Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

anura.jpg?resize=750%2C375&ssl=1

தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன்.

யாழ் நகரத்தில் நோ லிமிட் திறக்கப்படுகையில் தையிட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகப்  போராடிக் கொண்டிருந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும் எங்கே சனக்கூட்டம் அதிகம் என்று கேட்டு முகநூலில் பதிவுகள் பகிரப்பட்டன.

 

நோ லிமிட் திறப்பு விழாவில் ஒப்பீட்டளவில் அதிக தொகை நின்றது என்பதே உண்மை. காலையிலிருந்து இரவு வரையிலும் அங்கே பறை மேளம் முழங்கிக் கொண்டிருந்தது. மக்கள் வெள்ளம் அலை மோதியது.அந்தப் பகுதியில் போக்குவரத்து செய்வது கடினமாக இருந்தது.  

ஆனால் அதற்காக நோ லிமிட்டுக்கு போனவர்கள் எல்லாருமே தையிட்டி போராட்டத்துக்கு ஆதரவில்லை அல்லது எதிரானவர்கள் என்று முடிவெடுக்க தேவையில்லை. ஒரு மக்கள் கூட்டத்துக்குள் பல்வேறு தரப்பினரும் இருப்பார்கள். அரசியல் ஈடுபாடு உடையவர்களும் இருப்பார்கள்,அரசியல் விழிப்பு இல்லாதவர்களும் இருப்பார்கள். ஏன் அதிகம் போவான்? இறுதிக்கட்டப் போரில் வன்னியில் வாழ்ந்தது 3 லட்சத்துக்கும் குறையாத ஒரு சனத் தொகை. மொத்த ஈழத் தமிழ் ஜனத் தொகையில் அது ஒரு சிறிய விகிதம்.ஆனாலும் முழு இனத்துக்குமான போராட்டத்தின் சிலுவையை ஒப்பிட்டுளவில் அதிகமாக சுமந்தது அந்த சிறிய சனத் தொகைதான்.அதேசமயம் ராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த தமிழர்கள் அந்த காலகட்டங்களில் தமது இயல்பு வாழ்க்கையை முன்னெடுத்தார்கள். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் பயந்து பயந்து வாழ்ந்தார்கள்.எனவே இறுதிக்கட்டப் போரின் போதும் தமிழ் ஜனத்தொகையில் பெரும் பகுதி போராட்டக்களத்துக்கு வெளியேதான் இருந்தது. அது தன்னுடைய வழமையான காரியங்களைச் செய்து கொண்டிருந்தது. இது ஒரு சமூக யதார்த்தம்.

 

நோலிமிட்டுக்கு போனவர்களை தையிட்டிக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுடையது;ஊடகங்களுடையது; கருத்துருவாக்கிகள்,புத்திஜீவிகள்,மதத்தலைவர்கள்,செயற்பாட்டாளர்களுடையது.  

தையிட்டியில் கடந்த 30 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடக்கின்றது. ஒவ்வொரு பௌர்ணமி நாளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்கே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.ஆனால் அவற்றில் பெரும்பாலானவை கவனயீர்ப்பு போராட்ட வகைப்பட்டவை.அங்கே பெருந் திரள் மக்களை பெரும்பாலும் காண முடிவதில்லை.இதுதொடர்பாக முன்னணியின் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு.எனினும் எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் அப்பால் தையிட்டி   விவகாரத்தை தொடர்ச்சியாக ஏரியும் நிலையில் வைத்திருந்ததும் அந்த நெருப்பை தணியவிடாது பேணியதும் முன்னணிதான்.

 

அதேசமயம் ஏனைய தமிழ் கட்சிகளும் அந்த போராட்டத்தில் இணையும்போது அந்தப் போராட்டத்தில் அதிகரித்த மக்கள் பங்களிப்பை பார்க்க முடிந்திருக்கிறது. கடந்த 30 மாதங்களுக்கு மேலான காலப்பகுதியில் அவ்வாறு சில நாட்களில் அதிகரித்த தொகை மக்களை அங்கே காண முடிந்தது. அவ்வாறான நாட்களில் அது அனைத்துக் கட்சிப் போராட்டமாக,மக்கள் அமைப்புக்கள்,செயற்பாட்டாளர்கள் இணைந்த போராட்டமாக,பலமான எதிர்ப்பாகக் காணப்படுவதுண்டு.  

