Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவுக்கான "இரவல் பொருளாதார பலம்" அளிப்பதை அனைத்துலக நாடுகள் நிறுத்த வேண்டும்: பா. நடேசன் வலியுறுத்தல்

Featured Replies

சிறிலங்காவுக்கான "இரவல் பொருளாதார பலம்" அளிப்பதை அனைத்துலக நாடுகள் நிறுத்த வேண்டும்: பா. நடேசன் வலியுறுத்தல்

சிறிலங்காவுக்கான "இரவல் பொருளாதார பலம்" அளிப்பதை அனைத்துலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசன் வலியுறுத்தியுள்ளார்.

தாயகத்திலிருந்து ஈழநாதம் நாளிதழின் வெள்ளிநாதத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14.12.07) இடம்பெற்றிருந்த பா. நடேசனின் நேர்காணல்:

கேள்வி: அரசியல்துறைப் பொறுப்பாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளீர்கள் மக்கள் மத்தியில் எவ்வாறான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்...?

பதில்: எமது மக்களின் சமூக, பொருளாதார வாழ்வை மேம்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களையும் நாம் போராடும் இக்காலத்தில் மேற்கொள்கின்ற அதே நேரத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் விரும்புகிறோம். இதற்காக நாம் மக்கள் மத்தியில் புதிதாக மக்கள் கட்டுமானங்களை உருவாக்குவதோடு ஏற்கெனவே எம்மால் உருவாக்கப்பட்டுள்ள கட்டுமானங்களில் மக்களைத் தீவிரமாகப் பங்கெடுக்கச் செய்யவுள்ளோம்.

எந்தவொரு சக்தியாலும் எமது மக்களுக்கு நெருக்கடிகளை உருவாக்க முடியாதவாறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இதற்காக எமது மக்களை ஒரு பலமான சக்தியாக ஒன்று திரட்டும் வேலைத் திட்டத்தை வேகமாக முன்னெடுக்கவுள்ளோம்.

இது தொடர்பாக எனக்கு இந்தப் பொறுப்பை அளிக்கும்போது தமிழீழத் தேசியத் தலைவர் பல விடயங்களை அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக எமது மக்களினதும், குழந்தைகளினதும் போசாக்கு முதல் கல்வி வரை கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் இத்தகைய வேலைத்திட்டங்களைக் கிராமங்களுக்குள் கொண்டு செல்வதன் மூலம் கிராமங்களில் வாழும் மாணவர்களினதும் இளையவர்களினதும் ஆற்றல்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றத்துக்கு வழிகோல வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு எமது பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைக்கக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் பணித்துள்ளார்.

கிராமப் புறங்களில் வாழும் மக்களில் முதியோர்கள், சிறுவர்களில் கூடிய கவனம் செலுத்தி அவர்கள் ஒரு ஆரோக்கியமான வாழ்வை எதிர்கொள்ளத்தக்க வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதற்காகப் போராட்டம் எத்தகைய கடின நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தாலும் மக்கள் துயரின்றித் துன்பப்படாதவாறு வாழ வழிகோல வேண்டும் என்ற வகையில் வேலைத்திட்டங்களை வகுத்துத் தந்துள்ளார்.

நாம் இதனை விரைந்து முன்னெடுக்கவுள்ளோம்.

மறுபுறம் எமது விடுதலைப் போராட்டத்திற்கான தயார்ப்படுத்தல்கள், அரசியல் பரப்புரைகள், ஒழுங்குபடுத்தல்கள், போராட்டத்திற்கான வலுச்சேர்த்தலுக்கான வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளோம்.

இத்தகைய வேலைத்திட்டங்களில் எமது மக்கள் முற்று முழுதான தமது பங்களிப்புக்களை ஆற்ற வேண்டுமென விரும்புகிறோம். தேசப் பாதுகாப்பில் தான் எமது நோக்கங்கள், செயற்றிட்டங்கள் யாவுமே தங்கியுள்ளன.

கேள்வி: வான்தாக்குதல்- கிளைமோர்த்;தாக்குதலால் வன்னியில் பெருமளவான மக்கள் கொல்லப்படுகின்றனர். இது தொடர்பாக மக்களுக்குக் கூற விரும்புவது?

பதில்: திட்டமிட்ட வகையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா அரசு வான்தாக்குதலையும், ஆழ ஊடுருவும் படையினரைப் பயன்படுத்தி கிளைமோர்த்தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இது ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் அழித்தொழிக்கக் குறிப்பாக இளையவர்களை அழித்தொழிக்க சிறிலங்கா அரசு பெரும் விருப்பைக் கொண்டுள்ளதையே காட்டுகிறது.

