Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01

கிறிஸ்துமஸ் ஈவ் [christmas eve] சந்திப்பு

டிசம்பர் 24 அன்று, யாழ்ப்பாணத்தின் அன்றைய மாலை மெதுவாக மங்கிக் கொண்டிருந்தது. நாட்காட்டியில் [காலண்டரில்] அது கிறிஸ்மஸ் ஈவ் [இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள்] என்று எழுதப்பட்டிருந்தாலும், யாழின் வானம் அதை எந்த மத நாளாகவும் கருதவில்லை. அது பைபிளில் காணப்படும் தேதி அல்ல. கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததாக ஒருபோதும் பைபிளில் கூறப்படவில்லை. அது ஒரு முன்மொழிவு மட்டுமே. அதுவும் கிறிஸ்து இறந்து 340 ஆண்டுகளின் பின்பே. அதனாலோ என்னவோ அது எப்போதும் போலவே — காற்றோடு, உப்புக் காற்றின் சுவையோடு, மண்ணின் நினைவோடு இருந்தது. ஆனாலும் மக்கள் பெரும் திரளாக வந்தார்கள். வரலாற்றுக்காக அல்ல, நம்பிக்கைக்காக வந்தார்கள்.

கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, யாழ்ப்பாண தேவாலயத்திற்குள் காலண்டரில் நம்பிக்கை கொண்டவராக அல்ல, மாறாக மக்களை, இயேசுவை நம்புபவராக, பகுத்தறிவில் என்றும் தன்னை ஒரு மாணவனாகக் கருதும் அடைக்கலம் நுழைந்தான். அவன் ஒரு இளம் வழக்கறிஞர். வடக்கு – கிழக்கில் உண்மைக்காக வழக்காடும் ஒருவன். போலீஸ் நிலையங்களில் அவன் பெயர் நன்கு அறியப்பட்டது. அதிகாரிகளுக்குப் பிடிக்காத பெயர். ஆனால் மக்களுக்கு நன்கு அறியப்பட்ட , விரும்பப்பட்ட பெயர். இவன் அடிக்கடி, தூசி நிறைந்த மாஜிஸ்திரேட் (நீதிபதி / Magistrate) நீதிமன்றங்களிலும் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட காவல் நிலையங்களிலும் தோன்றினான். - தங்கள் சொந்த நிலம், பலவந்தமாக பறிபோவதை பாதுகாத்ததற்காக கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளுக்காகவும், நில உரிமையாளர்களுக்காகவும் , இந்தியா மீனவர்களின் அத்துமீறலுக்கு - அரசின், கடற்படையின் தீவீர கண்காணிப்பு வேண்டி எதிர்ப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்காகவும், தங்கள் இறந்தவர்களை நினைவு கூர்ந்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்காகவும், மக்களுக்காகவும் குரல் கொடுத்தான்.

அவனுக்கும் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் என்பது பிறந்தநாள் அல்ல, அது வேறு ஒரு நோக்கத்திற்காக, அதாவது அவர் இறந்து நீண்ட காலத்திற்குப் பிறகு - அந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது, அப்போது ரோம் நகருக்கு எளிதான மதமாற்றம் தேவைப்பட்டது, கிறிஸ்துவின் பிறப்பை ஐரோப்பா ஏற்கனவே விரும்பிய சாட்டர்னேலியா மற்றும் சூரிய விழாக்களுடன் இணைக்க அந்த நாள் தேர்ந்து எடுக்கப்பட்டது என்பது வரலாறாகும். ஆனால் உலகத்திற்கு வழிகாட்டிய இயேசுவில் நம்பிக்கை உண்டு. தேதிகளை மட்டும் தான் அவன் நம்பவில்லை. அதனால்த்தான் அவன் அங்கு வந்தான்.

ஒரு சைவ தமிழ், இசை மற்றும் நடன ஆசிரியை, அவர் மதம் மாறுவதற்காக அல்ல, பாடகர் குழுவிற்கு ஒரு பயிற்சி அளிக்க அங்கு அழைக்கப்பட்டு இருந்தாள். அவளின் பெயர் ஆராதனா. சங்கீதத்தை இறைவனுக்காக அல்ல — மனிதனுக்காகப் பாடுவாள். எல்லாவற்றிற்கும் மேலாக, பண்டிகை கீதங்கள் (கரோல் கீதங்கள் / Christmas Carols) முதலில் கிறிஸ்துமஸுக்கு மட்டுமே பிரத்தியேகமானவை அல்ல. அவை ஒருகாலத்தில், வசந்தத்திற்கும், அறுவடைக்கும், சில நேரம் கிண்டலுக்கும் கூட பாடப்பட்ட பாடல் ஆகும். [They were sung in May fields, during harvests, even as satire]. அதனால் அவள் அதில் தேர்ச்சி பெற்ற பாடகியாகவும் இருந்தாள்.