அப்படி ஒரு எதிர்ப்புத்தான் கடந்த மாத இறுதியில் கட்டப்பட்டது.அந்த எதிர்ப்பை ஒருங்கிணைத்தது விகாரை அமைந்திருக்கும் பிரதேசத்துக்குரிய உள்ளூராட்சி சபையாகும்.அந்த உள்ளூராட்சி மன்றம் அந்த விகாரைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி,அதற்காக போராட அழைப்பு விடுத்தது. அந்தப் போராட்டம் ஒரு விதத்தில் அனைத்துக் கட்சி போராட்டம்தான். வழமையாக அங்கே போராடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் இந்தியாவில் சந்திப்புகளில் ஈடுபட்டிருந்த காரணத்தால், அக்கட்சியின் அடுத்தடுத்த நிலைத் தலைவர்கள்,தொண்டர்கள் அங்கே காணப்பட்டார்கள். சஜித் பிரேமதாசாவின் கட்சியைச் சேர்ந்தவர்களும் அங்கே காணப்பட்டார்கள்.ஆனால் தேசிய மக்கள் சக்தியின் தமிழ் உறுப்பினர்கள் யாரும் அங்கே இருக்கவில்லை. அதுவும் தையிட்டியில்  ஒப்பீட்டளவில் அதிகம் பேர் திரண்ட ஒரு போராட்டம்.

 

அப்படித்தான் நேற்று நடந்த போராட்டமும். அங்கேயும் வழமையை விட அதிக தொகையினர் வந்திருந்தார்கள். எல்லாக் கட்சிகளும் இணைந்தால், மக்கள் அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவர்களும் சிவில் சமூகங்களும் செயற்பாட்டாளர்களும் இணைந்தால்,அப்படிப் பெரிய அளவில் போராட முடியும் என்பதற்கு அது ஓர் ஆகப்பிந்திய உதாரணம். இந்த உதாரணத்தைப் பின்பற்றி போராட்டத்தை மேலும் மக்கள் மயப்படுத்தினால் அதிக சனத்தொகையை கொண்டு வர முடியும்.  

கடந்த மாத இறுதியில் நடந்த போராட்டத்தை அரசாங்கம் பலப் பிரயோகத்தின் மூலம் அடக்க முற்பட்டது. அதன் விளைவாக நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள்.அது பரவலாக எதிர்ப்பைக் கிளப்பியது.போராட்டம் அடக்கு முறையை வேகப்படுத்தும்.அடக்குமுறை போராடத்தைப்  பலப்படுத்தும்;மக்கள் மயப்படுத்ததும். அப்படிப்பட்டதோர் பின்னணியில், நேற்றைய பௌர்ணமி நாளில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அது அதற்கு முதல் நடந்த போராட்டத்தை விடப் பெரியதாக அமையலாம் என்று அரசாங்கம் ஊகித்திருக்க முடியும்.

 

அவ்வாறு பெரிய அளவு போராட்டம் வெடித்தெழுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் தன்னுடைய முகவர்களின் ஊடாக சமூக வலைத்தளச் சூழலைப் பயன்படுத்தியது என்று காணி உரிமையாளர்களில் ஒருவராகிய பெண் சுட்டிக்காட்டுகிறார். மேலும், நேற்று நடந்த போராட்டத்தைத் திசை திருப்பும் நோக்கத்தோடு யாழ் அரச அதிபர் காணி உரிமையாளர்களை சந்தித்தார் என்ற தொனிப்படவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.மிகத் தெளிவாகப் பேசும் அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கலாம்.

