பாலியல் ரீதியிலான வன்முறைகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் மற்றும் வன்முறையின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் வலுவான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை ஆதரித்து வாதாடலும் அடங்கும்.

பார்த்தும் பாராதிருக்கும், கேட்டும் கேளாதிருக்கும் மௌனத்தைக் கலைப்போம் : துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேசவும், துஷ்பிரயோகம் செய்பவர்களை நிராகரிக்கவும், புகாரளிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவோ அல்லது சாக்குப்போக்கு சொல்லவோ கூடாது என்று நாம் நமது ஆண் சகாக்கள் மற்றும் நண்பர்களை ஊக்குவிப்போம். இதனூடாக நாம் ஒரு அடி எடுத்து வைத்து பால்நிலை அடிப்படையிலான வன்முறையை முடிவுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/231371

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.