ஆராதனா, பலிபீடத்தின் அருகே வெறுங்காலுடன் நின்று, சுருதியை சரிசெய்து, தாளத்தைக் கற்றுக் கொடுத்தாள். அது மட்டும் அல்ல,
மகிழ்ச்சி ஒரு கடவுளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல [how joy does not belong to one god alone.] என்பதையும் கற்றுக் கொடுத்தாள்.

ஒரு மரப் பலகையில் தாளம் போட்டு, ஒரு சிறுவனை மெதுவாகத் திருத்துவதை அடைக்கலம் ஓரளவு அருகில் நின்று கவனித்தான். அவள், அவர்களுக்கு குரல் பயிற்சிக்காக பாடிய போது, தேவாலயம் ரோமன், புராட்டஸ்டன்ட் அல்லது ஆங்கிலிகன் மதத்தை உணரவில்லை - அது தமிழை உணர்ந்தது [When she sang, the church did not feel Roman, Protestant, or Anglican—it felt Tamil.].

நள்ளிரவு சேவைக்குப் பிறகு, அடைக்கலமும் ஆராதனாவும், அலங்கரிக்கப்படட காகித நட்சத்திரங்களின் கீழ் அமர்ந்து ஒருவருடன் ஒருவர் சமயங்களின் வரலாறு பற்றியும், இன்றைய இலங்கை வாழ் தமிழரின் நிலைகள் பற்றியும் பேசினர் . அப்பொழுது,

"உனக்குத் தெரியுமா? ," அவள் சிரித்துக் கொண்டே கேட்டாள், "புத்தாண்டும் வரப்போகிறது. இன்னொரு கடன் வாங்கிய கொண்டாட்டம்."

அவன் தலையசைத்தான். "ஜனவரி 1 ஆம் தேதி பிரபஞ்சம் சார்ந்தது அல்ல. அது நிர்வாக ரீதியானது. ஜூலியஸ் சீசரின் நாட்காட்டி. பேரரசால் எழுதப்பட்ட காலம்."

"மகாவம்சம் கூட புத்தர் இலங்கைக்கு மூன்று முறை பறந்து வந்தார் என்று கூறுகிறதே ?, அதை நம்புகிறீர்களா? என்று ஆராதனா இலங்கை அரசியல் பக்கம் திரும்பினாள். அடைக்கலம் ஒரு சிரிப்புடன் கூறினான், எல்லா புராணங்களும் கூறும் புரளிகள் தான் இவை, என்றாலும் மகாவம்சத்தை உண்மையான வரலாறாக இன்னும் நம்புகிறார்கள். அது தான் தமிழர் பூமியில் நிகழும் அட்டூழியம்" என்றான்.

“நம்பிக்கை கேள்வி கேட்காத போது தான் ஆபத்தாகிறது,” அவன் தொடர்ந்தான். அவள் மெதுவாகச் சொன்னாள்: “ஆமாம் கேள்வி கேட்கத் தெரிந்த ஒரு மனிதனால் மட்டுமே நம்பிக்கையையும் காதலையும் உண்மையாகப் பாதுகாக்க முடியும். [Only a man who knows how to ask questions can truly protect belief and love.]”

அந்த இரவு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் இருவரையும் சமமாகப் பார்த்தது. அந்த உரையாடல் அவர்களை கொஞ்ச நேரம் ஆறுதலாக கதைக்க வழிவகுத்தது. ஆனால், அந்த உரையாடலின் போது, அவன் கண்களுக்கு ஒரு ஓய்வும் கிடைக்கவில்லை. அது அவளை அளந்து அளந்து அவன் மனதுக்கு சொல்லிக் கொண்டே இருந்தது.

கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக்
காவியை கருவிள மலரை
வடுவினைக் கொடிய மறலியை வலையை
வாழை வெண் ர்ரவுநீன் டகன்று
கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக்
குமிழையும் குழைyaiயும் சீறி
விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை
வேலினும் கூறிய விழியால்

ஒப்புமையில் கடலினையும், மீனையும், அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந் தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை தன்னகத்தே கொண்ட ஆராதனா, அடைக்கலத்தின் மனதில் புகுந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

கிறிஸ்மஸ் – புத்தாண்டு இடைப்பட்ட நாட்கள், விடுதலைகளாக இருந்ததாலும், கொண்டாட்ட நாட்களாக இருந்ததாலும் அவர்கள் உரையாடல்களை தொலைபேசி மூலமும் சிலவேளை நேரடியாகவும் சந்தித்து தொடர்ந்தனர். யாழ்ப்பாண சுப்பிரமணிய பூந்தோட்டத்தின் பழைய மரங்களுக்குக் கீழும், யாழ் பொது நூலத்திலும் அவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலங்களை மெல்ல எழுதிக் கொண்டு இருந்தனர். ஆனால் அந்த பழைய மரங்கள் மகிழ்வாகக் காணப்படவில்லை. அதை வெட்டி அகற்றி, உட்புற அரங்கம்அமைப்பதில் சிலர் ஈடுபடுவது அதன் காதில் விழுந்ததோ என்னவோ?

அடைக்கலத்தின் கண்களில் கேள்விகள் அதிகம். பதில் கொடுக்காத உலகத்திற்கான வழக்குத் தயாரிப்பே அவன் வாழ்வு. அதேபோல, ஆராதனாவுக்கு நடனமும் இசையும் அவளுக்குப் பக்தியின் மொழி. கேள்வி கேட்காமல் நம்புவதில் அவளுக்கு ஒரு அமைதி இருந்தது. ஆனால் அப்போது அவர்களுக்கு, குறிப்பாக ஆராதனாவுக்கு காதல் பிறக்கவில்லை. ஆனால் இரண்டு உலகங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தன.

"இறப்பவே தீய செயினும் தம் நட்டார்
பொறுத்தல் தகுவதொன்று அன்றோ - நிறக்கோங்கு
உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!
ஒருவர் பொறை இருவர் நட்பு"

என்பது போல, இந்த அடி வாயிலாகப் பொறுமை குணமுடையோராக நண்பர்கள் இருக்க வேண்டுமென நாலடியார் பாடல் உரைக்கின்ற படி, அவர்களின் சந்திப்பு பொறுமையுடனும், ”ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று” என்பதற்கு இணங்க, பிற உயிர்களுக்குக் கருணை பண்பு காட்டும் குணமில்லாதவரின் உள்ளத்தில் நட்பும் உறவும் தோன்றுவதில்லை என்பதை உணர்ந்து அது அமைதியாகத் அவர்களுக்கு இடையில் தொடங்கியது.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 02 தொடரும்

துளி/DROP: 1965 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01

https://www.facebook.com/groups/978753388866632/posts/33069006056081282/?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 02

கிறிஸ்துமஸுக்கு புத்தாண்டுக்கும் இடையில்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு இடையில், அடைக்கலமும் ஆராதனாவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு யாழ்ப்பாண பொது நூலகத்தில் மீண்டும் சந்தித்தனர்.

ஆராதனா நூலகக் குறிப்புப் பகுதியில் நாட்டுப்புற தாளங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்; அடைக்கலம் குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு மீனவருக்காக ஒரு ஆட்கொணர்வு வழக்கைத் தயாரித்துக் கொண்டிருந்தார். வரலாற்றால் வடுக்கள் நிறைந்த, ஆனால் அதை மறைப்பதற்காகவே முழுமையாக புனர்நிர்மாணம் அரசால் செய்யப்பட்ட அந்த யாழ்ப்பாண பொது நூலகத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் உலகங்களைக் கற்றுக்கொண்டனர்.

'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்'

இதைத்தான்1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் இலங்கை அரச அதிகாரத்தால், சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் முற்றாக எரிக்கப்பட்டது. அது பற்றியே முதலில் அங்கு பேசத் தொடங்கினர்.