 

ஏனென்றால் கடந்த 15 மாதங்களாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது. இந்த15 மாத கால பகுதிக்குள்ளும் அந்த விகாரை தொடர்பான நிர்ணயகரமான முடிவுகளை எடுக்க அரசாங்கம் முயற்சிக்கவில்லை. முன்னைய அரசாங்கத்தைப் போலவே இந்த அரசாங்கமும் தையிட்டி விடயத்தில் ஒரு தீர்வைத் தரும் என்று தமிழ்மக்கள் நம்பக்கூடிய விதத்தில் எதுவும் நடக்கவில்லை.  

ஆனால் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மிக முக்கிய விகாரைகளில் ஒன்று ஆகிய நைனா தீவு விகாரையின் அதிபதி போராடும் மக்களுக்குச் சாதகமாக கருத்துத் தெரிவிக்கின்றார்.சக்தி மிக்க மகாநாயக்கர்களுக்கு எரிச்சலூட்டக்கூடிய கருத்துக்களைக் கூறுகிறார்.

 

அவருக்கும் தையிட்டி விகாரையின் அதிபதிக்கும் இடையில் ஏதோ முரண்பாடு உள்ளது என்பது ஏற்கனவே அவதானிக்கப்பட்ட ஒரு விடயம். எனினும் தமிழ்ப் பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய விகாரையின் அதிபதி தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்துக் கதைப்பது மிக அரிதான ஒரு புறநடை.

 

“டாண்” தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் சக்தி மிக்க பௌத்த மகா நாயக்கர்களை விமர்சிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அதேசமயம் அந்த நேர்காணலின் ஊடாக தெரியவந்த மற்றொரு விடயம் என்னவென்றால்,நைனாதீவு விகாராதிபதியைப் போன்றவர்களின் கருத்துக்களை பலமான மகா சங்கங்கள் பொருட்படுத்தாது என்பதுதான்.  

இவ்வாறு பெரும்பான்மைக்குள் காணப்படும் மிகச்சிறிய சிறுபான்மை எப்பொழுதும் ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நிற்கும். ஆனால் இறுதி முடிவு எடுக்கப்படும் பொழுது பெரும்பான்மையின் உணர்வுகள்தான் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த அடிப்படையில் தையிட்டி விகாரையை அகற்றும் ஒரு முடிவை அரசாங்கம் எடுக்காது. அப்படி எடுத்தால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது அது வாக்குறுதி அளித்த உண்மையான மாற்றத்தை தொடக்கி வைக்கிறது என்று பொருள்.

 

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு மேலாகிவிட்டது.தையிட்டி போராட்டம் கடந்த 30 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. அது தனியாக ஒரு காணிப் பிரச்சினை மட்டுமல்ல. சட்டப் பிரச்சினை மட்டுமல்ல.அது ஒரு மதப் பிரச்சினை மட்டுமல்ல. அவற்றை விட ஆழமான பொருளில் அது நிலப்பறிப்பு பற்றிய பிரச்சினை. அது அதன் இறுதி அர்த்தத்தில் ஓர் அரசியல் பிரச்சினை.எனவே அதற்கு அரசியல் தீர்வுதான் உண்டு.அந்தத் தீர்வை முன்வைக்கத் தேவையான அரசியல் திட சித்தம் தேசிய மக்கள் சக்தியிடம் உண்டா?

 

தமிழ்த் தரப்பில்,அந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர்கள், அந்தப் பிரச்சினையை தொடர்ந்தும் எரியும் நிலையில் வைத்திருந்த அரசியல் கட்சிகள், செயற்பாட்டாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்புக்களும் இணைந்து ஒரு கட்டமைப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். நில மீட்புப்புக்கான அந்தக் கட்டமைப்புத்தான் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்.தனியே காணிச் சொந்தக்காரர்கள் அரச உயர் அதிகாரிகளோடு பேசுவதனால் அதைத் தீர்க்க முடியாது மட்டுமல்ல, அதனை வெறுமனே ஒரு காணிப் பிரச்சினையாகக் குறுக்குவதில் முடிந்து விடும்.  

