Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவு, சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் - எழுவரையும் விடுதலை செய்க! - தியாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறிவு, சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் - எழுவரையும் விடுதலை செய்க! - தியாகு

இராசீவ் காந்தி கொலை வழக்கு பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) படி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது என்பதும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் தெரிந்த செய்தியே, தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியால் மேல்முறையீட்டு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது என்பதும் கூட தெரிந்த செய்தியே. எஞ்சிய எழுவரில் நால்வருக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது; மூவருக்குக் குற்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டாலும் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இதை விடவும் முக்கியமான செய்தி என்னவென்றால், தடா சட்டத்தின் படியான பயங்கரவாதக் குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இராசீவ் கொலை கொடுங்குன்றமே என்றாலும் பயங்கரவாதக் குற்றம் ஆகாது என்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து. குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் தடா சட்டத்தின்படியான பயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விட்ட நீதிபதிகள் மற்ற இயல்புச் சட்டங்களின் படியான குற்றச்சாட்டுகளுக்கு தடா சட்டத்தின்படி திரட்டப்பட்ட சான்றுகளை ஏற்க மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் வாய்பிளந்து நிற்கும் முரண்பாடு. இந்த வழக்கின் சான்றுகளில் முதன்மையானது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அளித்ததாகச் சொல்லப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் ஆகும். ஒப்புதல் வாக்குமூலம் பெற்றது காவல்துறைதான தவிர நீதித்துறை அன்று. இயல்புச் சட்டங்களின் படி இத்தகைய வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் ஏற்புடைய சான்றாக மாட்டா. ஆனால் தடா சட்டத்தின்படி நீதிமன்றம் இவற்றை ஏற்புடைய சான்றுகளாக மதிக்க வேண்டும்.

இராசீவ் கொலையில் வழக்கு விசாரணை மட்டுமல்லாமல் புலனாய்வும் கூட தடா சட்டத்தின் படியே நடைபெற்றது என்பதை மறந்து விடக்கூடாது. இராசீவ் கொலை பயங்கரவாதச் செயல் ஆகாது என்ற கருத்தின்படி இந்த வழக்கில் தடா சட்டத்தின் படியான புலனாய்வும் மறுதலிக்கப்பட்டிருக்க வேண்டும். இயல்புச் சட்டங்களின்படி மறுபுலனாய்வு செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக் கவேண்டும். மறு புலனாய்வே இல்லை என்றாலும் மறுவிசாரணை நடைபெறுவதற்காவது அது வழி செய்திருக்க வேண்டும். இப்படி எதுவும் செய்யாமல் தடா சட்டத்தின்படி திரட்டப்பட்ட சான்றுகளை-குறிப்பாக ஒப்புதல் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டுதான் உச்சநீதிமன்றம் எழுவர் மீதான குற்றத் தீர்ப்பை உறுதி செய்தது.

தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பெற்ற நால்வரில் நளினிக்கு மட்டும் தமிழக அரசு பரிந்துரைத்தவாறு தமிழக ஆளுநர் தண்டனைக் குறைப்பு வழங்கிவிட்டார். இவ்வாறு நளினியும் ஆயுள் கைதி ஆகிவிட்டார்.

பூந்தமல்லியிலுள்ள தடா சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் கொலைத் தீர்ப்பு வழங்கிய நாள் 1998 சனவரி 28. அதாவது அறிவு, சாந்தன் முருகன் மூவரும் தூக்குக் கைதிகளாகவே சிறையில் பத்தாண்டுக்கு மேல் கழித்து முடித்துள்ளனர். இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அவர்கள்அளித்த கருணை மனுவின மீது இதுவரை எம்முடிவும் எடுக்கப்படவில்லை.

தலைக்குமேல் தூக்குக் கயிறு தொங்கும் நினைவோடு சாக்கொட்டடியில் அடைபட்டுக் கிடப்பதே ஒரு தண்டனைதான். அதுவும் பத்தாண்டு காலம் தனிக் கொட்டடியில் தூக்கு நிழலில் வாழ்வது சாத்தண்டனையை விடவும் கொடியது. கருணை மனுக்கள் மீது அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும், காலத்தாழ்வு என்பதே கூட தண்டனைக் குறைப்புக்கு ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளப்படலாம் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