இதனைத்தான் வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் மீது மேற்கொண்ட வான்தாக்குதலும், ஐயன்கன்குளத்தில் மாணவிகள் மீது மேற்கொண்ட கிளைமோர்த் தாக்குதலும் மற்றும் தொடரும் ஏனைய தாக்குதல்களும் சுட்டிக்காட்டுகின்றன.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புத்திஜீவிகள், ஊடகவியலாளர், மதபோதகர்கள் போன்றோரை இலக்கு வைத்து இன்னுமொரு வகையான தாக்குதல்களையும் மேற்கொள்கின்றனர்.

இது சிறிலங்கா அரசானது தமிழரின் ஆற்றல் மிகு வளத்தை அழித்தொழிக்க எடுக்கும் நடவடிக்கையாகும்.

இதனை நாம் விரைந்து தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இதற்கு எல்லோருமே போராடவேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லோரும் போராடுவதன் மூலமாகவே எமது பிரதேசங்களை மீட்டு எமது மக்களினதும், எமது மண்ணினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தக் கள யதார்த்தத்தை எமது மக்கள் தட்டிக்கழிக்காது எமக்குத் தோள்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

கேள்வி: ஈழத்தமிழர் துயர் தொடர்பாகத் தமிழ்நாட்டின் உணர்வுகள் எப்படி உள்ளன?

பதில்: ஈழத்தமிழர்களின் வரலாற்றில் நெருக்கடி மிகு காலங்களிலெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் எமக்கு ஆதரவுச் சக்தியாகவே இருந்து வருகின்றனர்.

இப்போதும் தமிழ்நாட்டில் எமக்குச் சார்பான, ஆதரவான பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்தச் செயற்பாட்டில் அங்குள்ள பல அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்படுவது எமக்கு பெருத்த மகிழ்ச்சியைத் தருகிறது.

எமது மக்கள் துன்பப்படும் வேளைகளிலெல்லாம் எமக்குத் தமிழ்நாட்டிலிருந்து நீளும் ஆறுதல் கரத்தை நாம் பற்றிப் பிடிப்பதுடன் அதனை நாம் எதிர்பார்க்கவும் செய்கிறோம்.

ஈழத்தமிழ் மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து வரும் ஆதரவும் அனுசரணைக்குரலும் எமது எதிரிகளுக்கு அச்சமூட்டுவதாகவே உள்ளது.

இதனை நாம் கூறவில்லை எதிரியே கூறிவருகிறான். அத்தோடு எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவுக்கும், எமது முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மறைவுக்கும் தமிழ்நாட்டிலிருந்து எழுந்த உணர்வலைகள் ஈழத்தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்குமான உறவின் பிணைப்பை, அரசியல் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இவ்வேளைகளில் எல்லாம் தமிழ்நாட்டு மக்களும் அங்குள்ள தமிழின ஆதரவாளர்களும் தமது அரசியல் வேறுபாட்டையெல்லாம் களைந்து குரல் கொடுப்பதானது எமக்கு நம்பிக்கையை ஊட்டுவதாக உள்ளது.

இத்தகைய உறுதியான பிணைப்பை தமிழீழ மக்கள் ஒரு பெரும் போருக்கு முகம் கொடுத்து வரும் வேளை தமிழ் நாட்டு மக்கள் வெளிப்படுத்துவதானது தமிழீழ மக்களின் போராட்டத்தின் நியாயத்தன்மைக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் ஆதரவாக இருக்கும். இது பல்வேறு வழிகளிலும் தமிழீழ மக்களுக்கு உதவியாக இருக்கும்.

எனவே தொடர்ந்தும் தமிழ்நாட்டு மக்கள் தமது அன்பையும் ஆதரவையும் பல்வேறு வழிகளிலும் வெளிப்படுத்த வேண்டும்.

கேள்வி: மகிந்த அரசின் புதுவருடத் திட்டம் எதுவாக இருக்குமெனக் கருதுகின்றீர்கள்?

பதில்: மகிந்த அரசு இன அழிப்பைத்தான் புதுவருடத்திட்டமாகவும் வைத்திருக்கிறது. மகிந்த அரசின் புதுவருடத் திட்டத்தை நாம் எதிர்வு கூறக்கூடியதாகவே உள்ளது. ஏனெனில் அவர்கள் இப்பொழுதும் இராணுவ உதவியினைப் பெறுவதிலும், இராணுவத் தீர்வு குறித்துப் பேசுவதிலுமே தமது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகின்றனர்.

