Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கந்தர் சஷ்டி கவசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேவராய சுவாமிகள் அருளிய

கந்தர் சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்

நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்

கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்

நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை

குறள் வெண்பா

அமரரிடர் தீர வமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்

பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம்பாடக் கிண்கிணியாட

மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார்

கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து

வரவர வேலா யுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா வெண்டிசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக

வாசவன் மருக வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நித்தம் வருக

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக

சரஹண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர

ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

விணபவ சரஹண வீரா நமோநம

நிபவ சரஹண நிறநிற நிறென

வசர ஹணப வருக வருக

அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

என்னை யாளும் இளையோன் கையில்

பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க

விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்

உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்

கிலியும் சௌவும் கிளரொளியையும்

நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்

சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்

குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி யாறும்

நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்

நன்னெறி நெற்றியும் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகு குண்டலமும்

ஆறிரு திண்புயத் தழுகிய மார்பில்

பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து

நண்மணி பூண்ட நவரத்தின மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயி றுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இருதொடை யழகும் இணைமுழந் தாளும்

திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

செகண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

விந்து விந்து மயிலோன் விந்து

முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ

மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா விநோதனென்

றுண்டிரு வடியை உறுதியென் றென்னும்

என்றனை வைத்துன் இணையடி காக்க

என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க

பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

கதிர்வேலிரண்டும் கண்ணினை காக்க

விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க

நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க

பேசிய வாய்தனை பெருவேல் காக்க

முப்பத் திருபல் முனைவேல் காக்க

செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க

என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

மார்பை யிரத்தின வடிவேல் காக்க

சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க

பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க

சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க

நாணாங் கயிற்றை நல்வேல் காக்க

ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க

பிட்டமிரண்டும் பெருவேல் காக்க

வட்டக் குதத்தை வடிவேல் காக்க

பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிர லடியிணை அருள்வேல் காக்க

கைக ளிரண்டும் கருணைவேல் காக்க

முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க

பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க

நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக

நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பா நாடியை முனைவேல் காக்க

எப்பொழுதும் யெனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்

கடுகவே வந்து கனகவேல் காக்க

வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க

அரையிரு டன்னில் அனையவேல் காக்க

ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியி நோக்க

தாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை யகல

வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள்

அல்லல் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைக டின்னும் புழக்கட முனியும்

கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமரா க்ஷதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலு மிருட்டிலும் எதிர்படு மன்னரும்

கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டா ளர்களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைக ளென்பும்

நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்

பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

காசும் பணமும் காவுடன் சோரும்

ஓதுமஞ் சணமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட்டலறி மதிகெட்டோடப்

படியினில் முட்டப் பாசக் கயிற்றால்

கட்டுட னங்கம் கதறிடக் கட்டு

கட்டி யுருட்டு கைகால் முறியக்

கட்டுக் கட்டுக் கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதிற் செதிலாக

சொக்கு சொக்கு சூர்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடுவிடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடுத்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைஷயங் குன்மம் சொக்கச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப் பிளவை படர் தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத் தரணை பருவரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீயெனக் கருள்வாய்

ஈரே ழலகமும் எனக்குற வாக

ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்

சரஹண பவனே சையொளி பவனே

திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொழி பவனே

அரிதிரு மருக அமரா பதியைக்

காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்

கந்தா குகனே கதிர்வேலவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை யழித்த இனியவேல் முருகா

தணிகா சலனே சங்கரன் புதல்வா

கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பால குமரா

ஆவினன் குடிவாழ் அழகிய வேலா

செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா

சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னாவிருக்க யானுனைப் பாட

எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

பாடினே னாடினேன் பரவசமாக

ஆடினே னாடினேன், ஆவினன் பூதியை

நேசமுடன் யான் நெற்றி யிலணியப்

பாச வினைகள் பற்றது நீங்கி

உன் பதம் பெறவே உன்னரு ளாக

அன்புட னிரஷி அன்னமும சொன்னமும்

மெத்தமெத் தாக வேலா யுதனார்

சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க

வாழ்க வாழ்க மலைகுற மகளுடன்

வாழ்க வாழ்க வாரணத்துவசம்

வாழ்க வாழ்கவென் வறுமைக நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்

எத்தனை யடியேன் எத்தனை செய்யினும்

பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே

பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து

மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததை

காலையில் மாலையில் கருத்துட னாளும்

ஆசா ரத்துடனே அங்கந் துலக்கி

நேச முடனொரு நினைவது வாகி

கந்தர் சஷ்டி கவச மிதனைச்

சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

ஓதியே nஐபித்து உகந்து நீறணிய

அஷ்டதிக் குள்ளொர் அடங்கலும் வசமாய்த்

திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்

மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்

கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்துரு சங்கா ரத்தடி

அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில்

வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்

சூரபத் மாவைத் துணிந்தகை யதனால்

இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்

சின்னக் குழந்தை சேவடி போற்றி

எனைத்தடுத் தாட்கொள்ள என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி

தேவர்கள் சேனா பதியே போற்றி

குறமகள் மனமகிழ் கோவே போற்றி

திறமிகு திவ்விய தேகா போற்றி

இடும்பா யுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி

வெற்றி புனையும் வேலே போற்றி

உயர்கிரி கனக சபைக்கோ ரரசே

மயில்நட மிடுவாய் மலரடி சரணம்

சரணம் சரணம் சரஹண பவஓம்

சரணம் சரணம் சண்முகா சரணம்.

கந்தர்சஷ்டி கவசம் முற்றிற்று

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தர் சஷ்டி கவசம் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி நுனா. இதனுடைய ஒலி வடிவம் தரவிறக்ககூடிய முறையில் எங்காவது இருந்தால் அதனுடைய இனைப்பையும் தந்தால் நல்லது :mellow:

சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்தசஷ்டி கவசம் அழியாப்புகழ் பெற்றது.

இதோ..

http://rapidshare.com/files/133034192/01-K...vacham.mp3.html

இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி ஈஸ்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.