Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

வட்டுவாகல் பாலத்தில் கால் மடக்கி இருக்க முடியாத நெருக்கத்தில் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். இரண்டு பக்கமும் இரத்த நாற்றம் எடுத்த வட்டுவாகல் நீரேரியின் நீர் மெலிதாக அசைந்து அசைந்து அந்த பாலத்தில் மோதிக் கொண்டிருக்கிறது. அதற்குள் குப்பைகளைப் போல என்னவோ எல்லாம் மிதந்து கொண்டிருந்தன. உயிரற்ற உடலங்கள் என்று விடியும்வரை எமக்குத் தெரியாது. இருண்டுவிட்ட எங்கட தேசத்தில இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக எதிரியிடம் சரண்டைய முண்டியடித்தபடி நிற்கிறார்கள். எம் தலைக்கு மேலாக முல்லைத்தீவில் இருந்து வீசப்படும் எறிகணைகள் எம்மைத் தாண்டிப் போய் வீழ்ந்து வெடிக்கின்றன.

என் பிள்ளைகளைப் போல பாதுகாத்துவிடத் துடித்த என் மருமக்களை இறுக அணைத்தபடி நானும் ஒருவனாக அந்த நீண்ட கூட்டத்துக்குள் இருக்கிறேன். இறுதிவரை சிறிய முதலுதவி செய்யக் கூடியதாக மருத்துவப் பை ஒன்றைக் கைவிடாது என் தோழில் வைத்திருந்தேன். அப்போது எனக்கு பெரிதாகத் தெரிந்த சொத்துக்களில் அந்த நெஸ்டமோல் டின்னும் இதுவுமே இருந்தன.

அதற்குள் பெரிதாக ஒன்றும் இல்ல. நானே அம்மப்பாவின் வேட்டிகளைக் கொண்டு உருவாக்கிய “பீல்ட்கொம்ரேசர்” என்று இராணுவப்பாசையில் சொல்லக்கூடிய இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் துணி போன்று சுருட்டப்பட்டுக்கிடந்த நீண்ட வேட்டித் துண்டுகளே இருந்தன. அதனோடு ஓரிரண்டு பனடோல்கள் மட்டுமே இருந்தன.

ஒருவேளை திடீர் என்று யாருக்காவது காயம் வந்தால் அதைக்கொண்டு இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் முன்னேற்பாடு அது. அதுகளைக் கொண்டு வந்ததால் அதை வைத்து எதிரி எதாவது பிரச்சனை தரலாம் என்ற பயம் வந்ததனால் என் சித்தப்பா அவற்றை எறியச்சொல்கிறார். அதனால் வட்டுவாகல் நீரேரி அதை தனக்குள் வாங்கிக் கொண்டது.

நேற்று குருதியில் நனைந்து கிடந்த நெஸ்டமோல்ட் டின் இப்போது வெறுமையாகி இருந்தது. சின்னவர்கள் அதை முடித்துவிட்டார்கள். அதனால் அதையும் எறிகிறேன். எங்கள் உடல்கள் குருதி நாற்றத்தாலும் பயத்தினாலும் ஒடுங்கிப் போய் கிடந்தது. குரல்வளை நீருக்காகவும் இரைப்பை சாப்பாட்டுக்காகவும் ஏங்கிக் கொண்டிருந்தன.

அதைவிட எங்கள் முன்னே நீண்டு கிடந்த வரிசையைத் தாண்டி கனரக ஆயுதங்களைத் ஏந்திக் கொண்டு முறைத்தபடி நின்ற சிங்கள கொடூரர்களின் அடுத்தது என்ன செய்யப்போகிறார்கள் என்று எண்ணி மனமும் உடலும் நடுங்கிக் கொண்டிருந்தன. இரு எறிகணைகள், இரண்டே இரண்டு எறிகணைகள் அந்த இடத்தில் வீழ்ந்து வெடித்தால் போதும் நாம் அனைவரும் உடல்சிதறிப் பலியாகிடுவோம்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதுவும் தெரியாத பதட்டமான நிலை. திடீர் என்று எமக்கு பின்னால் இருந்து சில துப்பாக்கி வேட்டுக்கள். என் அருகில் இருந்த சிலர் காயப்படுகிறார்கள். என் சகோதரன் ஒருவன் முதுகில் காயமடைகிறான். குருதி கொப்பளிக்கிறது. அவலத்தின் ஓசை வானில் எழுந்தது. இன்னமும் நாங்கள் யுத்த பிரதேசத்துக்குள் தான் இருக்கிறோம் என்பது புரிந்தது. ஐயோ ஐயோ என்று அத்தனைபேரும் குளறுகிறார்கள். நாங்கள் அப்பாவி மக்கள் எங்களை சுடாதீர்கள் என்று கத்துகிறார்கள். இதையெல்லாம் பார்த்து நகைக்கிறது எம்மைச் சுற்றி நின்ற சிங்கள வல்லூறுகள்.