அது காணிப் பிரச்சினை அல்ல.அது இனப்பிரச்சினை.அது ஓர் அரசியல் பிரச்சினை.தனிய சட்டப் பிரச்சினை மட்டுமல்ல.அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும்.இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த 15 மாதங்களாக தமிழ்மக்களுக்கு நம்பிக்கை ஊட்டத் தவறியிருக்கிறது. இனப்பிரச்சினை இல்லை,இனவாதம் இல்லை என்று திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம்,சட்டம் சகலருக்கும் சமம் என்று கூறிக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கம்,தமிழ் மக்களுக்கு எங்கே துலக்கமான விதங்களில் மாற்றத்தைக் காட்டியிருந்திருக்க வேண்டுமோ அங்கே அந்த மாற்றத்தைக் காட்டத் தவறியிருக்கிறது.

https://athavannews.com/2026/1458301

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி: காணிப் பிரச்சினையா? - நிலாந்தன்

611566358_33105060525775652_749361564621

வருஷம் பிறந்த பின் வந்த முதலாவது பௌர்ணமி நாளில் தையிட்டியில் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் மக்களும் நில மீட்புக்காக போராடிக் கொண்டிருந்தபோது, தமிழ்மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியான தமிழரசுக் கட்சி வவுனியாவில் கூடி உட்கட்சி முரண்பாட்டை வெளிப்படுத்தும் தீர்மானங்களை எடுத்தது. வருஷம் பிறந்த மூன்றாம் நாளில் தமிழ்த் தேசிய அரசியலின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம் இது.

இத்தனைக்கும் தையிட்டியில் தமிழரசுக் கட்சிக்காரர்களும் காணப்பட்டார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள பெரிய கட்சி அது. அதிகளவு நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பது. தானே தலைமைக் கட்சி என்றும்,தானே தமிழ் அரசியலை வழி நடத்துவதாகவும் கூறிக்கொள்கிறது;கருதிக் கொள்கிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உட்பகையைத் தீர்த்துக் கொள்ள முடியாத ஒரு கட்சி.

தொடர்ந்தும் பதில் தலைவரின் கீழும் பதில் செயலாளரின் கீழும் இயங்குவதை ஒரு தோல்வியாகச் சுட்டிக்காட்டக்கூடிய மூத்த கட்சி உறுப்பினர்களும்  இல்லை. மூத்த ஆதரவாளர்களும் இல்லை. மதத்தலைவர்களாலோ அல்லது சிவில் சமூகத் தலைவர்களாலோ யாராலுமே தீர்க்கமுடியாத ஒரு முரண்பாடாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்சி தானே தனக்குள் இரண்டாகப் பிளந்து நிற்கிறது. ஏதாவது ஓர் அணி பலமடைந்து கட்சித் தலைமையை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் தவிர கட்சி தொடர்ந்து சிதைந்து கொண்டே போகும் நிலைமைகள்தான் அதிகரிக்கின்றன.

கட்சிக்குள் காணப்படும் இரண்டு அணிகளும் சமூக வலைத்தளங்களில் முகமூடி அணிந்து கொண்டு ஒருவர் மற்றவரை வில்லன் ஆக்குகிறார்கள். ஒருவர் மற்றவரை மதிப்பிறக்கம் செய்கிறார்கள். ஒருவர் மற்றவரை சுற்றி வளைக்கும் முற்படுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் அது அதிகம் சீரழிந்த ஒரு காலகட்டமாக இதைக் கூறலாமா? இதை அறிவுப்பூர்வமாக அணுகத்தக்க ஒருவருமே கட்சிக்குள் இல்லையா? இந்த முரண்பாட்டை அறிவுபூர்வமாக அணுகினால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும்.கட்சி தனக்குள் இரண்டுபட்டிருக்கும் வரை கட்சியாகவும் உருப்பட முடியாது;தமிழ்த் தேசிய அரசியலையும் முன்னோக்கி நகர்த்த முடியாது.