அறிவு உள்ளிட்ட மூவரும் பத்தாண்டு காலமாக தூக்குக் கொட்டடிகளில் அடைபட்டிருப்பதையும், அவர்கள் 1991ஆம் ஆண்டு முதலே காவலில் இருந்து வருவதையும் கூட்டிப் பார்த்தால் மொத்தம் 17 ஆண்டுகளுக்கு நெருக்கமாக அவர்கள் சிறைபட்டிருப்பது தெரியவரும். ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பெற்ற பலரும் பத்தாண்டு கழித்து முடித்தபின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசே ஒரு சில சந்தர்ப்பங்களில் பத்தாண்டு கழித்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்துள்ளது. எப்படியும் ஆயுள் கைதிகளை சிறை வாழ்க்கை சராசரியாக 14 ஆண்டில் முடிவடையக் கூடும். 15, 16 அல்லது 17 ஆண்டுக்கு மேல் போவது விதிவிலக்கு மட்டுமே. இப்போதும்கூட அறிவு, சாந்தன், முருகனின் தண்டனை குறித்து அரசு என்ன முடிவெடுக்கும், எப்போது முடிவெடுக்கும் என்று யாருக்கும் தெரியாது. இந்தியக் குடியரசுத் தலைவருக்கும், தலைமையமைச்சருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கூட இது தெரியுமா என்பது ஐயத்திற்குரியதே.

சிறையில் 17 ஆண்டுகள், அதில் தூக்குக் கைதியாக 10 ஆண்டுகள்... இந்தக் கொடுவதை எப்போது முடியும்? எப்படி முடியும்? யாருக்கும் தெரியாது.

இதே இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் சிறைக் கைதிகளாக இருந்து வரும் நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் ஆகியோரின் நிலை என்ன? அவர்களும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாகச் சிறையில் அடைப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பொறுத்த வரை முதலில் விசாரணைக் கைதிகளாகவும், பிறகு தூக்கு கைதிகளாகவும், பிறகு ஆயுள் சிறைக் கைதிகளாகவும் இருந்து வந்தபோதிலும் சிறைநிலைமைகளில் வேறுபாடு ஒன்றுமில்லை. ஆயுள் சிறைக் கைதிகளை முன் விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் இந்த நால்வருக்கும் கூடப் பொருந்தக் கூடியவையே.

நளினி முதலான நால்வர் குறித்தும் முன் விடுதலைத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிய, ஜெயக்குமாரை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். வேலூர் மத்திய சிறையில் இருந்து வரும் அவரது நடத்தை திருப்திகரம் என்று சிறையின் உளவியல் வல்லுநர் சான்றளித்துள்ளார். அவர் மனமாற்றம் அடைந்திருப்பதாகவும் சான்றளிக்கிறார். அவரது ஊரில் வாழ்க்கை நீரோட்டத்தில் கலப்பதற்கு அவர் பொருத்தமாய் இருப்பதாகவும் சொல்கிறார். ஆனால் இத்தனையும் சொல்லிவிட்டு அவரது முன் விடுதலைக்குப் பரிந்துரைக்கவில்லை என்கிறார்.

இதேபோல் சிறைக் கண்காணிப் பாளரும் ஜெயக்குமார் சிறையில் நடந்துக்கொள்ளும் விதம் திருப்திகரம் என்று சான்றளிக்கிறார். மற்றக் கைதிகளிடம் நடந்துகொள்வதும் சிறையில் வேலை செய்வதும் திருப்திகரம் என்கிறார். ஆனால் முடிவில் அவரின் விடுதலைக்குப் பரிந்துரைக்கவில்லை என்று எழுதி விடுகிறார்.

வேலூர் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், மாவட்ட அமர்வு நீதிபதியைத் துணைத் தலைவராகவும் மையச் சிறைக் கண்காணிப்பாளரைச் செயலராகவும் வட்டார நன்னடத்தை அலுவலரை இணைச் செயலாளராகவும் கொண்ட அறிவுரைக் கழகம் 28-12-2006ல் கூடி ஜெயக்குமாரை முன்-விடுதலை செய்வது குறித்து ஆய்வு செய்து கருத்துத் தெரிவித்தது. அந்தக் கருத்து இதுதான்.

(1) குற்றம் கொடியதும் முன்கூட்டித் திட்டமிட்டதுமாகும். உயர் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்களுமாகிய மேலும் பலருடன் கூட நாட்டின் முன்னாள் தலைமையமைச்சர் படுகொலை செய்யப்பட்டார்.