பீறிட்ட குருதியை கட்டுப்படுத்த எதுவும் இல்லை. கொஞ்ச நேரத்துக்கு முன் நீருக்குள் எறிந்த வேட்டித்துண்டுகளை திரும்பிப்பார்க்கிறேன். அவை நனைந்து போய் கிடந்தன. காயப்பட்டவர்களை அணைத்தபடி குருதி வரும் இடங்களுக்கு ஏதோ ஒன்றை கிழித்துக் கட்டுகிறார்கள் உறவுகள்.

மீண்டும் மீண்டும் ஏவப்பட்டுக்கொண்டிருக்கும் எறிகணைகளின் வீச்சு கொஞ்சம் தூரவாக சென்று வெடித்தது. எம் தலைகளுக்கு மேலாக துப்பாக்கி ரவைகளும் எம்மை தாண்டிச்சென்றன.

வழமை போல் பாதுகாப்பு வலையம் என்று ஓரிடத்தில் மக்களை குவிய வைத்து இனவழிப்பு செய்ததைப் போல வட்டுவாகல் பாலத்தில் முண்டியடித்தபடி கூடிநிற்கும் எம் எல்லோரையும் இதில் வைத்தே சுட்டுக் கொல்லப்போகிறது இந்த சிங்கள வல்லூறுகள் என்று எனக்குத் தோன்றியது.

நாங்கள் தங்கி இருந்த பதுங்ககழிக்கு அருகில் மூடிய நிலையில் உருவாக்கப்பட்டிருந்த பதுங்ககழி ஒன்றில் நான்கு நாட்களுக்கு முன் பத்துப்பேருக்கு மேல் ஒரே ஒரு எறிகணைத் தாக்குதலால் இறந்த சம்பவம் கண்ணுக்குள் வந்தது. அதைப் போலவே இப்போதும் நடக்கப்போவதாகவே உள்மனம் சொல்கிறது. மனமும் உடலும் நடுங்குகிறன. நான் மருமகனை இறுக கட்டியணைத்தபடி அவன் அழுவதை நிறுத்த முயற்சிக்கிறேன். பாவம் ஒன்றரை வயதுக் குழந்தை அனுபவிக்க கூடாத எல்லா துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறான்.

திடீர் என்று ஏதோ ஆரவாரம். முன்னே வரச்சொல்லி சொல்லி சிங்களத்தில் கட்டளைகள். சிறிய நேரத்தில் தமிழிலும் கட்டளை. வட்டுவாகல் பாலத்தில் இருந்து இறுதியாக என் மண்ணை ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன். அது குருதிக்காடாக சோர்ந்துபோய் பிணங்களைச்சுமந்து கிடக்கிறது. மருமகனை அணைத்தபடி எழுந்து கொள்கிறேன். கொலைவெறி ஆடிய சண்டைக்களத்தில் இருந்து தப்பி வந்து பலிக்களத்துக்கு இழுத்துச்செல்லப்படும் பலிக்கடாக்களைப் போல எம்மை வரிசையில் கொண்டு சென்றார்கள் கொடிய சிங்கள இராணுவம்.

நடைப்பிணமாக நடந்து கொண்டிருந்தோம். முப்பது வருடங்களாக லீமா சேராவையும்,கிலோ9 ஐயும், அல்பாவையும் அழைத்துக்கொண்டருந்த வோக்கிகள் அப்போது எனக்குப்புரயாத சிங்களத்தில் யாரையோ அழைத்துக்கொண்டிருந்தன…

நினைவுடன் இ.இ.கவிமகன்

18.05.2025

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.