இதற்காகச் சிறிலங்கா அரசு தனது வரவு-செலவுத் திட்டத்தில்; போருக்கு என்றுமில்லாதவாறு பெருந்தொகை நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அவ்வளவு பெரிய நிதி ஒரு இனத்தை அழிப்பதற்காக ஒரு அரசு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்யுமா எனப் புருவம் உயர்த்த வைக்கிறது.

அந்தளவுக்குச் சிறிலங்கா அரசு போரின் மீது வெறிகொண்டுள்ளது.

இதனூடாகச் சிறிலங்கா அரசானது வன்னி மீது ஒரு பெரும் போரைத் தொடுத்து வன்னி மண்ணைக் கபளீகரம் செய்து இங்கு தனது தமிழின அழிப்பை பூர்த்தி செய்துவிடலாம் எனக் கருதுகிறது.

இந்த விருப்பானது மகிந்த ராஜபக்சவின் விருப்பம் மட்டுமல்ல சிங்கள ஆட்சியாளர்கள் எல்லோருடைய விருப்பமும் கூட இதுவே.

ஆனால் இந்த ஆசை ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. இதனைத்தான் தமிழீழ மாவீரர் நாள் உரையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பின்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளார். "நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்கள தேசம் மீளவும் விழுந்திருக்கிறது. இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவில் சந்தித்தே ஆகவேண்டிவரும்" என எச்சரித்துள்ளார்.

இதனை நாம் எமது மக்களின் எழுச்சியோடு, துணையோடு சிங்கள தேசத்தின் இராணுவ மமதைக்கு தக்க பதில் கொடுப்போம்.

இதன்மூலம் அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை என்பதை மீண்டும் நாம் உறுதிப்பட நிரூபிப்போம்.

இதற்கு எமது விடுதலை இயக்கமும், எமது மக்களும் அனுமதிக்கப்போவதில்லை. மர்தன சிந்தனை (அடக்கும் சிந்தனை) என்று சொல்லக்கூடிய மகிந்த சிந்தனை ஒருபோதும் எமது மண்ணில் நிறைவேறாது.

கேள்வி: சர்வதேச தொண்டு நிறுவனங்களை சிறிலங்கா அரசு விமர்சிப்பது ஏன்?

பதில்: சிறிலங்கா அரசானது இங்கு இயங்கி வருகின்ற பல தொண்டு நிறுவனங்கள் மீது உண்மைக்கு மாறான பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருவதோடு பலமான விமர்சனங்களையும் மேற்கொண்டு வருவதை நாம் அவதானித்து வருகிறோம்.

இந்த அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களைத் தொடர்ந்து இங்கு இயங்க முடியாதவாறானதொரு நெருக்கடியைத் திட்டமிட்டுச் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருவதையும் நாம் காண்கிறோம்.

சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது சில உள்நோக்கங்களைக் கொண்டிருப்பதாகவே நாம் எண்ணுகிறோம்.

அதாவது தமிழர் தாயகப் பகுதிகளிலும், தென்னிலங்கையிலும் சிறிலங்கா அரசு தமிழர்களைக் கடத்துதல்-படுகொலை செய்தல்-உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல்-நியாயமற்ற கைதுகளை மேற்கொள்ளல் என ஒரு தொடர்ச்சியான தமிழின அழிப்பை மேற்கொண்டு வருகிறது.

இந்தத் தமிழின அழிப்பு நடவடிக்கைகளை இங்கு இயங்கி வருகின்ற இந்த அனைத்துலகத் தொண்டு நிறுவனங்கள் வெளிப்படுத்தி வருவதானது சர்வதேச ரீதியில் சிறிலங்கா அரசிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடிகள் காரணமாகச் சினம் கொண்டுள்ள சிறிலங்கா அரசு இந்த உண்மையை வெளிப்படுத்துகின்ற அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களைத் தண்டிக்க விரும்புகிறது.

இதன் காரணமாக அரசு நேரடியாக இவ்வமைப்புக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அதேவேளை தென்னிலங்கையிலிருக்கின்ற ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமய போன்ற இனவாதக் கட்சிகளைத் தூண்டி இவ்வமைப்புக்கள் புலிகள் இயக்கத்துக்கு உதவுகின்றன என்ற குற்றச்;சாட்டை ஊக்குவித்துள்ளது.