அவர்களின் கலந்துரையாடலுக்கு இடையில், ஆராதனா, கிறிஸ்மஸ் ஈவை [christmas eve] நான் குழந்தைப் பருவத்தில் விளக்குகளாகவே பார்த்திருக்கிறேன். நட்சத்திரங்களாக. பாடல்களாக. ஆனால் அன்று அது கேள்வியாக இருந்தது. இப்ப கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் முதல் முறை இந்த கிறிஸ்மஸ் ஈவுக்கு சென்றபின், அந்த கேள்வி மறைந்து விட்டது என்றாள். அடைக்கலம் ஒன்றும் பேசவில்லை. அவளை, அவளின் பேச்சை ரசித்தபடி மௌனமாக இருந்தான். பின் இப்ப கிறிஸ்மஸ் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டான். அவள் சற்றும் தாமதிக்காமல், உடனடியாகவே, அவனின் கண்ணை பார்த்தபடியே, "இப்போது எனக்குத் தெரியும் — நான் கற்றுக் கொண்ட கிறிஸ்மஸ் பிறந்த நாளைப் பற்றி அல்ல. மனிதன் மனிதனாக நிற்பதைப் பற்றி" என்றாள். "நான் கேள்வி கேட்டே பழகவில்லை. வழிபாடு எனக்கு இசை. பாடல். நடனம். கண்கள் மூடி ஏற்றுக் கொள்ளும் அமைதி." என்று தன்னையும் கொஞ்சம் அறிமுகப் படுத்தினாள்.

இதுவரை அமைதியாக இருந்த அடைக்கலம், "நான் வழக்கறிஞராக மாறியது சட்டத்தை நேசித்ததனால் அல்ல. அநீதியைப் பார்த்து அமைதியாக இருக்க முடியாததனால்" என்றான். "வடக்கில் ஒரு மனிதன் அவனுடைய நிலத்தில், அவனே விருந்தினன் ஆக்கப்பட்ட போது நான் சட்டப் புத்தகத்தைத் திறந்தேன்" என்று விளக்கமும் கொடுத்தான்." அன்று முதல் என் கிறிஸ்மஸ் ஒரு வழக்குக் கோப்பாகவே இருந்தது, அது மட்டும் அல்ல, நான் தேவாலயத்திற்குப் போகிறேன். ஆனால் நான் அங்கு நம்பிக்கையைத் தேடுவதில்லை. அமைதியை மட்டும் தேடுகிறேன்." என்று தன் கதையைச் சுருக்கமாக சொல்லி முடித்தான்.

ஆண் பெண்ணின் உடல் அழகைக் கண்டு கவரப்படுவது போல, பெண் ஆணின் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, பாதுகாப்பு உணர்வு, அக்கறை போன்ற குணாதிசயங்களில் மயங்கி காதலிப்பதே பொதுவான கண்ணோட்டமாகும். அதில் ஆராதனாவும் ஒருவளே. என்றாலும், ஆராதனா தன் உணர்வுகளை வெளிக் காட்ட நினைத்தாலும் ஏதோ ஒரு நாணம், வெட்கம் அவளைத் தடுத்தது.

பெண்ணிடம் தயக்கம் இருக்கும், பயம் இருக்கும், கூச்சம் இருக்கும், நாணம் இருக்கும், வெட்கம் இருக்கும் .... இவற்றிற்கு நடுவில் அவர்கள் தங்கள் காதலையும் சொல்லியாக வேண்டும். இந்த பிரச்சனை இன்று நேற்று அல்ல .... தொன்று தொட்டு வருகிறது.

பாண்டிய மன்னன் வீதி உலா போகிறான். அவள் ஒரு சாதாரண குடும்பப் பெண். பாண்டியன் மேல் காதல். சொல்லவா முடியும் ? அவனைக் கொஞ்சம் பார்கவாவது செய்யலாம் என்றால் அவனை சுமந்து வரும் அந்த பட்டத்து பெண் யானை வேக வேகமாக நடந்து சென்று விடுகிறது.

யானையிடம் தலைவி சொல்கிறாள் ... "ஏய் யானை, கொஞ்சம் மெதுவா தான் போயேன் ... என்ன அவசரம் .." என்று சொல்ல வேண்டும். யானை கேட்குமே , "ஏன் என்னை மெதுவாக போகச் சொல்கிறாய் " என்று. பாண்டிய மன்னனை சைட் அடிக்கணும் என்று சொல்லவா முடியும் ?

அவள் அந்த பட்டத்து பெண் யானையிடம் சொல்கிறாள் " நீ இப்படி தங்கு தங்கு என்று வேகமாய் நடந்து போனால், ஊரில் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள். இப்படி ஒரு அடக்கம் இல்லாமல், ஒரு பெண் இருக்கலாமா என்று உன்னைப் பற்றி பழி பேசுவார்கள். எனவே, மெல்லமா போ " என்கிறாள். என்னவோ, அந்த யானை மேல் ரொம்ப கரிசனம் உள்ளவள் போல.

எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான்
புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால்
பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை
ஐயப் படுவது உடைத்து

அப்படித்தான் ஆராதனா தன் மனதை மெல்லமா போக செய்து விட்டாள். அதனால், அடைக்கலத்துக்கு அவளின் நிலையை அறியமுடியவில்லை.

அதன் பின் ஒரு முறை அடைக்கலத்துடன் நீதிமன்றத்திற்குச் சென்றாள் - உள்ளே அல்ல, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுடன் வெளியே காத்திருந்தாள், சட்ட பயத்தை [சட்டத்தின் மீதான அச்சம்] இலகுவான தமிழில் மொழிபெயர்த்தாள். மகன் காணாமல் போன அந்த வயதான பெண்மணியிடம், சமநிலையில் இருந்து, ஆறுதல் அளிக்கப் பேசுவதை அவன் பார்த்தான்.

அந்த தருணத்தில் அவனின் மனம் அவனுக்குச் சொன்னது, "அவளின் தனிப் பெருமை கொண்ட அழகை விட, அவள் பிறர் துயரத்தை தன் துயராக ஏற்கும் மனிதராக இருக்கிறாள்" என்று. அது அவனை மேலும் சிந்திக்க வைத்தது. அவள் செய்யும் இந்தச் செயல், அவன் வழக்காடும் வாழ்க்கையையும் பிரதிபலித்து, இருவரும் ஒரே உண்மையின் பக்கம் நிற்பவர்கள் என்பதை அவன் உணர்ந்தான். அந்த நிமிடம் அவனுக்குச் சொன்னது: “இந்த பெண்ணுடன் நான் வாழ்க்கையைப் பகிர முடியும்.”

அன்று மாலை, சோதனைச் சாவடியைத் தாண்டி அவர்கள் செல்லும் போது, ஆராதனாவின் மனம் காணாமல் போன தன் மகனைப் பற்றி பேசும்போது குரலே இல்லாமல் போன அந்த முதிய பெண்ணின் முகத்தில் இன்னும் இருந்தது. இரும்புக் கம்பிகளும் சீருடை ஒளிகளும் சூழ்ந்த அந்தச் சாலையில், அவள் திடீரென நின்று, “நாம் செய்கிற எல்லாம் சில நேரங்களில் பயனற்றது போல் தோன்றுகிறதா?” என்று கேட்டாள். அந்தக் கேள்வி அவள் நம்பிக்கையால் அல்ல; அவள் சுமந்த பொறுப்பின் சத்தம்.

அடைக்கலம் ஒரு கணம் மௌனமாக இருந்தான். பிறகு மெதுவாகச் சொன்னான்: “நான் வருவதை நிறுத்தும் நாளில்தான் அது பயனற்றதாகும்.” அவன் நீதியை வெற்றியாக மாற்ற முடியாதவன் என்பதை அறிந்திருந்தான்; ஆனால் நீதி தேவைப்படும் இடத்தில் இருப்பதை விட்டுவிட மறுத்தவன். அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள்—சோதனைச் சாவடியைத் தாண்டி, இரவுக்குள்—உலகத்தை மாற்ற முடியாவிட்டாலும், மனிதனை முற்றிலும் உடைய விடாமல் தடுக்க நிற்கும் மனிதர்களைப் போல. அப்பொழுது ஒரு பாடல் அவர்களின் காதில் ஒலித்தது;

"உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன்
சிலுவையில் நீ நின்றாய்
அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன்
சிலகாசுக்கு விலை போனான்
அன்று முளைத்த இந்த வஞ்சகன்
சிறிதாய் பெரிதாய் வளர்ந்து
இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான்
சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!

உன்னை நேசித்த உன் தொண்டர்கள்
சிலுவையை தோலில் சுமந்தனர்
அன்னை பூமி முழுவதும் உன்
சிந்தனையில் வழி காட்டினர்
அன்று கண்ட மனித நேயம்
சிறிதாய் பெரிதாய் வளர்ந்து
இன்று நாம் உரிமையுடன் வாழ
சிலுவையில் எம்மை அறைகிறோம் !!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 03 தொடரும்

துளி/DROP: 1970 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 02

https://www.facebook.com/groups/978753388866632/posts/33112176718430882/?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.