இந்த முரண்பாட்டைத் தீர்க்க கட்சிக்குள்ளும் ஆளில்லை கட்சிக்கு வெளியேயும் ஆள் இல்லை என்பது தமிழ்த் தேசிய அரசியலின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. இப்படிப்பட்டதோர் பாரதூரமான சீரழிவின் பின்னணியில் தையிட்டி போன்ற போராட்டக் களங்களில் உறுதியாக முன்னோக்கிச் செல்ல முடியுமா? ஒவ்வொரு பௌர்ணமி நாளும் போராடி காணிகளை மீட்க முடியுமா? இரண்டு பௌர்ணமிகளுக்கு இடையில் அரசாங்கம் தன்னை சுதாகரித்துக் கொண்டுவிடும்.

அரசாங்கம் தமிழ்த் தேசிய அரசியலின் பலவீனத்தை நன்கு விளங்கி வைத்திருக்கிறது. அதனால்தான் தையிட்டி திஸ்ஸ விகாரை விடயத்தை ஒரு காணிப்பிரச்சனையாக அது குறுக்கப் பார்க்கிறது. கடந்த பௌர்ணமி நாள் போராட்டத்தின் பின் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சரும் சட்டத்தரணிமான ஹர்ஷண நாணயக்கார,”இது காணி உரிமையாளர்களுக்கும் திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் இடையிலான ஒரு பிரச்சினை.இதில் வேறு தரப்பினர் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்… காணி உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் செயல்படாது பொறுமை காக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டின் முடிவில் யாழ் அரச அதிபருக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பும் அந்த அடிப்படையிலானது தான். தமிழ்ப் பகுதிகளில் உள்ள முக்கியத்துவம் மிக்க,நயினா தீவு விகாரையின் அதிபதி தமிழ் மக்களின் பக்கம் நின்று கதைத்தாலும், அவரும்கூட இந்த விடயத்தை காணிப் பிரச்சனையாகத்தான் சுருக்குகிறார். திஸ்ஸ விகாரையின் அதிபதி அதனை முழுக்க முழுக்க காணிப் பிரச்சினையாகவே குறுக்குகிறார்.

Resized-1024x663.jpg

ஆனால் திஸ்ஸ விகாரை விவகாரம் ஒரு காணிப்பிரச்சினை மட்டுமல்ல. சட்டப்பிரச்சினை மட்டுமல்ல. அது அதைவிட ஆழமான பொருளில் ஓர் அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் வேண்டும். அதை அரசாங்கம் ஒரு கொள்கை முடிவாக எடுக்க வேண்டும்.

திஸ்ஸ விகாரை விவகாரம் என்பது சட்ட நோக்கு நிலையிலும் காணி உரிமையாளர்களின் நோக்கு நிலையிலும் காணி அபகரிப்பாக இருக்கலாம். ஆனால் இங்கே அந்தக் காணியை அபகரித்து வைத்திருப்பது ஒரு விகாராதிபதி அல்ல. அவர் நன்கு நிறுவனமயப்பட்ட ஒரு கூட்டுச் செயற்பாட்டின் ஒரு கருவி மட்டுமே. அந்த விகாரைக்கு அத்திவாரம் போட்டது ராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா. அந்த விகாரையை பகலும் இரவும் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பியது படையினர். அந்த விகாரைக்கு பாதுகாப்பு வழங்குவது படையினரும் போலீசாரும். அந்த விகாரையின் அதிபதிக்கு அவர் சார்ந்த பௌத்த மகா சங்கம் வடபகுதிக்கான உயர் பதவியை வழங்கியது.

எனவே இது ஒரு கூட்டுச் செயற்பாடு. கூட்டு ஆக்கிரமிப்பு. அதை அதன் அரசியல் அடர்த்திக்கூடாகச் சித்தரித்தால் அது மிகத்தெளிவான ஒரு நிலப் பறிப்பு நடவடிக்கை. மிகத் தெளிவான ஒரு சிங்கள பௌத்த மயமாக்கல் நடவடிக்கை. அதாவது 2009க்குப் பின்னரான ஆக்கிரமிப்பின் ஆகப்பிந்திய உதாரணம். அதிலிருக்கும் அரசியலை நீக்கி அதைக் காணிப் பிரச்சினையாகக் காட்டுவதே ஓர் அரசியல்தான்.