உண்மையில் சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது அனைத்துலக அமைப்புக்களை இங்கிருந்து வெளியேற்றும் நோக்கம் கொண்டது என்பதைவிட அவர்களின் வாயை அடக்குவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக யுனிசெப் மற்றும் அதனோடிணைந்த ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புபட்ட அமைப்புக்கள் மீது கடும் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசு மேற்கொள்வதானது இவ்வமைப்புக்கள் கிழக்கில் சிறுவர்களை துணை இராணுவக்குழுக்கள் படையில் இணைத்து வருகின்றமையும் அது சிறிலங்காப் படையினரின் ஒத்துழைப்புடனும் பாதுகாப்புடனுமே மேற்கொள்ளப்படுகின்றதென்ற உண்மையை வெளிப்படுத்திவிட்டதோடு ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதிகளாக இங்கு பயணம் செய்த அதன் அதிகாரிகள் ஜோன் ஹோம்ஸ், நோவாக் போன்றவர்கள். இதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி சிறிலங்கா அரசைக் கண்டித்ததோடு ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்கா அரசிற்கு எதிரான அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளனர். இதன் காரணமாக சிறிலங்கா அரசு கொதிப்படைந்துள்ளது, கோபமடைந்துள்ளது.

இதன் காரணமாகவே இந்த அமைப்புக்களின் செயற்பாடுகளை முடக்கிச் சிறிலங்கா அரசு இங்கு இழைக்கின்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்த அனைத்துலக சமூகத்தின் கண்டனங்களைத் தடுத்து மனித உரிமை மீறல்களை மூடிமறைக்கலாம் எனக் கருதுகிறது.

கேள்வி: கண்காணிப்புக்குழு-இணைத் தலைமை நாடுகள் இப்போதும் இயங்குகின்றனவா?

பதில்: கண்காணிப்புக் குழுவின் செயற்பாட்டைப் பொறுத்தவரையில் அவர்கள் செயற்படாதவாறு சிறிலங்கா அரசே முடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாகச் சிறிலங்கா அரசு யுத்த நிறுத்த மீறல்களை மேற்கொள்ளுகின்ற இடங்களுக்குக் கண்காணிப்புக் குழுவினரை செல்லவிடாது தடுத்து யுத்த நிறுத்த மீறல்களை மறைத்து வருகிறது.

கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பிற்குக்கூட ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சிறிலங்கா அரசு செயற்பட்டு வருகிறது.

முன்னாள் கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்வ் ஹென்றிக்சன், மாவிலாற்றுப் பகுதிக்கு பயணம் செய்தபோது கண்காணிப்புக் குழுத் தலைவரைக் குறிவைத்து எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு கொலை செய்ய முயற்சித்தது.

பூநகரிப் பிரதேசத்துக்குச் சிறிலங்கா அரசின் அனுமதியுடன் தற்போதைய கண்காணிப்புக் குழுத்தலைவர் ஜோன் சொல் பேர்க் பயணம் செய்தபோது அவரைக் குறிவைத்து எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டு சிறிலங்கா அரசு கொலை செய்ய எத்தனித்தது.

அத்தோடு இரண்டு தரப்பிற்கிடையே செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட கண்காணிப்புக்குழுவை சிறிலங்கா அரசு அடக்கவும், அதட்டவும் முற்படுவதன் மூலம் அரசின் கீழ் இயங்கும் ஒரு பிரிவாகக் கண்காணிப்புக் குழுவை சிறுமைப்படுத்த முற்பட்டுள்ளது.

இதன் காரணமாகக் கண்காணிப்புக் குழுவினரின் செயற்பாட்டைச் சுருங்கச் செய்தும் அவர்களின் செயற்பாட்டைத் தடுத்தும் யுத்தத்தை முன்னெடுத்தும் வருகின்றனர்.

ஆனால் எம்மைப் பொறுத்த வரையில் நாம் கண்காணிப்புக் குழுவினரின் செயற்பாட்டை மதித்து நடப்பதுடன் தேவை ஏற்படுகின்ற வேளையெல்லாம் அவர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகிறோம்.

அண்மையில் நான் அரசியல்துறைப் பொறுப்பாளராகப் பொறுப்பேற்றவுடன் தேசியத் தலைவரின் பணிப்பிற்கமைய கண்காணிப்புக் குழுத்தலைவரை இங்கு அழைத்துச் சந்திப்பை மேற்கொண்டிருந்தேன்.

ஆனால் சிறிலங்கா அரசானது கண்காணிப்புக் குழுவினர் சுதந்திரமாக இங்கு பயணம் செய்ய முடியாதவாறு தடைகளை ஏற்படுத்திக் கண்காணிப்புக் குழுவினருடனான தொடர்புகளைக் கூடத் தடுக்க முயல்கின்றனர்.