(2) இவர் (ஜெயக்குமார்) இலங்கை நாட்டவர். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் தற்போது போர் நடைபெற்று வருவதால் இவர் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வாய்ப்பே இல்லை. விடுதலை செய்யப்பட்டால் இதேபோன்ற குற்றத்தை மீண்டும் செய்யும் ஆவேசத்தை இந்நிலைமை இவரிடம் தோற்றுவிக்கக்கூடும். எனவே முன்-விடுதலைக்காண இவரது வாழ்க்கைக் கருதிப் பார்க்கவில்லை.

ஜெயக்குமார் செய்த குற்றம் கொடியது என்பதையும் முன்கூட்டித் திடடமிட்டது என்பதையும், கொல்லப்பட்டவர் நாட்டின் முன்னாள் பிரதமர் என்பதையும் கண்டுபிடிப்பதற்குத்தான் அறிவுரைக் கழகம் கூடியதா? ஜெயக்குமாரின் சிறை நடத்தையையும், அவர் மனமாற்றம் அடைந்துள்ளார் என்று உளவியல் வல்லுநர் பதிவு செய்திருப்பதையும் அறிவுரைக் கழகம் கருதிப் பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் அதையெல்லாம் ஒருமுறை படித்துப் பார்த்ததாகக் கூடத் தெரியவில்லை.

ஜெயக்குமார் இலங்கை நாட்டவர் என்பது அறிவுரைக் கழகம் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள இரண்டாவது பெரிய செய்தி. இன்னும் 15 ஆண்டுகள் கழித்து அறிவுரைக் கழகம் கூடினால் அப்போதும் ஜெயக்குமார் இலங்கை நாட்டவராகத்தான் இருப்பார் (அல்லது தமிழீழத்தவராக இருக்கலாம்). இந்திய நாட்டவராக மட்டும் இருக்கவே மாட்டார். இராசீவ் கொலை திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்பதும், ஜெயக்குமார் இலங்கை நாட்டவர் என்பதும் மூத்த உண்மைகள். இவற்றைச் சொல்வதற்கு அறிவுரைக் கழகம் தேவைதானா?

ஓர் ஆயுள் கைதியை முன்விடுதலை செய்வது பற்றிக் கருதிப் பார்க்கும் போது கணக்கில் கொள்ள வேண்டிய எந்தக் காரணியையும் ஜெயக்குமாரைப் பொறுத்த வரை அறிவுரைக் கழகம் கணக்கில் கொள்ளவில்லை. அது மட்டுமல்ல, அவரது முன் விடுதலையை கருதிப் பார்க்க மறுப்பதற்கு எவ்விதப் பொருத்தப்பாடுமற்ற இரண்டு காரணங்களைச் சொல்கிறது.

அறிவுரைக் கழகத்தின் கருத்தைப் பெற்றுக் கொண்ட தமிழக அரசு அதன் அடிப்படையில் ஜெயக்குமாரை முன்விடுதலை செய்வதற்கில்லை என்று ஆணையிடுகிறது. அறிவுரைக் கழகத்தின் கருத்துக்கும் அரசின் முடிவுக்கும் சட்டம், நீதி என்ற வகையில் எந்த நியாயமும் கற்பிக்க முடியாது.

இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் முன்-விடுதலையைக் கருதிப் பார்க்கும்போது அறிவுரைக் கழகத்தாலும் அரசு அதிகாரிகளாலும் அரசியல் தலைவர்களாலும் நடுநிலைமையோடு அணுகமுடியவில்லை. சமன் செய்து சீர்தூக்கும் கோல் ஒரேயடியாக ஒரு பக்கம் சாய்ந்து விடுவதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. இறந்தது ஒரு மனித உயர் என்பதற்கு மேல். அது முன்னாள் பிரதமரின் உயிர் நேரு, இந்திரா குலக்கொழுந்து ஒன்றின் உயிர் என்ற நினைப்பே மேலோங்கி நிற்கிறது. ஈழத் தமிழர்களின்பால் இந்திய ஆளும் வர்க்கத்துக்குள்ள காழ்ப்புணர்ச்சியும் அறிவுரைக் கழகக் கருத்தில் வெளிப்படுகிறது.