எனவே அதனை அதற்குரிய அரசியல் பரிமாணத்தோடுதான் அணுக வேண்டும். காணி உரிமையாளர்களை அழைத்து அரசு அதிபர் பேசுவதனாலோ அல்லது அரசு அதிபரும் காணி உரிமையாளர்களும் விகாரதிபதிகளும் பேசுவதனாலோ இந்தப் பிரச்சினை தீர்த்துவிடாது.  அதற்கு அரசியல் தீர்வு வேண்டும். இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பிரச்சினை இல்லை என்று கூறுகிறது. தான் இனவாதத்துக்குத் தலைமை தாங்கவில்லை என்று கூறுகிறது. ஆனால் தையிட்டியில் நடப்பது சிங்கள பௌத்த மயமாக்கல்தான். இனவாத நடவடிக்கைதான்.

resozed2-1024x576.jpg

தையிட்டிப் போராட்டத்தைத் தொடர்ந்து கொதி நிலையில் வைத்திருந்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணிதான். ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் அந்தக் கட்சி தையிட்டியில் போராடும். ஆனால் அந்தப் போராட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மட்டும்தான் பங்குபற்றுவதுண்டு. அவை மக்கள் மயப்பட்ட போராட்டங்களாக அநேகமாக இருப்பதில்லை. எனினும் சில விசேஷ தினங்களில் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளும்,சிவில் சமூகங்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இணையும்போது அந்தப் போராட்டத்தில் பெருமளவு சனத் தொகையைக் காணலாம்.

திஸ்ஸ விகாரைக்கு எதிராக கடந்த 30 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடக்கின்றது. இப்போராட்டங்களில் சில நாட்களில் அதிக தொகை மக்கள் வருவார்கள். அதற்குக் காரணம் அங்கே எல்லா கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மதகுருக்களும்  கூடுவதுதான். கடந்த பௌர்ணமி நாளன்றும் அதுவே நடந்தது.  அதற்கு முதலில் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த போராட்டத்திலும் அவ்வாறு அதிகளவு ஜனத்தொகையை காண முடிந்தது. அந்தப் போராட்டத்திற்கு அதாவது ஆண்டின் இறுதியில் நடந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது அந்தப் பகுதிக்குப் பொறுப்பான பிரதேச சபை.

இப்பொழுது நீதி அமைச்சர் கூறுகிறார் அது திஸ்ஸ விகாரையின் அதிபதிக்கும் காணி உரிமையாளர்களுக்கும் இடையிலான ஒரு காணிப் பிரச்சினை என்று. இல்லை.அது காணிப் பிரச்சினையல்ல.அது அரசியல் பிரச்சினை. அதற்கு அரசியல் தீர்வுதான் உண்டு. காணி உரிமையாளர்கள் மட்டும் அரசாங்கத்தோடு பேச முடியாது.அந்தப் போராட்டத்தை தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் உட்பட எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் மதகுருக்களும் அந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க வேண்டும்.

15 மாதங்களுக்கு முன்பு மாற்றத்தை வாக்களித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது,தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாற்றத்தைக் காட்டவேண்டிய ஒரு களம் அது. ஆனால் அனுர அரசாங்கம் திஸ்ஸ விகாரை விடயத்தில் முன்னைய அரசாங்கங்களைப் போலவே அதற்குள்ள இன முரண்பாட்டுப் பரிமாணத்தை இல்லாமல் செய்து விட்டு அதை வெறும் காணிப் பிரச்சினையாகக் காட்டப் பார்க்கின்றது. புத்த பகவான் மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னார். ஆனால் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை விடயத்தில்  மாற்றம் இன்மைதான் மாறிலியா?

https://www.nillanthan.com/8048/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.