இணைத்தலைமை நாடுகளைப் பொறுத்தவரையில் அதில் அங்கம் பெற்றுள்ள நாடுகளை நாம் சமாதானத்தின் காவலர்களாகவும், சமாதானத்தின் ஊக்குவிப்பாளர்களாகவுமே கருதினோம்.

ஆனால் இணைத்தலைமை நாடுகள் போர் தொடங்கியவுடன் அது குறித்து எதுவுமே பேசாது மௌனத்தைக் கடைப்பிடித்தமையானது எமக்கும் எமது மக்களுக்கும் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மௌனப் போக்கிற்குப் பதிலாக இந்த நாடுகள் சமாதான முயற்சிகளுக்கு மாறாக யுத்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கோடு அதற்கான தயார்ப்படுத்தல்களில் அக்கறைகாட்டிய சிறிலங்கா அரசைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.

அத்தோடு இந்த இணைத்தலைமை நாடுகளில் அங்கம் பெற்றுள்ள சில நாடுகள் சிறிலங்கா அரசிற்கு இராணுவ உதவிகளை வழங்கிப் போருக்கு ஊக்கப்படுத்தித் தமது பொறுப்பின் நடுநிலைத் தன்மையில் சந்தேகத்தை உருவாக்கியமையானது போருக்கும் ஆதரவு சமாதானத்துக்கும் ஆதரவு என்ற ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட வகையில் செயற்படுவதானது எமக்கு நகை முரண்பாடாக உள்ளது.

கேள்வி: கனடா-ஜேர்மனி-நெதர்லாந்து போன்ற நாடுகள் சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை சனவரியுடன் முடக்கப்போவதாக வெளிவந்த செய்திகள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: நாமும் இந்தச் செய்திகளை ஊடகங்கள் மூலமாக அறிகிறோம். இந்த முயற்சியைத் தழுவி ஏனைய நாடுகளும் இத்தகைய தடை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இதற்கு இந்தச் செய்திகள் வெறும் சிந்தனையோடு நின்றுவிடாமல் செயலுரு பெறவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில் சிறிலங்கா அரசானது தமிழ் மக்களுக்கெதிரானப் போரைத் தனது சொந்தப் பொருளாதாரத்தினூடாக நடத்தவில்லை.

மாறாக இரவல் பொருளாதாரத்தில் தான் சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிரான போரை முன்கொண்டு செல்கிறது.

இந்த இரவல் பொருளாதாரப் பலத்தை சிறிலங்கா அரசிற்கு சர்வதேச நாடுகள் வழங்குவது எமக்குக் கவலை அளிக்கிறது. கடனாகவும், மானியமாகவும் இந்த நாடுகள் சிறிலங்கா அரசிற்கு வழங்கும் உதவிகளைச் சிறிலங்கா அரசு தனது போர் இயந்திரத்தைப் புதுப்பிக்கவும், மெருகூட்டவும் பயன்படுத்துகிறது.

போருக்கு முண்டு கொடுக்கும் இத்தகைய உதவிகள் காரணமாகவே சிறிலங்கா அரசு தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் நடவடிக்கையில் கடும்போக்கைக் கடைப்பிடிப்பதற்குக் காரணமாக இருக்கிறது. இந்த உண்மையை இந்த மேற்கு நாடுகள் புரிந்துகொண்டு சிறிலங்கா அரசிற்கு வழங்கிவரும் உதவிகளை நிறுத்துவார்களேயானால் சிறிலங்கா அரசினால் போர்செய்ய முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாக தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு தொடுத்துள்ள போரை நிறுத்த முடியும்.

இதன் மூலம் சிறிலங்கா அரசு தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு இராணுவ வழியில் தீர்வுகாணும் எண்ணத்தை இல்லாமற் செய்யமுடியும்.

இத்தகையதொரு புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதைப் புலிகள் இயக்கம் நீண்டகாலமாக அனைத்துலக சமூகத்திற்கு கோரிக்கையாக விடுத்து வருகிறது. இதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளவேண்டும்.

அண்மையில் சிறிலங்கா அரசு இழைத்து வரும் கட்டுங்கடங்காத மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி இத்தகைய நிதி முடக்கங்களை சில நாடுகள் மேற்கொள்ள முயல்வதானது நாம் எதிர்பார்க்கின்ற அந்தப் புறச்சூழல் ஏற்படுத்தும் என நம்புகிறோம் என்றார் அவர்

http://www.puthinam.com/

Edited by Iraivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol:<_<:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.