இராசீவ் கொலை வழக்கில் 41 பேருக்கு எதிராக சதிக் குற்றம் சுமத்தப்பட்டது. இவர்களில் மூவர் பிடிபடவில்லை. பன்னிருவர்-சிவராசன், தானு, சுபா உள்ளிட்டோர் - தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டு இறந்துவிட்டனர். எஞ்சிய 26 பேர் மீதுதான் வழக்கு. அரசுத்தரப்பு முன்வைத்துள்ள சான்றுகளை அப்படியே நம்பினாலும் கூட இராசீவைக் கொல்லச் சதி நடக்கிறது என்ற செய்திகூட இந்த 26பேரில் 25 பேருக்குக் கொலை நடந்து முடியும் வரை தெரியாது. நளினிக்கு மட்டும் கடைசி நேரத்தில் தகவல் சொல்லப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்திற்கு அரசுத் தரப்புச் சான்றுகள் இட்டுச் செல்கின்றன. நளினியும் சேர்ந்து சதிசெய்தார் என்று மெய்ப்பிக்கவே இது போதுமான சான்று இல்லை. மற்றவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

உண்மைக் குற்றவாளிகள் 15 பேரில் மூவர் பிடிபடவில்லை, பன்னிருவர் உயிருடனில்லை என்பதே இந்த வழக்கிலிருந்து வெளிப்படும் உண்மை.

ஆனாலும் உச்ச நீதிமன்றம் "இராசீவ் கொலை பயங்கரவாதச் செயலாகாது" என்ற தன் முடிவுக்கு மாறாகவே, பயங்கரவாதச் சட்டத்தின்படித் திரட்டப்பட்ட சான்றுகளைக் துணையாகக் கொண்டு எழுவருக்கு எதிராகக் குற்றத் தீர்ப்பு வழங்குகிறது. நால்வருக்குத் தூக்குத் தண்டனையை உறுதி செய்கிறது என்றால், கொல்லப்பட்டவரின் பேருருவமும் பெரும் புகழும் நீதிபதிகளின் உள்ளத்தில் மேலோங்கி நிற்பதே காரணம். இத்துடன் ஈழத்தமிழர் மீதான வெறுப்பும் சேர்ந்துகொள்கிறது.

இராசீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் மெய்யாகவே குற்றவாளிகள்தானா? இல்லையா? என்ற கேள்வி இன்னும் பல தலைமுறைகளுக்கு நீடிக்கவே செய்யும். இந்திய அரசின் பலதரப்பட்ட புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகள் ஒரே முடிவுக்கோ ஒத்த முடிவுக்கோ வந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனித வெடிகுண்டு தானு அணிந்திருந்த கச்சைக் குண்டு (பெல்ட் பாம்) யாரால் எப்படிச் செய்து தரப்பட்டது என்று இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று புலனாய்வுக் காவல்துறை அதிகாரி ரகோத்தமன் சொல்கிறார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் பட்டியலில் வேறு பலரையும் சேர்க்க வேண்டுமென நீதிபதி ஜெயின் ஆணையத்தின் அறிக்கை கூறியதை மறக்க முடியாது. பல்துறை ஆய்வுக் குழுவின் முடிவுகள் இன்னும் வரவில்லை.

இத்தனைக் குழப்பங்களுக்கு நடுவில் அறிவு முதலான மூவரைத் தூக்கு கொட்டடிகளிலும், நளினி முதலான நால்வரை வாழ்நாள் சிறையிலும் அடைத்து வைத்திருக்க நியாயமில்லை.

அறிவு, சாந்தன், முருகனுக்குத் தூக்குத் தண்டனையைக் குறை என்று நாம் கோரி வந்தோம். இத்தனை ஆண்டுகளில் அது செய்யப்படவில்லை. இனியும் இந்தக் கோரிக்கையோடு நாம் கட்டுப்பட்டிருக்க முடியாது. இப்போது நம் கோரிக்கை: அறிவு, சாந்தன், முருகனை விடுதலை செய்க! என்பதே.

அதேபோல் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், இரவிச்சந்திரனையும் உடனே விடுதலை செய்க! எனக் கோருகிறோம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161இன்படி தமிழக ஆளுநரின் பெயரால் தமிழக அரசும், உறுப்பு 72இன்படி குடியரசுத்தலைவரின் பெயரால் இந்திய அரசும் இதைச் செய்ய முடியும். செய்வார்களா?

இறுதியாக, இராசீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு இன்னமும் சிறையிலிருக்கும் அறிவு, சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட்பயஸ், இரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும் உடனடியாக விடுதலை செய்யக் கோருகிறோம். சட்டத்தின் ஆட்சியிலும் மனித உரிமைகளின் மதிப்பிலும் உண்மையான நம்பிக்கைகொண்ட ஒவ்வொருவரும் இந்தக் கோரிக்கைக்குக் குரல் கொடுக்க வேண்டுகிறோம்.

-தென்செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.